Wednesday, July 7, 2010

பழைய கதை! புதிய பார்வை!

ஒரு அடர்ந்த காட்டில் வாழ்ந்த முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் பந்தயம் வைத்துக்கொள்ள வெகு நாட்களாக ஆசை.

முயலின் வேகத்துக்கு உன்னால் ஈடு கொடுக்க முடியாது, உன் தகுதியை மறந்து ஆசைப் படாதே என்று மற்றவர்கள் கேலி செய்ய, ஆமைக்கு ஒரே அவமானமாக போய் விட்டது.

சரி,விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு,முயற்சி எதுவுமே செய்யாமல் இருப்பதை விட முயன்று தோற்பது ஒன்றும் அவமானம் இல்லை என்று நினைத்த ஆமை முயலுடன் போட்டி போட தயாரானது.

போட்டி நாள் அன்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்க, போட்டி நேரமும் வந்தது, போட்டியை துவக்க நடுவர் கொடி அசைத்த நொடியில் முயல் ஓடி வெற்றி இலக்கை அடைந்தது.

பொறுமை கதை முடியவில்லை!.

தன் தகுதிக்கு ஆமையை ஒரு முறை வெல்வது எப்படி பெருமையாக முடியும் என்று நினைத்த முயல், ஆமையை அவமான படுத்தும் கர்வத்தோடு மீண்டும் வேறு ஒரு பாதையில் போட்டிக்கு அழைக்க, தன்னம்பிக்கை கொண்ட ஆமையும் சம்மதித்தது.

இந்த முறை கடந்த முறை வெற்றி பெற்ற கர்வத்தில் போட்டி நடிவில் முயல் ஒரு மரத்து அடியில் படுத்துத் தூங்க மனம் தளாரத ஆமை மெது மெதுவாக ஓடி வெற்றி இலக்கை அடைந்தது.



கண் முழித்த முயலுக்கு அவமானமாக போய் தான் என்ற கர்வத்தால் வந்த வினையை நினைத்து வருந்தியது, அதனால் ஆமையை மீண்டும் ஒரு முறை முயல் போட்டிக்கு அழைத்தது, ஆமையும் சம்மதித்தது.

டேய் சிங்கக்குட்ட்ட்ட்டி.... என்று நீங்கள் பல்லை கடிப்பது எனக்கு கேட்கிறது.

பொறுமை பொறுமை! கதை இன்னும் முடியவில்லை!.

இந்த முறை மீண்டும் அதே பாதையில் போட்டி துவங்க, தோல்வியின் அவமானத்தை மறக்காத முயல் முன் போல் சுறுசுறுப்பாக ஓடி வெற்றி இலக்கை அடைந்து ஆமையை கேவலமாக பார்த்தது.

ஆமை சற்றும் மனம் தளராமல், நாம் ஏன் மீண்டும் ஒரு முறை போட்டியை வைத்துக்கொள்ள கூடாது? என்று கேட்க!ஆமையின் மன உறுதியை பார்த்து முயலோடு சேர்ந்து அனைவருமே வியந்துவிட்டார்கள்.

முயலும், நீ தோல்வி அவமானத்தில் உளறுகிறாய்.

எதோ ஒரு முறை நான் தூங்கி விட்டேன், இனி எத்தனை முறை போட்டி வைத்தாலும் என்னை உன்னால் வெற்றி பெறவே முடியாது. இதை உனக்கு நிருபிக்கவே மீண்டும் போட்டிக்கு நான் சம்மதிக்கிறேன் என்று சொன்னது.

முயல் ஆணவத்துடன் சொன்னதை பொறுமையாக கேட்ட ஆமை, கடந்த இரண்டுமுறை நீ ஓடு பாதையை தேர்ந்து எடுத்தாய், ஆகவே இந்த முறை நான் ஓடு பாதையை தேர்ந்து எடுக்கட்டுமா? என்று அமைதியாய் கேட்க, முயலும் சம்மதித்தது.

ஆக, ஆமை தேர்வு செய்த பாதையில் மூன்றாவது முறை போட்டி தயாரானது, போட்டி ஆரமித்ததும் ஓடு தளத்தில் வேகமாக ஓடிய முயல் உடனே வந்த திருப்பத்தில் திரும்பியதும் திகைத்து நின்றது.

காரணம் பாதையின் குறுக்கே ஓடிக்கொண்டு இருந்த ஆறு!, எங்கே இறங்கி நீந்தினால் ஆற்றில் அடித்து கொண்டு போய்விடுவோமோ என்ற பயம், மெதுவாக வந்த ஆமை அழகாக ஆற்றில் இறங்கி நீந்தி கரையில் இருந்த வெற்றி இலக்கை அடைந்தது.

தன் பலத்தை மட்டுமே நினைத்திருந்த முயலுக்கு இப்போது ஆமையின் பலமும் தன் பலவீனமும் புரிந்தது.

பொறுமை! பொறுமை! கதை இங்கும் முடியவில்லை!.

ஆமையின் தனம்பிகையும் புத்திசாலி தனமும் புரிந்தாலும், முயலுக்கு ஒரு ஆமையிடம் தன் தோல்வியை தாங்க முடியவில்லை.

சரி, இரண்டுக்கு இரண்டு என்று சம வெற்றியில் இருக்கும் நாம், கடைசியாக ஒரு போட்டியை வைப்போம்.



இதுவே "பெஸ்ட் ஆப் பைவ்" இதன் வெற்றியை பொறுத்து நம்மில் யார் இறுதி வெற்றியை அடைவது என்பது முடிவாகட்டும் என்று ஆமையிடம் சொன்னது.

சற்றும் மனம் தளராத ஆமை, அதே போல் இந்த முறை ஓடு பாதையையும் முன்பு போல் இல்லாமல் இருவரும் சேர்ந்து தீர்மானிப்போம் என்றது.

உடனே கடந்த முறை அனுபவத்தை மனதில் கொண்ட முயல், சரி ஆகட்டும், ஆனால் இப்போது நாம் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டதால் என் பாதையில் நான் உன்னை என் முதுகில் தூக்கிக்கொண்டு ஓடுகிறேன், அதே போல உன் பாதை வந்ததும் நீ என்னை முதுகில் தூக்கிக்கொண்டு ஓட வேண்டும் சம்மதமா? என்றது.

ஆமையும் சம்மதித்து, போட்டி ஆரமிக்க, முதுகில் ஆமையை சுமந்த படி முயல் பாதையில் ஓடியது, வழியில் காட்டு ஆறு வர, ஆமை இறங்கி முயலை சுமந்த படி ஆற்றில் நீந்தியது.

மறு கரைக்கு சென்று ஆற்றில் இருந்து ஆமையும், ஆமை முதுகில் இருந்து முயலும் தரையில் காலை வைக்க அங்கு வெற்றியின் எல்லை கோடு இருந்தது.

இருவருமே சமமாக வெற்றியின் எல்லை கோட்டை தொட்ட சந்தோசத்துடன், இனி என்றும் நாம் இணை பிரியாத நண்பர்களாக இருப்போம் என்று முடிவெடுத்தன.

இப்படி முடிகிறது இங்கு என் கதை.

நண்பர்களே, பலமும் பலவீனமும் எல்லா இடத்திலும் சமமாகவே இருக்கிறது. இன்று மற்றவருக்கு நீ செய்ததை, நாளை உனக்கு வேறொருவர் செய்வார் என்பதே உலக தத்துவம்.

அது நல்லதா கெட்டதா என்பதை முதலில் நீயே தீர்மானிக்கிறாய் என்பதே இங்கு என் கருத்து.

அது கணவன் மனைவி குடும்பமாகட்டும், வேலை இட சக ஊழியர்களாகட்டும் அல்லது நண்பர்களாகட்டும், ஒருவரின் பலவீனத்தில் குத்தி நம் பலத்தால் அவர்கள் மனதை காய படுத்துவதை விட, நம் பலத்தை கொண்டு அவர்களின் பலவீனத்தில் உதவி, நம் பலவீனத்தில் அவர்கள் பலத்தின் உதவியை தயங்காமல் கேட்டு வாங்கி வாழ்கையை நகர்த்தினால் எல்லாமே மாறிவிடும்.

மற்றொரு சுவையான தகவல்.

கடந்த மாதம் இரண்டு நாட்கள் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் ஜப்பான் தலைநகர் டோக்யோ நகருக்கு சென்று இருந்தேன், அக்கிஹாபாரா என்னும் புகழ் பெற்ற சந்தையில் பொருட்கள் வாங்கி கொண்டு இருக்கும் போது, ஒரு பத்து பனிரெண்டு வயதில் உள்ள மாணவிகள் கூட்டத்தை கண்டேன்.

அனைவரும் ஒரே போல் அடர் நீலம் கலந்த பனியனில் இருந்தார்கள், அதில் " NO DRUG...! NO WAR...!" என்று ரத்த சிகப்பில் எழுதி இருந்தது. பொதுவாக ஜப்பானிய பெண்கள் ஆங்கிலம் கலந்த உடை அணிவதை விரும்ப மாட்டார்கள்.

ஆர்வம் தாங்காமல் அவர்களை அழைத்து, அது ஏன்! எதற்கு? என்று கேட்க, அந்த அழகான பிஞ்சுகள் சொன்ன பதில் கவிதையாய் என் அடி மனதில் பதிந்தது.

அதாவது எங்கள் மூன்றாவது தலைமுறை முன்னோர்கள் போரின் கொடுமை அனுபவித்தார்கள், அந்த வலி எங்கள் மனதில் இன்னும் இருக்கிறது.

அதில் சிதைந்து போன எங்கள் நாட்டை, எங்கள் இரண்டாவது தலைமுறை முன்னோர்களின் கடுமையான உழைப்பு உலகமே திரும்பி பார்க்கும் இயந்திர நாடாக மாற்றியது.

அந்த வெற்றிகளிப்பில் இப்போதுள்ள எங்கள் முதல் தலைமுறை இளையர்ககளின் விருப்பம் சிறிது போதைக்கும் புகைக்கும் போகிறது.

இது இப்படியே தொடராமல், இனிவரும் எங்கள் அடுத்த தலைமுறை "போரும் போதையும்" இல்லாத ஒரு புதிய உலகத்தின் முன்னோடியாக ஜப்பானை கொண்டு செல்வோம்.



இதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவே இது என்று சொல்லியதை கேட்டதும் எனக்கு ஒரு தேசியகீதம் கேட்டது போல உடல் சிலிர்த்து விட்டது.

அதை விட, நீங்கள் வளர்ந்து என்னவாக வர விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு கிடைத்த பதில்.

இயந்திர மருத்துவ மற்றும் உலக விளையாட்டு நாகரீகத்தை பொறுத்த வரை இப்போதே நாங்கள் அடுத்த நூறு வருட முன்னோடியாக இருக்கிறோம்.

ஆகவே நாங்கள் பாட்டு, நடனம் மற்றும் இயற்கை விவசாயம் என்று அதி விரைவில் ஒரு அழகிய பசுமையான ஜப்பானை இந்த உலகுக்கு காட்டுவோம், இதுவே எங்கள் புதிய தலைமுறை லட்சியம் என்றார்கள்.

அடடா, எப்போதும் கையில் இருக்கும் கேமிரா இப்போது இல்லையே என்று வருந்தியவாறு அவர்களிடம் இருந்து விடைபெற்றேன்.

உலகம் எங்கேயோ அதி வேகமாக போய் கொண்டு இருக்கிறது நண்பர்களே, நமக்கு இப்போதும் நேரம் இருக்கிறது.

நம்மை போல மேல் நாட்டு வேலை, கலாசாரம் என்று நம் சொந்த நாட்டு வேலை மற்றும் கலாசார அடையாளத்தை துலைக்காமல், இனி வரும் தலைமுறைகளுக்கு அதை முறையே மனதில் விதைத்து, அடுத்த தலைமுறையை நம் நாட்டுக்காக வளர்ப்பது நம் கடமையாகிறது.

நன்றி!.

இரண்டு வருடம் கழித்து விடுமுறைக்காகவும், என் தேர்வுக்காகவும் நாளை இந்தியா செல்வதால், திரும்ப வரும் வரை இனிய தமிழ் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

என் இணைய பக்கத்தில் உங்கள் நேரத்திற்கு மீண்டும் என் அன்புகலந்த நன்றி!.

Wednesday, May 26, 2010

திரை கடலோடி திரவியம் தேடு!

வழக்கம் போல நேரமின்மையை காரண கேடையமாக கொண்டு வந்தாலும், வழக்கத்தை விட மொக்கையை கொஞ்சம் குறைக்க முயற்சிக்கிறேன்.



ராஜ கீரிடத்தை என் தலையில் வைத்தமைக்கு ஜலீலாவிற்கு ஒரு சலாம்.

இடுகைக்கு போகலாம் வாங்கோ...!

இன்னும் எவ்வளவு நாள்தான் இங்க இருக்கிறது, வேற ஏதாவது தமிழ் பேசும் நாட்டுக்கு போக முயற்சிக்கலாமே? என்று தங்கமணி தன் தனிமை பிரச்சனையையும், தமிழ் பற்றையும் என்னிடம் கொட்டிக்கொண்டு இருந்த போது, போன் அடித்தது.

என்னடா நல்லா இருக்கீங்களா என்று ஆரமித்தார் என் தந்தை எதிர்முனையில்.

இங்கு நலம், அங்கு நலமா, பைரவி (ஜெர்மன் ஷெபர்ட்) எவ்வளவு உயரம், எடை வந்திருகிறது, தோட்டத்தில் இருந்த பெண் மருதாணி "பூ" பூத்து விட்டதா என்று பேச ஆள் கிடைத்ததில், ஆள் மாற்றி ஆள் நான் பரஸ்பரம் மொக்கையை போடும் பேச்சு வாக்கில், வேறு நாடு போக முயற்சிப்பதை சொல்ல!.

எனக்கு கூட உன்கிட்ட ரொம்பநாளா ஒன்னு கேட்கணும்டா? முப்பதுவருடம் ராணுவ அதிகாரியாக இருந்த நான் கூட, ஒரு இரண்டு முறை பாகிஸ்தான், சீனா, நேபாளம் எல்லை வரைதான் போக முடிந்தது!.

ஆனா இந்த கணினி துறை வாழ்கையில் மட்டும் எப்படி நிறைய நாடுகள் நீங்கள் சர்வ சாதாரணமாக போக முடிகிறது?

நீ கூட ஒரு பத்து வருடத்தில் ஆறு ஏழு நாடுகள் சுற்றி விட்டாய் இல்லையா என்றார்.


அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது, இப்ப நான் வேற வேலையாய் இருப்பதால் மாலை ஒரு ஆறு மணிக்கு இதை பற்றி நம்ம பேசுவோமே என்றேன்.

டேய் நான் உங்க அப்பாடா எனக்கேவா என்றார்?

சொன்னவுடன் ஓடி சென்று செய்வது உங்கள் ராணுவத்தில் வேணா சட்டமா இருக்கலாம், ஆனா எங்க கணினி துறையில் யாராவது ஏதாவது வேலையை போன் செய்து கேட்டவுடன் செய்து விடக்கூடாது.

இப்போது நான் வேலையாய் இருப்பதால், இன்னொரு நேரத்தை சொல்லி அப்போது ரூம் போட்டு (Meeting Room Booking) இந்த "ஆணியை புடுங்குவது" எப்படி என்று பேசுவோமே என்று சொல்வதுதான் எங்கள் கணினிதுறை அடிப்படை சட்டம்.




ஏப்பா அப்படி, அவ்வளவு வேலை பளுவா உங்களுக்கு?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, அப்பதான நம்ம எதோ பிசியா இருக்கோம் என்று காட்டி, நம்ம ஒரு வேலை இல்லாத "வெட்டி பீசு" என்று யாரும் கண்டு பிடிக்க முடியாமல் செய்ய முடியும், அதுக்குதான்.

ஓ...சரி சரி, இந்த வெளிநாட்டு விசையத்துக்கு வா!.

அதாவது எங்கள் வாடிக்கையாளர் வரவு கணக்கை (customer billing account) வேறு இடத்திற்கு மாற்றுவதன் மூலம், நாங்கள் வேறு வேறு நாட்டுக்கு போக முடியும்.

அது என்னாப்பா சரியா புரியலயே? கொஞ்சம் தெளிவா புரியுற மாதிரி சொல்லு.

சரி, உங்களுக்கு புரியுற மாதிரி சொல்றேன்.

இப்ப பாத்தீங்கனா, நம்ம நாட்டு மென்பொருள் நிறுவங்கள் ஒரு கல்லூரி விடாம நேரா போய் இருக்க கணினி துறை பீசை (மக்கள்) எல்லாம் அள்ளிக்கிட்டு வந்துடுவாங்க.

ஆனா, அவுங்களுக்கு எந்த வேலையும் தெரியாது. ஏட்டு சுரக்காய் வாழ்க்கைக்கு உதவாது இல்லையா? அதுக்காக சம்பளமும் கொடுத்து வேலையும் கத்து தரவா முடியும்?

அதுனால, பழைய "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் "எம்.ஜி.ஆர், நாகேஷ்" எல்லாத்தையும் கன்னிதீவுக்கு அடிமைகளா விற்பது போல, கொண்டு வந்த நம்ம கணினி துறை ஆட்டு(கத்து) குட்டிகளுக்கு எல்லாம் கம்பெனியோட புலி தோலை போர்த்தி, ஆணி புடுங்குவதில் மிக சிறந்த புலிகள் என்று சொல்லி விற்று விடுவார்கள்.


எங்க கன்னித்தீவுலையா?

ஹுஹும் அது படத்துல, இங்க கணினி துறைல அதுக்கு பேரு "கஸ்டமர் பிளேஸ்" (Onsite Customer Service).

அவனும் மாஸ்டர் பீஸ், காமிடி பீஸ், டம்மி பீஸ் (கொட்டை எடுத்ததா எடுக்காததா) என்று பார்க்காமல் மொத்தமா வாங்கி உள்ள திறந்து விட்டு ஆணி புடுங்குங்கன்னு சொல்லிடுவான், இங்கதான் நம்ம கத்து குட்டிகள் எல்லாமே கத்துக்கணும்.


அது சரி, ஆனா இந்த கத்து குட்டிகளுக்கு எப்படி, எந்த ஆணி தேவையானது, எது தேவை இல்லாதது என்று தெரியும்? அப்புறம் எப்படி அவர்கள் அதை செய்வார்கள்?

குட் கொஸ்டீன், நமக்கு எப்படி எந்த ஆணி தேவை என்று தெரியாதோ!, அதே மாதிரி அவுங்களுக்கு எந்த ஆணி தேவை இல்லாதது என்று தெரியாது!.

அதுனால நம்ம புடுங்கறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான்னு அவங்கள நம்ப வைப்பதுதான் நம்ம கத்துக்கும் முதல் பாடம்.


அது சரி, ஆனா இவ்வளவு வேலை ஆட்கள் தேவை படும் போது, அவுங்க நாட்டில் இருப்பவர்களை விட்டு விட்டு, ஏன் நம்ம மக்களை வேலைக்கு எடுக்கணும்.

அது ஏன்னா, அறிவே இல்லா விட்டாலும், காசு மட்டும் இருப்பதால் அவுங்க எல்லாம் முதலாளிகளாக இருக்க மட்டுமே விரும்புவார்கள், அதுனால நம்ம மாதிரி இந்த சில்லறை காசு கூலி வேலைக்கு எல்லாம் அவுங்க நாட்டு மக்கள் வர மாட்டார்கள்.

அவர்களுக்கும் காசு ஏதுன்னா, தலை முறை தலை முறையாய், அவுங்க அம்மா அப்பாக்கள், நம்ம அம்மா அப்பா மாதிரி இந்த குடும்ப மானமே உன் கையில் தான் இருக்குப்பா, உன் தங்கச்சி கல்யாணம் வேற இருக்கு என்று சொல்லி விபூதி போட்டு விமானத்தில் வெளி நாட்டுக்கு பிளைக்க அனுப்பாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து,தங்கள் வாரிசுகளுக்கு வாழ்க்கை முழுவதும் தேவையானதை சேர்த்து வைத்து விடுகிறார்கள், அதனால் தான்.


டேய்...!

ஹிஹிஹி கோவிக்காதிங்க, சும்மாப்பா துலுலாக்கு...! சரி விசையதுக்கு வருவோம்.

இப்படியே வேலையில், மின் அஞ்சலில் ரொம்ப பிசியாகிடுவோம், பக்கத்து சீட்டுக்கு பேசனும்னா கூட, மெயில் அனுப்பி, போன் போட்டு தான் பேச முடியும், அதுவும் திங்கள்கிழமை-ன்ன ரொம்பவே பிசி.


ஏன் கடினமான வேலையா, அப்படி என்ன செய்வீர்கள்?

அப்படி இல்லை, தினமும் கணினியை பார்த்தல், காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம், இந்த நாள் இனிய நாள், வாழ்கையில் உயர என்பது போல பூ போட்டு, பொம்மை போட்டு கலர் கலரா பல மெயில் வந்திருக்கும்.

அதெல்லாம் யார் அனுப்புவா, எல்லாத்தையும் படிச்சு பதில் அனுப்பனுமா?

எல்லாம் நம்ம கல்லூரி மற்றும் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் தான், நம்மள மாதிரியே அவுங்க வேற நாட்டு "கஸ்டமர் பிளேஸ்", அதாவது அவுங்க முல்லை தீவுக்கு விற்கப்பட்டு இருப்பாங்க.



நம்மளும் இதை எல்லாம் படிக்கனும்ன்னு ஒன்னும் அவசியமில்லை, வந்ததை அப்படியே வேற நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பனும், அப்பதான நம்ம தொழில் நட்பை வளர்க்க முடியும்.

இப்படியே இங்க இருந்து வந்ததை அங்கேயும், அங்கே இருந்து வந்ததை இங்கேயும் அனுப்பினா போதும், ஏன்னா இத அனுப்புன அவுங்களும் சொந்தமா எதுவும் எழுதுவதில்லை. இணையத்தில் மின் அஞ்சலை கொடுத்தால் தினம் அவர்கள் அனுப்பி விடுவார்கள்.


என்னப்பா இது, சரி இப்படியே இருந்தா அப்புறம் வேற நாட்டுக்கு மாறி போவீங்க? அதுக்கு என்ன வழி?

இப்படியே ஒரு நாள் நமக்கும் இந்த வேலை ரொம்ப போர் அடிச்சுடும், அதுனால புது இடத்துக்கு போக தோணும், அதுக்கு ரெண்டு வழி இருக்கு.

மொதோ வழி ரொம்ப ஈசி, வேற நிறுவனத்தை பிடிச்சு வேற தீவுக்கு (Client) விற்க சொல்லி நம்ம வேற நாட்டுக்கு போய்டலாம், ஆனா வேலை என்னமோ அதே ஆணிதான். இதுல கொஞ்சம் சம்பளம் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உண்டு, ஆனா வேலை நிரந்தரமா என்பது உடனே தெரியாது.

ரெண்டாவது இப்ப இருக்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேறு நாடு மாறுவது(Intra Company Transfer) அது எப்படின்னா.

மனித வளத்துறைக்கு மொதல்ல இதை சொல்லணும், அவுங்களும் உடனே நம்ம வேற நிறுவனத்துக்கு போய்ட்டா இப்ப கிடைக்கிற படிக்காசு போய்டுமேன்னு ராஜ மரியாதையாக பேசி, உடனே வேறு எங்கு உன்னை அனுப்ப முடியும் என்று பார்ப்போம் கொஞ்சம் அவகாசம் கொடு என்று கொஞ்சுவார்கள்.

இப்பதான் ரவுண்டு ராபின்ன்னு ஒரு முறை ஆரமிக்கும், அந்தா இந்தான்னு தேடி நம்மள மாதிரியே ரொம்ப நாளா வேற எங்கையாவது முல்லை தீவு மாதிரி இடத்துல ஆணி புடுங்கி புடுங்கி சலிப்பான ஒருத்தன், எனக்கு வேற இடத்துக்கு போகனும்னு கேட்டிருப்பான்.

உடனே நம்ம மனித வள மூளை சுருசுருப்பா வேலை செய்யும், நம்ம கிட்டையும் அவன் கிட்டையும் இதே ஆணிதான், ஆனா வேற இடம்னா ரெண்டு பேருமே இருக்கதை விட்டுட்டு போக யோசிப்போம்.

அதுனாலா இப்ப நம்ம பாக்குறத விடஅது என்னமோ புதிய விசையம் என்றும், அதில் நமக்கு மிக அருமையான பதவி என்றும், இன்னும் நம் அறிவை வளர்க்க இது ஒரு அற்புதமான சந்தர்ப்பம் என்றும், ரெண்டு பக்கமுமே சொல்லி அழகான ஆங்கிலத்தில் ஒரு பில்டப் கொடுப்பார்கள்.


அது எப்படிப்பா வேலை விசையதுல பொய் சொல்ல முடியும்?

அப்படி இல்லை, இது தொழில் தர்மம் ஏன்னா அவர்கள் வேலையே பொய் சொல்வதுதான்!.

நம்மளும் சரி என்று சொல்லி, கண்ணை மூடி திறக்கும் முன், விசா விமான டிக்கெட் என்று எல்லாம் வந்து, இன்றிரவே நீ பறக்க வேண்டும் என்று சொல்லி விடுவார்கள். நாம் அங்கு போகும் முன் நம் முழு விபரமும் அங்கு சென்றுவிடும்.

ஒரு வழியா நம்ம அங்க போனா, அந்த அலுவலகத்துல எல்லோரும் நம்ம எதோ விடுமுறைக்கு வந்த மாதிரி விசாரிப்பார்கள், இல்லை இல்லை நான் வேலை மாற்றி வந்திருக்கிறேன் என்றதும்...!



அப்படியா? எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லையே? இதோ பார்கிறேன் என்று சொல்லி, நம்மை ஒரு கணினி இல்லாத இருக்கையில் அமர சொல்லி விடுவார்கள்.

எங்களை பொறுத்த வரை வேலையே இல்லாமல் "வெறிக்க வெறிக்க கணினி திரையை" பார்த்தாலும் பார்ப்போமே தவிர கணினி இல்லாமல் ஒரு நிமிடம் கூட அலுவலகத்தில் அமர முடியாது .

சுருக்கமா சொல்லனுமா, சுமங்கலி கூட்டத்துக்கு நடுவில் தாலி அறுத்து அமர வைத்தது போல ஒரு பீலிங்க்ஸ் வரும். இப்படி நம்ம முகம் கொஞ்சம் மாறினாலும் போதும் அந்த கணம் முதல் நாம் அந்த மனிதவள துறைக்கு அடிமை.

இப்பதான் அவசர சிகிச்சை பிரசவ வார்டுக்கு உள்ளும் வெளியும் நடக்கும் நர்சு போல மொபைல் போனில் பேசிகொண்டே நம்மை கடந்து வந்தும் போவார்கள், அதில் நம் காதில் விழுவது எல்லாமே கிட்ட தட்ட இது மட்டுமே.

நோ நோ, இங்க இங்க அனுப்பாதிங்க, என் கிட்டேயே ஆறு பேரு வேலை இல்லாம பென்ச்ல இருக்காங்க...!

அப்படி இல்ல, நான் எவ்வளவோ முயற்சி பண்ணியும் எதுவும் அமையல, அதன் நோட்டீஸ் கொடுத்து அனுப்ப வேண்டியதாகி விட்டது...!

நான் என்ன செய்ய முடியும் மார்கெட் வேற முன்ன மாதிரி இல்ல...!

அங்க ஏதாவது தேவை இருக்கா? என்கிட்ட பில்லிங் இல்லாம மக்கள் இருக்காங்க...!


இப்படியே நேரம் ஓட நாள் ஓட, நமக்கு உள்ளுக்குள்ள கொஞ்சம் டரியலாகி விடும், விசா விமானம் எதுவுமே இல்லாமல் மனம் இந்தியா பறந்து விடும்.

வீட்டு லோனை எப்படி கட்டுவது? காரை திருப்பி கொடுத்து லோனை முடித்து விடுவோமா? ஊரில் அந்த செய்முறைக்கு பணம் அனுப்ப வேண்டுமே? எல்.ஐ.சி பணம் கட்ட வேண்டுமே? என்று மனம் இங்கும் அங்கும் சிட்டாய் பறக்கும்.

இப்பதான் நம்ம பக்கம் ஆள் வரும்.

ஸாரி நண்பா, பாத்தீல்ல, ரொம்ப பிசி, மார்கெட் வேற சரியில்ல, என்ன செய்ய? நானும் முடிஞ்ச வரைதானே முயற்சி பண்ண முடியும். நான் என்ன கம்பெனி முதலாளியா, உங்களை மாதிரி நானும் வேலைதானே பார்கிறேன் என்று பேச பேச...!.

இப்ப நமக்கு வேலை இருக்குன்னு சொல்றானா? இல்லை போக சொல்றானா?இத நம்பி இருந்ததை வேற விட்டுட்டமே! என்று நமக்குள் மூளைக்கும் மனசுக்கும் ஒரு பானிபட் போரே நடக்கும்.

சரி, உன் விசையத்துக்கு வருவோம் என்று சொல்லும் போது தான் அந்த மனிதவள துறைக்கு முகம் மாறும்.

இப்ப இங்க வேலை எதுவும் இல்லை. ஆனாலும் உன்னை போல நல்லவனை இழக்க நான் விரும்பவில்லை.

அதனால், முல்லை தீவுல ஒரு வேலையை உனக்காக ஒதுக்கி தருகிறேன், இப்போதைக்கு பார்கிறாயா? பின் நல்ல சமயம் வரும் போது மாற்றி தருகிறேன் என்ற வார்தையை கேட்டதும்.

"யப்பாபா" என் வயிற்றில் பாலை வார்த்தாய் மகனே, சும்மா இருப்பதை விட எதையாவது செய்வது மேல் என்று நினைத்து, நாமும் சரி என்று சொல்லி விடுவோம்.

அடுத்த நாளே, அங்கு அனுப்பி விடுவார்கள், ஆக அன்று முதல் அதே ஊதியம், அதே ஆணி, ஆனால் ஆணி புடுங்கும் இடம் மட்டும் வேறு, இப்படியே அடுத்த இரண்டு வருடம் ஓடி விடும்.


அப்படியா அதுக்கப்புறம் என்ன ஆகும்?

என்ன ஆகுமா?

இப்பவே "பஞ்ச தந்திரம் தேவயானி மாதிரி" எவ்வ்வ்...ளோளோ பெரிய (மூடி) "இடுகைன்னு" யாராவது ஒரு அக்கா பின்னூட்டத்துல திட்டுவாங்க...!

அதுனால, திரும்ப இதே இடுகைய முதல்ல இருந்து படிங்க, ஆனா தீவு(Client) பெயரை மட்டும் வேறு ஏதாவது மாற்றி படியுங்கள், அதுதான் ஆகும்.

சரிப்பா, நான் வெளியே போகிறேன், நீங்க தங்கமணிகிட்ட பேசுங்க, இந்தாமா நீ பேசு...! என்று போனை கொடுத்து விட்டு எம்.பி-3 யை ஆன் பண்ண அப்போது வந்த பாடலை கேட்டு கொண்டே வெளியே நடந்தேன்.


"கட்டிய மனைவி தொட்டிலில் பிள்ளை, உறவை கொடுத்தவர் அங்கே...!

அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரை கொடுப்பவர் இங்கே...!

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு...!

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும், இதுதான் எங்கள் வாழ்க்கை...! இதுதான் எங்கள் வாழ்க்கை."


சைடிஷ்:-தங்கமணிக்கு மின் அஞ்சலில் வந்த ஒரு அருமையான குறும்படம், கணினிதுறை மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.



நன்றி!.
 

Blogger Widgets