Showing posts with label முனிர்கா பாய்ஸ். Show all posts
Showing posts with label முனிர்கா பாய்ஸ். Show all posts

Saturday, May 16, 2009

டெல்லி [இறுதி] பாகம்- IV - ஹிந்தி தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது!

நாங்க "வாக் இன் இன்டெர்வியு" போக, மத்த நேரத்துல "ஏக் காவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா"-ன்னு ஹிந்தி படிச்சுகிட்டு இருந்தப்போ, என் குரு ராஜேஷ் என்னை அடிக்கடி கேட்பார், எப்போ முழுசா ஹிந்தி பேசுவேன்னு?

அதுமட்டும் இல்லாம எனக்கு உதாரணமா என் நண்பன் "ஜான்" அவனை பாரு தினம் வீட்டுக்கு தேவையான எல்லா பொருளும் வாங்க எவ்ளோ ஆர்வமா போறான்னு!

அதுதான் பிள்ளைக்கு அழகு, நாலு பேரோட பேசினாத்தான் உனக்கும் ஹிந்தி பேச வரும்ன்னு வசை பாடுவாரு.

எனக்கு செம காண்டா ஆகிடும், என்னடா இது? நாமளாவது ஒரு நாலு வார்தை சேந்தாப்புல பேசுவோம், இதுக்கு ஹிந்தி ஒன்னுமே புரியாதே?

போன வாரம் கூட இவனும் சுச்சு மாமாவும் ஆட்டோவுல போயிட்டு, ஆட்டோகாரன் பச்சீஸ் (இருபத்தஞ்சு ரூபா) கேட்டதுக்கு! இல்ல, இல்ல நாங்க நேத்து கூட பச்சாஸ்-குதான் போனோம்ன்னு சண்டை போட்டு "அம்பது ரூபா" கொடுத்துட்டு வந்தாங்களே!

"பச்சீஸ்-கும் (இருபத்தஞ்சு ரூபா) பச்சாஸ்-கும் (அம்பது ரூபா)" வித்தியாசம் தெரியாத இவனுக்குள்ள இப்படி ஒரு ஹிந்தி ஆர்வமா?

சரி, இவனே போய் சமாளிக்கும் போது, இன்னிக்கு நம்மளும் கூட போய் பாத்துருவோம்-ன்னு ஆர்வமா ஜான்கிட்ட சொன்னேன்.

அவனும் சரி, சரி வா..! இப்பத்தான் தோனுதாக்கும்....? ஆனா ஒரு கண்டிசன் எல்லா விசையத்தையும் மாதிரி இதையும் வச்சு என்ன ஓட்டக்கூடாது ஓகேவா-ன்னு கேட்க?

நானும் "ச்ச" இவரப்போய் நம்ம ஓட்டி, நம்ம ஹிந்தி பேசுவதை நாமே கெடுத்துக்ககூடாது-ன்னு, சரி ஜான் யார் கிட்டையும் இத பத்தி பேசவே மாட்டேன்னு சொல்லிட்டு கூட போனேன்.

ஜான் வழக்கம் போல எல்லா "காஸ்மெட்டிக்கும்" போட்டுகிட்டு கீழ வர, நேரா ஒரு காய்விற்கும் கடைக்கு போனோம், போகும் போதே என்கிட்ட சொன்னார், எதுவும் பேசாதே கவனமா பார்ன்னு.

நானும் ஒருவேளை உதட்டு அசைவை கவனிக்கனும்னு போல-ன்னு நினைச்சுகிட்டு, அவர் என்ன பேச போராருன்னு கவனமா பாத்துக்கிட்டு நின்னேன்.

அவரை பார்த்ததும் கடைக்காரர் கையெல்லாம் ஆட்டி "ராம் ராம்-ஜி"-ன்னு சொல்ல நான் ஜானோட செல்வாக்கை பாத்து சும்மா அசந்து போய்டேன்.



ஆனா, இவர் பதிலுக்கு சிரிச்சரே தவிர, ஒரு வார்த்தை கூட பேசல, நேரா போனார் போய்...!

அதுக்கப்புறமா எல்லாம் ஒரே "ஆக்சன்" தான்!

ஜான்:- ஒரு ஒருகிலோ எடை கல்லை எடுத்து கொடுத்தாரு...!

கடைகாரர்:- அந்த கல்லை வாங்கி தராசுல வச்சாரு...!

ஜான்:- ஒரு வெங்காயத்தை எடுத்து கொடுக்க,

கடைகாரர்:- ஒரு கிலோ வெங்காயம் கொடுக்க,

ஜான்:- ஒரு ரெண்டு கிலோ கல்லை எடுத்து கொடுக்க,

கடைகாரர்:- அந்த கல்லை வாங்கி தராசுல வைக்க

ஜான்:- ஒரு தக்காளியை கொடுக்க,

கடைகாரர்:- ரெண்டு கிலோ தக்காளியை கொடுக்க, இப்படியே எல்லாம் வாங்கியாச்சு.

(வடிவேலு மருதமலை காமெடி மாதிரி) நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்...!

இப்பவும் எனக்குள்ள ஒரு சந்தேகம்?

காசை கொடுக்கணுமே? மொத்தம் என்ன விலைன்னு அவர் எப்படி சொல்லுவாரு?

ஜான் எப்படி புரிஞ்சு காசை கொடுப்பருன்னு யோசிச்சுகிட்டு கடைகாரரை பார்த்தா அவரு ஒன்னுமே சொல்லல!

என் சந்தேகம் தீராம, ஜான் பக்கம் திரும்பினா, அவர் "கூலா" ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தாரு.

கடைகாரரும் வாங்கி வைத்துக்கொண்டு மிச்ச பணத்தை கொடுத்து "ராம் ராம்-ஜி"-ன்னு சொல்ல, இவர் பதிலுக்கு சிரித்து விட்டு வந்தார்.

நான் அப்படியே ஜானை பாத்தேன்...!

அவரும் கொஞ்சம் கூட அசராமல் நீ என்ன நினைத்து என்னை லுக் விடுகிறாய் என்று எனக்கு புரிகிறது.

எப்படி பாத்தாலும் காய் வாங்கும் விலை மொத்தமா நூறு ரூபாய்க்குள்ள தான வரும்? அதான் தான் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு, நூறு ரூபா நோட்டா மாத்தி வச்சு இருக்கேன்.

சிம்பிள், தினம் ஒரு நூறு ரூபா நோட்டு, இத விட்டுட்டு உன்னை மாதிரி அவனுககிட்ட பேச்சு வாங்க வேண்டிய இருக்காது பாரு-ன்னு சொன்னாரு.

அவ்ளோதான், எனக்கு மண்டைல கொம்பு முளைச்சு, காதுல புகை வராத குறை!

என்னப்பா இதெல்லாம்? உன்ன போய் அந்த ஆளு ராஜேஷ் நல்லவேன்னு நினைச்சுகிட்டு இருக்காரே?

அதை விட கொடுமை உன்கூட போய் ஹிந்தி கத்துக்க வந்தேன் பாருன்னு என்ன நானே நொந்துகிட்டேன்.

அதுக்கும் அவர் அசராம சொன்ன பீட்டர் பதில்...!

" யு சி மேன், கம்யுனிகேசன் இஸ் நாட் வாட் யு டாக், கம்யுனிகேசன் இஸ் வாட் யு மேக் அதர்ஸ் டு அண்டர்ஸ்டாண்ட்" ஓகே-ன்னு பீட்டர் விட...!

அன்னைக்கே நான் முடிவு பண்ணிட்டேன், இனி எவன் என்னை என்ன திட்டினாலும் சரி, இல்ல வாயில் ஒரு செருப்பை கொடுத்துட்டு, இன்னொரு செருப்பால் என்ன அடித்தாலும் சரி...! இவன் கூட போய் ஹிந்தி கத்துக்க நினைக்க மட்டும் கூடவே கூடாது என்று.

அது ஓர் அழகிய நிலா காலம், ஆனால் அந்த நட்பு இப்போது இல்லையே என்று மனம் சில அந்தி மாலை பொழுதில் நினைக்கும்.

நன்றி!.

Friday, May 15, 2009

டெல்லி பாகம்- III - சோட்டுவின் தலைவலி நடிப்பு

எங்க குரூப்ல , நண்பன் காதரும், குரு ராஜேஷும் மட்டும் வேலை பாத்த நாட்கள் அது, மத்த நான், சோட்டு-கார்த்தி, வில்ஸ் விஜி,குமார், ஜான் எல்லோருக்கும் வேலை தேடுறது தான் வேலை, தினம் காலையில குருவும், நண்பனும் , வேலைக்கு போகும்போது, எங்களுக்கு அம்பது ரூபாவும் நாலு வில்ஸ் சிகரெட், நாலு கிளாசிக் ரெகுலெர் சிகரெட் (ரெண்டு பேரும் வேற வேற பிரண்ட்) குடுத்துட்டு போவாங்க, இந்த அம்பது ரூபா எதுக்குனா நாங்க "வாக் இன் இன்டெர்வியு" போக, மத்த நேரத்துல எதாவது படிக்கணும் இல்லேன்னா ஹிந்தி பழகனும்னு கண்டிசன்வேற (நாங்க ஹிந்தி பழகுன கதைய அடுத்த பதிவில் சொல்றேன்) கார்த்தியும் விஜியும் வயசு கம்மிங்கரதால அவங்களுக்கு கண்டிசன் ரொம்ப ஜாஸ்தி.

அப்ப சாப்ட்வேர் கம்பெனில ஜாவா ப்ரோக்ராமர் ஜன்னலுக்கு வெளில புல்லு மேஞ்ச மாடு கூட, அமரிக்காவுக்கு பிசினஸ் கிளாஸ்ல போய் பால் கறக்க முடியுற நேரம் (இப்போ ஒரு கல்ல எடுத்து ஜன்னலுக்கு வெளில கூட்டத்துல எரிஞ்சா, அது கண்டிப்பா ஜாவா ப்ரோகிராம் தெரிஞ்ச ஒருத்தர் மேலதான் படுங்கிறது வேற விஷயம்) அந்த அடிப்படை ஆர்வத்தில் மக்கள் எல்லாம் ஜாவா புக்கும், நான் நெட்வொர்க் புக்கும் எடுத்துட்டு படிக்க (படிக்கிற மாதிரி படம் காட்ட) உக்காந்துருவோம், நண்பனோட ஒரு சிஸ்டம் இருந்தது அதுல வேற போட்டி போட்டுக்கிட்டு ஆர்வமா படிக்கிற மாதிரி யாராவது உக்காந்துருவோம் எதுக்குனா, மக்கள் ரெண்டும் வேலைக்கு போனவுன்ன கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் "தல"யோட "என்ன சொல்ல போகிறாய்" பாட்ட போட்டுக்கிட்டு "டேவ்-2 கேம் விளையாட" .

அதையும் தாண்டி பசங்க எதாவது எசகு பிசகா பண்ணி நண்பன்கிட்ட மட்டிக்கிட்டா, "ராஜ் ஆர்யன் மல்கோத்ர" (ராஜேஷ்) தான் நண்பன் "நாராயண் ஷங்கர்" கிட்ட இருந்து காப்பத்த டிராம் அடிச்சுகிட்டே வருவாரு (Mohabbatein படம் பார்த்தவர்களுக்கு புரியும்) இந்த பேர இவங்களுக்கு யார் வச்துனு கண்டுபிடிக்க "யாரோ@யாஹூ.காம்" ன்னு ஒரு ஐடி எல்லாம் கிரியேட் பண்ணி ட்ரை பண்ணுனாங்க.

சரி, விஷயத்துக்கு வருவோம்,

இப்படியே, நாங்களும் நாள ஒட்டிகிட்டு காலைல வேலை தேட, மதியம் முழுக்க வீட்டுல தம்மடிக்க சீடி பாக்கனு பொழுத போக்குவோம், சரியா ஆறு மணியானா திரும்ப ரெண்டு பசங்களும் புத்தகம் சிஸ்டம்னு போய் உகந்துருவங்க, நண்பனும் குருவும் குளிர்காலமா இருந்தா ஓல்ட்மக் ரம், கோடை காலமா இருந்தா பீருன்னு ஏதாவது வாங்கிட்டு வர தினம் கல கலன்னு இருக்கும்.

இந்த ரெண்டுல விஜி எல்லா நேரமும் படுக்க தம் அடிக்கனு இருந்தாலும், நண்பன் கண்ன்னுல மட்டும் சரியா படிக்கிறப்ப மட்டும் தான் படுவான், சோட்டு-கார்த்தி எல்லாம் சரியாத்தான் பண்ன்னுவான், ஆனா ஏதாவது எடக்கு முடக்கா, பண்ணும் போது மட்டும் தான் மாட்டுவான், சுருக்கமா சொலனும்னா, நாள் பூர விஜி படம் பாக்க கேம் விளையடனு இருந்துட்டு புதம்கம் எடுக்கவும், சோட்டு-கார்த்தி நாள் பூரா படிக்க சிஸ்டம்ல வொர்க் பண்ணிட்டு ரிலாக்ஸ்சா ஒரு தம்ம பத்த வைக்கவும் நண்பன் பாக்கவும் சரியா இருக்கும், அன்னைக்கு பூரா எங்களுக்கு "டாம் & செர்ரி கார்டூன்" பார்த்த மாதிரி இருக்கும்.

ஒரு நாள் இப்படித்தான், நானும் விஜியும் படுத்துகிட்டு படம் பாத்துகிட்டு இருந்தோம், கார்த்தி சிஸ்டம்ல எதோ படிச்சிகிட்டு இருந்தான், அதோட இல்லாம விஜிக்கு அட்வைஸ் வேற பண்ணினான். விஜி வீணா மாட்டி பேச்சு வாங்காத, வா, வந்து எதாவது படி, இவர நம்பாத, இவர ஒன்னும் சொல்ல மாட்டங்க, அதயும் சேத்து நமக்கு தான் விழும்னு.

நானும் விஜியும், போ, தம்பி, போ ...எல்லாம் நாங்க பாத்துகிறோம், நீ ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாருன்னு சொல்லிட்டு, ஒரு புது பட சீடிய (திருட்டு சீடி) பாத்துக்கிட்டு இருந்தோம், நாங்க படம் பாக்க தாம் அடிக்கன்னு இருந்தது அவனுக்கு தாங்க முடியல, விஜி எதுக்கோ போக, இவனும் வந்து ஒரு தம்ம பத்த வச்சுக்கிட்டு படுத்துகிட்டு படம் பாக்க ஆரம்பிச்சான்.

திரும்பி வந்த விஜி போய் சிஸ்டத்துல ஒக்கார, நான் எதுக்கோ வெளிய வந்தேன், வரும் போதே நண்பன் வர்ரத பாத்துட்டு உள்ள போய் "சோட்டு, இப்படி படுத்துகிட்டு தம்மோட படிக்காம படம் பாக்குறத நண்பனோ, அண்ணனோ மட்டும் பாத்தா என்னடா பண்ணுவனு" அவன இழுத்து விட....

அவன் கொஞ்சம் கூட யோசிக்காம, படம் பாத்து கிட்டே சட்டுனு எழுந்துரிச்சு தலைல கைய வைச்சுகிட்டு " அண்ணே ஒரே தல வலிண்ணே-னு பிட்ட போட்டு எஸ்கேப் ஆவமுலான்னு சொல்லிகிட்டுடே திரும்ப" அங்க இவன் நிக்கிறதா பாத்தவுன்ன முகத்துல ஒரு எபெக்ட் கொடுத்தான் பாரு, இந்னிக்கும் எனக்கு அந்த முகம் நியாபகம் இருக்குனா பருங்க.

அவளோதான் நண்பனுக்கு ஒரே காண்டு, உடனே, எடு உன் பெட்டிய, கிளம்முமா நீ, இனி இங்க இருக்காத தமிழ் நாட்டுக்கு போனு செம வசை பாடிட்டான், இவனும் ஒன்னும் பேச முடியாம வெளியே போய் நின்னுகிட்டு இருந்தான்.

அப்பறம் வழக்கம் போல, டிரம் அடிச்சுகிட்டே "ராஜ் ஆர்யன்" (ராஜேஷ்) வந்து காப்பாத்தி விட்டார்.

இன்னைக்கு அமரிக்கவுல கிரீன் கார்டு BMW எல்லாம் வச்சு இருந்தாலும், எப்ப போன் பண்ணினாலும் மறக்க முடியுமான்னு கேட்பான்.










நன்றி மீண்டும் சந்திப்போம்

Wednesday, May 13, 2009

டெல்லி பாகம்- II - "ஒரு ருபா பிச்சை"

டெல்லில தங்கி வேலை பார்த்த இனொரு நேரத்துல, என் நண்பர்கள், குமார், ஜான், சுரேஷ் என்கிற சுச்சு மாமா, எனோட குரு ராஜேஷ், அவரோட தம்பி கார்த்தி என்கிற சோட்டு, அவனோட நண்பன் விஜயன் என்கிற வில்ஸ் விஜி, எங்க எல்லோருக்கும் பொழுது போக்கே யாரயாவது ஓட்டுறதுதான், யாருமே கிடைகலனா, சில சமயம் எங்கள நாங்களே ஓட்டிகுவோம். அதுலேயும் "வில்ஸ் விஜிய (எப்பயுமே வில்ஸ் சிகரட் கைல வச்சு இருக்கறதால வில்ஸ் விஜி) கலாய்ச்சு மொக்கைய போடுறது எங்க எல்லோருக்குமே பிடிச்ச பொழுதுபோக்கு.

காரணம் என்னான, விஜி ஆளு பக்க ஆருஅடில நம்ம பொன்னம்பலம் மாதிரி இருப்பான், அலுவலகம் போற நேரம் தவிர, மத்த எல்லா நேரமும் ஒரே துணிலதான் இருப்பான், ஒரு அழுக்கு ட்ரவுசர், ஒரு அழுக்கு பனியன், அது உண்மைல என்ன கலர்னு எங்க யாருக்குமே சத்தியமா தெரியாது. அந்த கருமத்த துவைச்சா என்னடான்னு கேட்டா, அண்ணே இப்பதாண்ணே வங்கி ரெண்டு வருசமச்சுனு சொல்லி, சலிக்காம அதயும் போட்டுகிட்டே எங்கயும் வருவான்.

ஒரு சீடி விடாம வாங்கி பக்குரதுதான் அவனோட வேலை, அது என்ன மொழி சீடியா இருந்தாலும், ஆனா விஜி நல்ல புத்திசாலீ, அப்பவே அவன் படிக்குற புத்தகமும் சரி, பாக்குற சீடியும் சரி, பாதி எங்களுக்கு புரியவே புரியாது (சரி..சரி... இப்போ மட்டுமும் நாங்க என்ன ஒபாமாவுக்கு டியுசனா எடுக்க போறோம், இப்பயும் புரியாது தான்).

இப்படியே ஒரு நான் ராத்திரி சாப்பாட்டுக்கு நண்பர்கள் எல்லாம் வழக்கம் போல கீழ உள்ள ஒரு பஞ்சாபி கடைக்கு (அந்த கடை பஞ்சாபி ஆன்ட்டி படு அம்சமா இருப்பதால அந்த கடைக்கு நாங்க வச்ச பேரு "மடிப்பு அம்சா கடை" ) சாப்ட போனோம், தம்பி விஜியும், என்கிட்டே வழக்கம் போல தன் சந்தேகத்த கேட்க எல்லோரையும் மொக்கைய போட்டுகிட்டே வந்தோம்.

நான்: குமார், போன வாரம் நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிய என்னடா சொன்ன, இந்த வாரம் கூப்பிட்டதுக்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டாரு?

குமார்: இல்ல மாப்ஸ், நொய்டாலிருந்து வந்துட்டு ஒடனே கிளம்புறேன்னு சொன்னாரு, இருங்க பாஸ் போலாமுன்னு நானும் சோட்டும் சொன்னோம்

நான்: சரி, அதுக்கா அவரு கடுப்பனாறு? உண்மைய சொல்லுமா ?

குமார்: அதுக்கு இல்லடா, அவரு இல்ல இல்ல நான் போய் துணி துவைக்கனும்னு சொன்னாரா?

நான்: சரி,

குமார்: நான் சொன்னேன், இதுக்கு எதுக்குங்க முப்பது கிலோமீட்டர் போகணும், இந்தா நாங்க ரெண்டு பக்கெட் புல்லா நனைச்சு வச்சு இருக்கோம், போய் ஆசைதீர துவைங்கனு சொன்னோம், அது தப்பா மாப்ஸ்...

நான்: அது தப்பே இல்லடா, ஆனா அவன் போய் இந்த வாரம் ஆள கூட்டிகிட்டு வந்தா அப்ப வரும் தப்பு தாரை எல்லாம்.

நான்: சரி, தம்பி நீ அந்த தோசை கடை மாஸ்டர்ர என்ன கண்ணு சொன்ன, அவன் ஒம்மேல கடுப்பா இருக்கான்?

சோட்டு: நாங்க சாப்ட போனப்ப, தோசைய நல்லா போடுங்கனு சொன்னதுக்கு, என்க்கேவா, நான் நாலு வருசமா தோசை போடுறேன் தெரியுமான்னு சொன்னாண்ணே.

நான்: நீ என்ன கண்ணா சொன்னா அத சொல்லு ?

சோட்டு: நான் நாலு வருசமாவா இன்னுமா எடுக்க முடியலானு சொன்னேன் அதுக்கு போய் அவன் கடுப்பானா நான் என்னாண்ணே பண்ண முடியும்?

விஜி: அத விடுங்கண்ணே, தினம் நான் கலைல போகும் போது ஒரு பொண்ணு விடாம பாத்தா என்னண்ணே அர்த்தம்?

நான்: நீ கதவ முடிட்டு போகலைனு அர்த்தம்?

விஜி: அண்ணே, அது இல்லானே, நான் ஆபீஸ் போகும் போது பாத்தா?

நான்: ஓ.. அதுவா, இந்த காட்டான் இருக்க ஏரியாலயா, நம்மளும் இருக்கமான்னு பாப்பா போல...

விஜி: இல்லண்ணே...பஸ் ஸ்டாப்லேயும் பாத்தா என்ண்ணே அர்த்தம்?

நான்: இவன் நிக்கிற இந்த பஸ் ஸ்டாப்புல, இனி ஜென்மத்துக்கும் நாம வரக்கூடாதுன்னு அர்த்தம்...

விஜி: போங்கண்ணே, அவ பஸ்ல ஏறியும் திரும்பி பாப்பா தெரியுமா..

சோட்டு-கார்த்தி: வேணாம் விஜி "டெல்லியில் இளம்பெண் தற்கொலைன்னு "தினத்தந்தில" வர காரணமா ஆகிராத...

குமார்: தம்பி அவனுக்கு பொறாமை, யு கேரி யான்...

நான்: அது தம்பி, ஒரு வேலை நீ அந்த பஸுல ஏரூறியான்னு பாக்கத்தான்...

விஜி: ஆமாண்ணே, அதுக்கு என்ண்ணே அர்த்தம், ஓர் வேலை நானும் அந்த பஸ்ல ஏரூனா...

நான்: அவ பாத்ததும், அதுக்கு தாம்மா, ஓர் வேலை நீயும் அந்த பஸ்ல ஏரூனா, அடுத்த நாளிருந்து அவ வேற பஸ்ல போக வேண்டி இருந்து இருக்கும் ...

விஜி: போங்கண்ணே,உங்களுக்கு ஒன்னுமே தெரியல, அதுனால நான் உங்களுக்கு குடுத்த "டாக்டர் மத்தர்பூதம்" பட்டத்த திரும்ப வங்கிக்கறேன்.

இப்படியாய் மொக்கைய போட்டுக்கிட்டு சாப்டு முடிச்சிட்டு திரும்ப வந்துகிட்டு இருந்தோம், வர்ற வழியல விஜி ஒரு சீடி கடைல போய் புது சீடி ஏதாவது இருக்கனு பாக்க நாங்க எல்லாம், பேசிகிட்டே முன்னடி நடந்தோம், தம்பி விஜி சீடியோ, பீடவோ வாங்க பணம் கம்மியா இருக்க, அண்ணே ஒரு ரூபா இருந்தா குடுங்கன்னு சொல்லிக்கிட்டு பின்னாடி ஓடி வர, எங்களுக்கு முன்னாடி வந்த வேற யாரோ தமிழ் மக்கள், இவன் உருவத்தையும், அழுக்கு துணியையும் பாத்துட்டு, ஐயோ பாவம்னு சொல்லிகிட்டு ஒரு ஒருருபா காச இவன் கையல வைக்க, நாங்க திரும்பி பாக்கவும் சரியா இருந்தது.

ஒரு விநாடி நாங்க எல்லாம் (விஜியும் சேத்து) அதிர்ச்சி ஆனாலும், நடந்தத யூகிச்சு, சிரிச்சா ...இன்னைக்கும் விஜினு சொன்ன நாங்க எல்லோரும் நினைச்சு சிரிக்க முடியுற ஒரு நிகழ்சி அது.

Monday, May 11, 2009

டெல்லி பாகம்-I - "ராஜஸ்தான் ரயிலில் ரவுசு"

முகு: இந்த பதிவில் உள்ள படங்களுக்கும், பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், சும்மா...! ஒரு கண் குளிர்சிக்காகவும், ராஜஸ்தான் "எபெக்ட்டுக்காகவும்" தான்.

நண்பர்களோட டெல்லில தங்கி வேலை பார்த்த நேரம் அது, ஒரு நண்பனோட அக்காவுக்கு ரெட்டை குழந்தை பிறந்து இருந்தது, அவுங்க கணவரோட பணி விமான படை தலமான ஜோத்பூர், அது நமக்கு டெல்லில இருந்து பக்கம் என்பதால், நண்பர்கள் எலோரும் ராஜஸ்தான் போக ஒரு பிலான் போட்டோம்.

நானும் என் நண்பர்கள், குமார், ஜான், சுரேஷ் என்கிற சுச்சு மாமா, என்னோட குரு ராஜேஷ், அவரோட தம்பி கார்த்தி என்கிற சோட்டு, அவனோட நண்பன் விஜயன் என்கிற வில்ஸ் விஜி, எலோரும் புறப்பட தயார் ஆனோம். இதில் ராஜேசும், விஜியும் தான் நல்லா ஹிந்தி பேசுவாங்க, மத்த நாங்க எல்லாம் தத்தி.

("அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை பரப்பும் நாட்டுபுற நடன மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை தொலைத்தது யார்?")



நம்ம கலாச்சாரம் மாறாம டிக்கெட் எடுக்குறதுக்கு முன்னாடியே சரக்கு, தம் எல்லாம் வாங்க போனோம்.

அதுவும் நம்ம பண்பாடு "நாலு பேரும் ஒன்னா பாருக்கு போனாலும், ஆளாளுக்கு ஒரு சரக்கும் மிக்ஸ்சிங்கும் வாங்க வேண்டும் என்பது தானே!, அந்த முறையை காப்பாத்த நாமும் ஆளாளுக்கு ஒரு சரக்கும் மிக்ஸ்சிங்கும் மறாக்காம தனித்தனியா தம் வாங்கியாச்சு.

வீட்டுக்கு வந்து ஆளுக்கு ஒரு ரவுண்டு முடிச்சிட்டு, மிக்ஸ்சிங் மாறாம கோக், சோடான்னு ஒரு ஆறு இரண்டு லிட்டர் பாட்டில் முழுவதும் எடுத்தாச்சு. இதுல சைடிஷ் வேற ஒரு பத்து பாக்கெட்.

இப்படியே போய் ஒரே பெட்டில இருக்க எட்டு சீட்டையும் வாங்கி ஒரு வழியா ரயில் புறப்பட்டாச்சு.

பொது நல நோக்கோட ஜான் மேல இருந்த ரெண்டு சீட்டுக்கும் நடுவுல ஒரு துண்ட கட்டி அதுல எல்லா சைடிஷ்சையும் கொட்டி ரவுண்டு கட்ட ஆரபிச்சோம், அப்பத்தான் டெல்லில ரயில்ல தம் தண்ணி அடிக்க கூடாதுன்னு சட்டம் வந்த புதுசு.

ரிஸ்க் எடுக்குறதுதான் நமக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு உங்களுக்கு தெரியாதா என்னா?

இப்படியே ஒரு மூணு ரவுண்டு போச்சு, நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு.

சுச்சு மாமா ஒரு கைல கிளாஸ் இன்னொரு கைல தம்மோட, இயற்கைய ரசுச்சுகிட்டே குடிக்க போறேன்னு சொல்லி தொலைக்க, உடனே ஜானும் சேர்ந்துகிட்டு போய் கதவை திறந்துகிட்டு நின்னாக நம்ம மக்க.

நானும் நாலு ரவுண்டு மப்புல, மேல் சீட்ல ஒக்காந்துகிட்டு எதிர் சீட்ல கால நீட்டி மட்டை ஆகி இருந்தேன்.

மத்த மக்க எல்லாம் மப்புல அமரிக்க பொருளாதாரம் மற்றும் இந்திய முன்னேற்றம் பற்றி மும்பரமா பேசி, இல்ல இல்ல கத்திகிட்டு வந்தாங்க (சுத்தமான பீட்டர் மொக்கை).



திடீன்னு பொத பொதன்னு போலீஸ் ரெண்டு பக்கமும் வந்தாங்க, வந்தவுன்ன என்ன பாத்து ஒரு போலீஸ் "நீச்சே உட்டாவ் வ் வ் வ் னு" (கீழ இறங்குன்னு) கத்தினார்.

நானும் சுதாரிச்சு கீழ இறங்க போன போது நடுவுல இருந்த துண்டை அவரு துப்பாக்கியால தட்டி விட்டாரு, உள்ள இருந்த சரக்கு, தம், மிக்ஸ்சிங்ன்னு மொத்தமா கீழ விழ, அத பார்த்தவுடன் அவருக்கு பெரிய அதிர்ச்சி.

"சாலா பூரா பார் கோல்தியா கியா" (மச்சான் முழுசா ஒரு பார் திறந்து வச்சு இருக்கியா)னு கேட்டு ஒரு அறை விட்டான் பாருங்க...! அடிச்ச மப்பு தெளிஞ்சு கண்ணுல வட்ட வட்டமா நச்சதிரம் பறந்தது எனக்கு.

உடனே நம்ம குரு ஹிந்தில எதோ சொல்ல அவருக்கு ஒரு அறை, ஒரே கலவரமா போச்சு.

அப்புறம் நம்ம போலீஸ் எல்லோருடைய பொருளையும் செக்பண்ணி டிக்கெட், லேப்டாப், பாஸ்போர்ட், மொபைல் எல்லாம் எடுத்துகிட்டு எங்கடா போறீங்க நீங்க தீவிரவாதியான்னு கேட்க?

நம்ம கூட்டத்துல எதோ ஒன்னு "அண்ணே நம்ம தீவிரமா வெளிநாட்டு வேலை தேடுரவாதின்னு கூட தெரியமா நம்மள போயி தீவிரவாதியான்னு கேட்குது பாருங்க!

இவரு சிறப்பு போலீஸ் இல்லண்ணே, சிரிப்பு போலீஸ் போல நீங்க அவரோட ஐ.டி கார்ட் செக் பண்ணுகண்ணே-ன்னு மப்புல சின்னபுள்ள தனமா சொல்லி தொலைச்சுருச்சு.

அவ்வளவுதான் அந்த போலீஸ் செம காண்டா ஆகிட்டாரு.

உடனே எல்லோரும் கிளம்பு அடுத்த ஸ்டேஷன்ல இறங்குங்க ரயில்வே போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உங்கள ஒப்படைகிறேன்னு சொல்லிட்டாரு.

அப்புறம் வழக்கம் போல நம்ம சிரிப்பு ஸாரி, சிறப்பு போலீஸ், அப்டியே கூட்டிகிட்டு போய் கழிவறை பக்கத்துல நிக்க வச்சு வழக்கம் போல கதையை ஆரமிக்க, அந்த கடமை தவறாத "அலைக்ஸ் பாண்டியன்" சரி, சரி, நீங்க எல்லாம் படிச்சா பசங்க, போலீஸ் கேஸ் எல்லாம் உங்களுக்கு வேணாம், ஆளுக்கு ஆயிரம் ரூபா கொடுத்துட்டு போங்கன்னு நல்ல ஒரு தீர்ப்பை சொன்னாரு.

நாங்களும் ஆளுக்கு ஆயிரம் ரூபாயா யா யா யா...ஐயோ ...ஐயோ ...எங்ககிட்ட மொத்தமே ஆயிரம் ரூபா தாங்க இருக்கு சொன்னோம்.

அதையும் விடாம வாங்கி கொண்டு, சரி எல்லா பாட்டிலையும் கழிவறைல போய் கொட்டுங்கன்னு சொல்லிட்டு, கொஞ்சம் பெரிய மனசோட யாராவது இன்னும் குடிக்கனும்னா கழிவறை உள்ள போய் குடிங்கன்னு அனுமதி வேற கொடுத்தாரு.

எல்லாம் பயத்துல ஒருத்தர் முகக்தை ஒருத்தர் பார்க்க, நானும் நம்ம குரு ராஜேசும் மட்டும் கன்னத்துல கைய வச்சுக்கிட்டு "தென் பாண்டி சீமைல தேரோடும் வீதில மான் போல வந்தவனே யார் அடிச்சாரோன்னு" ரயில் பேக்ரவுண்டு எபெக்ட்ல பாட்டு கேட்க கழிவறைக்குள்ள போய் முடிச்ச வரை ஒரே மூச்சுல குடிச்சுட்டு வந்தோம்.

(அடி நாங்கதான வாங்குனோம்).

ஒரு வழியா எல்லா பிரச்சனையும் முடிஞ்சு எல்லோரும் அவரவர் சீட்டுல போய் படுத்தோம். போகும் போதே அடி எப்படின்னு நம்ம மக்களோட அக்கறையான விசாரிப்புவேற!.

எல்லாம் போய் படுத்தோமே தவிர ஒருத்தனும் தூங்கல, எப்படா ராஜஸ்தான் வரும்ன்னு பாத்துகிட்டு இருந்தோம்.



திடீன்னு திரும்ப எங்க பெட்டில லைட்டை யாரோ போட தட, தடன்னு எல்லோரும் எழுந்து பாத்தோம், யாரோ ஒருத்தர் நின்னுக்கிட்டு இங்க எதாவது பிரச்சனையான்னு கேட்டார்.

நாங்களும் வேற எவனோ திரும்ப பணம் கேட்க வந்துட்டான்னு, ஒன்னும் இல்ல எல்லாம் முடிஞ்சதுன்னு சொன்னோம்.

உடனே அவர் பயப்படாதீங்க நான் "ரயில்வே சி.பி.சி.ஐ.டி" இங்க பாதுகாப்புக்கு வந்த போலீஸ் உங்ககிட்ட பணம் லஞ்சம் வாங்கியதாக எனக்கு தகவல் வந்தது அது உண்மையாய் இருந்தால் நான் உங்களுக்கு அந்த பணத்தை திரும்ப வங்கி தர முடியும்னு சொன்னாரு.

நாங்களும் இழந்த குசி திரும்ப வர எல்லா விசையத்தையும் அவரிடம் சொன்னோம். உடனே அவர் போய் டி.டி.ஆரை அழைத்து வந்தார், அவரும் தன்னிடம் இருந்த தாள்களை சரி பார்த்து அந்த போலீஸ் நம்பர் பற்றிய தகவல்களை எல்லாம் சொன்னார்.

உடனே நம்ம சி.பி.சி.ஐ.டி உடனே யார் யாருக்கோ மொபைல்ல போனை போட்டு காரசாரம பேசுனாரு.

ஒரு அஞ்சு நிமிடத்தில் நம்மகிட்ட பணம் வாங்கின அலக்ஸ் பாண்டியன் கோபமா வந்தாரு, வந்த வேகத்துல என்னென்னவோ கத்திக்கிட்டு, எங்க உடமைகளை எல்லாம் எடுத்தாரு உடனே டி.டி.யாரும், சி.பி.சி.ஐ.டி-யும் அவரை தடுத்து, இதை செய்ய உங்களுக்கு உரிமையில்லை.

அவர்கள் குடித்தால் நீங்கள் டி.டி.யார் - கிட்ட தான் சொல்ல முடியும் தவிர, மற்ற படி ஓடும் வண்டியில் அவர்களை அடிக்கவோ பணம் வாங்கவோ உங்களுக்கு உரிமையில்லை.

இப்போது நீங்கள் அவங்களுக்கு ஓடும் ரயிலில் குடித்தற்க்கான ஒரு "சார்ஜ் சீட்" கொடுங்கள், ஆனால் நீங்கள் அதற்கான சாட்சியாக அவர்கள் குடித்த பாட்டிலை சமர்பிக்க வேண்டும்.

நானும் உங்கள் மேல் ஓடுகிற ரயிலில் பயணியை அடித்தது மற்றும் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்கான "சார்ஜ் சீட்" கொடுக்கிறேன்னு ஒரு பிட்ட போட போலீஸ் இன்னும் காண்டகிட்டார்.

அப்புறம் ஒரு சில நிமிடத்தில் நம்ம பணம் கைக்கு வந்து விட்டது, நாங்களும் நிம்மதியாக ராஜஸ்தான் போய் சேர்ந்தோம்.

அடுத்த நாள், எப்படி அந்த போலீஸ் நம்ம சீட்டுக்கு மட்டும் சரியா வந்ததுன்னு யோசிச்சு நாங்க மொக்கைய போட்டுக்கிட்டு இருந்த போதுதான் சுச்சு மாமா ஒரு உண்மைய சொல்லுச்சு.

இந்த மக்க ஓடும் வண்டியில் கதவை திறந்துகிட்டு நின்றபோது அந்த வழியாக வந்த போலீஸ் அவர்கள் கையில் இருந்த தம்மை கீழ போட சொல்லி ஹிந்தில சொல்ல, நம்ம மக்க அவரை பார்த்து "வி டோன்ட் நோ ஹிந்தி-னு" பீட்டர் விட அவரும் கடுப்பாகி பக்கதுல வந்து பார்த்த போதுதான் சரக்கு மேட்டார் அவருக்கு தெரிஞ்சு இருக்கு.

அவரும் வேறு எதோ கேட்க போய், நம்ம மக்கள் விடாம பீட்டர் விட்டு "டாக் டு அவர் பிரெண்ட்ஸ்னு" எங்க சீட்டை கைய காட்டி இருக்குதுக பக்கிக.

அது ஒரு அழகிய நிலாக்காலம்.

இதை விட, டெல்லியில் வில்ஸ் விஜியோட "ஒரு ருபா பிச்சை" கதை ஒன்னு இருக்கு, அந்த மேட்டரோட உங்களை "நெக்ஸ்ட் மீட் பண்றேன்".

நன்றி!.
 

Blogger Widgets