Thursday, January 28, 2010

கெட்டும் "ஃபாரின்" போ-1.0

நான் சிறுவயதில் இருந்து பயணம் ,புதிய மக்கள், கலாச்சாரம் போன்றவற்றை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவன்.

எனக்கு விவரம் புரிந்த நாள் முதல், நீ என்ன படிக்க விரும்புகிறாய் என்று கேட்பவர்களிடம் "நான் மக்களை மற்றும் வாழ்கையை படிக்க விரும்புகிறேன்", ஏன் என்றால் நான் எப்போதும் நானாகவே இருக்க விரும்புகிறேன் என்று சொல்வதுண்டு.



இதன் காரணமாகவோ என்னவோ, ஆக கீழ் மட்டம் முதல், எனக்கு கிடைக்கும் ஆக மேல் மட்டம் வரை அனைத்து தரப்பு மக்களிடமும் அவர்ககளின் நடை முறை பழக்கத்தை ஒட்டி சமமாக பழகுவது என்பது எனக்கு மிக பிடித்த ஒரு விசையம்.

நான் எந்த இந்திய நகரம் மற்றும் வெளிநாடு என்று சென்றாலும் சரி, எனக்கு தெரிந்த அல்லது இந்திய மொழி பேச தெரிந்த அனைவரிடமும் நான் முடிந்த வரை தொடர்பில் இருப்பேன்.

வாழ்க்கை அனுபவம் கற்று தரும் பாடம் மிக அருமையானது, மக்களை தவிர அதை வேறு எங்கும் படிக்கவும் முடியாது.

அதனால்தான் வெறும் இருபது வருடம் மட்டும் பார்க்க போகும் ஒரு வேலைக்கு, பதினைத்து வருட படிப்பு கூட இன்னும் அடிப்படை தகுதியாய் மட்டும் எடுத்துக்கொண்டு, அனுபவத்துக்கு எங்கும் முன்னுரிமை தரப்படுகிறது.

ஆனால், எல்லா அனுபவத்தையும் ஒரே மனிதன் தன் வாழ்கையில் கடந்து வர முடியுமா? என்றால், அது கண்டிப்பாய் சாத்தியமில்லை. வேறு என்ன வழி என்று பார்த்தால்!, மக்களை படிப்பது, அவர்களின் அனுபவத்தை உணர்வதுதான் ஒரு மிக சிறந்த வழியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி நான் பார்த்த மற்றும் மற்றவர்களிடம் படித்த அனுபவத்தின் பகிர்வை ஒரு புத்தகமாக தரவேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை!.



ஆனால், வாழ்க்கையை படிக்க படிக்க, ஒவ்வொரு வினாடியும் அது புது புது அனுபவத்தை கற்று கொடுக்கும் போது!, எனக்கு இன்னும் வாழ்கையை பற்றி புத்தகம் எழுதும் அளவுக்கு அனுபவமும், சந்தர்பமும் சரியான நேரமும் வரவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.

அதே போல் "நேரம்" என்பதும் மிக முக்கியம். காலம் கடந்து பகிரும் அனுபவத்திலும் மற்றவர்களுக்கு பலன் எதுவும் இல்லாமல் போய்விடும். அதனால் பதிவுலகம் வந்த பின் ஒரு சில பகுதியை இடுகையில் கொடுக்கலாம் என்ற எண்ணம் சமீபத்தில் தான் வந்தது.

ஒரே இடுகையில் கொடுக்க முடியாது, மற்ற என் இடுகைகளும் தடை படக்கூடாது என்று சிந்தித்து கொண்டு இருக்கும் போது!, பதிவுலக நண்பர்களின் சிலர், தங்கள் தனி தலைப்பு இடுகைகளை அவர்களின் மற்ற இடுகைகளுக்கு நடுவில் தொடர்ந்து பகிர்வதை பார்த்தவுடன் எனக்கும் இந்த முறையே சரி என்று தோன்றியது.

சரி, "கெட்டும் பட்டணம் போ" என்பதுதானே சரியான பழமொழி, பின் ஏன் தலைப்பை "கெட்டும் "பாரின்" போ" என்று வைக்க வேண்டும் என்று நினைக்க தோன்றும்!. "கற்றது கை அளவு", நமக்கு தெரிந்ததைத்தானே சொல்ல முடியும்!.



நம் தாய் நாட்டுக்காக இனி வரும் இளம் தலைமுறைகள் உழைக்க, நம் நாடு முன்னேற நிறைய இடுகைகள் எழுதியாகி விட்டது. மற்ற பதிவுலக நண்பர்களும் எழுதி இருக்கிறார்கள், இன்னும் முடிந்ததை வரும் காலத்தில் தொடர்ந்து எழுதுவோம்.

ஆனால், வெளிநாடு வருவதே குற்றம் என்று சொன்னால் அது மிக தவறு, நம்மை நாமே தனித்து நிறுத்துவது என்பது, நம்மை ஒரு இருண்ட கண்டமாக மாற்றி விடும் என்பதும் உண்மை.

புது தொழில்நுட்பத்தை மற்றும் நமக்கு தெரியாததை, நாமும் அங்கு சென்று கல்வி, தொழில், வேலை வாய்ப்பு மூலம் அறிந்து கொண்டு, அங்கு கற்றதை நம் நாட்டுக்கு கொண்டு வந்து நடை முறை படுத்த வேண்டும் என்று சொல்வதே சரியாகும்.

ஆனால் அவர்களில் பலர் பிரச்சனைக்கு உட்படுவதன் காரணம் அறியாமை, புதிய கலாச்சாரம், நாகரீகம், வாழ்க்கை முறை, கட்டுப்பாடில்லாத அதிக வருமானம் போல இன்னும் எவ்வளவோ உண்டு.

குடும்ப சூழ்நிலை, வறுமை, அடிப்படை கூலி வேலை, நடுத்தர இயந்திரதுறை, கணினிதுறை, கல்வி, இப்படி ஏதாவது ஒரு காரணத்தில் இங்கு வருபவர்களையும் நாம் தடுக்க கூடாது, அவர்களுக்கு பயன்படும்படி ஏதாவது இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.




அட! சொல்வதை நேராக இடுகையை போட்டு சொல்ல வேண்டியதுதானே!, இதுக்கு ஏன் ஒரு முன்னுரை விளக்கம் எல்லாம் என்று நினைக்க வேண்டாம்.

வாழ்க்கை அனுபவ பகிர்வு என்பது சற்று நிலை மாறினாலும் அறிவுரை போல தெரிந்து விடும். அறிவுரைகள் மதிக்கப் படுவதில்லை என்ற காரணத்தால் மட்டுமல்ல, அடிப்படையாகவே எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

காரணம், தானாக பட்டு உணர்வதை தவிர மற்றவர் அனுபவ அறிவுரையால் மட்டும் யாரையும் மாற்றி விட முடியாது என்ற நம்பிக்கை கொண்டவன் நான்.

மேலும் உலகில் மொத்த பெண்கள் அனைவரும் அல்லது ஆண்கள் அனைவரும் தவறு செய்வபர்கள் என்று, ஒரு சாரமான கருத்தை சொல்வதாய் யாரும் நினைத்து விட கூடாது என்பதே என் நோக்கம்.

இங்கு சொல்லியுள்ள இடுகை ஆரம்ப நோக்கத்தை படித்து விட்டு "இந்த இடுகை தொடரை" படிக்கும் போதுதான் இடுகைகளின் மொத்த நோக்கம் சரியாக புரியும்.

இதன் காரணத்தை நான் இங்கு முன்பே விளக்கி சொல்லிவிடுகிறேன்.

"இது எந்த ஒரு தனிப்பட்ட நாட்டையோ அல்லது மக்களையோ அல்லது குறிப்பிட்ட காலாச்சாரத்தையோ மட்டும் அடிப்படையாக கொண்டு எழுதப்படுவதில்லை".



பொதுவாகவே ஆண்கள் உடல் பலம் கொண்டவர்கள் போல, பெண்கள் மன பலம் கொண்டவர்கள், தங்களை காத்து கொள்வதில் அல்லது இழந்து விடாமல் இருப்பதில் ஆண்களை விட பெண்கள் அதிக சக்தி கொண்டவர்கள், அதிலும் வெளிநாடு என்றால் இன்னும் கவனமாகவே இருப்பர்கள்.

இந்த உலகில் ஒழுக்கமானவர்களும், நல்லவர்களும் கெட்டவர்களும் ஆண்களிலும் பெண்களிலும் சரிவிகிதத்தில்தான் கலந்து இருக்கிறார்கள்.

இதில் "நல்லது கெட்டது" என்று நாம் வகை படுத்தும் விசையங்கள் அந்தந்த நாட்டு, மக்கள் நடை முறை கலாச்சாரத்தை பொறுத்து மாறுபடுகிறது.

இங்கே கொடுக்க பட்டுள்ள படங்களில், நம் நாட்டு மருதாணி வர்ணத்தை பார்த்தவுடன் "வாவ் என்ன அழகு" என்று சொல்ல தூண்டிய நம் மனது!, இதே போல் வெளிநாட்டில் அவர்கள் தீட்டி இருக்கும் வர்ணத்தை பார்த்தவுடன் "ஐயோ என்ன இது?" என்று ஏன்? சொல்ல தூண்டுகிறது! என்பதுதான் சரியான உதாரணம்.

நம் நாட்டில் தவறு, குற்றம் என்று இருக்கும் சில விசையங்கள், மற்ற பல நாடுகளில் சர்வ சாதாரணமாய் இருக்கும். மேலும் சில நேரம் நல்ல விசையங்கள் கூட "சந்தர்பம் மற்றும் சூழ்நிலையால்" குற்றமாகி தண்டிக்க பட்டு விடும்.

இப்படி நான் சந்தித்து, கேட்டு, மற்றவர் வாழ்கையில் பார்த்து, மொத்தத்தில் வாழ்க்கையிடம் படித்த பாடத்தின் எதிரொலியே இந்த தலைப்பில் நான் தொடர போகும் நல்லது, கெட்டது, நம்பிக்கை, தூரோகம், செக்ஸ் எல்லாம் கலந்த "கெட்டும் பாரின் போ"!.

"வெளிநா(ட்டு)டு வாழ்க்கை, உங்களை அன்புடன் வரவேற்கிறது!."



தொடர்ந்து படிக்கும் போது, இத்தனையையும் அனுபவிக்காமல் எப்படி எழுத முடியும்? அப்படின்னா "அவனா நீ" என்று நினைக்க வேண்டாம். "சுடுகாட்டை" பற்றி எழுத பிணமாக இருந்திருக்க வேண்டியதில்லையே!.

மொத்தத்தில் இதை ஒரு இடுகை என்று சொல்வதை விட, இடுகையின் ஆரம்பம் என்று சொல்வதே சரியாகும்.

இது இனி வரும் என் இடுகைகளுக்கு நடுவில் தொடரும்...!

Monday, January 25, 2010

நேர்முக தேர்வு! (நிச்சியம் படிக்க வேண்டியது!)

இன்று பெரும்பாலும் கணினி துறையை சார்ந்த பல நிறுவனங்கள் என் நண்பனின் வேலை விண்ணப்பத்தை பார்த்தவுடன் வியக்க கூடும்.

காரணம் "வேலையை மட்டும் விரும்பும்" அவன் (பெயர் இங்கு முக்கியமில்லை என்று நினைக்கிறேன்) குறுகிய காலத்தில் அடிக்கடி வேலையை மாற்றிக்கொள்வது வழக்கம்.

கடந்த பதினான்கு வருடத்தில் பத்து முறை தானாகவே வேலையை மாற்றிவிட்டான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!.

இன்று வேலை செய்யும் நிறுவனத்தை விசுவாசத்துடன் காதலிப்பவர்களே தங்கள் வேலையை தக்க வைத்துக்கொள்ள போராடிக்கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையிலும், முழு நேர வேலையில் இருந்தாலும், வேலை செய்யும் நிறுவனத்தை விரும்பாமல், அவனுகென்று ஒரு தனி வழியில் பதினான்கு வருடத்தில் பத்து நிறுவனங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறான்.

சரி, விசையத்துக்கு வருவோம்.

இப்போது நண்பனை தற்போது இருக்கும் நிறுவனம் பொருளியல் மந்தத்தால் வேலையை விட்டு நீக்கி விட்டது, பதினான்கு, பதினைந்து வருட அனுபமுள்ள மற்ற சிலரைப்போல!.

இனி வழக்கம் போல நண்பனுக்கு நடக்கும் ஒரு நேர்முக தேர்வுதான் இந்த இடுகை.



கேள்வி: ஏன் நீங்கள் கடந்த பதினான்கு வருடத்தில் பத்து வேலையை மாற்றியுள்ளீர்கள்?

பதில்: ஏன், என்றால் என் கடன்களை தீர்த்து, சேமிப்பை கூட்டி, இரண்டாவது முறை ஒரு நிறுவனம் என்னை பொருளியல் மந்தத்தை காரணம் காட்டி வேலையை விட்டு அனுப்பும்முன் சொந்த வாழ்கையில் ஒரு நல்ல பொருளியல் நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக.

கேள்வி: அப்படி என்றால் உங்களுக்கு முன் கூட்டியே தெரியுமா 2009-ம் ஆண்டில் உங்களை உங்கள் நிறுவனம் வேலையை விட்டு அனுப்பபோகிறது என்று?

பதில்: நான் முதல் முறையாக 2002-ம் ஆண்டில், அதாவது முதல் பொருளியல் மந்தத்தை காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கப்பட்டேன்.

திரும்ப எனக்கு ஒரு முழு நேர வேலை கிடைக்கவில்லை, 2003 ஜனவரி மீண்டும் பொருளியல் மந்தம் மேலே வரும் வரை. இதனால் நான் கிட்ட தட்ட ஒரு வருடம் வேலை செய்ய எந்த நிறுவனமும் கிடைக்காமல் தவிக்கும் படியாகிவிட்டது.


கேள்வி: அது உங்களுக்கு எத்தனையாவது வேலை என்று குறிப்பிட முடியுமா?

பதில்: ம்ம்ம்...அது என்னுடைய மூன்றாவது வேலை.

கேள்வி: அப்படி என்றால் உங்கள் பதினான்கு வருட அனுபவத்தில், ஜனவரி 2003 முதல் ஜனவரி 2009 வரை, இடைப்பட்ட இந்த ஆறு வருட காலத்தில் நீங்களாகவே எட்டு முறை வேலையை மாற்றி உங்கள் வேலை எண்ணிக்கையை பத்தாக உயர்த்தி இருக்கிறீர்கள் இல்லையா?

பதில்: உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எனக்கு வேறு எந்த வழியும் கிடைக்கவில்லை. என்னுடைய "முதல் எட்டு வருட" அனுபவத்தில் நான் இரண்டு நிருவனங்களுக்காக மட்டுமே கடினமாக வேலை செய்தேன்.

காரணம், அப்போது நான் நினைத்தது கடின உழைப்பு மட்டுமே வேலையின் பலனை அடைய சிறந்த வழி, மற்றும் நமக்கு ஊதியம் கொடுக்கும் நிறுவனத்தை நேசித்து அவர்களுடன் நீண்ட நாள் இருக்கவேண்டும் என்று, ஆனால் அது என் முட்டாள்தனம்.


கேள்வி: ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

பதில்: என்னுடைய ஊதியம் அந்த எட்டு வருடங்களில் மிக அளவாகவே உயர்ந்தது, அதனால் என்னால் எந்த வகையிலும் எதையும் சேமிக்க முடியவில்லை.

நான் நினைத்தது எல்லாம், என் நிறுவனத்திடம் நீண்ட நாள் நல்ல உறவில் உள்ள என்னிடம் ஒரு நிரந்தர வேலை உள்ளது, அதனால் கவலை அடைய தேவை இல்லை என்பது மட்டுமே. ஆனால் என் வேலையை இழந்தால் நான் என்ன செய்ய முடியும்?

என்னால் கற்பனை கூட பண்ணமுடியாத ஒரு விசையம் நான் வேலையை இழந்தது "பொருளியல் மந்தம்" என்ற ஒரே காரணத்தால் மட்டுமே!, எனக்கு வேலைதிறமை இல்லை என்ற காரணத்தால் அல்ல!. இது நடந்தது ஜனவரி 2002-ல்


கேள்வி: ஓ, அப்படியா!, சரி அதன் பின் இந்த இடைப்பட்ட ஜனவரி 2003 முதல் 2009 வரை என்ன நடந்தது என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

பதில்: கண்டிப்பாக, இந்த அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் என்பது, ஒரு "நிறுவனத்தில் அல்லது ஒரு வேலையில் திருப்த்தி அடைவது" என்பதும், "பணம் சம்பாதிக்கவோ அல்லது போதுமான சேமிப்பில் திருப்த்தி அடைவது என்பதும்" ஒன்றல்ல என்பதை.

ஆனால், சேமிப்பு என்பது போதுமான வருமானம் இல்லாமல் முடியாதது, ஆகவே நான் என் விருப்பத்தை பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பை நோக்கியும் திருப்பினேன். இதனால் ஆறு வருடத்தில் எட்டு நிறுவங்களை மாற்றினேன் "ஒவ்வொன்றும் உறுதியாக என் பொருளியலை நிலையை உயர்த்தும்" பட்சத்தில்.


கேள்வி: அப்படி என்றால் ஒவ்வொரு முறையும் நீங்கள் நேர்முக தேர்வு எடுத்தவர்களிடமும் நீங்கள் பொய் சொல்லியுள்ளீர்கள், அதாவது நீங்கள் முன் கூட்டியே குறிப்பிட்ட இடைவெளியில் திட்டமிட்டு உங்கள் வேலையை மாற்றுவதை மறைத்து விட்டீர்கள் அப்படிதானே?

பதில்: ஆமாம், பொருளியல் சந்தை எப்போது நன்றாக இருக்கிறதோ, எப்போது நிறுவங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கிறதோ, அப்போது தானே வேலையை மாற்ற முடியும் அல்லது வேலையில் சேர முடியும்!.

இவ்வளவு ஏன்! நீங்களே சொல்லுங்கள் பொருளியல் மந்தமாக இருக்கும் இந்த நேரத்தில் எனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காது இல்லையா!.

ஆகவே, எப்போது சந்தை நன்றாக இருக்கிறதோ அப்போது தான் ஒருவர் தன் வேலையை அதிக ஊதியத்துடன் மாற்றிக்கொள்ள முடியும், காரணம் அப்போதுதான் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள் மற்றும் போதுமான ஊதியத்தை தர சம்மதிக்கிறார்கள் என்பதுதானே உண்மை நிலை.


கேள்வி: சரி, இப்படி செய்ததன் மூலம் இன்று என்ன சாதித்து விட்டீர்கள் என்பது இங்கு உங்கள் கருத்து?

பதில்: மிக அருமையான ஒரு கேள்வி, இதைத்தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். ஜனவரி 2003-ல் எனக்கு ஒரு நிலையான ஊதியம் (எந்த மாறுதலும் இல்லாமல்).

ஒரு பேச்சுக்காக என் ஊதியம் 2003-ம் வருடம் "X" என்று வைத்தால் 2009-ல் என் ஊதியம் "8*X" ஆகிவிட்டது.

உதாரணமாக, 2003-ம் வருடம் மூன்று லட்சமாக இருந்த என் ஊதியம் 2009-ல் இருபத்திநான்கு லட்சமாகி விட்டது (எந்த மாறுதலும் இல்லாமல்).

மேலும், நான் ஒரு போதும் பதவி மாறுதலை பற்றி கவலை பட்டது இல்லை. காரணம், ஒரு வருடம் முழுவதும் வேலை பார்த்து முடிந்து, பின் நிறுவனம் தன் ஊதிய உயர்வு முறையை நடைப்படுத்தி அதன் பின் அவர்கள் தரும் ஊதிய உயர்வு வரும் வரை காத்திருக்கும் எண்ணம் எனக்கு கிடையாது.


கேள்வி: அப்படி என்றால், நீங்களாகவே உங்கள் ஊதிய உயர்வை தீர்மானித்து கொண்டீர்களா?

பதில்: ஆமாம், 2001-2002-வில் வந்ததை போல இனி ஒரு பொருளியல் மந்தம் 2003-ல் இப்போதைக்கு இன்னொரு முறை வருமா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. அதனால் அடுத்த பொருளியல் மந்தம் எப்போது வரும் என்பதும் எனக்கு தெரியாது.

ஆனால், நான் ஒரு விசையத்தில் மிக உறுதியாக இருந்தேன். இன்னொரு முறை பொருளியல் மந்தம் காரணமாக நான் வேலையை இழக்கும் முன் நான் எந்த கடனும் இல்லாமல் ஒரு நிலையான சேமிப்போடு இருக்க வேண்டும் என்பதில். ஆகவே நான் வருட முடிவுக்காக காத்திருக்காமல், என் ஊதிய உயர்வை நானே ஏற்படுத்திக் கொண்டேன்.


கேள்வி: அப்படி என்றால், இப்போது உங்களுக்கு எந்த கடனும் நிலுவையில் இல்லையா?

பதில்: ஆமாம், வேலை மாற்ற முறையில் நான் நிறையவே சம்பாதித்து விட்டேன். அதில் என் இன்றைய நிலைக்காக கொஞ்சம் செலவழித்தும் இருக்கிறேன்.

என்னிடம் சொந்தமாக எந்த கடனும் இல்லாத ஒரு மூன்று படுக்கை அறை வீடு (2400 சதுர அடியில்) உள்ளது, மேலும் மாத தவனை பாக்கி எதுவும் இல்லாத ஒரு சொகுசு கார் இருக்கிறது, மீத கையிருப்பு தொகைக்காக வங்கிகள் மாத வட்டி தருகின்றன, அது இப்போது என் இதர தேவைகளை பூர்த்தி செய்கிறது.

நிதி நெருக்கடிகாக ஒரு நிறுவனம் என்னை வேலை விட்டு தூக்கினால், தூக்கட்டும்! இப்போது நிதி நெருக்கடி என்பது எனக்கல்ல, நிதி நெருக்கடி அந்த நிறுவனத்துக்கு மட்டுமே.

இதோ, இன்று மீண்டும் பொருளியல் மந்தம் காரணம் காட்டி நான் வேலையை விட்டு நீக்கபட்டு விட்டேன், இதை நான் மறுக்கவில்லை, அதே நேரத்தில் யாரையும் குறையும் சொல்லவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி.


கேள்வி: யார் குறை சொல்வது? யாரை குறை சொல்கிறார்கள்?

பதில்: கிட்டதட்ட வேலை இழந்து பொருளியல் மந்தத்தால் திரும்ப வேலை கிடைக்காமல் தங்கள் வீடு, கார் போன்றவற்றின் மாததவணைகளை கட்ட முடியாத அனைவருமே குறை சொல்லுகிறார்கள்!


சொன்னால் வேடிக்கையாக இருக்கும், இவர்களில் பலர் என்னை முன்பு "நான் வெறும் வேலையை விரும்புபவன் எனக்கு வேலை செய்யும் நிறுவனத்தின் மேல் எந்த விசுவாசமும் கிடையாது" என்று சொல்லி கேலி செய்தார்கள்.

இன்று, நான் அவர்களை பார்த்து கேட்கிறேன், அவர்களின் நிறுவன விசுவாசத்தால் அவர்கள் சம்பாதித்தது அல்லது சாதித்தது என்ன? காரணம், இப்போது அவர்களும் என்னைப் போலவே வேலையை விட்டு நீக்கப்பட்டு விட்டார்கள், அவர்கள் நேசித்த அதே நிறுவனத்தால்.

இப்போது அவர்கள் என்னை என்ன சொல்கிறார்கள் தெரியுமா!, நீ ஏன் சொல்ல மாட்டாய் மேலும் கவலை பட போகிறாய்!. உனக்குத்தான் எந்த கடனும் நிலுவையில் இல்லையே என்று!.

காரணம், அவர்கள் அனைவருக்கும் பனிரெண்டு முதல் பதினான்கு லட்சம் கடன் தொகை நிலுவையில் இருந்தது, அவர்கள் நேசித்த நிறுவனமே அவர்களை வேலையை விட்டு நீக்கும் போது.


கேள்வி: சரி, வேலை செய்யும் திறமையான பணியாளர்களுக்கு உங்கள் அனுபவ அறிவுரை என்ன?

பதில்: திரு.நாராயண மூர்த்தியை போல, உங்கள் வேலையை மட்டும் நேசியுங்கள், ஆனால் உங்கள் நிறுவனத்தை அல்ல!.

ஏன் என்றால்? உங்களுக்கு தெரியாது, எப்போது உங்கள் நிறுவனம் உங்களை நேசிப்பதை நிறுத்திவிடும்! என்று அவர் சொன்னார்.

இந்த வரிகளை தொடர்ந்து நான் சொல்வது.

உங்களை நேசியுங்கள், உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் அதிகம் தேவை, உங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் தேவைபடும் அளவை விட!.

நிறுவனங்கள் உங்கள் வாழ்கையில் மாறலாம், வரலாம் போகலாம். ஆனால், உங்கள் குடும்பம் அப்படியே மாறாமல் வாழ்நாள் முழுவதும் உங்களுடனேயே இருக்கும்.

முதலில் உங்களுக்கு போதுமான பணத்தை சம்பாதியுங்கள், அதே நேரத்தில் வேலை செய்யும் நிறுவனத்துக்கும் பணம் சம்பாதிக்க உழையுங்கள்.

அப்படி இல்லாமல், இதன் அடுத்த வழியான நிறுவனம் மட்டும் சம்பாதிக்கும் வழியில் வெறும் நிறுவன விசுவாசத்தோடு மட்டும் இருப்பதில் கடைசியில் பாதிக்கப் பட போவது நீங்கள் மட்டுமே, கட்டாயம் நிறுவனம் அல்ல.


கேள்வி: உங்கள் அனுபவத்தில் நீங்கள் நிருவனங்களின் செய்கையில் பெரிதும் வருத்தப்படும் விசையம் என்ன?

பதில்: எப்போதெல்லாம் ஒரு நிறுவனம் லாபகரமாக செயல் படுகிறதோ அப்போது அந்த நிறுவனத்தின் "சி.இ.ஓ (CEO)" பேசுவார்.

அருமையான வேலை மற்றும் கூட்டு முயற்சி நண்பர்களே, வாழ்த்துக்கள்!. இது உங்கள் நிறுவனம், எனவே உங்கள் கடின உழைப்பை இதே போல் தொடருங்கள், உங்களோடு நானும் எப்போதும் இருக்கிறேன் என்று.

ஆனால், எப்போது பொருளியல் மந்தமாகி அந்த நிறுவன லாபம் சரிவை நோக்கி செல்கிறதோ, அப்போது அதே "சி.இ.ஓ (CEO)" சொல்லுவார்.

இது என் நிறுவனம், என் நிறுவனத்தை காப்பாற்ற நான் பொருளியல் மந்த கால நடவடிக்கைகளை எடுத்து என் நிறுவன செலவுகளை குறைக்கும் திட்டத்தில் (Cost Cutting), உங்களில் சிலரை வேலையை விட்டு அனுப்புவதும் உட்படுகிறது என்று.

இது என்னை "தொழிலுக்கு இதயம் கிடையாது (Business never have Heart)" என்று நினைத்து வருத்தப்பட வைக்கும் ஒரு விசையம் ஆகும்.

ஆகையால், திறமையான பணியாளர்களுக்கு நான் இங்கு சொல்வது, உங்கள் தனிப்பட்ட பொருளியல் நிலையை பற்றி மட்டும் முதலில் சிந்தியுங்கள், காரணம் பெருளியல் மந்தத்தில் நீங்கள் வேலையை இழக்கும் போது,

"தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாத குறைகளோடு உங்கள் முன் நிற்பது உங்கள் குழந்தைகளே தவிர, நிச்சியமாக, உங்கள் நிறுவனமோ அல்லது "சி.இ.ஓ (CEO)" அல்ல."

நன்றி!.


பி.கு:- இந்த அனுபவ அறிவை எனக்குள் புகுத்தி, என் அறிவு கண்ணை திறந்த "காமாச்சிக்கு".

"நீ நட்பின் வடிவமாய் அல்ல, அந்த "காஞ்சி-காமாச்சி"யாகவே என் கண்களுக்கு தெரிகிறாய்", உனக்கும் நம் நட்புக்கும் நன்றி!.

Tuesday, January 19, 2010

அலுவலக அரசியலை சமாளிப்பது எப்படி?

பொதுவாக எல்லாதரப்பு பணியாளர்களும் அலுவலக அரசியலை சந்திக்க நேரிடும், காரணம் அது ஒவ்வொருவரின் உத்தியோக வளர்ச்சியோடு கலந்திருக்கிறது.

அலுவலக அரசியலில் இருந்து விலகி ஓடுவது என்பது ஒரு நல்ல விசையமாக இருந்தாலும், அது நம் உத்தியோக வளர்ச்சி பாதையில் இருந்து நம்மை தனித்து நிறுத்தி ஒரு மோசமான முடிவையே கொடுக்கும் என்பதுதான் உண்மை.



எந்த ஒரு விசையத்தையும் ஆக்கத்துக்கும் பயன் படுத்த முடியும், அதே அளவு அழிவுக்கும் பயன் படுத்த முடியும் என்ற தத்துவத்தின் படி, அலுவலக அரசியலை சரியான முறையில் சந்தித்து, முறையாக தீர்வு காண்பதன் மூலம், அதை நம் உத்தியோக வளர்ச்சிப்பாதைக்கு உரமாக பயன்படுத்த முடியும்.

அலுவலக அரசியலை கையாளும் உங்கள் தனி திறமையை மற்றும் முறையை பொறுத்து, அது நடைமுறையில் உங்கள் வேலை முறையை உயர்திக்கொள்ளவோ அல்லது கெடுத்துக்கொள்ளவோ வழிவகுக்கும்.

நடைமுறை அலுவலக வாழ்கையில் மக்கள் வேலை பளுவையும் மன அழுத்தத்தையும் சகஜமாக சந்தித்து இதை அனுபவ படுக்கிறார்கள்.

இதில் சிலர் அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் உடைந்து விடுகிறார்கள், அது அவர்களை "வேலை இழப்பு" அல்லது "வேலை பதவியில்" வளர்ச்சி இல்லாத முடிவில் போய் முடிந்து விடுகிறது.

மற்ற சிலர் இதில் உண்மையாக பாதிக்காவிட்டாலும், அதன் பாதிப்பு இருப்பது போல் பொய்யாக பெரிது படுத்தி காட்டிக்கொள்வதோடு, அவர்கள் செய்வது மட்டுமே சரி என்பது போல் காட்டிக்கொள்வதன் மூலம் இந்த அரசியலை கையாளுவார்கள்.

இத்தகைய அழுத்தம் ஒரு பக்கம் இருக்க, அலுவலக அரசியல் என்பது நம்மை மறைமுக இம்சைக்கு உட்படும் நிலைக்கு கொண்டு வந்து விடும்.

அதன் விளைவே சென்ற பதிவில் பார்த்த "பணியிடங்களில் மேலதிகாரிகள் அல்லது உடன் பணியாற்றுவோரால் ஏளனமாகக் கருதப்படுவது அல்லது தரக்குறைவாக நடத்தப்படுவது" போன்றவையாகும்.

இப்படி இந்த அலுவலக அரசியலை கையாள குறிப்பிட்ட வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

கடைசியாக பேசுங்கள்: அலுவலக அரசியல் என்பது பொறுத்துக்கொள்ள முடியாத அல்லது மோசமான விளைவுகளை கொடுக்க கூடியாதாக இருக்கும், குறிப்பாக விவாதிக்கும் போது அல்லது சில விவாதங்களின் போது. அதனால் "யாகாவராயினும் நா காக்க" என்பதை எப்போதும் நினைவில் வைத்து வார்த்தைகளை அடக்குங்கள்.

உண்மையில் இந்த இடத்தில் மிக எளிதாக உணர்ச்சிகளை தூண்டி அடிக்கடி கோவப்பட்டு திரும்ப வார்த்தைகளை விட்டு சண்டையிட தோணும், ஆனால் எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் வார்த்தைகளை விடுகிறீர்களோ!, அவ்வளவு வேகமாக நீங்கள் இழப்பது உறுதி.



உங்களுக்கு நீங்கள் செய்வது அல்லது உங்கள் தரப்பில் சொல்வது மிக சரி என்று பட்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும் கூட சரி, கண்டிப்பாக நீங்கள் அனைத்து தரப்பில் அல்லது அனைவர் சொல்லவதையும் கவனமாக கவனிப்பதன் மூலம், நீங்கள் சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை மட்டுமே பயன் படுத்துகிறீகள் என்று உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.

தேவை இல்லாத வார்த்தை விவாதங்களை தவிர்த்து, அந்த பிரச்சனையை சரியான முறையில் வடிவமைத்து வரிசைபடுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், நீங்கள் உங்கள் கூடுதல் திறமையை அல்லது வழிகாட்டி தலைமை தாங்கும் தன்மையை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.

எப்போதுமே சிந்தித்து திட்டமிட்டு செயல்படுங்கள்: எந்த ஒரு விசையதையும் செயல் படுத்தும் முன், நீங்கள் அதை பற்றி தெளிவாக சிந்தித்து திட்டமிட்டுதான் செயல் படுத்துகிறீர்கள் என்பதை உறுதி படுத்த வேண்டும், இதில் மிக குறிப்பாக கவனிக்க வேண்டியது "எப்போதுமே" என்பது, ஒரு போதும் அல்லது எந்த விசையதையும் சிந்திக்க மற்றும் திட்டமிடாமல் ஒதுக்கி விட கூடாது.


அலுவலக அரசியல் மூலம் வர நேரிடும் இழப்பை உங்களிடம் இருந்து ஒதுக்கி வைப்பதற்கு மிக முக்கியம். அரசியல் இழப்பை தவிர்க்க நீங்கள் செய்த அத்தனை தற்காப்பு நடவடிக்கைகளின் நிழலிலேயே நடக்கும் பிரச்சனைகளை மற்றும் வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு செல்ல வேண்டும்.

மிக சவாலான விசையமாக இருந்தாலும் நீங்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டியது, உங்களுடைய எல்லா நடவடிக்கையும் எல்லா நேரங்களிலும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே.

இது அலுவலக செல்வாக்குடன் அதிகாரத்தில் இருக்கும் அலுவலக அரசியல்வாதிகளை சமாளிக்க மிக சிறந்த ஒரு வழியாகும்.

சாதகமாக நடந்து கொள்ளாதீர்கள்: என்னதான் ஒருவர் அல்லது ஒரு அணி செய்வது சரி என்று உங்களுக்கு பட்டாலும், நீங்கள் அவ்வளவு எளிதாக அதற்கு சாதகமாகி, எதிர் அணி செய்வது தவறென்றோ அல்லது அவர்கள் அதை உணர வேண்டும் என்று முறையிடவோ விவாதிக்கவோ வேண்டாம்.

உங்களை நீங்களே ஒரு நடு நிலமையாக்கி கொள்வது நல்லது, சம்மந்த பட்ட இருவர் அல்லது இரு அணிகள் பேசிக்கொள்ளட்டும் அல்லது விவாதித்து கொள்ளட்டும்.

எப்போதும் அலுவலக அரசியலை நேரடியாக எவ்வித தயக்கமும் இல்லாமல் சந்திக்க பழகுங்கள், மேலும் அதை சரியான முறையில் பயன் படுத்தி உங்கள் வழிநடத்தும் திறமையை காட்டும் சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளுங்கள், இது உங்கள் அலுவலக வேலையில் அடுத்த நிலைக்கு செல்ல அல்லது வளர்ச்சிக்கு உதவும்.

மற்றவர் நெருக்கடியை, உணர்ச்சியை புரிந்து கொண்டு தகுந்த சமயத்தில் உதவுபவராக இருங்கள்: அது யாராக அல்லது எந்த துறையை சார்ந்தவராகட்டும், ஒரு வேலையை முடிக்க முடியாமல் அல்லது அதில் பிரச்சனைகளை சந்திக்கும் போது, நீங்களாகவே முன் வந்து உங்களால் முடிந்த வரை உதவுவது என்பது, உங்களுக்கு அல்லது உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் ஒரு இடைவெளியை உடைத்து நெருக்கமாக இது வழிவகுக்கும்.

வேலை இடங்களில் நல்ல ஒரு நட்புறவை வளர்க்க இது மிக சிறந்த ஒரு வழிவகுப்பதோடு, உங்கள் உதவிக்கு நன்றியுடன் இருப்பதோடு, அவர் மனதில் நல்ல ஒரு இடத்தை உங்களுக்காக ஒதுக்கும் படி இது உதவும்.

உதவுவதற்கு எப்போதும் எழுந்து நிற்க நீங்களாகவே தயாராக இருங்கள்: வருட ஊதிய உயர்வு நேரத்தில் ஒருவரை ஒருவர் முன் விட்டு பின் பேசுவது என்பது பொதுவாக நடக்க கூடிய ஒன்று தான் என்றாலும், சில நேரங்களில் உங்கள் உடன் அல்லது கீழ் வேலை பார்பவர்களே உங்களுக்கு எதிராக திசை திரும்பி பல மனிதாபிமானமற்ற வதந்திகளை பரப்பி உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம்.


அத்தகைய நேரங்களில் நீங்கள் உறுதியாக நிற்பதோடு மட்டுமில்லாமல், இத்தகைய கீழ்தரமான செயல்களால் நீங்கள் ஒதுங்கிவிட போவதில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் பொறுமையை இழக்காமல் அந்த பிரச்சனையை அல்லது அவர்களை நேரடியாக சந்தித்து ஒரு கட்டுக்குள் கொண்டு வர பழகுங்கள்.

அவர்கள் உங்களால் இம்சைக்கு உட்படுத்த பட்டு இருக்கும் பட்சத்தில், நிலைமையை விளக்கி சொல்லி இறங்கி வர அதாவது மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். ஆனால் இத்தகைய நேரங்களில் உங்கள் மேல் அதிகாரிகளையும் நீங்கள் இந்த பிரச்சனை வலையத்திற்குள் வைத்திருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்களை நீங்களே பெருமை படுத்தி கர்வம் கொள்ளாதீர்கள்: ஒரு போதும் வளைந்து கொடுக்காமல் எல்லா சூழ்நிலைகளிலும் மிக துல்லியமாக இருப்பது என்பது, உங்களுக்கு நீங்களே மறைமுக எதிரிகளை வளர்த்து கொள்வதாகும்.

உங்களுக்கு தெரிந்ததை கற்றுக்கொடுங்கள், தெரியாததை கற்றுக்கொள்ள தயங்காதீர்கள்.

எல்லா இடங்களிலும் நேரங்களிலும் கனிவாக இருக்க பழகுங்கள், உங்கள் கீழ் வேலை பார்ப்பதால், அவர்களை மட்டமாக பார்க்கவோ மறைமுக இம்சை படுத்தவோ வேண்டாம்.

எதுவுமே நிரந்தரமில்லாத இந்த உலகில், ஒரு நாள் உங்கள் கீழ் வேலை பார்த்தவர் கூட உங்களுக்கு அதிகாரியாக வரக்கூடும் இல்லையா?

அதனால் எப்போதும் மற்றவர்களை சமமாக அல்லது உங்களை விட சிறந்தவராக நினைப்பதே சாலச்சிறந்தது.

நேரத்தை கையாளும் கலையில் சிறப்பாய் செயல்படுங்கள்: எவ்வளவு சரியாக செய்கிறோம் என்பதை விட, அதை எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியம்.

இறைவன் நமக்கு இரண்டு காதுகளையும் ஒரே ஒரு வாயையும் கொடுத்துள்ளார், எனவே நாம் அதிகம் கேட்க முடியும், அதே நேரத்தில் குறைவாக பேச வேண்டும். எதையும் கேட்கவோ அல்லது சொல்லவோ மிக பொறுமையாக சரியான நேரத்திற்காக காத்திருங்கள்.

புதிய நல்ல எண்ணங்களோடு சிறந்த யோசனைகளையும் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். மேல் சொன்னது போல் வதந்திகளை கையாளும் போது, குறிப்பாக மேல் அதிகாரிகளை பற்றி யாரிடமும் மோசமாக பேசுவதை தவிருங்கள்.

உங்களுக்கான சரியான நேரம் அமையும் போது, துணிவாக மற்றும் தெளிவாக உங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை நடக்கும் ஆலோசனையுடன் ஒப்பிட்டு, சரியான மற்றும் தேவையான கருத்துக்களை சொல்லுங்கள்.

மனஉறுதியுடன் இருங்கள்: அலுவலக அரசியலுக்கு பதில் கொடுக்க மிக சிறந்த வழி என்பது, உங்களால் எவ்வளவு சிறப்பாக செயல் பட முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செயல் படுவது மட்டுமே.

உங்களை நீங்களே நல்ல முறையில் வழிநடத்தி துணிவாகவும், அதே நேரத்தில் உறுதியாகவும் செல்வது என்பது எதிரிகளையும் பொறாமைகளையும் வளர்ப்பதிற்கு பதிலாக எளிதாக மற்றவர்களை கவர்ந்து, உங்கள் வழியை பின் பற்ற வைக்கும்.



அலுவலக அரசியல் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக இருக்கப்போவது என்பது, நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக அதில் கலந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமைகிறது.

ஆகவே, எப்போதும் மனதில் வைத்திருங்கள், எது வேண்டுமானாலும் வரலாம் போகலாம், ஆனால் கண்டிப்பாக நாம் என்ன செய்தமோ அது நமக்கே ஒரு நாள் திரும்ப கிடைக்கும்.

"நாம் என்ன ஆயுத்தை எடுக்க வேண்டும் என்று நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்" என்பது மற்ற இடங்களுக்கு பொருந்தினாலும், அலுவல அரசியலை பொறுத்த வரை, "நாம் கையாளும் முறையை பொறுத்தே, நம் எதிரிகள் கையாளும் முறையும் அமைகிறது"

எனவே கவலைகளை விட்டு விட்டு, தெளிவாக உங்கள் பாதையில் நீங்கள் செல்லுங்கள், உறுதியாக உங்களுக்கு "வானம் வசப்படும்".

நன்றி!.

Sunday, January 17, 2010

தமிழ்மணம் விருதுகள் 2009 - விருது பெற்றவர்களின் பட்டியல்!

தமிழ் பதிவர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்த "தமிழ்மணம் 2009 விருது பெற்றவர்களின் பட்டியல்" வந்து விட்டது.

விருது பெற்றவர்களின் விபரங்களை இந்த இணைப்பில் சொடுக்கி பார்க்கவும்.

தமிழ்மணம் 2009 விருதுகள் விருது பட்டியல்

விருது பெற்ற பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இரண்டாவது சுற்று வரை வந்து, நூலிடையில் விருதை தவற விட்ட மற்ற நண்பர்கள் அடுத்த முறை வெற்றி பெற என் வாழ்த்துகள்.

மேலும், பலமான இந்த போட்டிக்கு நடுவில் "பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்" பிரிவில் என் கடன் அட்டை! தெரிந்ததும் தெரியாததும்! இடுகையை வெற்றி பெற செய்து, முதல் பரிசு வாங்க வைத்த அத்தனை பதிவுலக நண்பர்களுக்கும் என் நன்றி...நன்றி... மனமார்ந்த நன்றி!.




ஏ...ஆத்தா! நான் விருது வாங்கிட்டேன்...ட்டேன்...டேன்...ன் (எக்கோ எபெக்ட்டுங்க)

நன்றி!.

Monday, January 11, 2010

அலுவலக மன உளைச்சலுக்கு குட்பை!

புது வருடம் வந்து விட்டது... கடந்த கால நினைவுகள் மகிழ்ச்சி என்றாலும், கடந்து வந்த சோதனையும் அனுபவமும் இனி வரும் வாழ்க்கையைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்கு மிக அவசியம் இல்லையா?

(யூத்புல் விகடன் குழுவுக்கு" என் நன்றி!.)



கடத்த வருடத்தில் நடந்த சோதனைகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த வருடம் ஒரு நல்ல விடையை கொடுக்க வேண்டியுள்ள இந்தச் சந்தர்பத்தில், சோதனைகளில் சிக்காதவர்களுக்கும் வழக்கம் போல் தொழில் மற்றும் வேலை சார்ந்த போட்டி மேலும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தச் சூழலில், நாம் கடந்து வந்த அனுபவத்தைக் கொண்டு இனி வரும் காலத்தை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் இல்லையா?

அண்மையில் பத்திரிகையில் படித்த செய்தி ஒன்றை இங்கே பகிர்ந்துகொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

'போட்டி' என்பது எப்போதுமே ஓர் அருமையான விஷயம். அது விளையாட்டு, தொழில் அல்லது அலுவலகப் போட்டி என எந்தப் பிரிவைச் சேர்ந்ததாக இருந்தாலும், ஒரு வகையில் ஆரோக்கியமான அம்சம் தான்.

நமக்கு சில அருமையான போட்டியாளர்கள் இருக்க வேண்டும். அதுவே எப்போதும் நம் அடுத்த அடியை எடுத்து வைக்க செய்யும்.

ஆனால், இப்படி போட்டியாக இருப்பது, ஒரு நூலிடை அளவு பிசகினாலும், பொறாமையாக மாறி ஒட்டு மொத்த நோக்கத்தையும் திசை திருப்பி விடுகிறது.

பல சமயங்களில் இது விபரீதமான முடிவுகளையே கொடுத்து, நல்ல நட்பு முதல் உறவு வரை ஒரு நிரந்தர விரிசலை ஏற்படுத்தி விடுகிறது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் சார்பில், 'ஸ்ட்ரெஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' என்ற அமைப்பு, 2,755 பணியாளர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

ஆய்வுக்குட்பட்ட பணியாளர்களில் 47 பேர், 1992 ஆம் ஆண்டிலிருந்து 2003 வரையிலான காலகட்டத்தில் மாரடைப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

இந்த பாதக நிலைக்கு அடிப்படையான காரணம், பணியிடங்களில் மேலதிகாரிகள் அல்லது உடன் பணியாற்றுவோரால் 'ஏளனமாகக் கருதப்படுவது' அல்லது 'தரக்குறைவாக நடத்தப்படுவது' தான். இதன் காரணமாக இவர்கள் மனதில் அளவுக்கு மிஞ்சிய கோபம் ஏற்பட்டு, அதில் இருந்து மீளும் வழி தெரியாததால், அது மாரடைப்புக்கு வழிவகுத்துவிட்டது.



பணியிடங்களில் வரும் மறைமுக இம்சைகளால் அதிக கோபம் கொள்வோருக்கு மாரடைப்பு வரும் அபாயம் இருக்கிறது.

ஆகவே, பணியிடங்களில் வரும் பிரச்சனைகளை நேரடியாக சந்திப்பது மிக நல்லது. அதை விடுத்து அந்தப் பிரச்சனைகளை மனதில் வைத்துக் கொண்டே பணியாற்றுவதாலும் மாரடைப்பு வருவதற்கு இரண்டிலிருந்து ஐந்து மடங்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் பணியிடங்களில் பிரச்சனை என்று வரும்போது, யாராயிருந்தாலும் வெளிப்படையாகப் பேசுதல், நேரடியாகப் போராடுதல், குறிப்பிட்ட நபரிடம் சரியான வழியில் அணுகுதல் போன்றவற்றின் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைக் குறைக்க முடியும் என்று வழிகாட்டுகிறது அந்த ஆய்வு.


அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அரசியலில், நம்மில் பலரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கும் "அலுவலக அரசியலுக்கு" முக்கிய இடம் உண்டு என்பது தெளிவு.

அன்று படிப்பும் வேலையும் படிப்படியாக அந்தந்த காலகட்டதுக்கு ஏற்ப வரிசையாக வந்ததால் ஒருவரின் அனுபவமும், பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் திறமையும் அதற்கேற்றபடி சரியான வயதோடு வளர்ந்து கொண்டு வரும்.

ஆனால், இன்றோ கல்வியும் ஒரு வியாபாரமாகி விட்டது, அதே போல் வேலை முறையும் மாறிவிட்டது. வயதுக்கு மீறிய வருமானம் தரக்கூடிய தொழில் முறைகள், சிறிய வயதில் பெரிய பொறுப்புகள் என மாறிவிட்டதால், அனைவரின் வாழ்கையும் ஓர் அவசர கதியாகிவிட்டது.

இதனால், படிப்படியாக இல்லாமல், எடுத்த எடுப்பில் அகல கால் வைக்க வேண்டிய அளவில், வாழ்க்கை முறையும் பொறுப்புகளும் கூடிக்கொண்டிருக்கிறது.

அதைச் சமாளிக்க முற்பட்டு, மன உளைச்சல் அடைவது, சிறிய விஷயங்களுக்குக் கூட பெரிதாக உணர்ச்சிவசப்படுவது என ஒரு சாதாரண பிரச்சனை வந்தால் கூட, சிந்தனையை அடுத்தடுத்து கொண்டு சென்று மனதளவில் மிக பெரிதாக கலங்கிவிடுகிறார்கள், இன்றைய இளம் தலைமுறைகள்.



மேலும், இந்த அலுவலக அரசியலில், எப்போதும் நடுவராகவும் இருக்க முடியாது; பார்வையாளராகவும் இருக்க முடியாது. இருப்பது இரண்டே வழிகள் தான். 'விளையாடி வெற்றி பெரும்' அணி அல்லது 'தோற்று வேலையை அல்லது வாழ்க்கையை துறக்கும்' அணி.

இதில் இன்னொரு வியக்கத்தக்க அம்சம் என்றால், திறந்த மைதானம் போல் இந்த இரு அணிகளும் திறந்தவை தான்; யாரும் எந்த நேரத்திலும் மாற்று அணியாக மாறக்கூடும். மொத்தத்தில் தனிப்பட்ட ஒருவர் தள்ளப்படும் இடம் என்பது ஒரே ஒரு கதவு மட்டும் உள்ள ஒரு பாதையாகும்.

'செய் அல்லது செத்து மடி.' இப்படி வாழ்கைக்காக போராடுவதாய் நினைத்து, ஆரோக்கியமான வாழ்கையை தொலைத்து விட்டு, 'இளமையில் கொடுமை வறுமை' என்பதை மட்டும் மனதில் வைத்து ஓடி ஓடி உழைத்து, இறுதியில் வறுமை வென்று, 'இளமையில் முதுமை'யைப் பெரும் நிலைக்கு கொண்டுவந்து விட்டு விடுகிறது.

இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, எவ்வித இடையூறுகளுமின்றி வேலையில் சிறந்து விளங்க முடியாதா? முடியும்.

அலுவலக மன உளைச்சலைத் தவிர்க்க சில எளிய வழிகள்...

* அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் முகமூடி இல்லாத உங்கள் உண்மை முகத்தை மட்டும் பயன்படுத்துங்கள்.

* ஒரு போதும் நெருங்க முடியாத புதிராகவோ அல்லது விளங்காத ரகசியமாகவோ இல்லாமல், அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் திறந்த புத்தகமாய் இருங்கள்.

* உங்கள் வேலைத்திறனில் உறுதியாய் இருப்பது போல் தேவையான நேரங்களிலும், இடங்களிலும் வளைந்து கொடுங்கள்.

* பதவி அதிகாரத்தை வைத்து மட்டும் எடை போடாமல், அனைவருக்கும் சமமாக காது கொடுத்து கவனியுங்கள்.

* உங்கள் 'ஈகோ'வை ஒதுக்கி வைத்து விட்டு, மற்றவர்கள் 'ஈகோ'வை தொடுவதையும் தவிர்த்து விடுங்கள்.



* எந்த சூழ்நிலையிலும் 'வதந்திகளை' சொல்வதையும், கேட்பதையும் அறவே தவிருங்கள்.

* உங்கள் வாழ்க்கை மைல் கல் மீது மட்டும் உறுதியான நோக்கத்தையும், தெளிவான கவனத்தையும் செலுத்துங்கள்.

* உங்கள் தவறுகளுக்கு அப்போதே நியாயப்படுத்த நினைக்காமல், பின்பு சரியான நேரத்தில் மன்னிப்பு கேட்கவும் தவறாதீர்கள், தயங்காதீர்கள்.

* ஒர் அலுவலகத்தில் மாநிலம், மாவட்டம், மொழி, இன்னபிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களை இனம் கண்டு ஒரு வட்டத்தை அமைத்து, அதற்குள் முடங்கிவிடக் கூடாது.

(வட்டத்துக்குள் நாம் தனித்தனி வட்டமாய் இருப்பது ஒரு பலவீனம் என்றால், 'தான் மட்டும்', 'தனக்கு மட்டும்' என அரசியல் கர்வம் வந்துவிடும் போது, அது நமக்கே ஆபத்தாகிவிடும்.

மேலும் இத்தகைய தவறான அணுகுமுறையால், பல வருட நல்ல நட்பு கூட தோற்றுப் போய் விடுவது மறுக்க முடியாத யதார்த்தம்.)


இதில் என் சொந்த அனுபவத்தில் சில வரிகள்.

தெற்கை விட ஆந்திராவுக்கு மேல் காஸ்மீர் வரை "வடக்கு" எவ்வளவோ தேவலம். அவர்களுக்குள் என்னதான் உட்பூசல் இருந்தாலும், பொது என்று வரும் போது "ஹிந்தி பாத் வாலா" என்ற முறையில் ஒரு வட்டம் அமைத்து, அப்படியே குழுவாக நகர்த்தி கொண்டு செல்வார்கள்.

இதை சற்று கவனித்துப் பார்த்தால், அவர்களில் பதவி அதிகாரத்தில் உயர்வு தாழ்வு இருக்கலாமே தவிர, அலுவலக அரசியலில் அடிபட்டு போவோர்கள் யாருமே இருக்க முடியாது.

இப்படி "ஹிந்தி பாத்" இல்லாத தெற்கு என்று வந்து விட்டால், நமக்கு "ஹிந்தி பாத் வாலா" என்றால் ஒத்து வராது "தார் பூசி" விடுவோம்.

அந்த கடுப்பில் அவர்களும், என்னதான் நாம் ஒரே துறை அல்லது ஒரே அணியில் வேலை பார்த்தாலும், நம்மை கணக்கில் சேர்க்க மாட்டார்கள்.



அது போனால் போகட்டும், நாம் தெற்கு என்று வரும்போது, நமக்குள் தனியாக ஒரு "வடக்கு,தெற்கு மேற்கு கிழக்கு" என்று வந்து விடும் (தெலுகு, கன்னடா, மலையாளம் மற்றும் தமிழ்).

இவை அனைத்தும் ஒரே வட்டத்திற்குள் வருவது என்பது எவ்வளவு சாத்தியம் என்று நமக்கு ரொம்ப நன்றாகவே தெரியும்!

(இப்படித்தான் "சிங்கம்" ஸ்ஸ்ஸ்...ஸாரி..ஸாரி..."சிறுத்தை" சிங்கிளா மாட்டி "எருமை" கூட்டத்தில் மிதி படுவது.)

மேல் சொன்னபடி, இப்படி ஒரு வட்டத்திற்குள் நாம் தனித்தனி வட்டமாய் இருப்பது ஒரு பலவீனம் என்றால், "தான் மட்டும்" "தனக்கு மட்டும்" என்று ஒரு அரசியல் கர்வம் வந்துவிடும் போது, நம் மக்களே நம் மக்களை பலிகடா ஆக்கி விடுவதுதான் இதில் மேலும் சிறப்பம்சமாகி விடுகிறது.

இப்படி சாதாரணமாக ஒரு வேலைக்காக நடக்கும் அலுவலக அரசியலில், பல வருட நல்ல நட்பு கூட தோற்று போய் விடுகிறது என்பதுதான் "மறுக்க முடியாத உண்மை" மற்றும் நம் "அசைக்க முடியாத பலவீனம்".

இந்த இடத்தில் நம் மக்களிடம், "டாக்டர் அப்துல் கலாம்" அவர்களே பாராட்டிய "கவிஞர் வைரமுத்துவின்" சில வரிகளை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

"ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் நான்கு "பந்து"களுடன் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறான்.

வலக்கையில் ஒரு பந்து, இடக்கையில் ஒரு பந்து, வலதுகக்கத்தில் ஒரு பந்து, இடதுகக்கத்தில் ஒரு பந்து.

இதில், ஒரு பந்துக்கு பெயர் தொழில், ஒரு பந்துக்கு பெயர் குடும்பம், ஒரு பந்துக்கு பெயர் நட்பு, ஒரு பந்துக்கு பெயர் உடல் ஆரோக்கியம்.

இந்த நான்கு பந்துகளும் கீழே விழுந்து விடாமல் கடைசி வரை கரை சேர்ப்பவனே "கடமை வீரன்".

இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால்!

தொழில் என்னும் ரப்பர் பந்து கீழே விழுந்தாலும் உடையாது, திரும்ப கைக்கு வந்து விடும்.

ஆனால், "குடும்பம், நட்பு, உடல் நலம்" என்ற மூன்றும் கண்ணாடி பந்துகள், கீழே விழுந்தால் விழுந்ததுதான்! உடைந்து சிதறி விடும்.

மனிதா!... உடைந்து போகாத ரப்பர் பந்து மீது இவ்வளவு கவனம் செலுத்துகிறாயே?

உடைந்தால் மீண்டும் கிடைக்காத மற்ற பந்துகள் மீது ஏன்! கவனம் செலுத்தக் கூடாதா?"
என்பதுதான் அந்த வரிகள்.


இதை நம் மக்கள் அனைவரும் உணர வேண்டும் என்பதுதான் இங்கு என் நோக்கம்.


சரி, நாம் இடுகையை தொடருவோம்!

இவற்றைக் கடைபிடித்தால் மட்டும் அலுவலக அரசியலைத் தவிர்த்துவிட முடியுமா? மன உளைச்சல்களில் இருந்து மீண்டு விட முடியுமா?

இப்படி நீங்கள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இங்கே குறிப்பிட்டவை அனைத்தும் அடிப்படை அணுகுமுறை மட்டுமே. பொதுவாகவே, வேலை செய்யும் எல்லா இடங்களிலும் சர்வ சாதாரணமாக அனைவரும் சந்திக்க கூடியதுதான், இந்த 'அலவலக அரசியல்'. இதில் பலிகடா ஆகமால் தவிர்ப்பதற்கு, மனிதர்களைப் படிக்கப் பழக வேண்டும். அதற்கேற்ற படி, தேவையான இடத்தில் சமரசம் செய்துகொண்டும், உரிய தருணங்களில் விட்டுக் கொடுக்காமலும் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காணும் பக்குவத்தை அடைய வேண்டும்.

இத்தகைய அலுவலக அரசியலை சமாளிப்பதால் சிகரத்தை எட்டக் கூடிய பலன் கிடைத்துவிடும் என நினைக்க வேண்டாம்; மாறாக, இவையெல்லாம் வேலையை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே.

அத்துடன், மன உளைச்சல் பாதிப்புக்கு ஆளாகாமல் தன்னைத் தானே காத்துக் கொள்வதற்கே, இந்த அலுவலக அரசியல் குறித்த புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது.

இத்தகைய அலுவலக அரசியலை ஆரோக்கியமாய் சந்தித்து சமாளிப்பது எப்படி என்பதில், எனக்கு தெரிந்ததை பின்பு ஒரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன்.

பெஸ்ட் ஆஃப் லக்!.

அதுவரை, அதெப்படி சம்மந்தமில்லாத ஒருவரை இந்த அலுவலக அரசியல் பாதிக்கும்! என்று கேட்க தோன்றினால், இந்த வீடியோவை பாருங்கள்.

சிரிக்க வைத்தாலும் உண்மை இதுவே(இது ஒரு சிங்கப்பூர் வீடியோ என்பதால், ஆங்கிலத்தில் சற்று "மலாய்" மற்றும் "சீன" மொழி கலந்தது இருக்கும்).



என் இடுகையில், உங்கள் நேரத்துக்கு என் நன்றி!.

Tuesday, January 5, 2010

அல்லா அருணாச்சலா!

புதுவருட வாழ்த்துக்களுடன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, எங்கள் பேச்சு பதிவுகள் பக்கம் திரும்பியது.

"சித்தர்கள்" பதிவை நோக்கி வந்த எங்கள் பேச்சு...,

சித்தர்கள்

பதினெட்டு சித்தர்கள்

இதில் சூஃபியர்களை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது என்று சொல்லி, எனக்கு "சூஃபியர்கள்" பற்றியும் "சித்தர்கள்" பற்றியும் நன்கு தெரிந்தவர்கள் சொன்ன சில நல்ல தகவல்களை அனுப்பி வைத்தார்கள்.

அதில் நான் படித்திராத சில தகவல்கள் அருமையாக இருந்தது. அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்களின் புறத்தோற்றம் இயல்பானதாகத்தான் இருக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் எதுவும் தோன்றாது என்பதை,

"வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!" என்ற பட்டினத்தார் பாடல் தெரிவிக்கிறது.

"மாத்தானவத்தையும்"
என்று தொடங்கும் இப்பாடலைத்தான் குமரி முதல் வேங்கடம் வரையிலுள்ள சுடுகாடுகளில் பாட படுகிறதாம்".

சித்தர்களுக்கு இயல்பு மீறிய(Abnormal) புறத்தோற்றமும் இருக்கக் கூடும் என்பதை,

"பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!"

என்ற பட்டினத்தார் பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இதே போல, சூஃபியர் என்ற சொல், 'சூஃபி' என்ற அரபுச் சொல்லின் ஆக்கம். அரபுமொழியில் ‘சூஃப்’ என்ற சொல் கம்பளி("Wool")யைக் குறிக்கும்.

பின்னர் அச்சொல்லே ‘கம்பளியை உடையவன்’ ("Man of Wool") என்ற பொருள் கொண்ட "சூஃபி" என்னும் சொல்லை தந்தது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபிய மெய்யுணர்வாளர்களில் "பீருமுகம்மது வாவா" என்று நெல்லை மக்களால் அழைக்கப்படும் பீர்முஹம்மத் அப்பா(ரலி) முதலாமவர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலையில் அவருடைய அடக்கத்தலம் உள்ளது.



"பீர்முஹம்மத் அப்பா(ரலி) அவர்களே தமிழ் சூஃபித்துவ ஞானப் பாடல் வரிசையில் முதலாமவராக விளங்குகிறார்கள்" என்று தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன் கூறியுள்ளார்.

சூஃபியாக்கள் (பாரசீக சூஃபி மெய்யுணர்வாளர்) பரம்பொருளை "உண்மை" என்றே சுட்டுகின்றனர். "தன்னுணர்வு கொண்ட விழைவு", "அழகு", "ஒளி" அல்லது "எண்ணம்" என்ற முந்நிலையில் அவர்கள் கடவுளை வைத்துச் சுட்டுவதாக அல்லாமா இக்பால் அவர்கள் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுச் சூஃபியர்கள் சிலரின் பெயர்கள் - பீர்முஹம்மத் அப்பா(ரலி), கோட்டாறு ஞானியார், குணங்குடி மஸ்தான் சாஹிபு, கலீபத் ஷைகு ஷாஹூல் ஹமீத் அப்பாநாயகம், பரிமளம் முகம்மது காஸிம், இறசூல் பீவி, ஐயம்பேட்டை அப்துல் கரீம் பாவா, குஞ்சலி சாஹிப், இளையான்குடி மஸ்தான் ஸாஹிப், கோட்டாறு சைகுத்தம்பி ஞானியார், அப்துல் காதிர் வாலை மஸ்தான், பெரியநூஹூ லெப்பை ஆலிம், 'காலங்குடி மச்சரேகைச் சித்தன்' என்றழைக்கப்படும் செய்யிது அப்துல்வாரித் ஆலிம்மௌலானா ஐதுரூஸ், மேலைப்பாளையம் முகியித்தீன் பஸீர், மோனகுரு மஸ்தான் ஸாஹிப், முகம்மது ஹம்ஸாலெப்பை ஆகியோர்.

தமிழ்நாட்டு சூஃபியர்களின் தொண்ணூற்றிரண்டு வகைமாதிரி கவிதைகள் "இறைவனும் பிரபஞ்சமும்" நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, சித்தர்களும் சூஃபியர்களும்

1. மதங்கள் மனிதர்களுக்கிடையே பிளவுகள் ஏற்படுத்தாமல் தலையிட்டு, மக்களை ஒற்றுமைப்படுத்தினார்கள். பல இடங்களிலும் சூஃபிஞானியர்களுக்கு ஸியாரங்கள் கட்டப்பட்டும் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்பட்டும் வருவதை அறிகின்றோம்.

இவ்வரிசையில் மிகவும் கீர்த்தி பெற்று விளங்குவது மகாமேதை மீரா சாஹிப் ஆண்டகை அவர்களுடைய இடமாகும். இந்து, கிறிஸ்த்துவ, இஸ்லாமியர் என்று அனைவராலும் வணங்க படுகிறார்.

2. பல்வேறு நுட்பமான முறைகளைப் பின்பற்றி, உட்சமயங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டும் தனித்தனிக் கடவுளரைக் கற்பித்துக்கொண்டும் மக்கள் அஞ்ஞானத்தில் அழுந்துவதைத் தடுத்தார்கள்.

3. பக்தியின் பெயரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட உருவ வழிபாட்டு முறைகளையும் புறச் சடங்குகளையும், போலிவாழ்வையும் மூடப் பழக்கங்களையும் களைந்து அறிவார்ந்த ஆன்மிக வாழ்விற்கு வழிகாட்டினார்கள்.(முனைவர் க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர்)

4. எவ்வாறு கலப்புத் திருமணங்களால் சாதிமுறை ஆட்டங்காணுமோ, அவ்வாறு சித்தர் பீடங்களைப் பின்பற்றிய மக்களிடத்தில் சாதிவேற்றுமை மதிப்புப் பெறாதவாறு பாதுகாத்தார்கள்.

5. உடைமைச் சமூகத்தில் இல்லாரும் வாழ வேண்டி, நிலையாமைகள் பலவற்றைத் தம் எளிய, தெளிவான, நேரடியான பாடல்களால் உணர்த்தி, உடைமை,சொத்துக் குவிப்பவர்களின் வேகத்தை மட்டுப்படுத்தினர்.



"புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே உடலாய் உயிராய் உலகமே தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந் தானாகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே"

என்ற பாடல் "சித்தர் திருமூலர்" அவர்கள் பாடியது.

இதே போல் "மஸ்தான் ஸாஹிபு" பாடியவை பின்வருமாறு:

"ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய் ஒன்றா யிரண்டு மாகி உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி ஊருடன் பேருமா கிக் கானாகி மலையாகிவளைகடலு மாகியலை கானக விலங்கு மாகிக் கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி கண்டபொரு ளெவையு மாகி நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூத மாகி நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன் நன்மைசெய் தாளு தற்கே வானோரும் அடிபணித லுள்ளநீர் பின்தொடர வள்ளல் இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண் மணியே முகியித் தீனே"

"திருமூலரின்" பாடலை "மஸ்தான் சாஹிபு" அவர்களின் பாடல் பொருளோடு ஒப்பிட்டு பார்த்தால், தமிழ்நாட்டுச் "சித்தர்களும் சூஃபியர்களும்" எவ்வளவு புரிந்துணர்வுடன் வாழ்ந்து, மக்களை நெறிப்படுத்தினார்கள் என்பது தெளிவாகப் புரியும்.


நல்ல இந்த தகவல்களை கொடுத்த நண்பர்களுக்கு நன்றி!.

சரி, இனி என் எண்ணங்களை பார்ப்போம்.

இறை நம்பிக்கை மட்டும் கொண்டு மதங்களுக்கு அப்பாற்பட்ட சித்தர் வழியை நான் விரும்புகிறேன்.

இந்த மனித வாழ்கையில் எல்லாம் "மாயை" என்று புரியவைக்கும், எனக்கு பிடித்த ஒரு பாடலை இந்த நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தனிப்பட்ட மதசார்பான படங்களை தவிர்த்து விட்டு "Pray" என்ற பொது வார்த்தையை நீங்கள் விரும்பும் "கடவுளை" அல்லது "கொள்கையை" நினைத்து கண்ணை மூடி பாடல் வரிகளை மட்டும் கவனித்து பாருங்கள்.



என்னடா இது! வருட பிறப்பும் அதுவுமாய், இப்படி அழுகையுடன் கூடிய ஒரு பாடலை தருகிறானே என்று நினைக்க வேண்டாம்.

சுகமும், துக்கமும் சமமாக பார்க்கும் மனம் வேண்டும். கஷ்டத்தில் மட்டுமிலாமல் சந்தோசத்தின் போதும் சமமாக இறைவனை நினைக்கும் மனம் வேண்டும். அதுவே வாழ்கையின் உண்மையை நமக்கு உணர்த்தும்.

சொல்வது "திருமூலரோ" அல்லது "மஸ்தான் சாஹிபோ" அல்லது "ஜான் போப்போ" நாம் யாரென்று உண்மை நிலையை உணர, இந்த நிலையற்ற மனித வாழ்கையில் "சித்தார்" வழி செல்வதுதான் சிறந்தது.

எனவே இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன கொள்கைகளுடன் கலந்து குழப்பிக்கொள்வதில் அர்த்தம் இல்லை! என்பது என் எண்ணம்.

உங்கள் நேரத்திற்கு நன்றி!.

Saturday, January 2, 2010

தமிழ் பதிவர்கள் அளித்த ஷாக்!

புது வருடத்தின் ஆரம்பமே அருமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன் :-).



அது எல்லாம் சரி, இடுகையின் தலைப்பு ஏன் நம்ம "கனவுகளே சுரேஷ்" இடுகை போலவே இருக்கிறது?

வருடத்தின் முதல் பதிவே "காப்பியா"! என்று கேட்க வேண்டாம்.

அதே போல அல்ல, இது அதே இடுகைதான் "நன்றி சுரேஷ்".
(அந்தந்த தளத்துக்கு செல்ல, அந்தந்த பெயர்களில் சொடுக்கவும்).

இன்று காலை நண்பர் சுரேசின் தமிழ் பதிவர்கள் அளித்த ஷாக் இடுகையை பார்த்து விட்டு, சரி நம்ம சுரேசுக்கு ஓட்டாவது போடுவோம் என்று தமிழ்மணம் தளத்துக்கு சென்றேன்.

வந்தது வந்தாச்சு,வேற யாருக்கு எல்லாம் ஓட்டு போடுவது என்று பார்த்தால்...நம்ப முடியவில்லை...வில்லை...ல்லை...லை.

அட நம்புயா, "எங்கம்மா சத்தியமா நானும் ரவுடிதாயா" என்று வடிவேலு சொல்லுவது போல் "பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்" பிரிவில் நம்ம கடன் அட்டை! தெரிந்ததும் தெரியாததும்! இடுகையும் இடம் பெற்று இருக்கிறது.



எத்தனையோ பெரிய பதிவர்கள் இருக்கும் களத்தில், என்னையும் முதல் சுற்றில் தூக்கி விட்ட பதிவர்கள் அனைவருக்கும் நன்றி...நன்றி...என் மனமார்ந்த நன்றி!.

மேலும் நண்பர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

எனக்கு இருக்கும் அத்தனை ஓட்டையும் வீணாக்காமல் பகிர்ந்து கொடுத்து விட்டேன், நீங்களும் உங்கள் ஓட்டை தமிழ்மணம் சென்று நம் நண்பர்கள் வெற்றி பெற உதவலாமே?

நன்றி!.
 

Blogger Widgets