Tuesday, January 31, 2012

புகையிலை விரிச்சா போச்சு! பெண் பிள்ளை சிரிச்சா போச்சு!

வணக்கம் நண்பர்களே,

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு குடிபெயர்வது எனக்கு ஒன்றும் புதிய அனுபவம் இல்லை என்றாலும், இந்த முறை எனக்கு ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது.

எப்போதும் எனக்கென்று ஒரு ஊர், எனக்கென்று சில மக்கள் என்று ஒரு பெட்டியுடன் கண் மூடி கண் திறக்கும் முன் கடல் கடந்து இனம் மொழி பாராமல் கிடைப்பதை உணவாக கொண்டு அந்த உள்ளூர் மக்களோடு மக்களாக கலந்து விடுவேன்.

ஆனால் இந்த முறை, புதிய வேலை, மனைவி, குழந்தைகள், அவர்கள் தங்கும் இடம், படிக்கும் இடம் என்று ஒவ்ஒன்றாக பார்த்து பார்த்து செய்து முடிக்கும் முன் போதும் போதும் என்று இருந்தாலும், அதுவும் ஒரு இனம் புரியாத சுகமாகவே இருந்தது.

அது, இது என்று ஒரு வழியாக எல்லாம் முடிந்து இயல்பு வாழ்கைக்கு திரும்பியதும், நம் கிரி (இப்போது இருவர் வீடும் அடுத்தடுத்த தெருவில்) என்ன பாஸ் எழுதுவதை விட்டு விட்டதை போல் தெரிகிறது என்று சொன்ன போதுதான், எனக்கு வலைப்பூ என்று ஒன்று இருப்பதே நினைவில் வந்தது.

என் முன்னைய பதிவில் சொன்னதை போல, சிங்கையை பற்றி என்னால் புதிதாக வேறு யாரும் சொல்லாததை எதுவும் எழுதி விட முடியாது.

என்னை விட பெரிய ஜாம்பவான்கள் நிறைந்த களம் இது. அதே நேரம் என்னை சுற்றி நடக்கும் சில நல்ல விசையங்களை எனக்கு தெரிந்த எழுத்து நடையில் சொல்வதுதான் இந்த வலைப்பூவில் இனி என் நோக்கம்.

சிங்கையில் எனக்கு மிக பிடித்த விசையங்களில் ஒன்று, இரவு உணவுக்கு பிறகு பாடல் கேட்டுக்கொண்டே ஒரு சிறிய நடை பயணம்,

அன்று வானம் மப்பும் மந்தாரமுமாய் பல நிறத்தில் மேகங்கள் முட்டிக்கொண்டு இருந்தது.

அருமையான காற்றுடன் மிக லேசான மழை தூறல் என் மனதை வருட, காதுக்கு "என் மேல் விழுந்த மழை துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!" பாடலை கொடுத்து விட்டு மெதுவாக சாலை ஓரமாக நடக்க துவங்கினேன்.



இரவு நேரம் மட்டுமில்லாது, மழை பெரிதாகி விடும் என்று நினைத்து மக்கள் யாரும் சாலையில் இறங்கவில்லை என்றாலும், காற்றோடு கலந்து மழை நீரையும் கிழித்துக்கொண்டு சர்ர்ர்ர்ர் என்று சொல்லும் சில வாகனங்கள் என் பாடலின் அமைதியை திசை திருப்ப, அடுத்து வந்த சிறிய சாலைக்குள் என் நடையை திருப்பினேன்.

எதிர்பார்த்ததை போலவே கருப்பு போர்வையின் இருபக்கமும் மஞ்சள் புள்ளி வைத்ததை போல நீண்ட சாலையின் இருபக்கமும் தெருவிளக்கின் வெளிச்சத்தை தவிர வேறு யாரும் இல்லை.

ஒரு ஐந்து நிமிடம் கடந்து இருக்கும் சற்று தூரத்தில் தெரிந்த பேருந்து நிறுத்தத்தில் இருவர் அமர்ந்து இருப்பது விளக்கின் வெளிச்சத்தில் நிழலாக தெரிந்தது.

விளக்கின் கீழ் மஞ்சள் ஒளியில் மழைதூறல் அதன் கீழ் பேருந்து நிறுத்த குடை அதன் கீழ் இரு உருவம் நிழலாக பார்க்க அருமையாக இருந்தது.

புகைப்படம் எடுக்க முடியாமல் போன வருத்ததுடன், பாட்டை நிறுத்தி விட்டு ஆப்பிள் கை தொலைபேசியில் பார்த்தால் படம் எடுக்கும் படி ஒன்றுமே தெரியவில்லை.

அப்படியே பார்த்துக்கொண்டே நடந்து எங்களுக்குள் இருந்த தூரம் குறைய, அந்த பெண்ணின் குரல் சற்று சத்தமாகவே அந்த இரவில் எனக்கு கேட்டது.

ஆர்வத்துடன் அவர்கள் பேசுவதை கேட்க சற்று மெதுவாகவே நடந்து அருகே செல்ல, அந்த பெண்ணின் குரலில் இருந்த அளவு இளமை அவர் வயதில் இல்லை.

அது ஒரு தத்தாவும் பாட்டியும் என்று பார்த்தவுடன் புரிந்தது, ஆனால் அந்த பாட்டி சற்று பதட்டத்துடன் இருந்தார்.

பாட்டியின் கையை பிடித்து கொண்டு சாமாதானம் சொன்ன விதத்தில் இருந்து பாட்டியின் அருகே இருந்தவர் அவர் கணவர் என்று புரிந்தது.

இந்த நேரத்தில் இவர்களுக்கு என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் பேருந்துக்கு நிற்ப்பதை போல நானும் நின்று அவர்கள் பேசுவதில் என் காதை கொடுத்தேன்.

கேட்டவுடன் புரிந்தது அவர்கள் பேசுவது சீன மொழி என்று, ஆனால் புரியாதது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தான்.

ஒருவேளை உடல் நிலை முடியாமல் மருத்துவமனை செல்ல இருக்கிறார்களோ என்று நினைக்கவும் முடியவில்லை, காரணம் அந்த நேரத்தில் சென்ற இரண்டு வாடகை கார்கள் காலியாகவே சென்றது. எங்கள் அருகில் வந்தபோது மெதுவடைந்து நாங்கள் வரவில்லை என்று உறுதியானவுடன் தான் எங்களை கடந்து சென்றது.

பாட்டி இன்னுமும் படபடப்பாக பேச, அந்த முதியவர் அவரை சமாதான படுத்தும் அதே நேரத்தில் கை தொலை பேசியையும் பேருந்து வரும் சாலையிலும் கண்களை மாற்றிக்கொண்டுதான் இருந்தார்.

ஒருவேளை அவர்களிடம் வாடகை காரில் செல்ல பணமில்லையோ? நாம் வேண்டுமானால் உதவலாமா என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் பிரச்சனை வேறாக இருந்து நம்மை தவறாக நினைத்துவிடுவார்களோ என்று என் மனம் என் எண்ணங்களுக்கு தடை போட்டது.

சரி, என்னதான் நடக்கிறது என்று இன்னும் சற்று நேரம் பார்ப்போம் என்று நினைத்து கொண்டு, என் பார்வையை முதல் முறையாக அவர்கள் பக்கம் திருப்பும் அதே நேரத்தில், அந்த பாட்டி என்னிடம் எதோ கேட்டார்.

அது சீன மொழியல்ல, மலாய் மொழி என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது, அவர் என்னை மலாய் மொழி பேசுபவர் என்று நினைத்து இருக்க வேண்டும்.

என் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்ட தாத்தா, இந்த நேரத்தில் வரவேண்டிய இரவு பேருந்து போயிருக்குமோ? என்று ஆங்கிலத்தில் கேட்டார்.



எனக்கும் தெரியாமல் கையில் இருந்த என் ஆப்பிளை (கை தொலைபேசி) கேட்க, அது இன்னும் ஏழு நிமிடத்தில் ஒரு பேருந்தும் அதற்கடுத்து பதினாறு நிமிடத்தில் ஒரு பேருந்தும் வரும் என்று சொன்னதை சொன்னதோடு, அவர்கள் இருவரும் மீண்டும் படபடப்புடன் பேச தொடங்கி விட்டார்கள்.

நானும் அடுத்தவர் விசையத்தை கேட்பது நாகரீகமாகாது என்று அவர்களிடம் எதுவும் பேசவில்லை.

ஆக, இவர்கள் பேருந்துக்குதான் காத்து இருக்கிறார்கள் எனபது புரிந்தது.

ஒருவேளை குடும்ப சண்டையாக இருக்குமோ?, கோவம் கொண்டு அம்மா வீட்டுக்கு போக இருக்கும் மனைவியை இவர் சமாதான படுத்துகிறாரோ! என்று நினைத்த அதே நேரம், என்னை நானே மனதுக்குள் குட்டிகொண்டேன்.

இவரே பாட்டி, இவரின் அம்மா என்றால், அவர் இது வரை இருப்பது இந்நேரம் உலக அதிசியமாக இருந்தால்தான் உண்டு.

அடகெப்பா உன்னை யாரப்பா இப்படியெல்லாம் யோசிக்க சொல்வது? என்று செந்திலை கேட்கும் கவுண்டரின் குரல் மனதுக்குள் ஒலிக்க, மெதுவாக சிரித்துக் கொண்டேன்.

மழை லேசாக வேகம் எடுக்க துவங்கினாலும், குடை இல்லாமல் நடந்து வீட்டுக்கு போக முடியும் என்று தோன்றியதால், அப்படியே நிற்பதை தொடர்ந்தேன்.

சாலை முடிவில் பேருந்து வந்து திரும்பும் வெளிச்சம் தூரத்தில் தெரிந்ததும் இருவருமே படபடப்புடன் எதோ சொல்லிகொண்டே எழுந்து நின்று விட்டார்கள்.

அந்த பேருந்து அருகே வரும் போதே, ஒரு இளம் பெண் படிக்கட்டில் எட்டி பார்த்துகொண்டே வந்தார்.

அருகில் வந்தவுடன் அது ஒரு இளம் வயது பள்ளி மாணவி என்று அவரின் சீருடை சொன்னது. இவர்கள் வயதோடு அந்த பெண்ணின் வயதை பார்த்தால் கண்டிப்பாக மகளாக இருக்க முடியாது, பேத்தியாகத்தான் இருக்கும் என்று எனக்கு புரிந்தது.

பேருந்து முழுவதுமாய் நிற்கும் முன்னவே பாட்டி எதோ கத்த, அதை காதில் வாங்காமல், தன் கை தொலை பேசியை நீட்டி தன் தாத்தாவிடம் எதோ சொல்லிகொண்டே அந்த பெண் இறங்கினாள்.

கை தொலை பேசியில் சார்ஜ் இல்லை என்று சொல்லுகிறாள், என்று எனக்கு நானே புரிந்து கொண்டேன்.

கோபத்துடன் கத்திகொண்டே சென்ற பாட்டி ஒரு அறை வைக்க போகிறார் என்று நான் நினைத்ததை போல எதுவும் இல்லாமல், அவர் தன் பேத்தியை அரவணைத்து தலையை தடவி அந்த பெண்ணை மேலிருந்து கீழ் வரை பார்க்க, தத்தா அவளிடம் இருந்த கை பையை வாங்கி கொண்டார்.

ஆனாலும் பாட்டி இன்னமும் பேசுவதை (கத்துவதை) நிறுத்தவில்லை, அந்த பெண்ணும் இப்போதும் அதை காதில் வாங்காமல் தாத்தாவிடம் பேசுவதை நிறுத்தியபாடில்லை.

என்னவென்று புரியாமல் நின்ற என்னிடம் அந்த தாத்தா, இது தன் மகளின் மகள், இவள் படிப்புக்காக நாங்கள் இவளோடு இங்கு தங்கி இருக்கிறோம், இன்று இவள் வர தாமதமானதால், பாட்டி பயந்து விட்டதாக ஒற்றை வார்த்தையில் சொல்லிகொண்டே மூவரும் பேருந்து நிறுத்தத்தின் பின் புறம் இருந்த பாதையில் நடக்க துவங்கி விட்டார்கள்.

புகையிலை விரிச்சா போச்சு, பெண் பிள்ளை சிரிச்சா போச்சு, ஒரு பெண்ணை வளர்த்து நல்ல ஒருவரிடம் சேர்க்கும் வரை, பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பது போல, என்று நம்ம ஊர் பாட்டிகள் சொல்லவது நினைவில் வர, எனக்கும் எதோ என் மகள் பத்திரமாக வந்து சேர்ந்ததை போல மனம் இதமாக, சிரித்துக்கொண்டே மீண்டும் நடக்க துவங்கினேன்.

இனம் மொழி நாடு எதுவாக இருந்தாலும் சரி, எல்லா தாய்மையும் பெண்மையை ஒரே பாசத்தோடும் பயத்தோடும் தான் பாதுகாக்கிறார்கள்.

பதிவை முடிக்கும் முன், நான் சிங்கை வந்ததும் என்னை சந்தித்த, தொலை பேசியில் அழைத்து பேசிய நண்பர்கள் கிரி, சத்ரியன் மற்றும் அனைவருக்கும் என் நட்புடன் நன்றி!.

நன்றி, மீண்டும் சந்திப்போம்.

Photobucket

Photobucket

Wednesday, August 10, 2011

வணக்கம் சிங்கப்பூர்!

வணக்கம் நண்பர்களே, தென்கொரிய புயல் கரையை கடந்து விட்டது.

வாழ்கை என்பதே ஒரு பயணம், அதில் நமக்கு சொந்தமானது என்பது எதுவுமே இல்லை என்பதை உறுதியாக நம்புகிறவன் நான்.

ஆனால், வாழும்வரை நம்மை சுற்றி இருக்கிற விசையங்கள் மற்றும் நடக்கும் நிகழ்சிகளை பொறுத்தே நம் வாழ்கை முறையும் இருக்கும் என்பதையும் நான் மறப்பதில்லை.

அதனால்தான் என்னவோ, நான் வசிக்கும் ஊர் மற்றும் இருக்கும் இடத்தை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருப்பேன்.

தென்கொரியாவில் முழுதாக நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டாலும், தென்கொரியா என்னவோ எனக்கு சலிப்பே தட்டவில்லை, அவ்வளவு நிம்மதியான மற்றும் அழகான வாழ்கை முறை அங்கு.

இருந்தாலும், ஒரு தனிமனிதன் குடும்ப சக்கரத்தில் நுழைந்தவுடன், சில சொந்த விருப்பு வெறுப்புகளை கட்டாயமாக மாற்றி கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்து விடுகிறது.

இதில் தப்பி விட நான் ஒன்றும் அவதாரம் இல்லை என்பதால், சில தனிப்பட்ட காரணத்தை கருத்தில் கொண்டு தென்கொரியாவை விட்டு வரவேண்டிய நிர்பந்தம் உண்டாகி விட்டது.

இந்த முறை இந்தியா அல்லது இந்தியாவிற்கு அருகில் இருக்கும் நம் தமிழ் கலாச்சாரத்தை கொண்ட இடத்திற்குத்தான் போக வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடும் இதில் சேர்ந்து கொண்டது, காரணம் தென்கொரியாவை விட்டு வரும் நோக்கமே குழந்தைகளின் ஆரம்ப கல்விக்காகத்தான்.

வெறும் ஆங்கில வழி அல்லது கொரிய மொழி கல்வி என்பதில் எனக்கும் சரி, என் குடும்பத்தினருக்கும் சரி விருப்பமில்லை,. தாய் மொழி இல்லாத வாழ்கை என்ன ஒரு வாழ்கை என்பதே அதன் உண்மையான காரணம்.

அதன் காரணமாகவே இந்த முறை மிக கவனமாக நான் தேர்ந்து எடுத்தது "சிங்கப்பூர்".



சிங்கப்பூரை பொறுத்த வரை எல்லாம் பார்த்து பழகிய இடங்கள்தான், அதே போல மாற்றம் என்பது சிங்கையில் புதிது இல்லை என்றாலும், நான் பார்த்த சிங்கை இப்போது ரொம்பவே மாறி இருக்கிறது, மக்கள் தொகையும் அதிகமாக தெரிகிறது.

மொத்த சிங்கப்பூரையும் கையடக்க ஆப்பில் தொலைபேசியில் அடக்கி வைத்து இருக்கிறார்கள், போகும் இடம், வழி முதல் அடுத்த பேருந்து வரும் நேரம், அருகில் இருக்கும் இடம், வாடகை வீடு, அங்காடி, மருத்துவமனை என்று அனைத்தையும் தொலைபேசியே சொல்லி விடுகிறது.

மாற்றம் பல இருந்தாலும் எப்போதும் போலவே பொலிவு குறையாத "புது பெண்" போல சிங்கை வழக்கத்தை விட அதிகமாகவே என் மனதை கவர்கிறது,

முதல் நாள் சாலை ஓர உணவு விடுதியில் இரவு உணவுக்காக சென்ற நான், என் தேவையை கேட்டு உதவி செய்ய வந்த பெண்ணிடம் பேசிய போதுதான், கேட்டு பழகிய உள்ளூர் தமிழ் வார்த்தைகள் என்றாலும், கடந்த நான்கு ஆண்டு கொரிய வாழ்கையில் சுத்தமாக அதை நான் மறந்து விட்டேன் என்று புரிந்தது.

கோழி சோறுடன் டைகர் பீர் (புலிப்பால்) கேட்க நினைத்து, ஆன்டி டைகர் பீர் கேன் (beer can) என்று சொல்ல, சற்றும் தன் புன்னகை மாறாமல் "கேன் கேன் லா" (can can la), "போத்தில் ஆர் டின்"(Bottle or Tin) என்று பதில் கேள்வி கேட்க, "பீர் டின்" என்று சொல்லவேண்டும் என்பதை நினைத்து இருவருமே சிரித்து விட்டோம்.

இனி தென்கொரியாவை போல என்னை சுற்றி இருக்கும் நகரத்தை பற்றி எழுதுவது என்பது சற்று சிரமம் என்பதை நான் நன்கு அறிவேன், காரணம் என்னை விட மூத்த பதிவர்கள் இங்கு அதிகம் மற்றும் அவர்கள் எழுதாத புதிய இடம் எதுவும் இங்கு என் கண்ணில் பட்டு விடப்போவதில்லை.

ஆகவே, வழக்கம் போல என்னை சுற்றி நடக்கும் விசையங்களை சார்ந்த நல்ல பதிவுகளுடன் உங்களை இனி அடிக்கடி இணையத்தில் சந்திக்க முயற்சிக்கிறேன்.

மொத்தத்தில் சிங்கையின் நாற்பத்தி ஆறாவது பிறந்தநாளை கொண்டாடும் சிங்கை மக்கள் மற்றும் தமிழ் பதிவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.

ஆம், வாழ்கை பயணத்தில் அடுத்தது என்ன என்று தெரியும்வரை...!

இனி நான் சிங்கைவாசி...! மறுபடியும் மறந்து விட்டேன் பாருங்கள், மன்னிக்கவும், இனி நான் சிங்கைவாசி "லா" :-).

நன்றி மீண்டும் சந்திப்போம்.
 

Blogger Widgets