Thursday, November 12, 2009

சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

பதிவுக்கு முன் ஜலீலாவின் அன்பு விருதுக்கு நன்றி.




பொருளியல் மந்தம் ஆட்குறைப்பு!?

நம் கணினி துறை மட்டுமில்லாமல் பொதுவாக எல்லா துறையை பொறுத்த வரையுமே இது ஒரு மோசமான காலம் என்பதை நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம், கடந்த 2001-2002-ம் ஆண்டு கூட இதே நிலை இருந்தாலும், அதன் பாதிப்பு இந்த அளவு இல்லை என்பதே உண்மை.

ஆகவே, நானும் இத்துறையை சார்ந்தவன் என்ற முறையில், இதன் வருங்காலத்தை பற்றி அறிந்து கொள்ள இது சம்மந்த பட்ட அனைத்து தகவல்களையும் படிப்பதை சமீபகாலமாக வழக்கமாக்கிகொண்டேன்.

சில மாதங்கள் முன் வரை எங்கு திரும்பினாலும், "பொருளியல் மந்தம்", " வேலை குறைப்பு", "சம்பள குறைப்பு" போன்ற தகவல்கள் மட்டுமே வந்து வேலை இழந்தவர்களை விட, "வேலை பார்ப்பவர்களைத்தான்" கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கின.

இப்போது உண்மையில் மந்தநிலை ஓரளவுக்கு மாறிவிட்டாலும், இன்னும் இந்த பொருளியல் மந்த நிலையை சாதகமாக்கி கொண்டு பல நிருவனங்கள் குறிப்பாக மென்பொருள் துறையில் தங்களுக்கு தேவையானதை சாதித்து கொள்வது என்பது, நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

அதாவது நீண்ட நாட்களாக பணி செய்த அனுபவத்தில் உயர்ந்த சம்பளத்தில் இருப்பவர்களை நீக்கி விட்டு அல்லது அவர்களை குறைந்த சம்பளம் உள்ள வேறு நாட்டு கிளைகளுக்கு மாற்றிவிட்டு, அதே வேலையை குறைந்த சம்பளத்தில் வேறு ஒருவரை நியமிப்பது .

ஏன் இப்படி? இந்த நிலை மாற நாம் என்ன செய்யவேண்டும்? என்ற தேடலின் ஆரம்பமே இந்த பதிவு.



சமீபத்தில் சிங்கையில் நான் தங்கி இருந்த நண்பரின் வீட்டில் சில தின பத்திரிகை செய்திகளை படிக்க முடிந்தது.

ஆகா, என்ன ஒரு தன்னம்பிக்கை தரும் தகவல்கள், மேலும் ஒரு தின பத்திரிகையில் எல்லா மக்களையும் சென்று அடையும் படி எவ்வளவு அழகாக "SWAT" சூத்திரத்தை (Strength.Weakness,Analysis,Target) விளக்கி சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல், எவ்வளவு துல்லியமான புள்ளி விபரங்களையும், நாட்டின் வளர்ச்சி பாதையையும், அதில் மக்கள் பங்கையும், எவ்வளவு அழகாக எடுத்துச்சொல்லி வழி காட்டுகிறார்கள்.

இதனால் எல்லா தரப்பு மக்களுக்கும், நாம் ஒரு மோசமான பொருளியல் சூழ்நிலையில் இருந்தாலும், எல்லா வகையிலும் நம்மை முன்னேற்ற ஒரு வலுவான, தரமான அரசாங்கம் நம்முடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை கொடுக்கும் இல்லையா?

இதன் மூலம் மக்கள் எந்த வகையான மனஉளைச்சலுக்கும் ஆளாகாமல், நாம் செய்ய வேண்டியது எல்லாம், நம் நாட்டிற்க்கு ஒத்துழைக்கும் வகையில், "ஒற்றுமையுடன் கூடிய கடுமையான உழைப்பு" மட்டுமே என்ற பாதைக்கு எளிதாக மக்களை கூட்டிச் செல்ல இது வழி வகுக்கும் இல்லையா?

அத்தகைய செய்திகளில் சிலவற்றை, இங்கே உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளேன், படித்து பாருங்கள்.

I - புயலைக் கடந்தோம், வலுவாக எழுவோம்.

பொருளியலைப் பொறுத்தவரை புயலை நாம் கடந்து விட்டோம் என்றாலும் சூழ்நிலை இன்னமும் தெளிவாக இல்லை. இருந்தாலும் இந்தச் சிரமத்தைச் சமாளித்துச் சாதிக்க சிங்கப்பூரிடம் பல சாதக அம்சங்கள் இருக்கின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். உலக சூழ்நிலை நிலைபெறுகிறது.சிங்கப்பூரின் தொழிலாளர் சூழல் நிலைபெற்று இருக்கிறது. சில நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில் மூன்றாம் காலாண்டு நன்றாக இருக்க வேண்டும் என்றார் திரு லீ சியன் லூங்.

அதற்கு அப்பால் பார்க்கையில் நிலவரம் தெளிவாக இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். ஹைஃபிளக்ஸ் போன்ற உள்ளூர் நிறுவனங்கள் நன்றாகச் செயல்படுகின்றன. புதிய தொழில் துறைகள் அரும்புகின்றன. ஊழியர்கள் மறுபயிற்சி பெறுகிறார்கள். பொருளியல் வளர்ச்சிக் கழகம் பன்னாட்டு நிறுவனங்களுடன் பத்து ஆண்டுத் திட்டம் ஒன்றைத் தீட்டி வருகிறது. அத்தகைய நிறுவனங்களை ஊக்குவித்து அவற்றின் அதி நவீன தயாரிப்பு ஆலைகளை, தலைமையகங்களை கட்டுப்பாட்டு நிலையங்களைச் சிங்கப்பூரில் அமைக்கும்படி செய்வது இலக்கு.

இந்த மாற்றங்களுக்குத் தோதாக ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் பாய லேபார் செண்ட்ரல், ஜூரோங் லேக் வட்டாரத்தில் புதிய பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். ஏற்கனவே 50 பயிற்சி நிலையங்கள் தீவு முழுவதும் இருக்கின்றன. இது பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் சொன்னார். புதிய உத்திகள், முதலீடுகள், ஊழியர்கள் மேம்பாடு ஆகியவற்றுடன் நாம் வலுவாக மறுபடியம் முன்னேறுவோம் என்று திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.

II - எதிர்பார்த்ததை விட அதிக லாபம் ஈட்டியது டிபிஎஸ் வங்கி.

டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக $552 மில்லியன் லாபம் ஈட்டியிருக்கிறது. இது முதல் காலாண்டை விட 21 விழுக்காடு அதிகமாகும். ஓராண்டுக்கு முன்பு கிடைத்த $652 மில்லியன் நிகர லாபத்தோடு ஒப்பிடுகையில், இது 15 விழுக்காடு குறைவாகும். ஆனால் ஆய்வாளர்கள் கணித்திருந்த $455 மில்லியனைவிட அதிகமாகும். சென்ற ஆண்டு இரண்டாம் லாண்டோடு ஒப்பிடுகையில், இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் வருமானம் 8 விழுக்காடு அதிகரித்து $1.79 பில்லியனை எட்டியது. டிபிஎஸ் குழுமத்தின் வலுவான அடிப்படைக்கும் வாடிக்கையாளர்களுடனான ஆழமான உறவுக்கும் 2009ம் ஆண்டு முதல் ஆறு மாதங்களின் பலாபலனே சான்று என்று டிபிஎஸ் தலைவர் கோ பூன் ஹுவீ கூறினார். டிபிஎஸ் குழுமம் பங்கு ஒன்றுக்கு 14 காசுகள் லாப ஈவை அறிவித்தது. முந்திய காலாண்டிலும் இதே லாப ஈவு வழங்கப்பட்டது.

III - அதே ஒற்றுமையுடன் மேலும் சாதிப்போம் மேம்படுத்தவும் உழைக்கவும் தயாராக இருந்தால் வேலைகள் உண்டு.

சிங்கப்பூர் வரலாற்றின் முதல் 50 ஆண்டுகளில் ஐக்கியமாக சிங்கப்பூரர்கள் சாதித்ததைப் போல் அடுத்த 50 ஆண்டுகளிலும் பலவற்றையும் ஐக்கியமாகச் சாதிக்கும் பெரும் பயணம் தொடங்கி விட்டது என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார். உடனடி, நீண்டகால அடிப்படைகளில் செயல்பட்டால் சிங்கப்பூரின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். ஐக்கியமாக இருந்தால் பொருளியல் பிரச்சினைகளைச் சமாளித்து வளரலாம். சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தலாம். சிங்கப்பூருக்குச் சேர்ந்து உருக்கொடுக்கலாம் என்றார் பிரதமர் லீ. சிங்கப்பூர் ஆறு, வீடுகள், புதுநகர்கள், சமூக நிலையங்கள், பள்ளிவாசல்கள் அனைத்தும் மேம்பட்டன.
சிங்கப்பூர் ஆறு முதல் மெரினா பே வரை முற்றிலும் சிங்கப்பூர் உருமாறி விட்டது. முதல்தர கல்வி முறை, எல்லாருக்கும் வசதியான பொதுப் போக்குவரத்து, வசிக்க, வேலைபார்க்க, விளையாடி மகிழ தலைசிறந்த இடமாகச் சிங்கப்பூர் உருவாகும். ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றி, இணக்கமிக்க பிணைப்புமிக்கச் சமூகமாகத் தொடர்ந்தால் அடுத்த 50 ஆண்டுகளில் கற்பனைக்கு எட்டாத மாற்றம் ஏற்படும் என்றார் திரு லீ.

IV - சிங்கப்பூர் வர்த்தகம் இரண்டாம் காலாண்டில் 3.8% அதிகரிப்பு.

சிங்கப்பூரின் மொத்த வர்த்தகம் இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களில் 14 விழுக்காடு சுருங்கிய பிறகு, இரண்டாம் காலாண்டில் 3.8 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. சென்ற ஆண்டு நான்காம் காலாண்டுக்குப் பிறகு மொத்த வர்த்தகம் வளர்ச்சி அடைந்திருக் கும் முதல் காலாண்டு இது. ஓராண்டுக்கு முன்போடு ஒப்பிடுகையில், மொத்த வர்த்தகம் இரண்டாம் காலாண்டில் 27 விழுக்காடு சுருங்கியது. முதல் காலாண்டில் வர்த்தகம் 28 விழுக்காடு சுருங்கியது. திங்கட்கிழமை காலை ஐஈ சிங்கப்பூர் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் முதல் காலாண்டில் 7.4 விழுக்காடு சுருங்கியபிறகு, இரண்டாம் காலாண்டில் 7.6 விழுக்காடு அதிகரித்தது. சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில், எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் இரண்டாம் காலாண்டில் 14 விழுக்காடு குறைந்தன. முதல் காலாண்டின் சரிவு 26 விழுக்காடு. மின்னணுப் பொருட்கள், மின்னணு அல்லாத பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்தது இதற்குக் காரணம். இவ்வாண்டில் மொத்த வர்த்தகம் 25 முதல் 22 விழுக்காடு சுருங்கும் என முன்னதாகக் கணிக்கப் பட்டிருந்தது. புதிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட பிறகு, மொத்த வர்த்தகம் 23 முதல் 21 விழுக்காடு வரை சுருங்கும் என்று கணிப்பு மாற்றப்பட்டிருக்கிறது. அதே வேளையில், எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் 12 முதல் 10 விழுக்காடு வரை சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் காலாண்டில் நடந்த மொத்த வர்த்தகத்தின் மதிப்பு $178 பில்லியன். இது முதல் மூன்று மாதங்களின் $165 பில்லியனைவிட அதிகம். மொத்த ஏற்றுமதிகளும் மொத்த இறக்குமதிகளும் இரண்டாம் காலாண்டில் முறையே 25 விழுக்காடும் 28 விழுக்காடும் சுருங்கின. மின்னணுப் பொருட்களின் உள்நாட்டு ஏற்றுமதி முதல் காலாண்டில் 32 விழுக்காடு சரிந்த பிறகு, இரண்டாம் காலாண்டில் 23 விழுக்காடு சரிந்தது. மின்னணுப் பொருட்கள் அல்லாத எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதி முதல் காலாண்டில் 21 விழுக்காடு சரிந்த பிறகு, இரண்டாம் காலாண்டில் 8.6 விழுக்காடு சரிந்தது.

இரண்டாம் காலாண்டில் தைவான் தவிர்த்து மற்ற பத்து முக்கிய சந்தைகளுக்கும் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதி சரிந்தது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடு களுக்குச் செல்லும் ஏற்றுமதியே மிகப்பெரிய சரிவைக் கண்டது. “மொத்த வர்த்தகத்தின் சரிவு ஓரளவு நிலைப்படுகிறது என்பதற்கான சில அறிகுறிகள் தெரிகின்றன. “உலகப் பொருளியலும் நிலைப்படுவதாகத் தெரிகிறது. இருந்தாலும், மந்தநிலை இன்னும் முடியவில்லை என்பதால் பொருளியல் மீட்சி மிதமாகவே இருக்கும்” என்று ஐஈ சிங்கப்பூர் தெரிவித்தது.

இவ்வாண்டின் எஞ்சிய மாதங்களில், வெளி நிலவரங்கள் தொடர்ந்து நலிவடையும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் அது எச்சரித்தது.


நம் பாரதி கனவு கண்ட "சுதேசிமித்திரன்" பத்திரிக்கையை போல, வியாபார நோக்கம் மட்டுமே குறியாக இல்லாமல், சிறந்த மக்கள் சேவை செய்துவரும் சிங்கை "தமிழ் முரசு" என்னும் அந்த பத்திரிகைக்கு மேலும் வளர மற்றும் தன் மக்கள் சேவையை தொடர "என் மனமார்ந்த வாழ்த்துக்கள்".

சரி, இனி நம் பதிவை பார்ப்போம்.

இந்த தகவல்களை படிக்கும் போது நமக்கு என்ன தோன்றுகிறது? எவ்வளவு நம்பிக்கையான தகவல்கள், எவ்வளவு கடைமை உணர்வு மற்றும் நாட்டின் வளர்ச்சியின் அக்கறை கொண்டுள்ள உண்மையான தலைவர்கள்.

இதை போல வழிகளை, நாம் ஏன் கடை பிடிக்க கூடாது! என்ற எண்ணம் வருகிறது இல்லையா?

அதெல்லாம் சரி, இதற்கு தனிப்பட்ட நாம் அல்லது பதிவராகிய நாம் என்ன செய்ய முடியும்?

இதை நடிகைக்கு "வரும் காதல் எஸ்.எம்.எஸ்-சையும்", "குடும்ப விவாகரத்து மற்றும் விபச்சார பிரச்னைகளையும்" கலர் படத்துடன் முதல் பக்கத்தில் போடும் சில பல "பத்திரிக்கைகள்" அல்லவா இதை செய்ய வேண்டும் என்று நினைக்க கூடும்.

நிச்சியம் இல்லை நண்பர்களே, "இணையம்" இன்று இதுதான் உலகின் முன்னணி மற்றும் வேகமான "லாப" நோக்கம் மட்டும் குறியாக இல்லாத பத்திரிக்கை.

எந்த பத்திரிக்கை பிரதிகளும் செல்லாத இடம், நாடு, எல்லாம் நம் மக்களை வீட்டில் சென்று நேரில் சந்திப்பது உங்கள் தமிழ் பதிவுகள் இல்லையா?

அது மட்டுமில்லாமல், அனேகமாக நம் எல்லா பத்திரிக்கைகளும் இன்று பதிவுலக பதிவில் இருந்து, நல்ல தகவல்களை எடுத்து மக்களுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளன இல்லையா?

அப்படி இருக்கும் போது, நாம் ஏன் நம்மால் ஆனா முயற்சியை செய்ய கூடாது?

சரி, அப்படி என்னதான் செய்ய முடியும்?

இன்று பதிவு உலகில் கணினி துறை மட்டுமில்லாமல் எல்லா துறைகளையும் சார்ந்தவர்கள் இருப்பதால், உங்கள் பதிவுகளில் உங்கள் துறை சார்ந்த நல்ல தகவல்களை, பொதுவான வளர்ச்சி விகிதத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பொருளியலைப் பொறுத்தவரை நிலைமை இன்னும் முழு சீராகாவிட்டாலும், கீழ் நோக்கி சென்ற "மந்தநிலை மாறிவிட்டது" என்பதே உண்மை இதை அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைய செய்யலாமே?



உங்கள் துறை, அலுவலகத்தின் சென்ற காலாண்டு வளர்ச்சியோடு ஒப்பிட்ட இந்த மற்றும் வரும் காலாண்டு வளர்ச்சியை பற்றி பொதுவாக கொடுக்கக்கூடிய புள்ளிவிபரத்தை கொடுங்கள்.

உங்கள் துறை, அலுவலகத்தின் வேலை வாய்ப்பை மற்றும் வேலைக்கு எடுக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள், வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் உங்களுக்கு தெரிந்த புதிய வேலை வாய்ப்பு முறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் பதிவின் மூலம், எந்த தரப்பு மக்களுக்கும் நியாயமான ஊதியம் கிடைக்கும், எந்த தரப்பு வேலையையும் செய்யமுன் வரும் ஒரு விளிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள்.

உங்கள் பதிவுகளை போல் பத்திரிகைகளும், ஊடகங்களும் சரியான, உண்மையான நிலையை மற்றும் "இன்று மக்களுக்கு உண்மையில் தேவையான தகவல்களை" கொடுக்க முன் வரும்.

அப்படி இல்லாமல் நாட்டு வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் இல்லாத செய்திகளுக்கு முன்னுரிமை, அங்கிகாரம் தருவதை தவிர்த்து பாருங்கள்.

இத்தகைய நம் போக்கு, இது வரை வேலை இழந்தவர்களுக்கும், இனி புதிதாக வேலைக்கு வர இருப்பவர்களுக்கும், எதிர்காலம் பற்றிய மனஉளைச்சலை முதலில் நீக்கி தன்னபிக்கை கொடுக்கும்.

இதனால் நம் மூத்த தலைமுறை மக்கள் மற்றும் நம் நாடு, நம்மை ஒரு நல்ல பாதையை நோக்கி அழைத்து செல்கிறது என்ற நம்பிக்கையில் மக்கள் மனம் சீராகி, தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் தேவையான எந்த வேலையானாலும் கடின உழைப்போடு செய்ய மகிழ்ச்சியாக தயார் ஆவார்கள்.

தம் "திறமையையும், கடின உழைப்பையையும்" மட்டும் மக்கள் நம்பும் நிலை வெகுவிரைவில் வர, இந்த பொருளியல் மந்த நிலையை சாதகமாக்கி கொண்டு, "ஒழுக்கமான வாழ்கைக்காக ஒரு வேலை என்ற நிலையை மாற்றி, வேலை மட்டுமே வாழ்கை என்று மனஉளைச்சலை" தரும் சூழ்ச்சகங்கள் பலன் தராமல் போகிவிடும்.

இதன்பின் மனித நேயம் இல்லாத வெறும் "லாப" நோக்கம் மறைந்து, மீண்டும் தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலையுடன் அதற்கு தகுந்த ஊதியத்துடன் வாய்ப்புகள் மக்களை தேடி வர ஆரம்பித்து விடும்.

பிகு:- இந்த பதிவின் கருத்து நம் மக்களுக்கு பயன்படும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் நண்பர்களுடன் இந்த பக்கத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே.

Wednesday, November 4, 2009

நான் ஆத்திகனா! நாத்திகனா! - இறுதி பாகம்.

அருமையான ஒரு சிங்கப்பூர் பயணம், நண்பர் கிரியைத்தான் சந்திக்க முடியவில்லை, மன்னிக்கவும் கிரி.

ஆனால், என் நண்பர் முரளியையும் அவர் நண்பர் விக்னேஷ்சையும் சந்திக்க முடிந்தது, அவர்களுடன் நான்கு நாட்கள் நேரம் போனதே தெரியவில்லை.

சரி, இப்போது போன பதிவில் விட்டதை தொடர்வோம்.


யார், என்ன சொன்னால் நமக்கென்ன, நம் மனதை கேட்டு பார்ப்போம், உண்மைல நீ யாரூடா செல்லம்? என்று எனக்குள் நானே குழம்பியபோது...

ஒரு வேளை நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு நாத்திகனோ?

ஈ.வெ.ராவின் கொள்கையைத்தான் விரும்புகிறோமோ? என்று அதில் உள்ளே போக, என்ன ஒரு ஆச்சரியம்!

மனிதனை மதி என்று சொன்ன அந்த பகுத்தறிவு-வாத நாத்திகரின், ஒரே ஒரு கொள்கைதான் கடவுள் இல்லை என்பது.

அது தவிர, சமூக சீர்திருதத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் அந்த பகுத்தறிவு தலைவர், இன்னும் எத்தனையோ முத்து முத்தான உயர்ந்த கொள்கைகளுடன் போராடியிருகிறார்.

இதை பற்றி அவரே "குடி அரசு பத்திரிகை மே 1 1927 ம் ஆண்டு "குடிஅரசின் இரண்டு ஆண்டு பணி" என்ற தலைப்பில் எழுதியதில் " என்னென்னவற்றையோ, யார் யாரயோ கண்டித்திருக்கிறேன், எதை கண்டித்திருக்கிறேன், யாரை வையவில்லை என்று எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை" என்று எழுதியும் இருக்கிறார்.



அந்த ஒரே ஒரு நாத்திக கொள்கையை தவிர, அவரின் மற்ற அனைத்தும் எனக்கும் பிடித்து இருக்கிறதே.

ஒரு வேளை அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த வாழ்கை முறை நாகரீகத்தின் படி, கடவுள் நம்பிக்கைதான் மற்ற சமுதாய இன்னல்களுக்கு அடிப்படை, என்று அவர் நினைத்து இருக்கலாம் இல்லையா?

ஆனால், இன்று தலைமுறைகள் மாறிய பின்னும், ஏன்? அவரின் அந்த ஒரே ஒரு நாத்திக கொள்கை மட்டும் முன்னிருத்த படுகிறது என்றேன்?

அப்போது தானே, கடவுளை நம்பும் இந்த முட்டாள்களின் ஓட்டை பெற்று ஆட்சியை பிடிக்க முடியும் என்றது பதில்.

என்னடா இது? அவர் கொள்கையும் திரித்து விட படுகிறதா?

கடவுளை நம்புவர்களை முட்டாள் என்று மட்டும் தான் சொன்னார், ஆனால் இதை பயன் படுத்தி பலன் அடைபவனை மகா மகா அயோக்கியன் என்று சொன்னாரே?

மேலும் நல்ல சமூக சீர்திருத்த பகுத்தறிவு இயக்க தலைவன் என்பவன், எந்த கட்சி, அரசியல் பதவிக்கும் ஆசை பட கூடாது என்று சொல்லிதானே தனக்கு கிடைத்த மற்றும் தன்னை தேடி வந்த பதவிகளை வேண்டாம் என்று மறுத்தார்?

சமூகத்தில் இறங்கி வேலைசெய்து சுத்தப்படுத்த நினைக்கும் பகுத்தறிவு லட்சியவாதியான நாம், ஏன் கட்சி பதவி ஆட்சியை பற்றி கவலைப்பட வேண்டும், போட்டியிட வேண்டும்? மாற்று கொள்கை உள்ள வேறுகட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும்?

(இந்த கொள்கை பிடிக்கவில்லை என்று, இங்கிருந்து பிரிந்து போனவர்கள்தானே அனைவரும்)

அப்புறம் நமக்கும் மற்ற அரசியல் வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

அப்படி என்றால் ஈ.வெ.ரா என்ற சமூக சீர்திருத்தவாதியின் நல்ல சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் இங்கு நம்மாலேயே சிதைக்கப் படுகிறதே? அவரின் உண்மையான அடிப்படை கொள்கை இங்கு அடிபடுகிறதே? என்றேன்?

இந்த முறை அவர்கள் கையை காட்டும் முன் நானே..

இவற்றால் பலனை அடைகிறவன் மகா மகா அயோக்கியன் என்று அந்த தலைவனின் வார்த்தையை திரும்ப ஒரு முறை சொல்லிவிட்டு வர...

என்னப்பா இது ரஜினி மாதிரி சாமி இருக்குன்ன, அப்புறம் கமல் மாதிரி எல்லாமே எல்லோருமே சாமின்ன, இப்ப சத்தியராஜ் மாதிரி மாத்தி மாத்தி பேசுற, ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாத்தான, அதுக்கு பொருத்தமான ஒரு பொண்ண பாக்க முடியும்? என்றார்கள் பெற்ற கடைமை தவறாமல்.

ஓ, நம்ம கலாச்சார வாழ்க்கைபடி, பெண் கொடுக்க இது எல்லாம் முக்கிய தகுதியாச்சே! என்று.


போங்கடா...அணு குண்டே போட்டு சுடுகாடானாலும், உழைப்பை நம்பி உயர்ந்த ஜப்பானுக்கு போக போகிறேன் என்று சொல்லிவிட்டு, போய்விட்டேன்.

இடையில் உழைப்பை மட்டும் நம்பும் இவனுக்கு, நம்பி பெண்ணை கொடுக்கலாம்னு, என்னையும் நம்பி ஒரு நல்லவர் என் தங்கமணியை கொடுத்து விட்டார்.

அங்க போனா, செஞ்சது இயந்திரம் என்றாலும், அவர்களும் குனிந்து குனிந்து கும்பிட்டார்கள்! சிறந்த தலைவர் என்றார்கள்! என்னடா இது ஜப்பனுமா? யார் இது எல்லாம் என்றால்?

என்னை, ஏற இறங்க பார்த்து கேட்டார்கள், நீ உண்மையில் இந்தியனா? புத்தரை, சுபாஸ்சந்திரபோசை எல்லாம் யார் என்று கேட்கிறாய்? என்றார்கள்.

ஓ, நம் நாட்டில் உள்ள உள்குத்து பிரச்சனைகளில், நம் நாட்டில் பிறந்த நல்லவர்களை நாம் மறந்தாலும், உலகம் அவர்களை கொண்டாடுகிறது என்று பெருமை பட்டு கொண்டேன்.

சரி, ஜப்பானே கடைபிடிக்கும் போது, நாமும் அம்பேத்காரை போல புத்த கொள்கைகளுக்கு போய்விடுவோம் என்று பார்த்த போது, இலங்கை, ஜப்பான், சீனா, வியட்னாம், தென்கொரியா நாடுகள் என்னை வரவேற்றது.

அன்பே கடவுள் என்று சொல்லும் புத்தரையும், இயற்கை வளமான தகுதியையும் வைத்து இருப்பதால் சிங்கப்பூரை போல, ஆசியாவில் மிகசிறந்த இடமாக வந்து விடும் என்ற பயந்த நாடுகளின் சதியில் சிக்கி, அன்பின் அடையாளமே இல்லாத போர்களமாக மாறி விட்டதால் அப்போது, இலங்கை செல்ல என் மனம் விரும்பவில்லை.

இந்தியாவில் பிறந்த புத்தரின் கொள்கைகளை ஜப்பானில் ஆரமித்து வியட்னாமில் தொடந்து தென்கொரியாவில் வாழ்ந்து பார்க்க, முடிவில் கிடைத்து ஒரு சிறிய கதை.



அதாவது அரண்மனை, நாட்டை விட்டு காட்டுக்கு சென்று, போதி மரத்தடியில் முக்தி பெற்று, புத்தர் பல வருடங்கள் கழித்து தன் சொந்த நாட்டுக்கு வருவதாய் தகவல் வர, நாடே

அந்த மகானை வரவேற்க திருவிழா கோலம் கொண்டது, புத்தரும் வந்தார்.

அவரை வரவேற்ற அவரின் மனைவி, கடவுளை தேடி சென்றீர்களே! கண்டுவிட்டீர்களா அந்த கடவுளை என்று கேட்டார்?

புத்தரும் "ஆம்" என்றார்.

அப்படியா மிக்க மகிழ்ச்சி, யார் அந்த கடவுள்! எங்கே அவர்! என்றார்?
புத்தரும் "அன்பே கடவுள்" என்றார்.

அவர் மனைவி மீண்டும் சொன்னார், இதை தேடவா எங்களை எல்லாம் தனியாக தவிக்க விட்டுவிட்டு போனீர்கள்?

நானும், உங்கள் பெற்றோரும், இந்த நாட்டு மக்களும், உங்கள் மீது வைத்துதிருக்கும்
உண்மையான அன்பில் அந்த கடவுள் உங்களுக்கு தெரியவில்லையா என்று?

(கடவுளே ஆனாலும், பொண்டாட்டி கேள்விக்கு பதில் சொல்ல முடியாதுன்னு இங்கதான் புரிஞ்சுகிட்டேன்.)

அட்ரா சக்கை, சோக்கா கேட்டாங்க பாரு கேள்வி? ஆமா உண்மை தான? இதை தேடவா அவரு போதி மரம் தேடி போனாரு என்று நானும் கேட்க?

"குங்பு" தெரிந்து இருந்தாலும், புத்தமத துறவி என்பதால் அடிக்க கூடாது என்று நினைக்கிறேன், என்பது போல அவர் பார்க்க, நானே வீட்டிற்கு ஓடி வந்து விட்டேன்.

ஓடி வந்து, முகம் கழுவி துடைக்கும் போது கண்ணாடியில் பார்த்தால்...பாதி வாழ்கை முப்பது ஆண்டுகள் முடிந்து போய் இருந்தது.

பாதி வாழ்க்கையே முடிந்து விட்டது, இது வரை என்ன கிழித்து விட்டோம் என்று நினைத்து கொண்டு, தின தேதியையாவது கிழிப்போம் என்று கிழித்தபோது கண்ணில் பட்டது, வீரத்துறவி விவேகானந்தரின் படமும் வாக்கும்.

சரி ஆனாது ஆச்சு, இவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கும் முடிவில், படித்தால் அவர் சொல்கிறார்.

"நீ என்னவாக ஆக நினைக்கிராயோ, அதுவாகவே ஆகிறாய்."

"ஒருவர் சொல்வதை நம்பாதே, ஏன் என்றால் அது இன்னொருவர் சொன்னது,

படித்ததை நம்பாதே, ஏன் என்றால் அது இன்னொருவர் எழுதியது,

உண்மையை நீயாக உணரவேண்டும், அந்த அனுபவமே உண்மை, அப்போது உனக்கே புரியும், நீ யார் என்று."

அட இது நல்லா இருக்கே, நம் அனுபவத்தை நாமே ஏன் உணர்ந்து பார்க்க கூடாது? என்று அத்தனையையும் எழுதி பார்த்தால், நம்ப மறுக்கலாம் ஆனால் அதுவே நிஜம்.

சொல்வது வெவ்வேறு மொழியானாலும், நானறிந்த தமிழில் மொழிபெயர்த்த போது அத்தனைக்கும் அர்த்தம் என்னவோ ஒரே அர்த்தம்தான் வருகிறது.

அதாவது எல்லா சந்தர்ப்ப சூழ்நிலையையும், மாறுபட்ட மனித குணாதிசையங்களையும் தொகுத்து கொடுத்து, ஒரு தனிப்பட்ட மனித வாழ்கையில், எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ கூடாது, என்பதை மட்டும்தான் அத்தனை வேதமும் சொல்கிறது.

இதில் அடிப்படையாக இருப்பது "நம்பிக்கை", கடவுள் உண்டு, கடவுள் இல்லை, எல்லோரும் கடவுள், இவர் மட்டுமே கடவுள், அன்பே கடவுள் இப்படி கொள்கை எதுவானாலும், அந்த கொள்கைவாதி அதன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டுமே இங்கு பொதுவானது.

சரி, இப்படி உணர்ந்து பார்த்தால், நீ யார் என்று உனக்கே தெரியும் என்றாரே? அப்படி பார்க்கும் போது நான் யார் என்று பார்த்தால்.

முதலில், கஷ்டத்தில் மட்டும் காப்பாற்ற சொல்லி கடவுளை வேண்டும் ஆத்திகனாக, ஒரு பிச்சைகாரனை போல இருந்தேன்.

பின், என் சந்தோசங்களில் மற்றும் நிரந்தரமில்லாத சிற்றின்பம் தான் வாழ்கை என்று, கடவுளை நினைக்காத ஒரு நாத்திகனாக இருப்பதாக நினைத்து, என்னை மறந்த மமதையில் ஒரு மிருகத்தை போல இருந்தேன்.

அதெல்லாம் சரி, இதெல்லாம் உணர்ந்து இப்போது நான் என்னவாக இருக்கிறேன் என்று பார்த்தால்.....

சுகமோ துக்கமோ, காலை எழுத்தவுடன், படுக்கும் முன் மற்றும் ஒவ்வொரு வேலையை துவங்கும் போதும், முடிக்கும் போதும் என் கடமையை நான் ஒழுங்காக செய்து விட்டேன் என்று கடவுளுக்கு நன்றி சொல்லி, மற்ற எல்லா நேரமும் பொய், துரோகம், அரசியல் இல்லாத நேர்மையான வாழ்க்கையை மற்றும் என் உழைப்பே கடவுள் என்று ஜாதி மத பேதம் இல்லாத மனிதனாக இருக்கிறேன்.


இதைத்தான், அவர் எல்லா உயிரினங்களிலும் உயர்ந்தது மனிதன், என்று சொல்லி இருக்கிறார் என்பதும் புரிந்தது.

இப்போது நிமிர்த்து பார்த்தால், நான் என் மதத்தில், இனத்தில் (மனிதஇனம்), நம்பிக்கையில், கொள்கையில் இன்னும் கடை பிடித்து நடக்க எவ்வளவோ நல்ல சிந்தனைகள், செய்கைகள் உள்ளது.

அதை முழுதாக தெரிந்து கொண்டு உண்மையாக கடைபிடிக்கும் முயற்சியில் இறங்கிய போது, மற்ற எந்த மதமும், கொள்கையும் தவறென்று குறை, குற்றம் கண்டுபிடிக்க எனக்கு உண்மையில் நேரம் இல்லை.

ஹலோ, இப்ப எதுக்கு தேவைஇல்லாம, இது எல்லாம் பேசுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கும்...

என்ன பேசுவதென்று புரியாமல்தான் இதெல்லாம் பேசுகிறான் என்று புரிந்தவர்களுக்கும்...

சொல்ல நினைத்தது என்னான...

தனிப்பட்ட நாம் ஒவ்வொருவரும் விரும்பும் கொள்கை, நம்பிக்கையில், நாம் எல்லாம் தெரிந்து கொண்டோம் என்று நடிக்காமல், உண்மையில் அதை முழுதாக புரிந்து அறவழி நடக்க, அதில் எவ்வளவோ நல்ல பாதை மற்றும் கருத்துகள் இன்னும் நாம் அறியாமல் இருக்கிறது, முதலில் அதை சரியாக செய்கிறோமா என்று மட்டும் பார்ப்போம்.

உங்கள் கொள்கை, நம்பிக்கை எதுவானாலும், அதன் கருத்துகளை முழுமையாக புரிந்து கொண்டு அது படி நடப்பதை தவிர்த்து, மற்றவர்களின் கொள்கை, நம்பிக்கையில் குறைகளை தேடி, விவாதிக்க முயற்சிப்பது,நான் ஒரு முட்டாள் என்று, நானே என் நெற்றியில் எழுதிகொள்வதற்கு சமமாகும்.

இதன் முடிவில் கிடைப்பது ஒன்றும் இல்லை, ஆனால் இழப்பது நிச்சியம் பொன்னான காலம், வாழ்கை என்பது உறுதி.

அப்படியும் மற்றவர் நம்பிக்கையில் குறையை தேடினால், நீங்கள் நம்பும் கொள்கை, மதத்தில் சொல்லி உள்ள எந்த ஒரு பாவத்தையும் செய்யாத (பாவத்தை செய்யாத மாதிரி நடிப்பவர் அல்ல) ஒருவர் வந்து மற்றவர் நம்பிக்கையின் மீது குறை என்னும் முதல் கல்லை எறியட்டும் என்று, அந்த இடத்தை காலியாகவிட்டு பாருங்கள், நிச்சியம் அது காலியாகவே இருக்கும்.

ரமலானுக்கு நோன்பு கஞ்சி வாங்கி குடித்தோமா, தீபாவளிக்கு லட்டு வாங்கி ருசிச்சோமா, கிரிஸ்மஸ்க்கு பிலம்கேக் வாங்கி அடிச்சோமா, என்று எல்லோரும் எல்லா நேரமும் மகிழ்ச்சியாக வாழ்கையை வாழ்வதை விட்டு விட்டு, மதவாதிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு ஆளாவதில் பயன் ஒன்றும் கிடைக்கபோவதில்லை.

ஆனா ஒன்னு, இப்ப எல்லாம், நான் ஆத்திகனா நாத்திகனா என்று நினைப்பதே இல்லை, அதனால் எனக்கே தெரிகிறது, புரிகிறது, என் வாழ்க்கை என் கையில் மட்டுமே.

பிறப்பில் வருவது யாதென இறைவனை கேட்டேன்?
பிறந்து பாரென்று இறைவன் சொன்னான்!

வாழ்வில் வருவது யாதென கேட்டேன்?
வாழ்ந்து பாரென்று சொன்னான்!

இறப்பில் வருவது யாதென கேட்டேன்?
இறந்து பாரென்று சொன்னான்!

இறைவனை பார்த்து சிரித்து கேட்டேன்...

அனுபவித்தே அத்தனையும் புரிந்து கொண்டால்? ஆண்டவனே நீ எதற்கு?

பலமாய் சிரித்து இறைவன் சொன்னான்...

அந்த அனுபவமே நான்தானடா.


என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி.
 

Blogger Widgets