Monday, December 7, 2009

வெளிநாட்டு வேலையும்! உலக சந்தையும்!

முன்பு பாரின் கால் என்ற தலைப்பில் எழுதிய பதிவில் பிரியமுடன் வசந்தின் பின்னூட்டதிற்கு, பின்பு ஒரு பதிவில் இதை பற்றி பார்ப்போம் என்று சொன்னதின் தொடர்ச்சியாக கூட இந்த பதிவை எடுத்துக்கொள்ளலாம்.

உலகசந்தை பொதுமயமாகிவிட்டது என்றால் "என்னது ஒபாமா அமெரிக்க அதிபராகிவிட்டாரா!" என்பது போலத்தான் என்று நான் அறிவேன், அதுவல்ல இப்பதிவின் நோக்கம்.

கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த வெளிநாட்டு வாழ்க்கை முறை மாற்றத்தை பற்றி முழுதாக புரிந்து கொள்ளாமல், நம் நாட்டில் இன்னும் வெளிநாட்டு வேலை மோகத்தில் இருப்பது வருந்ததக்கது.

வெளிநாட்டு வேலை மூலம், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கூட இதற்க்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

முதலில் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும், உலகின் இயற்கை தத்துவத்தின் படி ஒரு விதையை இழந்தால்தான் ஒரு விருச்சத்தை பெற முடியும், இதை யாராலும் மாற்ற முடியாது.

ஆனால், இதில் கவனிக்க வேண்டியது இழப்பது ஒரு விதையானாலும் அந்த விருச்சதின் மூலம் கிடைப்பது பல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

வரலாற்றை திரும்பி பார்த்தால் ரப்பர் தோட்டத்திலும், அடிமட்ட கூலி வேலைக்கும், நம் மக்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள்.

பின்னாளில் காலம் மாற கல்வி கூட, தகுந்த வசதிகளுடன் கூடிய நாட்டுக்கு வேலைக்கு சென்றார்கள் (இது கூட ஒருவகை ரிமிக்ஸ் கூலி வேலை என்பதுதான் உண்மை).

ஆரம்பத்தில் ஒவ்வொரு நாட்டின் பண வீக்கத்தை பொருத்து, வேலைக்கு சென்ற நாட்டில் அடிப்படை வாழ்க்கையை சிக்கனமாக வாழ்ந்து அதில் மிச்ச படுத்திய பணத்தை நம் நாட்டில் கொண்டு வந்து மாற்றும் போது அது அவர்களுக்கு பெரிய பலனை தந்தது, அது அந்த காலம்.

அப்போது உலகசந்தையும் பொதுமயமாக இல்லை, எனவே ஒரு நாட்டில் தயாரிக்க படும் பிரபல பொருட்கள் அந்தந்த நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்ய பட்டு, நம் நாட்டில் இறக்குமதி விற்பனையுடன் சேர்த்து சந்தைக்கு வரும் போது அதன் விலை அதிகமாக இருந்தது, இதனால் அப்பொருட்களை அந்தந்த நாட்டில் குறைந்த விலையில் வாங்க முடிந்தது.

அது மட்டுமிலாமல், அப்போது நம் நாட்டில் வெளிநாட்டு பொருள்கள் கிடைப்பது மிக அரிதாக இருந்தது, ஆனால் இன்று மொபைல் போன் முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் வரை தயாரிக்க படுவதே நம் நாட்டில் என்பது தான் உண்மை .

காரணம் குறைந்த விலையில் தயாரிப்பு பொருட்கள், குறைந்த ஊதியம் மட்டுமிலாமல் குறைந்த சலுகைகள் கொடுத்தாலே கிடைக்கும் தொழிலாளர்கள், இட வசதி, சுற்று புற சூழல் கேடு என அனைத்தும் வேறு நாடுகளை சேர்வதால், இன்று உலக நாடுகளின் பெரும்பாலான தயாரிப்புகள், இந்தியா மற்றும் சீனாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

இதன் காரணமாக, முன்பு போல் இல்லாமல் அனைத்து தரப்பு வேலைகளும் இப்போது நம் நாட்டில் கிடைக்கிறது, ஊதியமும் கிட்டதட்ட வெளிநாட்டுக்கு நிகராக இப்போது நம் நாட்டிலேயே பெற முடிகிறது.

ஆனால், இப்போதைய தேவை "இளைய தலைமுறைகள்", இவர்கள் வெளிநாட்டில் மட்டும் வேலை செய்ய நினைக்காமல் நம் நாட்டிற்கு தங்கள் உழைப்பை கொடுக்க முன் வர வேண்டும்.



வருடம் ஒருமுறை விடுமுறைக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வைத்து வெளிநாட்டு வாழ்கையை எடை போடாதீர்கள் நண்பர்களே!.

தெளிவாக பார்த்தால் அன்றும் இன்றும் நம்மை வெளிநாட்டு நிறுவங்கள் அதிகமாக அங்கிகரிக்கும் முறை இரண்டே இரண்டுதான்.

I - அடிமட்ட கூலி தொழிலாளர்கள்

II - நடுத்தர தகுதி அடிப்படை தொழிலாளர்கள்

இவை இல்லாமல் மேல் தரத்தில் ஆராய்ச்சி போன்ற துறைகளில் செல்பவர்கள் விரல் விட்டு விட்டு எண்ணும் அளவில் தான் இருக்க கூடும், அப்படியே சென்றாலும் அவர்கள் தலைமை அதிகாரியாக இருப்பது அதிசையம் தான்.

அடிமட்ட தொழிலாளர்கள்

முதல் வரியில் சொன்னது போல், இன்றும் நம் மக்கள் இந்த வரிசையில் முன்னிலையில் இருப்பது வேதனைக்குரியது, இவர்களை வெளிநாட்டு ஒப்பந்த வேலைக்கு கவர்வது மிக எளிது. இங்கு இந்தியாவில் மாதம் ஆறாயிரம் கிடைக்கும் வேலைக்கு, அங்கு அறுபதாயிரம் என்ற ஒரு வரி விளம்பரம் போதும்.

இதில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பில் வருபவர்கள் தேவலம். ஆனால், இடை தரகர்கள் பேச்சை நம்பி இரண்டு முதல் மூன்று லட்சங்கள் செலவு செய்து, அதுவும் கடன் வாங்கி, இந்த வேலைக்கு வருபவர்கள் நிலை சொல்ல முடியாத வலியை கொடுக்கும்.

இவர்களை பொறுத்த வரை தங்கும் இடம் இலவசம், போக மாதம் அறுபதாயிரம் ஊதியம், இதில் மாதம் ஐம்பதாயிரம் மிச்ச படுத்தினால் கூட, வருடம் ஆறு லட்சங்கள் சேர்த்து விடலாம், என்பதுதான் இவர்களின் ஆரம்ப கனவாக இருக்கும்.

ஆனால், இவர்களில் முதல் முறை வரும் பலருக்கும் இங்கு அறுபதாயிரம் என்பது நம் ஊரில் ஆறாயிரம் கிடைப்பதை விட குறைவு என்ற பொருளியல் விபரம் தெரிவதில்லை.

மேலும் இங்குள்ள வேலைமுறை பெரும்பாலும் அவர்களுக்கு சரியான முறையில் எடுத்து சொல்லப்படுவதில்லை, அதிலும் தவறான இடை தரகர்கள் கையில் மாட்டுபவர்களின் நிலை மிக பரிதாபம், குறிப்பாக பெண்கள்.

குறைந்தது பனிரெண்டு மணிநேரம் முதல் பதினெட்டு மணி நேரம் வரை ஓய்வில்லாத கடும் வேலை, மாதத்தில் ஒரு நாள் மட்டும் தங்கி இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வர அனுமதி, என்று மூன்று வருட இறுதியில் வாங்கிய கடன் வட்டியுடன் கட்டியது போக, மிஞ்சுவது என்னவோ ஒரு ஐம்பது ஆயீரம்தான் என்று சொன்னார்கள்.

இப்படி பார்த்தால், இங்கு இழப்பது ஒரு விதையல்ல, ஒரு இளைஞனின் மூன்று வருட வாழ்க்கை.

(நூறு இளைஞர்களை கொடு, இந்த நாட்டின் தலைஎழுத்தையே மாற்றி காட்டுகிறேன்!, என்று விவேகானந்தர் சொன்னதை இங்கு சற்று நாம் நினைத்து பார்க்க வேண்டும்).

கர்பமாக இருக்கும் மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு சென்று, பின் தன் சொந்த குழந்தையை மற்றும் குடும்பத்தை மூன்று வருடம் கழித்து நேரில் பார்த்தவர்களின் கதை எல்லாம் இதில் உண்டு.

இதை பற்றி நான் கேட்டறிந்ததை எழுத முடியுமே தவிர, அதன் உண்மை வலியை, என் வார்த்தைகளால் உணர்த்த முடியாது.

ஆனால், இதை அனுபவித்தவர்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து, இனி வரும் நம் தலைமுறைக்கு எடுத்து சொல்லி, அவர்களின் வெளிநாட்டு வேலை மோகத்தை அறவே நீக்க முடியும் இல்லையா?.

அப்படியும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இது போல செல்ல இருப்பவர்களை, தகுந்த தரகர், நல்ல நிறுவனம், மேலும் சரியான வேலை முறையை தேர்ந்து எடுக்க வேண்டும்.

மேலும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையப்பம் இடும்முன், அருகில் உள்ள அரசாங்க வெளிநாட்டு வேலை ஆலோசனை மையத்தை தொடர்புகொண்டு, இவை அனைத்தும் சரியான தகவல்களா? மற்றும் தான் செல்ல விருக்கும் விசாமுறை சரியானதா? என்று ஆலோசனை பெற்று, அதன் பிறகு செல்ல வழிகாட்ட வேண்டும்.

நடுத்தர தகுதி அடிப்படை தொழிலாளர்கள்

அடுத்தது படித்த, தொழில் தகுதி அடிப்படையில் வரும் நம் கணினி துறை உட்பட நடுத்தர பணியாளர்கள்.

படித்து முடித்ததும் முடியாததும், தனக்கு மட்டுமே திறமை இருப்பதாகவும் அதை நம் நாடு மதிக்கவில்லை என்று குறை சொல்பவர்களும் இதில் உண்டு.

ஆக, இவர்கள் படித்தவர்கள், நடுதரத்தில் இருந்து மேல் மட்டம் செல்ல துடிப்பவர்கள்.

எதோ ஒரு பதிவில் படித்த படி, "இந்த குடும்பத்தின் எதிர் காலமே உன் கையில் தான் இருக்கிறது என்று தலையில் திருநீறு போட்டு விமான சீட்டை கையில் கொடுத்து அனுப்பிய தமிழ்நாடும், ஆந்திராவும்தான் இதில் அதிகம்".

அடிமட்ட வசதி (அப்பா அம்மா சம்பாதித்தது) இருப்பதால் மேல் சொன்ன முறையில் இவர்களை வெறும் ஊதியத்தை சொல்லி, ஒரு வரி விளம்பரத்தில் கவர முடியாது.

ஆனால், இவர்களை கவர்வது அதை விட எளிது, ஏன் என்றால்! இவர்களின் அடுத்த தேவை, நாகரீக வாழ்க்கை முறை, நவீன வீடு மற்றும் குறிப்பாக "கார்".

எனவே, அதையே சற்று பெரிதாக, சொந்த வீடு, கார், மருத்துவ காப்பீடு மற்றும் வெளி நாட்டு குடியுரிமைக்கு நிறுவ பரிந்துரை என்று அதுவும் ஆங்கிலத்தில் சொன்னால் போதும்.

இதையே வேறு வேறு ஆங்கில வார்த்தைகளை கொண்டு சொல்லி, முடிந்த வரை இவர்கள் ஊதியத்தை குறைக்க அங்கும் ஒரு பச்சை தமிழன் அல்லது பக்கா இந்தியன், மனித வளத்துறை என்ற பெயரில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் தேனை தடவி பேசி பேசியே விமானத்தில் ஏற்றி விட்டு விடுவார்கள்.



ஒரு வழியாக வண்ண வண்ண கனவுகளுடன் வெளி நாட்டில் வந்து இறங்கியவுடன், அங்கு ஒரு மனிதவளத்துறை குரல் சொல்லும்...

"சார்" (மருவாதி மருவாதியாம்), உங்களுக்கு ஒரு கார், அப்புறம் உங்களுக்கு ஒரு வீடு, நீங்க எந்த மாடல் வேணும்னாலும் தேர்வு செய்யலாம், அதற்கான வங்கி லோன் பணமாற்று, நம் நிறுவன பரிந்துரை மற்றும் உங்கள் ஊதிய சான்று காகிதங்கள் இதில் இருக்கு.

நீங்க வெறும் கையப்பம் மட்டும் போட்டா போதும்னு, படிக்க முடியாத அளவு சின்னதா எழுதி இருக்க ஒரு நூறு காகிதமாவது அதில் "நச்சத்திரம்" போட்ட ஒரு ஆயீரம் ஒப்பத்ததுடன் நம்ம முன்னாடி இருக்கும்.

(இது நாடு, நம்ம நாடும் இருக்கே!, எவனாவது மதிச்சானா? அப்படின்னு மனசுக்கு கீழ பிளாஷ் நியூஸ் ஓடும்).

என்னாடா இது! குடியுரிமை விண்ணப்பம் எதுவுமே இல்லன்னு கேட்டா?

இது எல்லாம் முடிஞ்சு, நீங்க ஒரு மூணு வருஷம் வருமான வரி கட்டியவுடன் வாங்கி விடலாம், அது ஒன்றும் பெரிய விசையம் இல்லை என்று சொல்லி, அப்போதைக்கு சமாளித்து விடுவார்கள்.

நம்மளும் நம்ம கலாச்சார படி "சரி வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டன்னு நம்பி"... மனசுக்குள்ள "வெற்றி நிச்சியம் இது வேத சத்தியம்" இல்லனா,"வெற்றி கொடி கட்டு"-ன்னு பாட்டு ஓட, சிரிச்ச முகமா (அதுதான் கடைசி சிரிப்பா பலருக்கு இருக்கும்) கையப்பம் போட்டு தள்ளுவோம்.

எல்லாம் முடிஞ்சு, நமக்கு கண்ணு தெளிவா தெரியும் போதுதான், "பிதா மகன் சூர்யா சூதாட வந்த லைலாவிடம் சொல்வது போல் " போல் விசையம் வரும்.

இப்ப பாருங்க (சார் மிஸ்ஸிங்)...கம்பெனி மொதல்லயே சொன்னா மாதிரி...

உங்களோட மாத ஊதியம் இரண்டு லட்சம், இதுல காருக்கான லோனுக்காக மாதம் ஒரு சிறிய தொகையா முப்பது ஆயீரம், இது வெறும் பத்து வருட பிடித்தம்தான்.

அப்புறம் பாருங்க உங்க வீட்டு லோனுக்காக ஒரு சிறிய தொகையா ஒரு தொண்ணூத்தி இரண்டாயீரம் பிடித்தம், இதுவும் ஒரு முப்பது வருடம் தான்.

(இப்படி சொந்த வீடு வாங்காதவர்கள், அதே தொகையை வாடகை வீட்டுக்கு கொடுத்து விட்டு, ரியல் எஸ்டேட் விலையை ராக்கெட் மாதிரி ஏற்றிவிட்ட பெருமையுடன், நம்ம ஊரில் ஒரு மூன்று படுக்கை அறை வீட்டை வாங்கி விட்டு தவணையுடன் வருட பராமரிப்புக்கு ஒரு ஒருலட்சம் வரை கட்டிக்கொண்டு இருப்பார்கள்.)

அத்தோட, உங்கள் மருத்துவ காப்பீடு இதர சகிதங்களுக்காக மாதம் ஒரு ஐய்யாயிரம் பிடித்தம் போக, மீதி தொகை மாதா மாதம் உங்கள் வங்கி கணக்கில் வந்து விடும், மேலும் உங்கள் தேவைக்கு கடன் அட்டைகள் வந்து விடும் என்று சொல்ல, நமக்கு கடைசியாக "செருப்பை வைத்து சூதாடும் லைலா முகம்" போல் ஆகிவிடும்.

வேறு வழி, "உள்ளதை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனிடம் வேலைக்கு சேரும் கார்த்திக் போல" சேரும்படி ஆகிவிடும்.

ஏன் என்றால்? மீதம் வரும் எழுபதாயீரம் என்பது அடிப்படை மாத செலவுகளுக்கு ஆகும் தொகையை விட சற்று குறைவு (அதற்கு தான் அந்த கடன் அட்டைகள் என்பது இப்போது தான் புரியும்).

ஆக, ஒட்டு மொத்தம் முப்பது வருட இளமையுடன் வாழ்கையை அடகு வைத்தாகி விட்டது.

இனி வரும் வாழ்க்கை சூத்திரம் மிக மிக எளிது.

அந்த கடனை எப்படி கட்டுவது!, இந்த கடனை எப்படி கட்டுவது?, கடனை கட்டும் வரை வேலை போகாமல் எப்படி பாதுகாப்பது!, வேலை போய் விட்டால் மாத தவணையை எப்படி கட்டுவது?, மாத தவணையை கட்ட அடுத்த வேலையை எப்படி பிடிப்பது!?

ஆக மொத்தத்தில் "கடன்+கவலை+மனஉளைச்சல்=வெளிநாட்டு வாழ்க்கை" என்று மாறி விடுவதுதான் அதிகம்.

இதில் இன்னும் கொடுமை, நடுவில் பொருளியல் மந்தம், சுனாமி, குண்டு வெடிப்பு, என்று எது நடந்தாலும் வாங்கிய வீட்டின் விலை குறைந்து விடும்.

ஆனால், வங்கிக்கு வாங்கிய தொகை குறையாது, அதனால் வீட்டை விற்றும் கட்ட முடியாது, இப்படி வாழ்கையில் வெளிநாட்டு பெண் வந்தாலும் சரி அல்லது பெண் பெயரில் புயல் வந்தாலும் சரி, வயிற்றை கலக்குவது இவர்களுக்குத்தான்.



அதெல்லாம் சரி!, அப்படியும் ஏன்? அங்கு இருக்க வேண்டும் என்பது, இங்கு ஒரு கேள்வியாக கூடும்?

மேல் சொன்ன படி இளமை துடிப்பில் விளையாட்டாக ஆரமித்து விட்டதை, முடிக்காமல் அல்லது திரும்ப வந்து அங்கு புதிய வேலை தேடி, அதில் கிடைக்கும் வருமானத்தில் இங்கு இருப்பதை கட்டி முடிக்க முடியுமா? என்று குழம்பித்தான், இன்று அதிக சதவீதம்
இருக்கிறார்கள், என்று சொன்னால் அது தவறாகாது என்று நினைக்கிறேன்.

மேலும் இடைப்பட்ட இந்த காலத்தில், இதை சமாளிக்க அதில் எடுக்க, அதை சமாளிக்க இதில் எடுக்க என்று வயது மட்டும் போய் ஆரமித்த இடத்திலேயே இருப்பவர்களும் உண்டு, கூடவே மன அழுத்தம், ரத்த கொதிப்பு, நீரழிவு போன்று அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற பரிசும் உடலில் சேர்ந்து விடும்.

அவ்வளவு ஏன்! வருடம் ஒரு முறை விடுமுறையில் வந்து விட்டு போனால் கூட, அதை சமாளித்து நடை முறை வாழ்க்கைக்கு திரும்ப குறைந்தது நான்கு மாதமாவது ஆகும், என்று சொல்பவர்களும் உண்டு.

இதற்காக இழந்ததுதான் எத்தனை எத்தனை, வாழ்க்கை, வயது, சுற்றம், சொந்தம், நட்பு, இத்யாதி...இத்யாதி...

இது உண்மையா! இல்லையா? என்று சந்தேகம் வந்தால், பத்து வருடங்களுக்கு மேல் வெளிநாட்டில் இருக்கும் யாரையும் கேளுங்கள் (சிங்கப்பூர், மலேசியா போன்று அருகில் இருக்கும் நாட்டை தவிர).

சக நிகழ்வாக, அவர்கள் வந்திருக்கும் நேரத்தில் நடந்ததை தவிர, இந்த இடைப்பட்ட வருடங்களில் எத்தனை திருவிழாக்ளில், திருமணங்களில் அல்லது துக்கத்தில் கலந்து கொண்டீர்கள் என்று?.

இப்படி, தன்னை தானே தனிமை படுத்தி, இங்கு இருபதாயிரம் வாங்கும் ஒருவர் வாழும் அதே வாழ்கையை அங்கு இரண்டு லட்சம் என்ற பெயரில் வாழ்வதுதான் இன்றைய வெளிநாட்டு வாழ்கை.

இதில் நம் கலாச்சாரத்தின் வாடையே இல்லாமால், இயந்திரத்தோடு இயந்திரமாய் வளரும் குழந்தைகளின் நிலை சொல்லவா வேண்டும்.

கொஞ்சி மடியில் விளையாட வேண்டிய உறவுகளை, மாமா, தாத்தா, பாட்டி என்று தனக்கு தானே தனியாக தொலைபேசியில் நலம் விசாரித்து விளையாடுவது வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று.

உலகிலேயே நாம்தான் மென் பொருள் தயாரிப்பில் சிறந்த அறிவாளிகள், ஆனால் நம் நாட்டை விட வெளிநாடுதான் நம்மை மதிக்கிறது என்று சொன்ன அனைவரிடமும் நான் கேட்டது ஒன்றே ஒன்றுதான்.

உலகிலேயே மென் பொருள் தயாரிப்பில் நாம்தான் சிறந்த அறிவாளிகள் என்பது உண்மையானால், நம்மை விட மென்பொருள் தயாரிப்பு அறிவில் குறைந்தவர்கள், எப்படி நம் தயாரிப்பை சோதித்து உலக தரமானது என்று ISO, BS சான்றிதழ் கொடுக்க முடியும்?

அதை வாங்க நாம் அல்லது நம் நிறுவனங்கள், ஏன் போட்டா போட்டி போட வேண்டும்?

ஆக, நமக்கு அன்றும் இன்றும் சிறந்த தொழிலாளியாக இருக்க மட்டுமே தெரியும், அவர்களுக்கு சிறந்த முதலாளியாக இருக்க தெரியும் என்பதுதான் உண்மை.

இதை வரும் தலைமுறைகளுக்கு எடுத்து சொல்லி, அதே உழைப்பை நாம், நம் சொந்த நாட்டுக்கு செய்வதன் மூலம், அடுத்து வரும் நம் தலைமுறை நம்மை போல சிறந்த தொழிலாளியாக மட்டும் இல்லாமல், உலக தரம் வாய்ந்த முதலாளியாக இருக்க முடியும் இல்லையா?

அதன் பின் நாம் ICIS (Indian Certified International Standard) என்று மற்றவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க முடியும் இல்லையா?

இனி வரும் நம் தேசத்தின் வருங்கால தூண்கள், இதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம், நோக்கம்.

பதிவை முடிக்கும் முன் கடைசியாக, ஒரு முறை விமானத்தில் சந்தித்த சீக்கியர் ஒருவர் சொன்ன வார்த்தை, என் மனதை விட்டு இன்றுவரை நீங்கவே இல்லை.

நம் தென்இந்தியாவில் காலில் செருப்பு கூட இல்லாமல் வெறும் வேட்டி துண்டுடன் வரும் ஒரு விவசாயியை பார்த்தால், அவரிடம் அத்தனை நில சொத்துக்களும் கையிருப்பு பணமும் தானியமும் இருக்கும்.

ஆனால், என்னதான் நாம் காரில் வெளிநாட்டு முத்திரையோடு சுற்றி வந்தாலும், நம் தபால் பெட்டியில் கடிதத்தை விட கடன் தவனை ரசீதுதான் அதிகம் இருக்கும்.

என்றுதான் மாறுமோ இந்த வெளிநாட்டு மோகம்?.

Monday, November 30, 2009

கடன் அட்டை...தெரிந்ததும் தெரியாததும்!

பதிவுக்கு முன் "கடன் அட்டை...தெரிந்ததும் தெரியாததும்!" என்ற தலைப்பில் என் பதிவை விகடன் மற்றும் யூத்புல் விகடன் இணையதளங்களில் வெளியிட்டு என் தளத்தை குட் பிளாக்ஸ் வரிசையில் இணைத்ததற்கு "ஆனந்த விகடன் குழுவுக்கு" என் மனமார்ந்த நன்றி!.



இந்த பதிவை விகடன் தளத்தில் படிக்க இங்கு யூத்புல் விகடனில் சொடுக்கவும்.



மேலும் மேனகாவின் அன்பு விருதுக்கும் என் நன்றி.




"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்." எது எப்படி இருந்தாலும் நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்ளவேண்டும். கடன் இல்லாத வாழ்கையே இன்பமானது,' என என் தந்தை அடிக்கடி சொல்வார்.

அதாவது, ஈஸ்வரன் என்ற பெயருடைய இலங்கை மன்னன் எல்லாவற்றுக்கும் மேலாக தன் உயிர் என்று இத்தனையையும் இழக்க போகும் நேரத்தில், அவனது மன நிலை இப்படி இருந்ததாம். 'இது எல்லாவற்றையும் விட கடன் பட்டவன் மனம் அதிகமாக வருந்தும்,' என்பது இதன் பொருள்.

ஆனால், இன்றைய ஆடம்பர உலகத்தில் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகி விட்டது. இத்தனை கடன் அட்டை அல்லது இவ்வளவு கடன் மதிப்புள்ள கடன் அட்டைகளை வைத்திருக்கிறேன் என்பது ஒரு பகட்டாகிவிடாது.

ஒரு பொருள் வாங்கும் இடத்தில் சொந்தமாக காசை கொடுத்து வாங்குபவரை விட, கடன் அட்டையை கொடுத்து கடனுக்கு வாங்குபவர்களுக்கு ஒரு தனி மதிப்பு கிடைப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அது மட்டுமில்லாமல் இன்று தனியார் வங்கிகள் தொழில் போட்டி காரணாமாக முன்பு போல்
இல்லாமல் பல சலுகைகள் தருகின்றன, குறைந்த சேவை நேரம், அதிக சான்று பத்திரமோ, இதர விளக்க சான்றிதல்களோ தேவை இல்லை, அதிக பட்சமாக வருமான வரி அல்லது மாத ஊதிய சான்றிதல் இருந்தாலே போதுமானது, ஒரு பத்து நாட்களில் உங்கள் ஊதியத்தை விட இரு மடங்கு கடன் தகுதியுள்ள அட்டைகள் உங்கள் வீடு தேடி வந்து விடும்.

இது போல் ஒரே நேரத்தில் மூன்று முதல் ஐந்து வங்கிகளில் ஒரே நபர் கடன் அட்டையை பெறுவது இன்று மிக எளிதாகிவிட்டது.

ஆனால், இதில் எத்தனை பேருக்கு அதன் முழு வட்டி விபரம் மற்றும் இதர சேவை கட்டண விகிதம் முதலியன தெரியும் என்றோ அல்லது இதில் எத்தனை பேருக்கு கடன் அட்டை(யை)களை முறையாக பராமரிக்க தெரியும் என்றோ கேட்டால் கிடைக்கும் பதில் மிக வேடிக்கையாகவே இருக்கும்.

மேலும், இதன் அடிப்படை புரியாததால் இன்று எத்தனையோ பேர் நல்ல வேலை மற்றும் ஊதியத்தில் இருந்தும் கூட வாங்கும் முழு ஊதியத்தையும் கடன் அட்டைக்கு வட்டி கட்டி விட்டு, மீண்டும் அந்த மாத வாழ்க்கைக்கு அதே அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்து எப்போதும் மன உளைச்சலுடன் கடனிலேயே வாழ்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இதில் நம் கணினி துறையின் சதவீதம் தான் அதிகமாக இருக்கும் என்று இங்கு நான் தனியாக ஒரு முறை சொல்ல தேவையில்லை.

நான் எதோ, இன்றைய அவசர உலகத்தில் கடன் அட்டையின் அவசியத்தை மற்றும் பாதுகாப்பை பற்றி புரியாமல், கடன் அட்டைக்கு எதிராக சொல்வதாக நினைக்க வேண்டாம். நானும் கடன் அட்டையை வைத்து இருக்கிறேன், முறையாக கடன் அட்டையை பயன்படுத்தும் வழி முறைகளை தேடியதில், எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.



கடன் அட்டையைப் பொறுத்த வரை மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கலாம். இதில் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் சுருக்கமாக வேண்டியதை மட்டும் பார்ப்போம்.

I- கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?

II- தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?

III- கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது?

கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?

கண்ணில் பட்ட வங்கிகளில் எல்லாம் விண்ணப்பிக்காமல், முதலில் நீங்களாகவே அதன் இதர ஒப்பந்தங்களை கவனமாக ஆராய்ந்து சில அடிப்படை தகவல்களை சேகரியுங்கள்.

கடன் அட்டைக்கான மாத அல்லது வருட சேவை கட்டணம், மேல் சொன்னபடி தனியார்
வங்கிகள் தொழில் போட்டிக்காக இதில் பல சலுகைகள் தருகின்றன. மூன்று வருட இலவச சேவை, ஐந்து வருட இலவச சேவை மற்றும் சில வாழ்நாள் முழுவதும் இலவச சேவை, அதாவது அந்த வங்கியின் கடன் அட்டையை பயன்படுத்த நீங்கள் கட்ட வேண்டிய சேவை கட்டணத்தை குறையுங்கள்.

இதில் கவனிக்க வேண்டியது, வங்கி விற்பனை ஏஜன்ட்களின் வெறும் வாய் பேச்சை மட்டும் நம்பாமல் அதற்கான எழுத்து ஆதாரத்தை பத்திரமாக வைத்து இருங்கள். இதனால் இடைப்பட்ட இலவச சேவை காலத்தில் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்தால் நீங்கள் உங்கள் பணத்தை திரும்ப பெற இது உதவும்.

உங்கள் மாத ரசீதை கவனமாக படியுங்கள். நீங்கள் பயன்படுத்தாத அல்லது குறிப்பிட்ட இலவச சேவை காலத்துக்கு முன் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்து இருந்தால், உடனே சம்மந்தபட்டவர்களை அழைத்து, அதை திரும்ப உங்கள் கணக்கில் சேர்க்கும் படி செய்யுங்கள். உங்களுடைய அட்டையின் மொத்த கடன் அளவை தெளிவாக தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.

இது தவிர எந்த ஒரு கடன் அட்டை கணக்கை துவங்கும் முன், அந்த அட்டை சார்ந்த வட்டி விகிதத்தை பாருங்கள், மற்ற வங்கி அல்லது மற்ற கடன் அட்டை முறை (மாஸ்டர், விசா) விட அதிகமாக வட்டி இருந்தால், அந்த அட்டையை தவிர்த்துவிடுங்கள்.

மாத தவணை முறை என்பது ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபட்டாலும், பொதுவாக 29 முதல் 31 நாட்களுக்குள் வருமாறு தான் இருக்கும். எனவே நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு முதல் முப்பது நாள் வரை வட்டி இல்லை என்று சொன்னாலும், உங்களுக்கு வரும் ரசீது முதல் முப்பது நாள் தாண்டி வட்டியுடன் வராதவாறு பார்த்து கொள்ளுங்கள் அல்லது முதல் முப்பது நாளுக்குள் உங்களால் அந்த தொகையை திரும்ப கட்ட முடியுமா என்று சம்பந்தப்பட்ட வங்கியை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

முடிந்த வரை அந்தந்த வங்கி கடன் அட்டைகளை மட்டும் பயன்படுத்துங்கள். இரு மாறுபட்ட வங்கிகள் தொழில் கூட்டணியில் இருக்கும் கடன் அட்டைகளை தவிருங்கள் அல்லது சம்மந்தப்பட்ட இரு வங்கிகளுக்காக தனியான சேவை கட்டணம் எதுவும் இல்லை என்பதை முதலில் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

ஆக மொத்தத்தில், எந்த ஒரு கடன் அட்டையை தேர்வு செய்யும் முன், அது முடிந்த வரை அதிக இலவச சேவை கட்டணம் மற்றும் குறைந்த வட்டியுடைய வங்கி மற்றும் இதர வரிகள் இல்லாத கடன் அட்டையாக இருக்கும்படி முடிவு செய்ய வேண்டும்.

தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?

ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று படித்து புரிந்து இருந்தாலும், எல்லோராலும் அதை
முழுவதும் கடை பிடிப்பது என்பது சாத்தியமில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதை கட்டுப்படுத்தவாது நாம் நிச்சியம் தெரிந்து இருக்க வேண்டும்.

அப்படியும் முடியாதவர்கள், எல்லா நேரமும் கடன் அட்டையை கையில் வைத்து இருப்பதை தவிர்க்கலாம். இதனால் திட்டமிட்ட அவசியாமான பொருள்களை மட்டும் வாங்கும்படி நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

கடன் அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன், உங்கள் கடன் அட்டையில் மீதமுள்ள உங்கள் கடன் அளவை தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம். மேலும், நம் அன்றாட வாழ்கையில் வாங்கும் அந்த பொருளின் தேவையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

வெறும் ஆடம்பரத்துக்காக எதையும் வாங்கி உங்கள் கடன் சுமையை கூட்டிகொள்வது என்பது புத்திசாலித்தனமல்ல. அவசர காலத்தில் இது மேலும் உங்ககளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். முடிந்த வரை கையிருப்பை பயன்படுத்தி வாழ்வது நல்லது. மிக அவசியமான அல்லது அவசரமான காலத்துக்கு மட்டும் கடன் அட்டையை பயன்படுத்துவது மிக பாதுகாப்பனது.

எப்போது கடன் அட்டையை பயன்படுத்தினாலும் அடுத்து வரும் மாத தவணை ரசீதோடு ஒப்பிட்டு சரி பார்க்கும் வரை அந்த பொருள் வாங்கிய ரசீதை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். முடிந்த வரை அந்த பொருளின் விலை உங்கள் ஊதிய "மாத சேமிப்பில்" மூன்று முதல் நான்கு தவணைக்குள் அடங்குமாறு இருப்பது நல்லது. இதனால், உங்கள் இதர வாழ்க்கை தரம் பாதிக்காது என்பது மட்டுமில்லாமல், கடன் அட்டையின் வட்டி விகிதம் அதிகபட்சமாக 14.58% முதல் 29.99% வரை இருக்ககூடும் என்பதை நினைவில் வைத்து இருங்கள்.

மேலும் எந்த ஒரு தொகையும் மாத தவணையில் குறைந்தது மூன்று வருடம் அதாவது 36-க்கு தவணை வருமாறு வட்டியுடன் சேர்த்து வருவதால், குறைந்த பட்ச தவணை மட்டும் கட்டுவதை தவிர்த்து, முடிந்த வரை அதிகமாக கட்டுங்கள், தவணை கூட கூட வட்டியும் கூடும் என்பதால், அந்த மொத்த தொகைக்காக நீங்கள் கட்டும் வட்டியின் அளவை குறைக்க முடியும்.

முடியாத பட்சத்தில் கண்டிப்பாக குறைந்த பட்ச தவணையை மட்டும் கட்டுவது மிக மிக அவசியமாகும். இதனால் மேலும் வட்டி, தாமத கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் போன்றவற்றில் உங்கள் பணம் வீணாவதை தவிர்க்க முடியும்.

மிக முக்கியமாக உங்கள் கடன் அட்டையில் மீதம் உள்ள கடன் அளவை உங்கள் சேமிப்பு தொகையாக நினைக்க வேண்டாம். எதிர்பாராத விபத்து, வேலை இழப்பு போன்ற அவசர காலங்களுக்காக ஒரு சேமிப்பு எப்போதும் உங்கள் கைவசம் இருப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது?

மேலே குறிப்பிட்ட கருத்துகளை பின்பற்றும் போது, கடன் அட்டை(யை)களை பராமரிப்பது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. இருந்தாலும் தேவையற்ற இடங்களில், நேரங்களில் கடன் அட்டையை பயன்படுத்தாதது போல, அது சம்மதப்பட்ட தகவல்களையும் பயன்படுத்தக்கூடாது.

நண்பர்களிடம், மின் அஞ்சல் போன்றவற்றில் கடன் அட்டை விபரங்களை தவிர்க்க வேண்டும். அதன் ரசீது காகிதங்களை கிழித்தபின்தான் குப்பையில் போட வேண்டும். கடன் அட்டை முறைகேடு தொகைக்கு அதன் உரிமையாளரே முழுவதும் பொறுப்பு என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.



எப்போதும் உங்கள் கடன் தொகை, உங்கள் கடன் அட்டையின் மொத்த கடன் அளவுக்குள் இருக்குமாறு கடை பிடிப்பது மிக முக்கியம். இதனால் தேவையற்ற இதர வரி மற்றும் வட்டியை குறைக்க முடியும்.

மேற்ச்சொன்னபடி குறைந்த பட்ச மாத தவணையை கூட கட்ட முடியாவிட்டாலும், அது சம்மதப்பட்ட வங்கிகளின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போகாமல், நீங்களாகவே அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் அடுத்த தவணை நேரத்தை மாற்றி அமைப்பதே சிறந்தது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் எங்கே முழு தொகையையும் உடனே கட்ட சொல்லி விடுவார்களோ என்று பயந்து ஓடி ஒழிய வேண்டாம். உங்கள் மாத தவணையை மட்டும் வட்டியுடன் கட்ட முழு உரிமை உண்டு என்பதால், உங்கள் மாத தவணையை தவறாமல் கட்டும் வழியை மட்டும் பாருங்கள்.

வங்கிகளுக்கான பொதுவான தகவல் களஞ்சியம் "சிபில் தளத்தில்" உங்களை பற்றிய தகவல்களுடன் உங்கள் அணைத்து வங்கி மற்றும் கடன் அளவை மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளராக உங்கள் தவணை கட்டும் திறனை, அதாவது நேர்மையை எல்லா வங்கிகளும் பார்க்க முடியும் என்பதால் உங்கள் வாக்கில் நேர்மையை கடைபிடியுங்கள்.

அதாவது, உண்மையில் முடியாத ஒரு சூழ்நிலையில், உண்மையான மறுதவணை காலத்தை மட்டும் சொல்லுங்கள். 'இந்த மாதம் முடியாது; அடுத்த மாதம் இதற்கான தாமத கட்டணத்துடன் சேர்த்து கட்டி விடுகிறேன்,' என்று சொல்வதால் மற்றும் செய்வதால் யாரும் உங்களை பிடித்து "தூக்கில் போட போவதில்லை".

இதை விட்டுவிட்டு, 'இதோ இன்று கட்டி விடுகிறேன், நாளை கட்டி விடுகிறேன்' என்று தவறான சாக்கு போக்குகளை தந்து உங்கள் பெயரை சிவில் தளத்தில் கெடுத்துக் கொள்வதால், பிற்காலத்தில் தேவையான நேரத்தில் சில சிக்கல்கள் வரக்கூடும் என்பதை நினைவில் வைத்திருங்கள். ஒரு முறை இந்தத் தளத்தில் உங்கள் பெயரில் நம்பிக்கை இல்லாத வாடிக்கையாளர் என்று கருப்பு புள்ளி விழுந்து விட்டால், அது மாற உங்கள் நிதி நிலையை பொறுத்து மூன்று முதல் ஏழு வருடங்களாவது ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள கடனுக்கு உங்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் ஒரு வங்கி தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் உங்கள் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை தவிர, வேறு முறைகளில் உங்களை அணுகி துன்புறுத்தவோ மனஉளைச்சல் கொடுக்கவோ சட்டத்தில் இடம் இல்லை என்பதையும் நினைவில் வைத்து இருங்கள். அதனால் ஓடி ஒளிவதில் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

பல கடன் அட்டைகளை வருமானத்துக்கு மேல் பயன்படுத்தி விட்டு, அதில் இருந்து வெளியே வர துடிப்பவர்கள், ரவுண்டு - ராபின் மற்றும் மாற்று வங்கியின் குறிப்பிட்ட கால வட்டி இல்லா பண மாற்று முறையை கடை பிடித்தால், சீக்கிரம் உங்கள் கடன் தொகையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

மேலே சொன்ன இரண்டு முறைகளையும் பயன்படுத்த நினைக்கும் போது, குறைந்த வட்டி மற்றும் சேவை கட்டண முறையை பார்த்து தேர்ந்து எடுக்க வேண்டியது மிக முக்கியம்.

கடன் இல்லாத மனிதன் மிக குறைவு என்பதால் அதை அவமானமாக நினைக்காமல், குடும்பத்தாரிடம் மற்றும் உண்மையான நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து "தேவை என்றால் உதவி பெற்று" முடிந்த வரை உங்கள் கடனை அடைத்து விட்டு, தவறாமல் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவியவர்களுக்கு திரும்ப கொடுத்து விடுவதால் நல்ல உறவை அல்லது நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

அதுவும் முடியாதவர்கள் அருகில் உள்ள அரசாங்க கடன் அட்டை மற்றும் கடன் ஆலோசனை மையங்களை உடனடியாக தொடர்பு கொண்டு முடிந்த வரை விரைவில் உங்கள் கடன் சுமையில் இருந்து விடுபட முயற்சி செய்வதில் தவறில்லை.

ஆக மொத்தத்தில் கடன் அட்டை என்பதை அவசர கால துருப்பு சீட்டாக பயன்படுத்தவும், தினசரி வாழ்க்கை பயணச்சீட்டாக பயன்படுத்தாமல் இருக்கவும் கற்று கொள்ள வேண்டும்.

இப்படி சந்தோஷம் என்பது வெறும் ஆடம்பரத்தில் மட்டும் இல்லை என்பதை உணர்ந்து, இருப்பதை வைத்து வளமோடு வாழ்வதே நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஆனந்தம் தரும்.

நீங்கள் கடன் அட்டையை மற்றும் அதன் பாதிப்பை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் நினைத்தாலோ அல்லது மேல் சொன்னபடி கடன் அட்டையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி உள்ளே சென்று விட்டு வெளியே வர வழி தெரியாமல் உதவியை எதிர்பார்த்தோ நட்பு முறை இலவச ஆலோசனைக்கு, இங்கே பின்னூட்டமாக கேட்கலாம்.

கடன் அட்டையை நேசிக்கும் உங்கள் நண்பர்களிடம் இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து கொண்டு அவர்களும் பயன் பெற நீங்கள் உதவலாமே!
 

Blogger Widgets