Tuesday, August 10, 2010

திருமண உறவுகள் சொந்தமாகவா! பகையாகவா?

என்னடா பொல்லாத வாழ்க்கை...! என்னடா பொல்லாத வாழ்க்கை...!

யாரையும் நம்பி நம்மை பெற்றாளா அம்மா?, அட போகும் இடம் ஒன்னுதானே பொறுங்கடா சும்மா...!

இதுக்கு போயி அலட்டிக்கலாமா...! அட இதுக்கு போயி அலட்டிக்கலாமா...!

வணக்கம் நண்பர்களே, என்ன பாட்டு பலமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?விசையம் இருக்கிறது.

என் இந்திய பயணம் எப்போதையும் விட இந்த முறை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் மொத்தத்தில் ஒரு மசாலா படம் பார்த்தது போல மிக அருமையாக இருந்தது.

சாதாரணமாக விடுமுறை முழுவதும் நண்பர்களுடன் என் வீட்டை சுற்றியே இருக்கும் நான், இந்த முறை சென்னை, திருவண்ணாமலை, சதுரகிரி, சிங்கை என்று நேரமே கிடைக்காமல் சுற்றி கருகருத்து திரும்பி இருக்கிறேன்.

தமிழ்நாட்டில் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்த ஆறு வழி நெடுஞ்சாலை வேலைகள் முடிந்து, இரவில் கூட பளபளவென்று முதலிரவில் நகையோடு ஜொலிக்கும் புது பெண் போல வழு வழுவென்று இருக்கிறது.

இத்தனை செய்தும் எப்போதும் பறந்து கொண்டிருக்கும் தூசியை மட்டும் தண்ணீர் அடித்து கழுவாமல் வைத்திருப்பதன் அர்த்தம் புரியவில்லை.



கார் கண்ணாடி ஏற்றி விடாமல் போக முடியாது, கண்ணாடி ஏற்றினாலும் ஏற்றாவிட்டாலும் ஏசி இல்லாமல் போக முடியாது என்பது போல சூடாகவே இருக்கிறது.

வோடா போன் போல மொபைல் நிறுவனங்கள் வழக்கம் போல, இலவச சேவையில் கேட்கும் கேள்விக்கு அவசரமாக சம்மந்ததா சம்மந்தமில்லாமல் ஏதாவது பேசி (உளறி), இந்த நாள் இனிய நாளாகட்டும்.

உங்களுக்கு வேண்டிய தகவலை அறிய, நிமிடத்திற்கு முப்பது பைசா செலவாகும் இந்த எண்ணுக்கு அழைக்கவும் என்று வேறு எண்ணுக்கு திருப்பிவிட்டு, அங்கு நிதானமாக பேசி கல்லா கட்டுகிறார்கள்.

மற்ற படி முன்பு அரசியல் கட்டவுட்டுகள் போல, இப்போது அவர்கள் வாரிசுகள் தயாரிப்பாளர்கள் போர்வையில் எல்லா சினிமா போஸ்டரிலும் கதாநாயகனை விட பெரிதாக நிற்கிறார்கள்.

ஒரே ஆறுதலான விசையம், மக்களின் ஆடம்பர பண புழக்கம் விலைவாசியை போலவே நிறையவே மாறி இருக்கிறது (போகும் இடமெல்லாம் தேங்காய் விலை கேட்கும் பயணங்கள் முடிவதில்லை கவுண்டமணியை போலத்தான் என்னை பார்த்தார்கள் என்பது வேறு விசையம்).

இவ்வாறாக நான் எழுத சென்ற தேர்வு வேலைகளும் இனிதாக முடிந்தததில் சென்ற வேலை முடிந்த திருப்தி எனக்கு.

இனி மேட்டருக்கு வருவோம், முன்பே இதை பற்றி கொஞ்சம் எழுதி இருந்தாலும்,மனதில் உறுத்துவதை தெளிவாக எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், அதை நானே இந்த முறை அனுபவப்பட்டு உணர்ந்து விட்டேன்.

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் தனியாகவே வளர்ந்தவன் நான், சொந்தங்களும் அதிகமாக இல்லை, நானும் சொந்த ஊரில் அதிகமாக இல்லை.

எப்போதும் நண்பர்களுடன் கலகலப்பாக பொழுதை போக்கி, எதையும் விளையாட்டாகவும், தைரியமாகவும் செய்தே எங்கள் நாட்கள் ஓடின.

ஆனாலும், நிறைய சொந்தம் மற்றும் அவர்கள் உறவுகள், திருவிழா என்று இருக்க முடியவில்லையே என்று ஒரு தனிமை எப்போதும் அடி மனதை பிசையும்.

அந்த வலி முகத்தில் தெரியாமல் உடன் இருந்த நண்பர்கள் நட்பில் ஓடிய நாட்கள் வருடங்களாக மாற இடையில் நண்பர்களும் வெவ்வேறு நாடுகளுக்கு பிரியும் படி அமைந்து விட்டது.



எப்போதும் உடன் இருந்த நண்பர்களும் இல்லாமல் வெளிநாட்டில் சுத்தமாக தனிமை பட, அந்த கொடுமையை சில வருடம் அனுபவிக்கும் படியாகி விட்டது.

நண்பர்களுக்கு திருமணமாக, அவர்களையும் நினைத்த நேரத்தில் அழைத்து தொல்லை பண்ண முடியாது.

சரி, நம் திருமணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகி விடும் என்று பார்த்தால், சொந்தங்களோடு இருந்த பெண்ணை நம் துணைக்கு கொண்டு வந்து தனிமை படுத்தியதை போல் ஆகிவிட்டது.

இப்படி ஒருவருக்கொருவர் தனிமை கொடுமையை பகிர்ந்து, இதோ வந்து விட்டது விடுமுறை, அதோ வந்து விட்டது விடுமுறை! என்று மாதத்தை, வாரத்தை, நாட்களை எண்ணி சொந்த மண்ணுக்கு சென்றால்! அங்கேயோ நிலைமை இன்னும் தலைகீழாக இருக்கிறது.

அனைவருக்கும் அவரவர் சொந்த குடும்ப வேலைக்கு மட்டும்தான் நேரம்(மனம்) இருக்கும் போல?

நண்பர்களுக்கு சரி, ஆனால், நெருங்கிய சொந்தங்களும் வெறும் கண் துடைப்புக்கு என்று நடந்து கொள்ளும் போது, மனம் தனிமையில் வலித்ததை விட கொஞ்சம் அதிகமாகவே வலித்தது.

நேற்று வரை நம்மை சுற்றி சுற்றி வந்த சிறுசுகள் கூட, இன்று துணை கிடைத்ததும் சொந்தத்தை மறந்துவிடுவது எனக்கு மிக ஆச்சிரியமாகவே இருக்கிறது.

அட, நேரில் வந்து கூட பார்க்க வேண்டாம், ஒரு இருபது பைசா செலவில் ஒரு போன் பண்ணக்கூட யாருக்கும் மனமில்லாமல் போனது என்னை கொஞ்சம் அதிகமாகவே பாதித்துவிட்டது.

அதெல்லாம் சரி, நீ தனியாக இருந்து வருடங்கள் கழித்து வந்திருப்பதால், அனைவரும் உன்னை தேடி வர வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று என்னை நானே சொந்த செலவில் மனதை சமாதன படுத்திகொள்ள...!

அவர்கள் அழைக்காவிட்டால் என்ன? நீ அவர்களையும் சேர்த்து அழைத்து விருந்து கொடு அதுதான் "இன்னார் செய்தாரை உறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்று உள்ளே சென்ற "ஜிம்பீம்" வேதாந்தம் சொல்ல, அதையும் ஒரு வார இறுதி ஞாயிறு தினத்தில் செய்து பார்க்கப்போய்!

அது என்னவோ என் சொந்த செலவில் எனக்கே சூன்யம் வைத்துக்கொண்டது போல் இருந்தது.

வெளிநாட்டில் தங்கள் வேலை தேவைக்கு என்னை நாடிய சொந்தங்கள் முதல் மற்றபடி அழைத்தவர்கள் அனைவரும் வராவிட்டால் கூட மனம் சமாதானம் ஆகியிருக்கும்.

என்ன பகையானாலும் கட்டாயம் முறைக்கு வரவேண்டிய சொந்தங்கள் கூட, எந்த பகையும் இல்லாதபோதும் வர நேரமில்லாமல் (மனமில்லாமல்) போனதை பார்த்தவுடன், சாமி இறங்கியதை போல மனம் கன்னா பின்னவென்று வயது வித்தியாசம் பார்க்காமல் அங்கேயே ஆடி தீர்த்து விட்டது.

சும்மாவே நீ சாமியாடுவே, இதுல உடுக்கை அடிச்சு வேப்பிலைய வேற கைல கொடுத்துட்டானுக, இனி அடக்கவா முடியும்! விட்டுருங்க அதுவா மலை ஏறினாத்தான் ஆச்சு! என்று சொல்லி நண்பன் சிரிக்க...!

இன்னொருவனோ, எந்த நாட்ல இருந்து வந்தா என்னா? என்னடா நம்ம கல்யாண, காதுகுத்து கலாச்சாரப்படி குடும்ப விழாவுல எதோ ஒன்னு குறையுதேன்னு பார்த்தேன், அது திருப்தியா முடிஞ்சுருச்சு மாப்ஸ்!, இப்பதான் நமக்கு சாப்பாடு உள்ள இறங்கும் என்றான்.

என்ன நடந்து என்ன? என் மன தவிப்பு மட்டும் அடங்கவேயில்லை.

நாம் எதோ இந்தியாவில் பாடு பட்டு சேர்த்த சொத்தை எல்லாம் வெளிநாட்டில் இருந்து கொள்ளையடிக்க வந்திருப்பதை போல, சொந்த உறவுகளே நடந்து கொண்டது எனக்கு அவமானமாகவே பட்டது.

என்ன கொடுமை இது? இவர்களையா காத்திருந்து தேடிவந்து பார்க்க நினைத்தோம்! என்று என்னை நானே கேவலமாக பார்க்கும் படி இருந்தது.

இப்படி தேடி வந்து மனம் காயப்படுவதை விட, முகம் தெரியாத மக்கள் வசிக்கும் நாட்டில் தனியாக இருப்பது எவ்வளவோ மேல் என்று அடி மனதில் இன்னும் ஆழமாக பதிந்துவிட்டது.



இத்தனை நடந்தும், குடும்ப அரசியல் புரியாத குழந்தையாய் தங்கமணி, இன்னும் சில மாதம் அங்கேயே இருக்க விரும்பி இருப்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது! பின் புத்தி பெண் மனதில் என்னவென்று யாருக்கு தெரியும்?.

பெரிய பெரிய அலுவலக பிரச்னையை மற்றும் கூட்டு அரசியலை கூட சர்வ சாதாரணமாக எதிர்கொள்ளும் எனக்கு, திருமணதிற்கு பிறகு இந்த குட்டி குட்டி சொந்தபந்த குடும்ப அரசியல் மட்டும் ஏனோ புரியவே இல்லை? புரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

என்னதான் உள்ளுக்குள்ளேயே உள்ள சொந்தகளோடு மட்டும் பழகிய மக்களாயினும், வெளியில் இருந்து வந்த ஒருவரிடம் பழகாமலேயே, அவர் நல்லவரா கெட்டவரா! என்று மக்களால் எப்படி முடிவடுக்க முடிகிறது? அல்லது இப்படி நடந்து கொள்ளும் சொந்தங்களின் நோக்கம் தான் என்ன?

சொந்த குடும்ப உறவுகளுக்குள் கூட இப்படி உட்பூசல், பகை, ஈகோ தேவையா?

எது எப்படியோ, தாமரை இதழில் விழுந்த நீர் துளி போல, நான் நானாகவே இருக்கிறேன், ஆனால் அது சில நேரங்களில் சிலருக்கு என்னை தவறாக நிறம் காட்டி விடுகிறது,காரணம் அது பார்ப்பவரின் கோணத்தை பொறுத்து மாறுபடுகிறது.

அதனால் இதில் எல்லாம் நான் அதிக ஆர்வம் காட்ட விரும்பாமல் விடுமுறை முடிந்து திரும்பிவிட்டேன்.

இது உங்களுக்கு மொக்கையா, இல்லை திருமணமாகி போகும் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து போகும் அனைவருக்கும், பொதுவான பிரச்சனையா (சப்ப மேட்டரா) என்று எனக்கு தெரியவில்லை.

புரிந்தவர்கள் மற்றும் அனுபவப்பட்டவர்கள் அல்லது இது சார்பாக இடுகை இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும்.

இப்போது புரியுமே முதல் வரியின் அர்த்தம்...!

அட, இதுக்கு போயி அலட்டிக்கலாமா...! என்னடா பொல்லாத வாழ்க்கை...!

யாரையும் நம்பி நம்மை பெற்றாளா அம்மா?, அட போகும் இடம் ஒன்னுதானே பொறுங்கடா சும்மா...! இதுக்கு போயி அலட்டிக்கலாமா...!

Wednesday, July 7, 2010

பழைய கதை! புதிய பார்வை!

ஒரு அடர்ந்த காட்டில் வாழ்ந்த முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் பந்தயம் வைத்துக்கொள்ள வெகு நாட்களாக ஆசை.

முயலின் வேகத்துக்கு உன்னால் ஈடு கொடுக்க முடியாது, உன் தகுதியை மறந்து ஆசைப் படாதே என்று மற்றவர்கள் கேலி செய்ய, ஆமைக்கு ஒரே அவமானமாக போய் விட்டது.

சரி,விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு,முயற்சி எதுவுமே செய்யாமல் இருப்பதை விட முயன்று தோற்பது ஒன்றும் அவமானம் இல்லை என்று நினைத்த ஆமை முயலுடன் போட்டி போட தயாரானது.

போட்டி நாள் அன்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்க, போட்டி நேரமும் வந்தது, போட்டியை துவக்க நடுவர் கொடி அசைத்த நொடியில் முயல் ஓடி வெற்றி இலக்கை அடைந்தது.

பொறுமை கதை முடியவில்லை!.

தன் தகுதிக்கு ஆமையை ஒரு முறை வெல்வது எப்படி பெருமையாக முடியும் என்று நினைத்த முயல், ஆமையை அவமான படுத்தும் கர்வத்தோடு மீண்டும் வேறு ஒரு பாதையில் போட்டிக்கு அழைக்க, தன்னம்பிக்கை கொண்ட ஆமையும் சம்மதித்தது.

இந்த முறை கடந்த முறை வெற்றி பெற்ற கர்வத்தில் போட்டி நடிவில் முயல் ஒரு மரத்து அடியில் படுத்துத் தூங்க மனம் தளாரத ஆமை மெது மெதுவாக ஓடி வெற்றி இலக்கை அடைந்தது.



கண் முழித்த முயலுக்கு அவமானமாக போய் தான் என்ற கர்வத்தால் வந்த வினையை நினைத்து வருந்தியது, அதனால் ஆமையை மீண்டும் ஒரு முறை முயல் போட்டிக்கு அழைத்தது, ஆமையும் சம்மதித்தது.

டேய் சிங்கக்குட்ட்ட்ட்டி.... என்று நீங்கள் பல்லை கடிப்பது எனக்கு கேட்கிறது.

பொறுமை பொறுமை! கதை இன்னும் முடியவில்லை!.

இந்த முறை மீண்டும் அதே பாதையில் போட்டி துவங்க, தோல்வியின் அவமானத்தை மறக்காத முயல் முன் போல் சுறுசுறுப்பாக ஓடி வெற்றி இலக்கை அடைந்து ஆமையை கேவலமாக பார்த்தது.

ஆமை சற்றும் மனம் தளராமல், நாம் ஏன் மீண்டும் ஒரு முறை போட்டியை வைத்துக்கொள்ள கூடாது? என்று கேட்க!ஆமையின் மன உறுதியை பார்த்து முயலோடு சேர்ந்து அனைவருமே வியந்துவிட்டார்கள்.

முயலும், நீ தோல்வி அவமானத்தில் உளறுகிறாய்.

எதோ ஒரு முறை நான் தூங்கி விட்டேன், இனி எத்தனை முறை போட்டி வைத்தாலும் என்னை உன்னால் வெற்றி பெறவே முடியாது. இதை உனக்கு நிருபிக்கவே மீண்டும் போட்டிக்கு நான் சம்மதிக்கிறேன் என்று சொன்னது.

முயல் ஆணவத்துடன் சொன்னதை பொறுமையாக கேட்ட ஆமை, கடந்த இரண்டுமுறை நீ ஓடு பாதையை தேர்ந்து எடுத்தாய், ஆகவே இந்த முறை நான் ஓடு பாதையை தேர்ந்து எடுக்கட்டுமா? என்று அமைதியாய் கேட்க, முயலும் சம்மதித்தது.

ஆக, ஆமை தேர்வு செய்த பாதையில் மூன்றாவது முறை போட்டி தயாரானது, போட்டி ஆரமித்ததும் ஓடு தளத்தில் வேகமாக ஓடிய முயல் உடனே வந்த திருப்பத்தில் திரும்பியதும் திகைத்து நின்றது.

காரணம் பாதையின் குறுக்கே ஓடிக்கொண்டு இருந்த ஆறு!, எங்கே இறங்கி நீந்தினால் ஆற்றில் அடித்து கொண்டு போய்விடுவோமோ என்ற பயம், மெதுவாக வந்த ஆமை அழகாக ஆற்றில் இறங்கி நீந்தி கரையில் இருந்த வெற்றி இலக்கை அடைந்தது.

தன் பலத்தை மட்டுமே நினைத்திருந்த முயலுக்கு இப்போது ஆமையின் பலமும் தன் பலவீனமும் புரிந்தது.

பொறுமை! பொறுமை! கதை இங்கும் முடியவில்லை!.

ஆமையின் தனம்பிகையும் புத்திசாலி தனமும் புரிந்தாலும், முயலுக்கு ஒரு ஆமையிடம் தன் தோல்வியை தாங்க முடியவில்லை.

சரி, இரண்டுக்கு இரண்டு என்று சம வெற்றியில் இருக்கும் நாம், கடைசியாக ஒரு போட்டியை வைப்போம்.



இதுவே "பெஸ்ட் ஆப் பைவ்" இதன் வெற்றியை பொறுத்து நம்மில் யார் இறுதி வெற்றியை அடைவது என்பது முடிவாகட்டும் என்று ஆமையிடம் சொன்னது.

சற்றும் மனம் தளராத ஆமை, அதே போல் இந்த முறை ஓடு பாதையையும் முன்பு போல் இல்லாமல் இருவரும் சேர்ந்து தீர்மானிப்போம் என்றது.

உடனே கடந்த முறை அனுபவத்தை மனதில் கொண்ட முயல், சரி ஆகட்டும், ஆனால் இப்போது நாம் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டதால் என் பாதையில் நான் உன்னை என் முதுகில் தூக்கிக்கொண்டு ஓடுகிறேன், அதே போல உன் பாதை வந்ததும் நீ என்னை முதுகில் தூக்கிக்கொண்டு ஓட வேண்டும் சம்மதமா? என்றது.

ஆமையும் சம்மதித்து, போட்டி ஆரமிக்க, முதுகில் ஆமையை சுமந்த படி முயல் பாதையில் ஓடியது, வழியில் காட்டு ஆறு வர, ஆமை இறங்கி முயலை சுமந்த படி ஆற்றில் நீந்தியது.

மறு கரைக்கு சென்று ஆற்றில் இருந்து ஆமையும், ஆமை முதுகில் இருந்து முயலும் தரையில் காலை வைக்க அங்கு வெற்றியின் எல்லை கோடு இருந்தது.

இருவருமே சமமாக வெற்றியின் எல்லை கோட்டை தொட்ட சந்தோசத்துடன், இனி என்றும் நாம் இணை பிரியாத நண்பர்களாக இருப்போம் என்று முடிவெடுத்தன.

இப்படி முடிகிறது இங்கு என் கதை.

நண்பர்களே, பலமும் பலவீனமும் எல்லா இடத்திலும் சமமாகவே இருக்கிறது. இன்று மற்றவருக்கு நீ செய்ததை, நாளை உனக்கு வேறொருவர் செய்வார் என்பதே உலக தத்துவம்.

அது நல்லதா கெட்டதா என்பதை முதலில் நீயே தீர்மானிக்கிறாய் என்பதே இங்கு என் கருத்து.

அது கணவன் மனைவி குடும்பமாகட்டும், வேலை இட சக ஊழியர்களாகட்டும் அல்லது நண்பர்களாகட்டும், ஒருவரின் பலவீனத்தில் குத்தி நம் பலத்தால் அவர்கள் மனதை காய படுத்துவதை விட, நம் பலத்தை கொண்டு அவர்களின் பலவீனத்தில் உதவி, நம் பலவீனத்தில் அவர்கள் பலத்தின் உதவியை தயங்காமல் கேட்டு வாங்கி வாழ்கையை நகர்த்தினால் எல்லாமே மாறிவிடும்.

மற்றொரு சுவையான தகவல்.

கடந்த மாதம் இரண்டு நாட்கள் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் ஜப்பான் தலைநகர் டோக்யோ நகருக்கு சென்று இருந்தேன், அக்கிஹாபாரா என்னும் புகழ் பெற்ற சந்தையில் பொருட்கள் வாங்கி கொண்டு இருக்கும் போது, ஒரு பத்து பனிரெண்டு வயதில் உள்ள மாணவிகள் கூட்டத்தை கண்டேன்.

அனைவரும் ஒரே போல் அடர் நீலம் கலந்த பனியனில் இருந்தார்கள், அதில் " NO DRUG...! NO WAR...!" என்று ரத்த சிகப்பில் எழுதி இருந்தது. பொதுவாக ஜப்பானிய பெண்கள் ஆங்கிலம் கலந்த உடை அணிவதை விரும்ப மாட்டார்கள்.

ஆர்வம் தாங்காமல் அவர்களை அழைத்து, அது ஏன்! எதற்கு? என்று கேட்க, அந்த அழகான பிஞ்சுகள் சொன்ன பதில் கவிதையாய் என் அடி மனதில் பதிந்தது.

அதாவது எங்கள் மூன்றாவது தலைமுறை முன்னோர்கள் போரின் கொடுமை அனுபவித்தார்கள், அந்த வலி எங்கள் மனதில் இன்னும் இருக்கிறது.

அதில் சிதைந்து போன எங்கள் நாட்டை, எங்கள் இரண்டாவது தலைமுறை முன்னோர்களின் கடுமையான உழைப்பு உலகமே திரும்பி பார்க்கும் இயந்திர நாடாக மாற்றியது.

அந்த வெற்றிகளிப்பில் இப்போதுள்ள எங்கள் முதல் தலைமுறை இளையர்ககளின் விருப்பம் சிறிது போதைக்கும் புகைக்கும் போகிறது.

இது இப்படியே தொடராமல், இனிவரும் எங்கள் அடுத்த தலைமுறை "போரும் போதையும்" இல்லாத ஒரு புதிய உலகத்தின் முன்னோடியாக ஜப்பானை கொண்டு செல்வோம்.



இதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவே இது என்று சொல்லியதை கேட்டதும் எனக்கு ஒரு தேசியகீதம் கேட்டது போல உடல் சிலிர்த்து விட்டது.

அதை விட, நீங்கள் வளர்ந்து என்னவாக வர விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு கிடைத்த பதில்.

இயந்திர மருத்துவ மற்றும் உலக விளையாட்டு நாகரீகத்தை பொறுத்த வரை இப்போதே நாங்கள் அடுத்த நூறு வருட முன்னோடியாக இருக்கிறோம்.

ஆகவே நாங்கள் பாட்டு, நடனம் மற்றும் இயற்கை விவசாயம் என்று அதி விரைவில் ஒரு அழகிய பசுமையான ஜப்பானை இந்த உலகுக்கு காட்டுவோம், இதுவே எங்கள் புதிய தலைமுறை லட்சியம் என்றார்கள்.

அடடா, எப்போதும் கையில் இருக்கும் கேமிரா இப்போது இல்லையே என்று வருந்தியவாறு அவர்களிடம் இருந்து விடைபெற்றேன்.

உலகம் எங்கேயோ அதி வேகமாக போய் கொண்டு இருக்கிறது நண்பர்களே, நமக்கு இப்போதும் நேரம் இருக்கிறது.

நம்மை போல மேல் நாட்டு வேலை, கலாசாரம் என்று நம் சொந்த நாட்டு வேலை மற்றும் கலாசார அடையாளத்தை துலைக்காமல், இனி வரும் தலைமுறைகளுக்கு அதை முறையே மனதில் விதைத்து, அடுத்த தலைமுறையை நம் நாட்டுக்காக வளர்ப்பது நம் கடமையாகிறது.

நன்றி!.

இரண்டு வருடம் கழித்து விடுமுறைக்காகவும், என் தேர்வுக்காகவும் நாளை இந்தியா செல்வதால், திரும்ப வரும் வரை இனிய தமிழ் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

என் இணைய பக்கத்தில் உங்கள் நேரத்திற்கு மீண்டும் என் அன்புகலந்த நன்றி!.
 

Blogger Widgets