Monday, April 25, 2011

சாய்பாபா...!

இது சாய்பாபா கடவுளா இல்லையா என்றோ!, அல்லது அவர் இயற்கை எய்தியதை கிண்டல் செய்யவோ!, அல்லது மதசார்பான ஆன்மீக பதிவோ அல்ல.

என் வாழ்கையில் சாய்பாபாவோடான அனுபவத்தையும் நான் புரிந்து கொண்டதையும் பகிர்ந்து கொள்வதே இங்கு என் நோக்கம்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பிறப்பின் அடிப்படையில் இந்து மத முறையில் கடவுள் நம்பிக்கை கொண்ட குடும்பமானாலும், உயிரோடு வாழும் எந்த மனிதரையும் கடவுள் என்று காலில் விழும் பழக்கம் இல்லாததுதான் எங்கள் குடும்பம்.

அதே போல நாங்கள் நம்பவில்லை என்பதால் மற்ற யாரையும் விமர்சனமும் செய்ததும் இல்லை.

இந்த நிலையில் எங்கள் பக்கத்துக்கு வீட்டில் குடிவந்தவர்களுடன் எங்களுக்கு மிக நெருங்கிய பழக்கம் வந்தது, அவர்களும் ஆண் பிள்ளை இல்லை என்பதால் என் மீது சொந்த மகன் போல அன்பு செலுத்தினர்.

"சாய்பாபா" என்ற வார்த்தையே முதன் முதலில் கேள்விபட்டது அவர்கள் மூலம்தான், அவர்கள் குடும்பம் அவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவரை கடவுளாக தொழுது வந்தனர்.

அப்போது எனக்கு ஒரு ஐந்து வயதிற்குள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன், ஒரு முறை வழக்கம் போல சாய்பாபாவின் அற்புதங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்த அந்த அம்மா, அவர் கொடைக்கானல் வருவதாகவும் அவரை நேரில் சந்திக்க எங்களையும் அழைத்து செல்வதாக சொல்ல...!

அவர்களுடன் இருந்த நட்பின் அடிப்படையில் என் தாயும் சம்மதிக்க, ஒரு விடுமுறை பயணம் போல அனைவரும் தயாரானோம்.



கொடைக்கானலில் அது ஒரு அழகான மற்றும் அமைதியான பங்களா, அதுதான் சாய் ஸ்ருதி ஆசிரமா என்று சரியாக எனக்கு நினைவில்லை.

நாங்கள் காத்திருக்க, சிறிது நேரத்தில் முழு காவி உடையுடன் சாய்பாபா நடந்து வந்தார், நடை பாதைக்கு இருபுறமும் மக்கள் அவரை கும்பிட, அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தபடி எங்களை கடந்து போனார்.

சிறுவனாக அங்கு கொடுத்த சாய்பாபா படத்தை கையில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்த நான், என்ன நினைத்தேனோ, அவர் பின்னால் ஓடி, அவர் முன் சென்று பாதையில் நின்று அவரிடம் அந்த படத்தை நீட்டினேன்.

அவர் நடக்கும் பாதையில் யாருமே போகவில்லை என்றாலும் நான் மிக சிறுவன் என்பதால் என்னை யாரும் தடுக்க வில்லை என்றே நினைக்கிறேன்.

என்னை பார்த்து சிரித்த அவர் என் தலையில் தன் கையை வைத்து " பங்காரு...! பங்காரு...!" என்று சொன்னவர்  (தெலுங்கில் பங்காரு என்றால் தங்கம் என்று அர்த்தம்) நான் நீட்டிய படத்தை வாங்கி "With Love Baba" என்று கையப்பமிட்டு மீண்டும் என்னிடமே கொடுத்து விட்டு சென்றார்.

அதன் பின் அந்த படம் நீண்ட நாட்கள் எங்கள் வீட்டில் இருந்த நினைவு இருக்கிறது, ஆனால் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை!. இதுதான் நான் அவரை சந்தித்த அனுபவம்.

அதன் பின் நாட்கள் நகர வளரும் பருவத்தில் விவேகானந்தர் சுபாஸ் முதல் கீதை, குரான் பழைய (புதிய) ஏற்பாடு முதல் ஓசோ வழியாக கண்ணதாசனின் "கம்ப ரசம்" வரை (இது தடை செய்த புத்தகம் என்று நினைக்கிறேன்) கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படிக்கும் விடலை பருவத்தில் சாய்பாபா மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் எதுவும் கிடையாது.

காரணம் கையில் இருந்து விபூதி, மோதிரம், வாயில் இருந்து லிங்கம் எல்லாம் எடுத்துதான் ஒரு கடவுள் தன்னை கடவுள் என்று நிரூபிக்க வேண்டுமா? அல்லது ஒரு கடவுள் தன்னை தானே கடவுள் என்று சாதாரண மக்களிடம் உணர்த்த விரும்புவது ஏன்? என்று எனக்குள் பல கேள்விகளை கேட்டு கொள்வேன்.

இப்படியாக நான் என் பாதையில் போக மொத்தமாக சாய்பாபா என்ற வார்த்தையையே மறந்து போனேன், அவர் சார்ந்த செய்திகளை கூட படிப்பதில்லை, ஆனாலும் "திரு.அப்துல்கலாம்" போல அறிவியல் விஞ்ஞானிகள் கூட இவர்கள் காலில் விழுவதை பார்த்து குழம்பி இருக்கிறேன்.



இப்படி வருடங்கள் ஓட, மீண்டும் அவர் விசையத்தில் என் கவனம் போனது தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டபோது, ஒரு நாட்டின் தேசிய அரசாங்க பணியில் ஒரு மத சாமியாரின் பங்கு என்னவாக இருக்க போகிறது, இவரை ஏன் முன்னிலை படுத்துகிறார்கள் என்று படிக்கும் போதுதான் புரிந்தது, சாய் சேவா என்று ஆங்காங்கே பஜனைகள் பாடிக்கொண்டு இருந்த ஒரு ஆன்மீக அமைப்பு "சாய் சேவா சமிதி" என்று நாட்டின் மிக பெரிய ஒரு சமூக சேவை அமைப்பாக வளர்ந்து இருப்பது.

இந்த சேவை நிறுவனம் ஆந்திரா-தமிழக அரசுகள் கொண்டு வந்த தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் அமைக்கும் பணிக்காக அதாவது சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.100 கோடி நிதியை அந்த நிறுவனத்தின் தலைவரான சாய்பாபா தனது டிரஸ்ட்டில் இருந்து வழங்கியுள்ளார் என்று தெரிந்த போது, வியப்பை விட அந்த நிறுவனத்தின் மீது ஒரு நல்ல மதிப்பு எனக்கு வந்தது.

எனக்கு தெரிந்து இந்திய வரலாற்றில் வேறு எந்த ஒரு ஆன்மீக மத சார்பான நிறுவனமும் இவ்வளவு பெரிய தொகையை நாட்டு மக்கள் நன்மைக்காக கொடுத்ததில்லை என்றுதான் நினைக்கிறேன்.

இப்படி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா,மராட்டியம், ஒரிசா மாநிலங்களிலும் தனது டிரஸ்ட்டின் மூலம் நிதி கொடுத்து குடிநீர் திட்டங்களை செய்து கொடுத்துள்ளார்.

ஆந்திரமாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 750 கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்து கிட்டத்தட்ட12 லட்சம் மக்களுக்கு மேல் பயன் அடைந்து வருகின்றனர்.

இது தவிர இந்த ஆசிரம நிறுவனத்தின் மூலம் பல்கலைக்கழம், மருத்துவ கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவ சிகிச்சை என பல மாநிலங்களில் பிரமாண்டமாக ஏழைகளுக்கு அனைத்தும் இலவச மாக இந்த நிறுவனம் கொடுகிறது என்று தெரிந்த போது...!

அவர் கடவுளோ இல்லையோ!, அது எனக்கு தெரியாது, தேவையும் இல்லை, ஆனால் இந்த நிறுவனத்தின் நல்ல செயல்கள் அனைத்தும் கடவுளின் செயலாகவே என் மனதில் பட்டது.

எத்தனயோ லட்சம் மக்கள் தனி ஒரு நிறுவனத்தால் அல்லது அந்த நிறுவன தலைவரால் பயன் பெறுகிறார்கள் என்றால், அது இருப்பவனிடம் கொள்ளை அடித்து இல்லாதவனுக்கு கொடுக்கும் ஒரு கொள்ளைகார நிறுவனமாக இருந்தால் கூட பாராட்டலாமே...!

அப்படி இருக்கும் போது, இது ஒரு சாதாரண ஆன்மீக அமைப்பு இதை பாராட்டுவதில் எனக்கு தவறாக எதுவுமே தோன்றவில்லை.

தாகத்தை தீர்க்கும் நதி நீருக்கு யாரும் நதிமூலம் பார்ப்பதில்லை, அது போல அது எப்படி வந்த பணமாயினும் எதற்கு பயன் படுகிறது என்ற அடிப்படையில் இங்கு நான் ரிஷிமூலம் பார்க்க விரும்பவில்லை.

ஒரு சில நூறுகளை கொடுத்து ஓட்டு வாங்கி கணக்கிடமுடியாத அளவு ஊழலை செய்யும் அரசியல் கட்சிகள் கூட மக்களுக்கு இப்படி எதுவும் செய்வதில்லையே?

அப்படி இருக்க ஒரு தனிமனிதர் தன் நிறுவனத்தின் மூலம் இதை அனைத்தையும் சாதித்து இருக்கும் போது அவர் அந்த நிறுவன தொண்டர்களுக்கு கடவுளாக தெரிவதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கிறேன்.

இவரால் மருத்துவ உதவி பெற்று உயிர் பிழைத்த அனைவருக்கும் இவர் வேறு எப்படி தோன்ற முடியும் நினைக்கிறீர்கள்?

சற்று சிந்தித்து பாருங்கள்...!, இன்றைய அரசியல் கொள்ளையர்களை விட "சாய்பாபா" ஒன்றும் அத்தனை மோசமாக என் கண்களுக்கு தெரியவில்லை.

எனவே, அவர் கடவுளா இல்லையா என்ற பைசாவுக்கு பெறாத விவாதங்களை ஒதுக்கிவிட்டு, பல நல்ல விசையங்களை செய்த ஒரு நல்ல  நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், உடலை விட்டு பிரிந்த அந்த ஆத்மா அமைதியில் உறங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Friday, April 8, 2011

அன்னா ஹசாரேவை ஆதரிப்போம்.



இந்த பதிவை பொறுத்த வரை இந்த விளம்பரத்தில் வரும் சிறுவனின் நிலையில் நான் என்னால் முடிந்த ஆதரவை தருகிறேன்.





காரணம் இது வார்த்தை ஜாலம் காட்டி சிரிக்க வைத்து ஓட்டு வாங்க பதிந்த பதிவு அல்ல.

தமிழன் என்பதை தாண்டி இந்தியன் என்ற முறையில், என் நாட்டுக்காக களமிறங்கி இருக்கும் தியாகி "அன்னா ஹசாரேவுக்கு" என் ஆதரவை தெரிவிக்கும் பதிவு மட்டுமே.

அன்னா ஹசாரேவை பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் நான் புதிதாக உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

அப்படியும் தெரியாத யாராவது இருந்தால், அவர்களுக்காக நண்பர் கிரி மற்றும் ராமலக்ஷ்மி எழுதிய இணைப்புகளை கீழே கொடுக்கிறேன், படித்து அனைவரும் உங்களால் முடிந்த ஆதரவை உங்கள் தளத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

கிரியின்

ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம்!

அரசியல்வாதிகளுக்குத் தடை – அன்னா ஹசாரே அதிரடி!

அன்னா ஹசாரேவை புறக்கணிக்கும் தமிழகம்

ராமலக்ஷ்மியின்

விதை விருட்சமாகும்,அன்னா ஹசாரேக்கு ஆதரவைத் தருவோம்.

இந்த இணையதளத்தில் உங்கள் ஆதரவை கையெழுத்து மூலம் கொடுக்க முடியும்!

தாய் நாட்டையும் நாட்டுக்காக உண்மையாக பாடுபடும் தலைவர்களையும் நம் இரு கண்களை போல, நம் தாயை போல மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

இனம், ஜாதி, மதம், மொழி மறந்து இந்தியனாய் இதில் ஒன்றுபடுவோம் வாருங்கள்...!





வந்தே மாதரம்...!

Wednesday, April 6, 2011

தேர்தல் கனவு...!

வணக்கம் நண்பர்களே,

உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களுடன் இந்த பதிவை துவங்குவோம்.

இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் சச்சினுக்கு இரண்டு புறமும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் முதல் உலக கோப்பை நாயகன் கபில்தேவ் இருவரையும் அமர்த்தி பெருமை படுத்தினால் இன்னும் அமர்களமாக இருக்கும் என்பது என் விருப்பம்.


தேர்தல் விதிமுறைகள்...!

கட்சி விதிகள்

எந்த ஒரு தனிப்பட்ட கட்சியும் மூன்று தேர்தல்களுக்குள் குறிப்பிட்ட அளவு தொகுதியில், அதாவது அந்த கட்சியை சேர்ந்த மொத்த வேட்பாளர்களில் இருபத்தைந்து சதவீதம் வெற்றி பெறாவிட்டால், அந்த கட்சியின் உரிமை ரத்தாகி, அந்த கட்சியை கலைத்து விடவேண்டும்.

அப்படி ரத்தாகும் கட்சியின் தேர்தல் சின்னம் என்பது இனி யாருமே பயன்படுத்த முடியாமல் தடையாகி விடும்.



நாட்டில் ஒரு தனி கட்சி என்பதே தனி கொள்கையின் அடிப்படையில் இருப்பதால், எந்த ஒரு கட்சியும் தேர்தலில் தனித்து மட்டுமே போட்டியிட முடியும்.

அப்படி இன்னொரு கட்சியுடன் கூட்டணியாக இணைய விரும்பும் பட்சத்தில், இரண்டில் ஏதாவது ஒரு கட்சியை கலைத்து அதன் உரிமையை ரத்து செய்து, ஒரே கட்சியாக மட்டுமே செயல்பட, போட்டியிட முடியும்.

ஒரு முறை இணைந்த பின் மீண்டும் பிரிந்தால், அதே கட்சியை துவங்க முடியாது, வேறு கட்சியை துவங்கினாலும், புதிய சின்னம் மட்டுமே கொடுக்க படும்.

மேலும் ஒரு முறை சேர்ந்து பின் பிரிந்து மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே கட்சி துவங்க உரிமை கேட்க முடியும்.

கட்சியின் பொது குழு தலைவர் மற்றும் இதர பொறுப்புகளில் ஒருவர் அறுபத்தைந்து வயது வரை மட்டுமே பதவி வகிக்க முடியும். அதன் பின் அவர் அனுபவத்தின் அடிப்படையில் அக்கட்சியின் வழிகாட்டியாக ஒரு மதியுரை அமைச்சர் பதவிக்கு மட்டுமே தகுதி பெறமுடியும்.

யார் ஆட்சியாயினும் குடும்பத்தின் மொத்த வருமானத்தை, சொத்துக்களை கணக்கில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு அரசு சலுகைகள் மட்டுமே தர முடியுமே தவிர, இலவசம் என்று எதுவும் கொடுக்க முடியாது.



இலவசமாக கொடுக்கும் அனைத்தும் லஞ்ச ஒழிப்பு விதிமுறைகளுக்கு கீழே கொண்டுவரப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜாதி, மொழி சார்ந்த கட்சிகள் துவங்க முடியாது, எல்லா அரசு ஆவணங்களில் இருந்தும் ஜாதி பற்றிய விபரங்கள் உடனடியாக நீக்கி விடப்படும்.

எந்த கட்சியும் அந்த கட்சி சார்பான தனிப்பட்ட தகவல் தொடர்பு தொலைக்காட்சி, பத்திரிக்கை, வானொலி நடத்த முடியாது, அப்படி வேறு தொடர்புகளில் நடத்தும் தகவல் தொடர்பு எதிலும் கட்சி சார்பான சின்னம், முத்திரை எதையும் பயன்படுத்த கூடாது.

மேலும் அந்த தகவல் தொடர்பு மூலம் வரும் செய்திகள் உண்மையல்ல என்று எந்த ஒரு நிறுவனமும், குடிமகனும் நிரூபிக்கும் பட்சத்தில், அந்த தகவல் தொடர்பு நிறுவன உரிமை உடனடியாக ரத்து செய்வதோடு, அத்துறை சார்ந்த அத்தனை அசையும், அசையாத சொத்துக்களும் அரசாங்க சொத்தாகிவிடும்.

அரசியல் பதவி விதிமுறைகள்

ஜனநாயக நாட்டில் அரசியல் பதவிக்கு போட்டியிட கிரிமினல் வழக்கு இல்லாத மற்றும் வங்கி கடன் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்காத குடிமகன் யாருக்கும் உரிமை உண்டு என்றாலும், அப்பதவியின் நிலையை கருத்தில் கொண்டு போட்டியிட தகுதியான குடிமகனை சில கட்டுப்பாடுகளுக்குள் உட்பட்டு மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.



நாட்டின் குடிமகனாக நாள் முதல் இருப்பது வருடங்கள் உள்நாட்டில் வசித்திருக்க வேண்டும் (உயர் கல்விக்காக மட்டும் வெளிநாடு சென்றிருக்கலாம்).

கண்டிப்பாக முதுகலை பட்டம், அதுவும் ஆரம்ப பள்ளி முதல் அனைத்தும் முழுநேர படிப்பின் மூலம் (மாலை, தொலைதூர மற்றும் திறந்தவெளி எல்லாம் செல்லாது) நாட்டின் அல்லது உலக முன்னணி பல்கலைகழகம் மூலம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது தாய் மொழி அல்லது போட்டியிடும் மாநில மொழி, இந்தியாவில் அதிகம் பேசும் மொழி ஹிந்தி, உலகில் அதிகம் பேசும் மொழி ஆங்கிலம் என்று மும்மொழிகளில் (செம்மொழி கதை எதுவும் விடாமல்) முறையாக பேச, படிக்க மற்றும் எழுத தகுதி, தகுந்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது பத்து வருடங்கள் அவர் படிப்பு சார்ந்த துறையில் வேலை செய்த அனுபவமும் அதில் "பொதுமக்களிடம்" நல்ல பெயரும் பெற்று இருக்க வேண்டும்.

அப்படி இருந்து ஒருவர் வெற்றி பெரும் வகையில், அவருக்கு அதே துறையை ஒதுக்க வேண்டும். உதாரணமாக ஒரு காவல் அல்லது போக்குவரத்து மந்திரி என்பவர் மற்ற விதிகளுக்கு உட்பட்டு இருந்தாலும், அதே துறையில் குறைந்தது பத்து ஆண்டுகள் நாட்டுக்காக பணி செய்து இருக்க வேண்டும்.

மூன்று முறைக்கு மேல் ஒருவர் பொது தேர்தலில் போட்டியிட முடியாது, அவர் சார்ந்த கட்சியின் மதியுரை பதவிகளில் அவர் இருப்பதில் எந்த தடையும் கிடையாது.



ஒரு கட்சியின் சார்பில் பொது தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின், அந்த வெற்றி வேட்பாளர் கட்சி மாறினால், கட்சியை விட்டு விலகும் போதே அவர் பதவியும் அவரை விட்டு விலகும். மேலும் அவர் அடுத்த பத்து தேர்தலில் எந்த ஒரு கட்சி சார்பாகவும் போட்டியிட முடியாது.

அது மட்டும் இல்லாமல், அவர் பதவி விலகிய தொகுதியின் இடை தேர்தல் செலவு முழுவதும் அவரோ அல்லது அவர் போகும் புதிய கட்சியோ ஏற்று கொள்ள வேண்டும்.

நாட்டின் அரசியல் தலைமை பொறுப்பில் இருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்த தவறு, ஊழல் நிரூபிக்கப்பட்டால், அதே தவறை செய்த குடிமகனுக்கு சட்டப்படி கிடைக்கும் தண்டனையை போல மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும்.

எந்த ஒரு நேர்மையான அல்லது எப்படி பட்ட அரசியல் தலைவராக இருப்பினும், அதை மட்டுமே தகுதியாக கொண்டு அவரின் வாரீசு அல்லது ரத்த உறவுகள் யாரும் மேலே உள்ள மற்ற அரசியல் தலைமை விதிகள் பொருந்தாத பட்சத்தில், அவர்கள் எந்த ஒரு அரசியல் பதவிகளுக்கும் போட்டியிட முடியாது.

காவல் மற்றும் நீதித்துறை இரண்டும், ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர் நேரடி கட்டுபாட்டில் இருக்கவேண்டும், இவர்கள் இருவரையும் நேரடியாக மக்கள் பொது தேர்தலில் மட்டுமே தேர்ந்து எடுக்க முடியும்.



மேலும் "ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்" இருவரும் எந்த கட்சியை சார்ந்தும் இருக்க முடியாது, இவர்கள் "தவறுகளை" முப்படை தளபதிகள், சுபிரீம் கோர்ட் நீதிபதிகள் குழு மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்த குழு மட்டுமே கட்டுபடுத்த முடியும்.

நாட்டின் எந்த ஒரு அரசியல் தலைவரையும் தகுந்த முறை மற்றும் காரணத்தோடும் எந்த ஒரு குடிமகனும் சந்திக்க முடியவில்லை என்றால், காவல் மற்றும் நீதித்துறையை நாட அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

அட போதுங்க, அதான் கனவுன்னு சொல்லியாச்சுல்ல, இத்தோட இப்போதைக்கு முடிச்சுக்குவோம்...!

போங்கப்பா, போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க, இன்னுமா இந்த உலகம் இதை நம்பிகிட்டு இருக்கு?.


நன்றி, மீண்டும் சந்திப்போம்.
 

Blogger Widgets