Friday, February 26, 2010

கடவுள் இருக்காரா! இல்லையா?

வா, நண்பா, என்னா ஒரு மாசமா ஆளையே காணோம்? "வா.இ.வா" சங்கத்துக்கும் (வார இறுதி வாலிபர்கள் சங்கம்) சரியா வரல! சரி, இடுகை, பதிவுன்னு வேலையா இருப்பேன்னு பார்த்தா!, அந்த பக்கமும் இப்போ எல்லாம் அவ்வளவா ஆளையே காணோம்? என்ன ஆச்சு?

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மாப்ஸ், ரொம்ப நாள் ஆச்சுல அதான் வண்டி கொஞ்சம் மக்கர் பண்ணுச்சு, சரி ஒரு சர்வீஸ் பண்ணலாம்னு போனா "பேட்டரி ஓவர் ஹீட்ன்னு" சொல்லி படுக்க வச்சுடாங்க.

டேய்...காச்சல்ன்னு ஒரு வார்த்தைல சொல்ல வேண்டியதுதான? ஏன்டா இப்படி படுத்துற!. அது ஒண்ணுமில்ல மாப்ள, இப்ப ஓவர் பனியா இருக்குல்ல அதான், நீ சும்மா ஒரு நாலு ரவுண்டு போட்டா எல்லாம் சரியாகிடும் கவலைய விடு.

இது என்ன கொடுமைடா!, அப்ப ராத்திரிபூரா கண்ணு முழிச்சு படிச்சு பத்தாவது, பன்னெண்டாவதுல நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணி, அப்புறம் காலேஜுல சேர தனியா ஒரு பரிச்சைய எழுதி, அதுக்கு அப்புறம் அவர் கூட ஸ்கூல்ல படிச்சவுங்க எல்லாம் கல்யாண பத்திரிகைல இருந்து, குழந்தைக்கு பேரு வைக்கிறதுக்கு கூப்பிடும் வரை, ஒரு அஞ்சு வருஷம் படிச்சு, அதுக்கும் அப்புறம் அரசாங்க கிராம சேவையை முடிச்சுட்டு (யப்பா சொல்லவே மூச்சு முட்டுது) டாக்டர்-ன்னு அங்கங்க உக்காந்து இருக்காங்கலே அவுங்க எல்லாம் எதுக்கு?



வண்டி டிங்கரிங் பண்ணி வந்தாலும் இன்னும் உனக்கு வாய்ல வாஸ்த்து சரியாகல மாப்ஸ்!, ஏன்னா, அப்படியே நீ அவுங்ககிட்ட போனாலும் இருமல் மருந்து, கொஞ்சம் தூக்க மாத்திரை-ன்னு அதுலயும் அதே ஆல்கஹால்தான் இருக்கும். ஆனாலும் நீ அநியாத்துக்கு திருந்திட்டடா!.

இப்ப கச்சேரிக்கு வர்றியா? இல்ல அந்த டாக்டர்கிட்டேயே போய் இன்னும் கொஞ்சம் மருந்து வாங்கி குடிச்சுட்டு வீட்டுக்கு போறியா அத சொல்லு மொதோ?


சரிசரி, ஓவரா பேசாம டோக்கன (வாய) மூடிகிட்டு கொஞ்சமா ஊத்து, சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லி தங்கமணி சொல்லிவிட்டா.

அப்படி வா மகனே!, ரொம்ப நல்லவன்டா நீ, வா...வந்து உன் டாடா சுமோவ இப்படி பார்க் பண்ணு.

இந்தா பிடி மொதோ ரவுண்ட் மெதுவா போவோம், நிறைய நேரம் இருக்கு வீக்எண்ட்தான...!

ஆமா மாப்ள, என்னடா இது! போன வருசத்த விட இந்த வருஷம் நல்லா இருக்கும்னு சொன்னாங்க!, இது அத விட மோசமா இருக்கு? நம்ம ஒபாமா வந்த நேரமே சரியில்லடா?


டேய், உனக்கு வருஷம் நல்லா இல்லாததுக்கு ஒபாமா என்னடா பண்ணுவாரு? எல்லா வருசமும் நல்ல வருசம்தான் மாப்ஸ், அது அவுங்கவுங்க உழைப்பை, சேமிப்பை, நம்பிக்கையை பொறுத்து மட்டும்தான் மாறுபடும்.

என்னாடா நீ உலக பொருளாதார அரசியலே தெரியாம இருக்க? இப்படி குடு கிளாஸ அடுத்த ரவுண்ட் போவோம்.

ஆனா, மாப்ள இந்த சீனாகாரங்க போலி தயாரிப்பு தொல்ல தாங்கல, உட்டா இமயமலைக்கு போலி மாதிரி தயாரிச்சு! இந்தியாவுக்கு இந்த பக்கம் வச்சுடுவாணுக போல!, இதுல சைபர் வார் வேற!, அவனுகளுக்கு சரியா ஆப்படிக்கனும்டா!.

ஆனா அவனுகளை மட்டும் சொல்ல முடியாது, நம்ம இப்படி ஜாதி, மதம்ன்னு மூட நம்பிக்கைல இருக்க வரை யாரு வேணா என்ன வேணா பண்ண முடியும்.


டேய் விடுங்கடா, போலி பொருள் தயாரிப்புக்கும் கடவுள் இல்ல மதத்துக்கும் என்னடா சம்மந்தம்?

ஆமாடா விடுங்க, இல்லைனா நம்ம சாமி சரக்கோட சாமியாடிடும், "அகம் பிரம்மாஸ்மி "...ஹ ஹ ஹா!..மாப்ள அந்த தம்ம இந்தபக்கம் கொடு!.

ஏய், நீ நாத்திகன் உன்கிட்ட கடவுளை பத்தி பேச முடியுமா? "சமயமில்லாத மனிதன் கடிவாளம் இல்லாத குதிரை போலன்னு" அங்க உன் காலண்டர்ல போட்டிருக்கு பாரு!.

இதாண்டா, இப்படி யாராவது எதாவது சொல்லி எழுதிவைச்சா அத அப்படியே நம்பி, நம்பாதவுங்கள நாத்திகன்னு புரியாம சொல்ல கூடாது. உண்மைல இது நாத்திகம் இல்லமாப்ள நாங்க எல்லாம் "பகுத்தறிவாதி" புரிஞ்சுக்க.

ஏன்னா, கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்றவுடன் அவனை நாத்திகன்னு சொல்றீங்களே, அதுக்கு பேருதான் உண்மையான நாத்திகம்.

உனக்கு புரியுறமாதிரி சொல்லனும்னா, ஒரு கடவுள் கரும வினைக்காக ஒருத்தனை பிச்சைக்காரனாக்கி இருக்கும் போது, நீங்கள் அவனுக்கு சோறு போடுவதை என்னவென்று சொல்வது? இது நீ கடவுளுக்கு விரோதமாக செய்யும் காரியம்தானே!, அப்படி பார்த்தால் இதுவும் கடவுளை நம்பாத ஒரு செயலாகிவிடுகிறது. அப்ப இதுவும் நாத்திகம்தானே!.


நான் புரிஞ்சுகிறது இருக்கட்டும், பிச்சை எடுப்பது என்பது வறுமையோ ஒரு தொழிலோ இல்லை, இது இடையில் மனிதனாக கொண்டுவந்த சோம்பேறித்தனம் மட்டுமே.

அந்த காலத்தில் துறவிகள், முனிவர்கள் மற்றும் சித்தர்கள்தான் தங்கள் பசிக்கு உணவு கேட்பார்கள். காரணம் யாசகம் துரவத்தின் ஒரு பகுதி என்பது மட்டுமல்ல, அவர்கள் தங்களுக்கு என்று எதையும் சேமிக்கும் மற்ற சாதாரண மக்களை போல இல்லாமல் நிலையில்லாத இந்த மனித வாழ்கையில் எதன் மீதும் பற்று கொள்ளாமல் வாழ்பவர்கள்.

ஆக, இப்படி கடவுளுக்காகவும், மற்றவர்களுக்காகவும் வாழும் அந்த மகான்களின் பசிக்கு நம்மிடம் இருக்கும் உணவை கொடுப்பது ஒரு நல்ல காரியமாக கருதப்பட்டது, இதில் நீங்கள்தான் கடவுளை இழுத்து புரியாதவர்களை குழப்புகிறீர்கள்?


அப்படி பார்த்தால், எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று சொல்கிற யாரும் கடவுளை மட்டும் நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஏன் கடவுளிடம் விடுவது கிடையாது?

காலில் ஒரு சின்ன முள் குத்தினால் கூட ஓடி ஒரு மருத்துவரிடம் தான் போகிறார்கள், இது எப்படி கடவுள் நம்பிக்கையாக இருக்க முடியும்? அப்ப இவர்கள் சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள்தானே?


யப்பா சிந்தனையாளரே, நீ நிறைய தமிழ் படம் பார்த்து கடவுள் என்றால் எதோ மேஜிக் மாஸ்டர் என்று நினைத்து விட்டாய் போல.



உன் "கடமையை நீ செய் பலன் உன்னை வந்தடையும்" என்று கீதையோ, குரானோ அல்லது பைபிளோ சொன்னால் நீ நம்ப மாட்டாய். ஆனால் எந்த ஒரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர்மறை செயல் உண்டு என்று நீயுட்டன் சொன்னால் நம்புவாய் அப்படிதானே!.


அப்படி இல்லை நண்பா, நான் சொல்ல வருவது, நாத்திகம் என்பது அவரவர்கள் மன உணர்ச்சி மற்றும் ஆராய்ச்சித் திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமோ கட்சியோ மதமோ அல்ல என்பதுதான்.

நானும் அதையேதான் சொல்கிறேன், இறை நம்பிக்கை என்பது அவரவர்கள் மன உணர்ச்சி மற்றும் நம்பிக்கை திறன் ஆகுமே தவிர அது ஒரு கொள்கையோ கட்சியோ அல்ல. மேலும் மதம் என்பது அவரவர் சமைய நம்பிக்கைகளை பொருத்து வாழ்கையை நல்வழிப்படுத்த காட்டப்படும் பாதைகள்தான், யாரும் எந்த மத நல்வழியையும் பின்பற்றி ஒழுக்கமான வாழ்கையை வாழ்வதில் தவறேதும் இல்லை.

இது தவிர மற்ற மத, இன அரசியல்கள் இடையில் மனிதர்களால் உருவாக்கபட்டதுதான், உங்களை போலவே குறைகளை மட்டும் சொல்லி வரும் தலைமுறைகளை குழப்ப.


டேய் நீ ஊத்துடா, இவன் புரியாம பேசுறான்!, இதான் இந்த நம்பிக்கை தான் மாப்ஸ் பிரச்சனையே?

ஏன்னா, காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன், வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.

நாத்திகன்னா கடவுள் இல்லை என்று சொல்பவன் என்பது மட்டும் அர்த்தம் இல்லை!.

பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்து புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, பார்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர்.


சும்மா எதுகெடுத்தாலும் அவங்கள ஏன் மாப்ஸ் இழுகிறீங்க? உனக்கு தெரியும் நான் கூட அந்த வகை இல்லை, ஆனாலும் ஒன்னு கேட்கணும்! கடவுள் நம்பிக்கைன்னு சொல்ற நாங்க கூட ஜாதி வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டோம்?

ஆனா நீங்க, மனிதனை மனிதனாய் பார்க்கும் பகுத்தறிவாதி என்று சொல்லி விட்டு, நீங்களே ஒருவரை ஜாதியை வைத்து பட்டை பெயர் சொல்லி பிரிக்கலாமா சொல்லு?

சரி அத கூட விடு மாப்ஸ், உன் கருத்து படி நான் கூட பெரியோர்கள் சொல்லுகிறார்கள், என்ற நம்பிக்கையின் படி நடப்பவன்தான்.

எங்க அம்மா பால் கொடுத்து நான்தான் அம்மான்னு சொன்னாங்க "அந்த நம்பிக்கை", அப்புறம் அம்மா இவருதான் அப்பான்னு சொன்னாங்க "அந்த நம்பிக்கை", அப்பா என் கையை பிடித்து கொண்டு போய் உட்காரவைத்து "ஹரி நமத்து சிந்தம்" என்று எழுத சொல்லி, இவர் தான் உன் குரு என்று சொன்னார் "அந்த நம்பிக்கை". அதன் பின் அன்பே கடவுள் அறிவே தெய்வம் என்று அந்த குரு சொல்லி கொடுத்த "நம்பிக்கைதான்" நான் அறிந்த தெய்வம்.

இதைத்தான் சுருக்கமாக நான்கு சொற்களை வைத்து "மாதா, பிதா, தெய்வம், குரு" என்று சொல்வதாக நான் பிறந்த அர்த்தமுள்ள இந்து மதம் சொல்லியது "அந்த நம்பிக்கை" தான் மாப்ஸ் இது!, இதில் எங்க அறிவு குறைந்து விட்டது?, எல்லா மதங்களும் இதே கருத்தைதான் சொல்கிறது.

அவ்வளவு ஏன்? இராமாயணம் போல எல்லா மத இதிகாசங்களும் பல நூற்றாண்டு பெரியவர்கள் வாய் வழி சொல்லி வந்து பின்தான் எழுதப்பட்டு இருக்கிறது இல்லையா, அப்படி இருக்கும் போது அது முழுவதும் எப்படி பொய் என்று சொல்ல முடியும்?

அதெல்லாம் முடியாது, நாங்க பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்துதான் முடிவு எடுப்போம் அதனால, இவருதான் அப்பா என்பதற்கு டி.என்.ஏ டெஸ்ட் கொடு!, இவருதான் என் குரு என்பதற்கு முதலில் நான் இவருக்கு சோதனை வைத்து இவர் அறிவை ஆராய்ந்து பார்த்துதான் இவரிடம் படிப்பேன்! என்றா சொல்ல முடியும்?


உன்கிட்ட சும்மாவே பேச முடியாது, இதுல மப்பு வேற சொல்லனுமா? ஒன்னு புரிஞ்சுக்க, அறிவுக்கு எங்கே மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு எங்கே இடம் இல்லையோ அங்கே இருந்துதான் நாத்திகம் பிறக்கிறது.

ஆஆஆ, இப்படின்னு ஒரு "பிட்ட போட்டு" நாங்க ரொம்ப அறிவாளிகள் உண்மையான சிந்தனையாளர்கள் என்று புரியாதவர்களை ஏமாற்றி காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் அப்படிதானே?

அப்படி இல்லை மாப்ஸ், இதுபோல நாத்திகன் என்று சொல்வதையோ,அழைக்கப்படுவதையோ நினைத்து கலங்காதவனாக இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது என்றேன்.

அடப்பாவி நீ பேசுவதில் சமதர்மம் என்பதே இல்லையேடா?

உன் குறி மற்றும் மொத்த திறனும் கடவுள் இல்லை என்று சொல்வதிலும், குறிப்பாக கடவுள் நம்புபவர்களை கேலி செய்யும் விதத்தில் அல்லது அதில் உள்ள குறைகளை மட்டுமே குறிப்பிட்டு காட்டுவதில் மட்டுமே இருக்கிறது.

குறை இல்லாத இடமோ கொள்கையோ இருக்கவே முடியாது, அப்படி இருக்க, வெறும் குறைகளை மட்டும் பேசி மக்களை குழப்புபவர்களை எப்படி சொல்வது.

கடவுளே இல்லை என்று நம்பியபின்!, இருக்கார் என்று நம்புபவர்களிடம் போய் எங்கே அவர் இருந்தால் காட்டு காட்டு என்று கேட்பது ஏன்? நீ இல்லை என்று சொல்லுபவரை ஏன் தேடுகிறாய்? இது உன் கொள்கை மீது உனக்கு நம்பிக்கை இல்லாததை தானே காட்டுகிறது?

மேலும், கடவுள் இல்லை என்ற உன் கருத்தை விட, இருக்கு என்று சொல்பவர்கள் உணர்ச்சியை தூண்டி அவர்கள் மனதை காயப்படும் படி இருக்கும் உன் செய்கைகளை மட்டுமே குறை சொல்லும் நான்!, உன் மற்ற சமுதாய முன்னேற்றம், மூட நம்பிக்கை, கொத்தடிமை எதிர்ப்பு போன்ற நல்ல கருத்தை ஒத்துக்கொள்ளும் போது? (அதற்காக நீ தனியாக எந்த வேலையும் செய்வதில்லை அது வேறு விசையம்) உன்னால் குறைகளை தவிர கடவுள் மற்றும் இதிகாசங்களில் இருக்கும் எந்த ஒரு நல்லதையும் ஒத்துக்கொள்ளவோ அல்லது சரி என்று சொல்வோ முடியவில்லையே ஏன்?

இதுவா பகுத்தறிவு?

பிச்சை போடுபவனை குறை சொல்வதை விட்டு விட்டு, பிச்சையை தொழிலாக செய்பவனுக்கு உழைத்து வாழ வழி காட்ட நீ ஏன் நினைப்பதில்லை?

இத விடு, சமதர்மம் என்கிறாய்! இதோ, இங்கே தக்காளி இருக்கிறது, இதை வாங்கும் போது என்ன விலை கொடுத்தாய்?

இதில் அந்த தக்காளியை விற்ற பல் பொருள் அங்காடியின் லாபம், மொத்த வியாபாரியின் லாபம், குத்தைகாரர் லாபம், நிலத்துகாரர் லாபம் போக இதை விளைவிக்க பாடு பட்ட அந்த விவசாயின் லாபம் என்னவாக இருக்கும் என்று நினைத்தாயா! அல்லது இதற்கான முயற்சி ஏதாவது செய்தாயா? மற்ற அனைவருக்கும் கிடைக்கும் அதே லாபபங்கு பாடுபட்ட அந்த விவசாயிக்கும் கிடைக்க பாடு படுபவன் சொல்ல வேண்டிய வார்த்தை தான் சமதர்மம்.

அப்படி நீ செய்ய மாட்டாய், செய்தால் அது நாத்திகத்தில் (மற்றவர்களை குறை மட்டும் சொல்வதில்) இருந்து விலகி கம்யூனிசம் ஆகி விடும் என்பது தான் காரணம் இல்லையா?

மேலும் இது சாதாரண மற்றவர்களை போலவே நம் சொந்த சுகமான வாழ்க்கைக்கு நடுவில் போகிற போக்கில், மசூதி,கோவிலில் இருந்து வருபவர்களை பார்த்து கடவுளை நம்பும் நீ முட்டாள் முட்டாள் என்று வெறும் வாயை மென்று மக்களை குழப்பி ஜாதி பிரச்சனையாக்குவது மட்டுமில்லை!.



உழைப்பின் பலன் அதில் உழைத்த மட்டும் முதலீடு செய்த அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று சமுதாயத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும், பாடு பட வேண்டும், அதனால் சொந்த வாழ்க்கை இழப்பு அதிகம் எனதுதான் உண்மையான காரணம்.

இப்படி ஆக்கபூர்வமாக எதையுமே செய்யாமல், நான் சிந்தனையாளன், அறிவாளி, பகுத்தறிவாதி, சமதர்மவாதி என்று எப்படி சொல்ல முடியும்?

அப்படியானால், இதை மட்டுமே செய்து காட்டிய "காரல் மார்க்ஸ்" "விளாடிமிர் லெனின்" இவர்களை எல்லாம் என்ன வென்று சொல்வது?


அட போ மச்சி, உனக்கு புரியவே புரியாது? பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு என்பது பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் மற்றும் சமுதாய சீர்திருத்தத்தின் உண்மையான கடைசி எல்லை ஆகும். புரியுதா!, இத்தோட இந்த பேச்ச விடு!.

என்னடா பெருந்தன்மை இது?, அப்படியே அந்த உன் அறிவை வைத்து, எந்த ஒரு ஆராய்ச்சி வசதியும் இல்லாமல் ஒன்பது கோள்கள் அதன் சுற்றுப்பாதை, எந்த நேரத்தில் எந்த இடத்தில் வந்தால் என்ன என்ன கால நிலை மாறுதல் என்று எல்லா தகவல்களையும் அல்லது உலகின் முதல் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்த முறையையும் இதிகாசத்தில் எப்படி எழுதினார்கள் என்று நிருபித்து காட்டலாமே?

உன்னை போல வெறுமன குறைகளை மட்டும் வைத்து சமுதாயத்தை குழப்பாமல்!, உண்மையான உதாரணத்தை நான் சொல்கிறேன் கேள், நான் கம்யூனிட் இல்லை இருந்தாலும் சொல்கிறேன்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும், என கூறியதோடு இல்லாமல், அதற்காகவே பாடுபட்டு அதனால் ஜெர்மன் நாடு கடத்த உத்திரவிட பட்டு, பெல்ஜியம் வந்தபோது, வெறும் 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து பெல்ஜியம் நாடே பயந்து நடுநடுங்க!.

“எல்லா நாடும் என் நாடே!, எல்லா மக்களும் என் மக்கள்!, நானோர் உலக மகன்" என்று சொன்ன "காரல் மார்க்ஸ்" போன்றவர்களுக்கு சொந்தமான வார்த்தைதான் சிந்தனையாளன், பகுத்தறிவாதி, சமதர்மவாதி.

சமமான மனநிலையில் வளர்ந்து வரும் மக்களை, மத, இதிகாச குறைகளை மட்டும் சொல்லி குழப்பி அதில் குளிர் காயும் உனக்கு அல்ல.

இனி மேலாவது வெறும் குறைகளை மட்டும் குறித்து சொல்லி வரும் தலைமுறையை குழப்பாமல் காரியத்தில் இறங்கி செய்து காட்ட பார், அதன் பின் இதை பற்றி பேசுவோம்.

இதோ "பாட்டம்ஸ் அப்", நானும் தங்கமணி போன் அடிக்கிரதுக்கு முன்னாடி கிளம்புறேன்.


டிஸ்கி: ஹலோ...பாட்டம்ஸ் அப் சொன்னதுக்கு அப்புறமும் இன்னும் என்ன தேடுறீங்க!? கடவுள் இருக்காரா இல்லையான்னா? போங்க...போய் வேலையை பாருங்க, விவசாயம் பண்ணுக்க, புள்ள குட்டிகள படிக்க வைங்க அதுதான் கடவுள்.

மனிதாபிமானத்தோட உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாத மட்டும் பேசுங்க செய்ங்க அதுவும் கடவுள்தான்.

அத விட்டுட்டு இந்த மாதிரி சரக்குக்கு சைடிஷ்ஷா பேசுற இடத்துல!, பொழுது போக்கா எழுதுற இடுகைல இருக்க மத்தவுங்க கருத்துல! கடவுளை தேடுவது என்பது குழந்தை வயதை தாண்டியும் நான் ஆணா, பெண்ணா என்று அடுத்தவர்களை கேட்பது போல!.

மனிதாபிமானத்தோட உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாத எல்லாமே கடவுள்தான், அது அவுங்க அவுங்க மனசுக்கு முதலில் புரிஞ்சாத்தான் எடுத்து சொல்லாமலே அடுத்தவுங்களுக்கு புரியும்.

இப்போ நான் ஜூட் விட்டு அப்பீட் ஆகிக்கிறேன்.


சில தனிப்பட்ட காரணங்களால் ஓரிரு மாதங்கள் என் பதிவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருடைய பதிவுகள் பக்கமும் அவ்வளவாக தொடர்ந்து வர இயலாது மன்னிக்கவும்.

நன்றி!.
 

Blogger Widgets