Monday, November 30, 2009

கடன் அட்டை...தெரிந்ததும் தெரியாததும்!

பதிவுக்கு முன் "கடன் அட்டை...தெரிந்ததும் தெரியாததும்!" என்ற தலைப்பில் என் பதிவை விகடன் மற்றும் யூத்புல் விகடன் இணையதளங்களில் வெளியிட்டு என் தளத்தை குட் பிளாக்ஸ் வரிசையில் இணைத்ததற்கு "ஆனந்த விகடன் குழுவுக்கு" என் மனமார்ந்த நன்றி!.



இந்த பதிவை விகடன் தளத்தில் படிக்க இங்கு யூத்புல் விகடனில் சொடுக்கவும்.



மேலும் மேனகாவின் அன்பு விருதுக்கும் என் நன்றி.




"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்." எது எப்படி இருந்தாலும் நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்ளவேண்டும். கடன் இல்லாத வாழ்கையே இன்பமானது,' என என் தந்தை அடிக்கடி சொல்வார்.

அதாவது, ஈஸ்வரன் என்ற பெயருடைய இலங்கை மன்னன் எல்லாவற்றுக்கும் மேலாக தன் உயிர் என்று இத்தனையையும் இழக்க போகும் நேரத்தில், அவனது மன நிலை இப்படி இருந்ததாம். 'இது எல்லாவற்றையும் விட கடன் பட்டவன் மனம் அதிகமாக வருந்தும்,' என்பது இதன் பொருள்.

ஆனால், இன்றைய ஆடம்பர உலகத்தில் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகி விட்டது. இத்தனை கடன் அட்டை அல்லது இவ்வளவு கடன் மதிப்புள்ள கடன் அட்டைகளை வைத்திருக்கிறேன் என்பது ஒரு பகட்டாகிவிடாது.

ஒரு பொருள் வாங்கும் இடத்தில் சொந்தமாக காசை கொடுத்து வாங்குபவரை விட, கடன் அட்டையை கொடுத்து கடனுக்கு வாங்குபவர்களுக்கு ஒரு தனி மதிப்பு கிடைப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அது மட்டுமில்லாமல் இன்று தனியார் வங்கிகள் தொழில் போட்டி காரணாமாக முன்பு போல்
இல்லாமல் பல சலுகைகள் தருகின்றன, குறைந்த சேவை நேரம், அதிக சான்று பத்திரமோ, இதர விளக்க சான்றிதல்களோ தேவை இல்லை, அதிக பட்சமாக வருமான வரி அல்லது மாத ஊதிய சான்றிதல் இருந்தாலே போதுமானது, ஒரு பத்து நாட்களில் உங்கள் ஊதியத்தை விட இரு மடங்கு கடன் தகுதியுள்ள அட்டைகள் உங்கள் வீடு தேடி வந்து விடும்.

இது போல் ஒரே நேரத்தில் மூன்று முதல் ஐந்து வங்கிகளில் ஒரே நபர் கடன் அட்டையை பெறுவது இன்று மிக எளிதாகிவிட்டது.

ஆனால், இதில் எத்தனை பேருக்கு அதன் முழு வட்டி விபரம் மற்றும் இதர சேவை கட்டண விகிதம் முதலியன தெரியும் என்றோ அல்லது இதில் எத்தனை பேருக்கு கடன் அட்டை(யை)களை முறையாக பராமரிக்க தெரியும் என்றோ கேட்டால் கிடைக்கும் பதில் மிக வேடிக்கையாகவே இருக்கும்.

மேலும், இதன் அடிப்படை புரியாததால் இன்று எத்தனையோ பேர் நல்ல வேலை மற்றும் ஊதியத்தில் இருந்தும் கூட வாங்கும் முழு ஊதியத்தையும் கடன் அட்டைக்கு வட்டி கட்டி விட்டு, மீண்டும் அந்த மாத வாழ்க்கைக்கு அதே அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்து எப்போதும் மன உளைச்சலுடன் கடனிலேயே வாழ்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இதில் நம் கணினி துறையின் சதவீதம் தான் அதிகமாக இருக்கும் என்று இங்கு நான் தனியாக ஒரு முறை சொல்ல தேவையில்லை.

நான் எதோ, இன்றைய அவசர உலகத்தில் கடன் அட்டையின் அவசியத்தை மற்றும் பாதுகாப்பை பற்றி புரியாமல், கடன் அட்டைக்கு எதிராக சொல்வதாக நினைக்க வேண்டாம். நானும் கடன் அட்டையை வைத்து இருக்கிறேன், முறையாக கடன் அட்டையை பயன்படுத்தும் வழி முறைகளை தேடியதில், எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.



கடன் அட்டையைப் பொறுத்த வரை மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கலாம். இதில் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் சுருக்கமாக வேண்டியதை மட்டும் பார்ப்போம்.

I- கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?

II- தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?

III- கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது?

கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?

கண்ணில் பட்ட வங்கிகளில் எல்லாம் விண்ணப்பிக்காமல், முதலில் நீங்களாகவே அதன் இதர ஒப்பந்தங்களை கவனமாக ஆராய்ந்து சில அடிப்படை தகவல்களை சேகரியுங்கள்.

கடன் அட்டைக்கான மாத அல்லது வருட சேவை கட்டணம், மேல் சொன்னபடி தனியார்
வங்கிகள் தொழில் போட்டிக்காக இதில் பல சலுகைகள் தருகின்றன. மூன்று வருட இலவச சேவை, ஐந்து வருட இலவச சேவை மற்றும் சில வாழ்நாள் முழுவதும் இலவச சேவை, அதாவது அந்த வங்கியின் கடன் அட்டையை பயன்படுத்த நீங்கள் கட்ட வேண்டிய சேவை கட்டணத்தை குறையுங்கள்.

இதில் கவனிக்க வேண்டியது, வங்கி விற்பனை ஏஜன்ட்களின் வெறும் வாய் பேச்சை மட்டும் நம்பாமல் அதற்கான எழுத்து ஆதாரத்தை பத்திரமாக வைத்து இருங்கள். இதனால் இடைப்பட்ட இலவச சேவை காலத்தில் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்தால் நீங்கள் உங்கள் பணத்தை திரும்ப பெற இது உதவும்.

உங்கள் மாத ரசீதை கவனமாக படியுங்கள். நீங்கள் பயன்படுத்தாத அல்லது குறிப்பிட்ட இலவச சேவை காலத்துக்கு முன் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்து இருந்தால், உடனே சம்மந்தபட்டவர்களை அழைத்து, அதை திரும்ப உங்கள் கணக்கில் சேர்க்கும் படி செய்யுங்கள். உங்களுடைய அட்டையின் மொத்த கடன் அளவை தெளிவாக தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.

இது தவிர எந்த ஒரு கடன் அட்டை கணக்கை துவங்கும் முன், அந்த அட்டை சார்ந்த வட்டி விகிதத்தை பாருங்கள், மற்ற வங்கி அல்லது மற்ற கடன் அட்டை முறை (மாஸ்டர், விசா) விட அதிகமாக வட்டி இருந்தால், அந்த அட்டையை தவிர்த்துவிடுங்கள்.

மாத தவணை முறை என்பது ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபட்டாலும், பொதுவாக 29 முதல் 31 நாட்களுக்குள் வருமாறு தான் இருக்கும். எனவே நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு முதல் முப்பது நாள் வரை வட்டி இல்லை என்று சொன்னாலும், உங்களுக்கு வரும் ரசீது முதல் முப்பது நாள் தாண்டி வட்டியுடன் வராதவாறு பார்த்து கொள்ளுங்கள் அல்லது முதல் முப்பது நாளுக்குள் உங்களால் அந்த தொகையை திரும்ப கட்ட முடியுமா என்று சம்பந்தப்பட்ட வங்கியை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

முடிந்த வரை அந்தந்த வங்கி கடன் அட்டைகளை மட்டும் பயன்படுத்துங்கள். இரு மாறுபட்ட வங்கிகள் தொழில் கூட்டணியில் இருக்கும் கடன் அட்டைகளை தவிருங்கள் அல்லது சம்மந்தப்பட்ட இரு வங்கிகளுக்காக தனியான சேவை கட்டணம் எதுவும் இல்லை என்பதை முதலில் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

ஆக மொத்தத்தில், எந்த ஒரு கடன் அட்டையை தேர்வு செய்யும் முன், அது முடிந்த வரை அதிக இலவச சேவை கட்டணம் மற்றும் குறைந்த வட்டியுடைய வங்கி மற்றும் இதர வரிகள் இல்லாத கடன் அட்டையாக இருக்கும்படி முடிவு செய்ய வேண்டும்.

தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?

ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று படித்து புரிந்து இருந்தாலும், எல்லோராலும் அதை
முழுவதும் கடை பிடிப்பது என்பது சாத்தியமில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதை கட்டுப்படுத்தவாது நாம் நிச்சியம் தெரிந்து இருக்க வேண்டும்.

அப்படியும் முடியாதவர்கள், எல்லா நேரமும் கடன் அட்டையை கையில் வைத்து இருப்பதை தவிர்க்கலாம். இதனால் திட்டமிட்ட அவசியாமான பொருள்களை மட்டும் வாங்கும்படி நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

கடன் அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன், உங்கள் கடன் அட்டையில் மீதமுள்ள உங்கள் கடன் அளவை தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம். மேலும், நம் அன்றாட வாழ்கையில் வாங்கும் அந்த பொருளின் தேவையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

வெறும் ஆடம்பரத்துக்காக எதையும் வாங்கி உங்கள் கடன் சுமையை கூட்டிகொள்வது என்பது புத்திசாலித்தனமல்ல. அவசர காலத்தில் இது மேலும் உங்ககளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். முடிந்த வரை கையிருப்பை பயன்படுத்தி வாழ்வது நல்லது. மிக அவசியமான அல்லது அவசரமான காலத்துக்கு மட்டும் கடன் அட்டையை பயன்படுத்துவது மிக பாதுகாப்பனது.

எப்போது கடன் அட்டையை பயன்படுத்தினாலும் அடுத்து வரும் மாத தவணை ரசீதோடு ஒப்பிட்டு சரி பார்க்கும் வரை அந்த பொருள் வாங்கிய ரசீதை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். முடிந்த வரை அந்த பொருளின் விலை உங்கள் ஊதிய "மாத சேமிப்பில்" மூன்று முதல் நான்கு தவணைக்குள் அடங்குமாறு இருப்பது நல்லது. இதனால், உங்கள் இதர வாழ்க்கை தரம் பாதிக்காது என்பது மட்டுமில்லாமல், கடன் அட்டையின் வட்டி விகிதம் அதிகபட்சமாக 14.58% முதல் 29.99% வரை இருக்ககூடும் என்பதை நினைவில் வைத்து இருங்கள்.

மேலும் எந்த ஒரு தொகையும் மாத தவணையில் குறைந்தது மூன்று வருடம் அதாவது 36-க்கு தவணை வருமாறு வட்டியுடன் சேர்த்து வருவதால், குறைந்த பட்ச தவணை மட்டும் கட்டுவதை தவிர்த்து, முடிந்த வரை அதிகமாக கட்டுங்கள், தவணை கூட கூட வட்டியும் கூடும் என்பதால், அந்த மொத்த தொகைக்காக நீங்கள் கட்டும் வட்டியின் அளவை குறைக்க முடியும்.

முடியாத பட்சத்தில் கண்டிப்பாக குறைந்த பட்ச தவணையை மட்டும் கட்டுவது மிக மிக அவசியமாகும். இதனால் மேலும் வட்டி, தாமத கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் போன்றவற்றில் உங்கள் பணம் வீணாவதை தவிர்க்க முடியும்.

மிக முக்கியமாக உங்கள் கடன் அட்டையில் மீதம் உள்ள கடன் அளவை உங்கள் சேமிப்பு தொகையாக நினைக்க வேண்டாம். எதிர்பாராத விபத்து, வேலை இழப்பு போன்ற அவசர காலங்களுக்காக ஒரு சேமிப்பு எப்போதும் உங்கள் கைவசம் இருப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது?

மேலே குறிப்பிட்ட கருத்துகளை பின்பற்றும் போது, கடன் அட்டை(யை)களை பராமரிப்பது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. இருந்தாலும் தேவையற்ற இடங்களில், நேரங்களில் கடன் அட்டையை பயன்படுத்தாதது போல, அது சம்மதப்பட்ட தகவல்களையும் பயன்படுத்தக்கூடாது.

நண்பர்களிடம், மின் அஞ்சல் போன்றவற்றில் கடன் அட்டை விபரங்களை தவிர்க்க வேண்டும். அதன் ரசீது காகிதங்களை கிழித்தபின்தான் குப்பையில் போட வேண்டும். கடன் அட்டை முறைகேடு தொகைக்கு அதன் உரிமையாளரே முழுவதும் பொறுப்பு என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.



எப்போதும் உங்கள் கடன் தொகை, உங்கள் கடன் அட்டையின் மொத்த கடன் அளவுக்குள் இருக்குமாறு கடை பிடிப்பது மிக முக்கியம். இதனால் தேவையற்ற இதர வரி மற்றும் வட்டியை குறைக்க முடியும்.

மேற்ச்சொன்னபடி குறைந்த பட்ச மாத தவணையை கூட கட்ட முடியாவிட்டாலும், அது சம்மதப்பட்ட வங்கிகளின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போகாமல், நீங்களாகவே அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் அடுத்த தவணை நேரத்தை மாற்றி அமைப்பதே சிறந்தது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் எங்கே முழு தொகையையும் உடனே கட்ட சொல்லி விடுவார்களோ என்று பயந்து ஓடி ஒழிய வேண்டாம். உங்கள் மாத தவணையை மட்டும் வட்டியுடன் கட்ட முழு உரிமை உண்டு என்பதால், உங்கள் மாத தவணையை தவறாமல் கட்டும் வழியை மட்டும் பாருங்கள்.

வங்கிகளுக்கான பொதுவான தகவல் களஞ்சியம் "சிபில் தளத்தில்" உங்களை பற்றிய தகவல்களுடன் உங்கள் அணைத்து வங்கி மற்றும் கடன் அளவை மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளராக உங்கள் தவணை கட்டும் திறனை, அதாவது நேர்மையை எல்லா வங்கிகளும் பார்க்க முடியும் என்பதால் உங்கள் வாக்கில் நேர்மையை கடைபிடியுங்கள்.

அதாவது, உண்மையில் முடியாத ஒரு சூழ்நிலையில், உண்மையான மறுதவணை காலத்தை மட்டும் சொல்லுங்கள். 'இந்த மாதம் முடியாது; அடுத்த மாதம் இதற்கான தாமத கட்டணத்துடன் சேர்த்து கட்டி விடுகிறேன்,' என்று சொல்வதால் மற்றும் செய்வதால் யாரும் உங்களை பிடித்து "தூக்கில் போட போவதில்லை".

இதை விட்டுவிட்டு, 'இதோ இன்று கட்டி விடுகிறேன், நாளை கட்டி விடுகிறேன்' என்று தவறான சாக்கு போக்குகளை தந்து உங்கள் பெயரை சிவில் தளத்தில் கெடுத்துக் கொள்வதால், பிற்காலத்தில் தேவையான நேரத்தில் சில சிக்கல்கள் வரக்கூடும் என்பதை நினைவில் வைத்திருங்கள். ஒரு முறை இந்தத் தளத்தில் உங்கள் பெயரில் நம்பிக்கை இல்லாத வாடிக்கையாளர் என்று கருப்பு புள்ளி விழுந்து விட்டால், அது மாற உங்கள் நிதி நிலையை பொறுத்து மூன்று முதல் ஏழு வருடங்களாவது ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள கடனுக்கு உங்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் ஒரு வங்கி தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் உங்கள் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை தவிர, வேறு முறைகளில் உங்களை அணுகி துன்புறுத்தவோ மனஉளைச்சல் கொடுக்கவோ சட்டத்தில் இடம் இல்லை என்பதையும் நினைவில் வைத்து இருங்கள். அதனால் ஓடி ஒளிவதில் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

பல கடன் அட்டைகளை வருமானத்துக்கு மேல் பயன்படுத்தி விட்டு, அதில் இருந்து வெளியே வர துடிப்பவர்கள், ரவுண்டு - ராபின் மற்றும் மாற்று வங்கியின் குறிப்பிட்ட கால வட்டி இல்லா பண மாற்று முறையை கடை பிடித்தால், சீக்கிரம் உங்கள் கடன் தொகையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

மேலே சொன்ன இரண்டு முறைகளையும் பயன்படுத்த நினைக்கும் போது, குறைந்த வட்டி மற்றும் சேவை கட்டண முறையை பார்த்து தேர்ந்து எடுக்க வேண்டியது மிக முக்கியம்.

கடன் இல்லாத மனிதன் மிக குறைவு என்பதால் அதை அவமானமாக நினைக்காமல், குடும்பத்தாரிடம் மற்றும் உண்மையான நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து "தேவை என்றால் உதவி பெற்று" முடிந்த வரை உங்கள் கடனை அடைத்து விட்டு, தவறாமல் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவியவர்களுக்கு திரும்ப கொடுத்து விடுவதால் நல்ல உறவை அல்லது நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

அதுவும் முடியாதவர்கள் அருகில் உள்ள அரசாங்க கடன் அட்டை மற்றும் கடன் ஆலோசனை மையங்களை உடனடியாக தொடர்பு கொண்டு முடிந்த வரை விரைவில் உங்கள் கடன் சுமையில் இருந்து விடுபட முயற்சி செய்வதில் தவறில்லை.

ஆக மொத்தத்தில் கடன் அட்டை என்பதை அவசர கால துருப்பு சீட்டாக பயன்படுத்தவும், தினசரி வாழ்க்கை பயணச்சீட்டாக பயன்படுத்தாமல் இருக்கவும் கற்று கொள்ள வேண்டும்.

இப்படி சந்தோஷம் என்பது வெறும் ஆடம்பரத்தில் மட்டும் இல்லை என்பதை உணர்ந்து, இருப்பதை வைத்து வளமோடு வாழ்வதே நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஆனந்தம் தரும்.

நீங்கள் கடன் அட்டையை மற்றும் அதன் பாதிப்பை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் நினைத்தாலோ அல்லது மேல் சொன்னபடி கடன் அட்டையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி உள்ளே சென்று விட்டு வெளியே வர வழி தெரியாமல் உதவியை எதிர்பார்த்தோ நட்பு முறை இலவச ஆலோசனைக்கு, இங்கே பின்னூட்டமாக கேட்கலாம்.

கடன் அட்டையை நேசிக்கும் உங்கள் நண்பர்களிடம் இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து கொண்டு அவர்களும் பயன் பெற நீங்கள் உதவலாமே!

Friday, November 20, 2009

சைபர் கொரியா

டிஜிட்டல் கொரியாவை பற்றி முன்பு ஒரு பதிவில் பார்த்தோம், இனி இந்த பதிவில் சைபர் கொரியாவை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அறியப்பட்டிருக்கிறது, இப்போது இங்கு 90 சதவீதம் பேர் பிராட்பேண்டு என்று சொல்லப்படும் அகண்ட அலைவரிசை இன்டெர் நெட் வசதியை பெற்றுள்ளனர்.

கொரியாவில் பிராட்பேண்டு வசதி நீக்கமற நிறைந்திருந்தாலும் இதன் கட்டணம் என்னவோ உலகிலேயே மிகவும் குறைவாக இருக்கிறது. உலகம் இன்று மைஸ்பேஸ் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே கொரியாவில் இவர்களுக்கென்று தனியே ஒரு மைஸ்பேஸ் "சைவேர்ல்டு" எனும் பெயரில் பிரபலமாக இருக்கிறது. இந்த தளத்தில் 43 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த அளவு தென்கொரியா வலைப்பின்னல் தேசமாகவும் இருக்கிறது.

கொரியாவுக்கென்று தனியே ஒரு ஆன்லைன் விளையாட்டு உலகம் இருக்கிறது. "லீனியேஜ்" என்று பெயர். இதன் உறுப்பினர்களோ பிரபலமாக இருக்கும் "வேர்ல்டு ஆப் வார்கிராப்ட்" விளையாட்டு உலகின் உறுப்பினர்களை விட இருமடங்கு அதிகமாகும்.

சரி, இனி சைபர் கொரியாவை பற்றிய விபரங்களை பார்ப்போம், இங்கு படத்தில் உள்ளது ஏதோ "காதலர் தேசம்" போன்ற தமிழ் சினிமாக்களில் வரும் செட்டிங் அல்ல, இது ஒரு நகராச்சிக்கு உட்பட்ட இலவச இணைய பயன்பாட்டு மையம் ஆகும்.



நகரத்தில் உள்ள ஒவ்வொரு நகராட்சிக்கும் உட்பட்டு இங்கு இலவச இணையதள மையங்கள் முக்கிய தெருக்களில் இயங்குகிறது.

இலவசம் என்றதும் "ஏனோ தானோ" வாக இருக்கும் என்று நினைத்து உள்ளே போன எனக்கு அடக்க முடியாத ஆச்சரியம்.

அத்தனையும் அதி நவீன கணினிகள் மேலும் அதில் கேமரா, மைக் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது, இணையதள வேகமோ வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவு உள்ளது, ஒரு முழு திரைபடத்தை எந்த தங்கு தடையும் இல்லாமல் பார்க்க முடிந்தது அதுவும் நம்ம கலாச்சாரத்தின் படி "பாட்டும் பைட்டும் பார்வோர்ட்" பண்ணி பார்க்க முடிகிறது.

இங்கு யார் வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்குள்ள பதிவேட்டில் பெயரை குறித்து விட்டு பயன் படுத்திக்கொள்ளலாம், மேலும் குறைகளை குறித்து வைக்க அங்கு தனியாக ஒரு பதிவேடு உள்ளது.

நாம் உள்ளே சென்று பெயரை குறித்ததும் அங்கு பணியில் உள்ள இரண்டு அரசாங்க ஊழியர்கள் சிரித்த முகமாக நாம் பயன் படுத்த வேண்டிய கணினி எண்ணை சொல்லுவார்கள், நாம் இருக்கை தெரியாமல் தேடினால், அதில் ஒருவர் அதே சிரித்த முகத்தோடு நம்மை அழைத்து சென்று நம் இருக்கை காட்டுவார்.

(அந்த இடத்தில நிற்கும் போது "மந்திரி வரும் போது மட்டும்" வெள்ளை பொடியில் சுற்றி கோடு போட்ட நம்ம நகராச்சி கட்டிடமும் அதில் பணி புரியும் நம் மக்களின் "சிரித்த முகத்தையும்" ஒரு முறை நினைத்து பார்த்தேன்.)

அலுவலக மற்றும் பள்ளி இடைவேளை நேரங்களில் சிறியவர்களும் பெரியவர்களும் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் மற்றவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இந்த சலுகையை பயன் படுத்தி மகிழ்கிறார்கள்.

இது மட்டும் இல்லாமல், இங்கு கணினி துறை அல்லாத படிப்பு படித்தவர்களுக்கும், முதியவர்களுக்கும், அதிகம் படிக்கதவர்களுக்கும் இலவசமாக கணினி வகுப்புகள் எடுகின்றார்கள் அதுவும் "ஏனோ தானோ" என்று இல்லாமல் முறையாக அடிப்படை கணினி பயன்பாடுகளை கற்று கொடுக்கிறார்கள்.

மின் அஞ்சல் பயன் படுத்துவது, இணையத்தில் வங்கி கணக்குகளை பயன்படுத்துவது, இணையத்தின் மூலம் வீட்டு வரி, மின்சார கட்டணம், தொலை பேசி கட்டணம் கட்டுவது மேலும் இணையத்தில் விமான, ரயில் சீட்டுகளை வாங்குவது போன்று அனைத்து அடிப்படை கணினி பயன் பாட்டினை கற்றுகொடுகிறார்கள், இதன் இறுதியில் விருப்பம் உள்ளவர்களுக்கு தேர்வு வைத்து சான்றிதள் கொடுக்கப்படுகிறது.



அந்த சான்றிதளை பயன் படுத்தி அதிகம் படிக்காதவர்கள், வேலை தேடவும் இவர்கள் உதவுகிறார்கள், இதற்காக இவர்கள் எந்த கட்டணமோ "குறிப்பாக லஞ்சமோ" வாங்குவது கிடையாது.

(இவர்கள் சேவை செய்யும் விதத்தை படம் பிடித்து நம்ம ஊரு நகராச்சி, வேலை வாய்ப்பு மற்றும் அரசாங்க அலுவலகர்களை தினம் ஒருமுறை தேசியகீதம் பாடுவது போல பார்க்க சொல்ல வேண்டும் என்று தோன்றியது.)

ஏற்கனவே விமான நிலையம் போன்ற சுற்றுலா தளங்கள் அனைத்தும் இலவசமாக இணையத்தை பயன்படுத்துமாறு திறந்த இணைப்பு வசதிகள் உள்ளன, மேலும் சுற்றுலா பயணிகளை கவர நகரை அழகு படுத்துவது, ஆங்கில வசதியுடன் டாக்ஸி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது என சுறுசுறுப்பாக ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டு எடுத்து வைக்கிறார்கள்.
2010 ஆம் ஆண்டின் இறுதியில் இங்கு 100 சதவீதம் மக்களும் இணையத்தை பயன்படுத்த வைப்பது இவர்கள் நோக்கமாக இருக்கும் போல தோன்றுகிறது.

தென்கொரியா இது போல தொழிற்நுட்ப விஷயத்தில் முன்னணியில் இருப்பதோடு குடிமக்கள் இதழியல் என்று சொல்லப்படும் பொதுமக்களே பத்திரிகையாளர்களாக செயல்படும் போக்கிலும் முன்னணியில் இருக்கிறது. இதன் "ஓ மை நியூஸ்" செய்திதளம் இன்று இன்டெர்நெட் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் குடிமக்கள் இதழியலுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது.

இன்னும் சொல்ல போனால் சமீபத்தில் இரண்டாயிரம் கோடி செலவில் செய்த ஏவுகணை சோதனை வெற்றியில் முடியவில்லை என்றாலும் தோல்வியை கண்டு துவளாமல் தோல்வியை படிக்கட்டாக்கி மீண்டும் சோதிப்போம் நினைத்ததை சாதிப்போம் என்கிறார்கள்.

இன்று உலகில் டிஜிட்டல் மற்றும் சைபர் தேசம் என்று ஏதாவது ஒன்று இருக்குமாயின் அது தென்கொரியாதான் என்று சொன்னால் அது நிச்சியம் மிகையாகாது.



இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, வரும் ஆண்டுகளில் இந்திய-புலியும் (தேசிய சின்னம்) சீன-ட்ராகனும் வல்லரசாகும் என்று நாம் வெறும் வாயை மென்று அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கும் அதே வேளையில், சத்தமில்லாமல் கடின உழைப்பை நம்பி "நேர்மையான தலைமையை தேர்ந்தெடுத்து" அசுர வேகத்தில் தென்கொரியா எல்லா துறைகளிலும் முன்னேறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்று எனக்கு தோன்றுகிறது.

நூறு வருடங்களுக்கு முன் வெள்ளைகாரனை போல நாம் வளர இன்னும் நூறு வருடங்கள் ஆகும் என்று சொல்லி, அதை மட்டுமே குறியாக கொண்டு இதோ அந்த இடத்தை அடைந்து விட்டோம், அதோ அந்த இடத்தை அடைந்து விட்டோம் என்று மக்களை பாதயாத்திரை கூட்டி செல்லும் தலைமைகள், நம் திருநாட்டின் ஜாதி, மத, கொள்கை உள்பூசல்கள் என்னும் பூச்சை கொண்டு இந்த இடைப்பட்ட நூறு வருடத்தில் மற்ற நாடுகள் நம்மை விட இரநூறு வருடம் முன்னோக்கி ஓடிக்கொண்டு இருப்பதை பூசி மொழுகுகின்றன என்பதுதான் உண்மையோ என்றும் நினைக்க தோன்றுகிறது.

இதை வெறும் நாகரிக வளர்ச்சியை மட்டும் வைத்தோ அல்லது மேல் சொன்ன ஒரு சில துறைகளின் முன்னேற்றத்தை வைத்தோ சொல்வதாய் நினைக்க வேண்டாம், இன்னும் சில துறைகளின் வளர்ச்சியையும் அதில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் பின்பு ஒரு நேரத்தில் சமயம் கிடைக்கும் போது சொல்கிறேன்.

நன்றி.

Thursday, November 12, 2009

சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

பதிவுக்கு முன் ஜலீலாவின் அன்பு விருதுக்கு நன்றி.




பொருளியல் மந்தம் ஆட்குறைப்பு!?

நம் கணினி துறை மட்டுமில்லாமல் பொதுவாக எல்லா துறையை பொறுத்த வரையுமே இது ஒரு மோசமான காலம் என்பதை நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம், கடந்த 2001-2002-ம் ஆண்டு கூட இதே நிலை இருந்தாலும், அதன் பாதிப்பு இந்த அளவு இல்லை என்பதே உண்மை.

ஆகவே, நானும் இத்துறையை சார்ந்தவன் என்ற முறையில், இதன் வருங்காலத்தை பற்றி அறிந்து கொள்ள இது சம்மந்த பட்ட அனைத்து தகவல்களையும் படிப்பதை சமீபகாலமாக வழக்கமாக்கிகொண்டேன்.

சில மாதங்கள் முன் வரை எங்கு திரும்பினாலும், "பொருளியல் மந்தம்", " வேலை குறைப்பு", "சம்பள குறைப்பு" போன்ற தகவல்கள் மட்டுமே வந்து வேலை இழந்தவர்களை விட, "வேலை பார்ப்பவர்களைத்தான்" கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கின.

இப்போது உண்மையில் மந்தநிலை ஓரளவுக்கு மாறிவிட்டாலும், இன்னும் இந்த பொருளியல் மந்த நிலையை சாதகமாக்கி கொண்டு பல நிருவனங்கள் குறிப்பாக மென்பொருள் துறையில் தங்களுக்கு தேவையானதை சாதித்து கொள்வது என்பது, நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

அதாவது நீண்ட நாட்களாக பணி செய்த அனுபவத்தில் உயர்ந்த சம்பளத்தில் இருப்பவர்களை நீக்கி விட்டு அல்லது அவர்களை குறைந்த சம்பளம் உள்ள வேறு நாட்டு கிளைகளுக்கு மாற்றிவிட்டு, அதே வேலையை குறைந்த சம்பளத்தில் வேறு ஒருவரை நியமிப்பது .

ஏன் இப்படி? இந்த நிலை மாற நாம் என்ன செய்யவேண்டும்? என்ற தேடலின் ஆரம்பமே இந்த பதிவு.



சமீபத்தில் சிங்கையில் நான் தங்கி இருந்த நண்பரின் வீட்டில் சில தின பத்திரிகை செய்திகளை படிக்க முடிந்தது.

ஆகா, என்ன ஒரு தன்னம்பிக்கை தரும் தகவல்கள், மேலும் ஒரு தின பத்திரிகையில் எல்லா மக்களையும் சென்று அடையும் படி எவ்வளவு அழகாக "SWAT" சூத்திரத்தை (Strength.Weakness,Analysis,Target) விளக்கி சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல், எவ்வளவு துல்லியமான புள்ளி விபரங்களையும், நாட்டின் வளர்ச்சி பாதையையும், அதில் மக்கள் பங்கையும், எவ்வளவு அழகாக எடுத்துச்சொல்லி வழி காட்டுகிறார்கள்.

இதனால் எல்லா தரப்பு மக்களுக்கும், நாம் ஒரு மோசமான பொருளியல் சூழ்நிலையில் இருந்தாலும், எல்லா வகையிலும் நம்மை முன்னேற்ற ஒரு வலுவான, தரமான அரசாங்கம் நம்முடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை கொடுக்கும் இல்லையா?

இதன் மூலம் மக்கள் எந்த வகையான மனஉளைச்சலுக்கும் ஆளாகாமல், நாம் செய்ய வேண்டியது எல்லாம், நம் நாட்டிற்க்கு ஒத்துழைக்கும் வகையில், "ஒற்றுமையுடன் கூடிய கடுமையான உழைப்பு" மட்டுமே என்ற பாதைக்கு எளிதாக மக்களை கூட்டிச் செல்ல இது வழி வகுக்கும் இல்லையா?

அத்தகைய செய்திகளில் சிலவற்றை, இங்கே உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளேன், படித்து பாருங்கள்.

I - புயலைக் கடந்தோம், வலுவாக எழுவோம்.

பொருளியலைப் பொறுத்தவரை புயலை நாம் கடந்து விட்டோம் என்றாலும் சூழ்நிலை இன்னமும் தெளிவாக இல்லை. இருந்தாலும் இந்தச் சிரமத்தைச் சமாளித்துச் சாதிக்க சிங்கப்பூரிடம் பல சாதக அம்சங்கள் இருக்கின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். உலக சூழ்நிலை நிலைபெறுகிறது.சிங்கப்பூரின் தொழிலாளர் சூழல் நிலைபெற்று இருக்கிறது. சில நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில் மூன்றாம் காலாண்டு நன்றாக இருக்க வேண்டும் என்றார் திரு லீ சியன் லூங்.

அதற்கு அப்பால் பார்க்கையில் நிலவரம் தெளிவாக இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். ஹைஃபிளக்ஸ் போன்ற உள்ளூர் நிறுவனங்கள் நன்றாகச் செயல்படுகின்றன. புதிய தொழில் துறைகள் அரும்புகின்றன. ஊழியர்கள் மறுபயிற்சி பெறுகிறார்கள். பொருளியல் வளர்ச்சிக் கழகம் பன்னாட்டு நிறுவனங்களுடன் பத்து ஆண்டுத் திட்டம் ஒன்றைத் தீட்டி வருகிறது. அத்தகைய நிறுவனங்களை ஊக்குவித்து அவற்றின் அதி நவீன தயாரிப்பு ஆலைகளை, தலைமையகங்களை கட்டுப்பாட்டு நிலையங்களைச் சிங்கப்பூரில் அமைக்கும்படி செய்வது இலக்கு.

இந்த மாற்றங்களுக்குத் தோதாக ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் பாய லேபார் செண்ட்ரல், ஜூரோங் லேக் வட்டாரத்தில் புதிய பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். ஏற்கனவே 50 பயிற்சி நிலையங்கள் தீவு முழுவதும் இருக்கின்றன. இது பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் சொன்னார். புதிய உத்திகள், முதலீடுகள், ஊழியர்கள் மேம்பாடு ஆகியவற்றுடன் நாம் வலுவாக மறுபடியம் முன்னேறுவோம் என்று திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.

II - எதிர்பார்த்ததை விட அதிக லாபம் ஈட்டியது டிபிஎஸ் வங்கி.

டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக $552 மில்லியன் லாபம் ஈட்டியிருக்கிறது. இது முதல் காலாண்டை விட 21 விழுக்காடு அதிகமாகும். ஓராண்டுக்கு முன்பு கிடைத்த $652 மில்லியன் நிகர லாபத்தோடு ஒப்பிடுகையில், இது 15 விழுக்காடு குறைவாகும். ஆனால் ஆய்வாளர்கள் கணித்திருந்த $455 மில்லியனைவிட அதிகமாகும். சென்ற ஆண்டு இரண்டாம் லாண்டோடு ஒப்பிடுகையில், இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் வருமானம் 8 விழுக்காடு அதிகரித்து $1.79 பில்லியனை எட்டியது. டிபிஎஸ் குழுமத்தின் வலுவான அடிப்படைக்கும் வாடிக்கையாளர்களுடனான ஆழமான உறவுக்கும் 2009ம் ஆண்டு முதல் ஆறு மாதங்களின் பலாபலனே சான்று என்று டிபிஎஸ் தலைவர் கோ பூன் ஹுவீ கூறினார். டிபிஎஸ் குழுமம் பங்கு ஒன்றுக்கு 14 காசுகள் லாப ஈவை அறிவித்தது. முந்திய காலாண்டிலும் இதே லாப ஈவு வழங்கப்பட்டது.

III - அதே ஒற்றுமையுடன் மேலும் சாதிப்போம் மேம்படுத்தவும் உழைக்கவும் தயாராக இருந்தால் வேலைகள் உண்டு.

சிங்கப்பூர் வரலாற்றின் முதல் 50 ஆண்டுகளில் ஐக்கியமாக சிங்கப்பூரர்கள் சாதித்ததைப் போல் அடுத்த 50 ஆண்டுகளிலும் பலவற்றையும் ஐக்கியமாகச் சாதிக்கும் பெரும் பயணம் தொடங்கி விட்டது என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார். உடனடி, நீண்டகால அடிப்படைகளில் செயல்பட்டால் சிங்கப்பூரின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். ஐக்கியமாக இருந்தால் பொருளியல் பிரச்சினைகளைச் சமாளித்து வளரலாம். சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தலாம். சிங்கப்பூருக்குச் சேர்ந்து உருக்கொடுக்கலாம் என்றார் பிரதமர் லீ. சிங்கப்பூர் ஆறு, வீடுகள், புதுநகர்கள், சமூக நிலையங்கள், பள்ளிவாசல்கள் அனைத்தும் மேம்பட்டன.
சிங்கப்பூர் ஆறு முதல் மெரினா பே வரை முற்றிலும் சிங்கப்பூர் உருமாறி விட்டது. முதல்தர கல்வி முறை, எல்லாருக்கும் வசதியான பொதுப் போக்குவரத்து, வசிக்க, வேலைபார்க்க, விளையாடி மகிழ தலைசிறந்த இடமாகச் சிங்கப்பூர் உருவாகும். ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றி, இணக்கமிக்க பிணைப்புமிக்கச் சமூகமாகத் தொடர்ந்தால் அடுத்த 50 ஆண்டுகளில் கற்பனைக்கு எட்டாத மாற்றம் ஏற்படும் என்றார் திரு லீ.

IV - சிங்கப்பூர் வர்த்தகம் இரண்டாம் காலாண்டில் 3.8% அதிகரிப்பு.

சிங்கப்பூரின் மொத்த வர்த்தகம் இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களில் 14 விழுக்காடு சுருங்கிய பிறகு, இரண்டாம் காலாண்டில் 3.8 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. சென்ற ஆண்டு நான்காம் காலாண்டுக்குப் பிறகு மொத்த வர்த்தகம் வளர்ச்சி அடைந்திருக் கும் முதல் காலாண்டு இது. ஓராண்டுக்கு முன்போடு ஒப்பிடுகையில், மொத்த வர்த்தகம் இரண்டாம் காலாண்டில் 27 விழுக்காடு சுருங்கியது. முதல் காலாண்டில் வர்த்தகம் 28 விழுக்காடு சுருங்கியது. திங்கட்கிழமை காலை ஐஈ சிங்கப்பூர் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் முதல் காலாண்டில் 7.4 விழுக்காடு சுருங்கியபிறகு, இரண்டாம் காலாண்டில் 7.6 விழுக்காடு அதிகரித்தது. சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில், எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் இரண்டாம் காலாண்டில் 14 விழுக்காடு குறைந்தன. முதல் காலாண்டின் சரிவு 26 விழுக்காடு. மின்னணுப் பொருட்கள், மின்னணு அல்லாத பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்தது இதற்குக் காரணம். இவ்வாண்டில் மொத்த வர்த்தகம் 25 முதல் 22 விழுக்காடு சுருங்கும் என முன்னதாகக் கணிக்கப் பட்டிருந்தது. புதிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட பிறகு, மொத்த வர்த்தகம் 23 முதல் 21 விழுக்காடு வரை சுருங்கும் என்று கணிப்பு மாற்றப்பட்டிருக்கிறது. அதே வேளையில், எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் 12 முதல் 10 விழுக்காடு வரை சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் காலாண்டில் நடந்த மொத்த வர்த்தகத்தின் மதிப்பு $178 பில்லியன். இது முதல் மூன்று மாதங்களின் $165 பில்லியனைவிட அதிகம். மொத்த ஏற்றுமதிகளும் மொத்த இறக்குமதிகளும் இரண்டாம் காலாண்டில் முறையே 25 விழுக்காடும் 28 விழுக்காடும் சுருங்கின. மின்னணுப் பொருட்களின் உள்நாட்டு ஏற்றுமதி முதல் காலாண்டில் 32 விழுக்காடு சரிந்த பிறகு, இரண்டாம் காலாண்டில் 23 விழுக்காடு சரிந்தது. மின்னணுப் பொருட்கள் அல்லாத எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதி முதல் காலாண்டில் 21 விழுக்காடு சரிந்த பிறகு, இரண்டாம் காலாண்டில் 8.6 விழுக்காடு சரிந்தது.

இரண்டாம் காலாண்டில் தைவான் தவிர்த்து மற்ற பத்து முக்கிய சந்தைகளுக்கும் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதி சரிந்தது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடு களுக்குச் செல்லும் ஏற்றுமதியே மிகப்பெரிய சரிவைக் கண்டது. “மொத்த வர்த்தகத்தின் சரிவு ஓரளவு நிலைப்படுகிறது என்பதற்கான சில அறிகுறிகள் தெரிகின்றன. “உலகப் பொருளியலும் நிலைப்படுவதாகத் தெரிகிறது. இருந்தாலும், மந்தநிலை இன்னும் முடியவில்லை என்பதால் பொருளியல் மீட்சி மிதமாகவே இருக்கும்” என்று ஐஈ சிங்கப்பூர் தெரிவித்தது.

இவ்வாண்டின் எஞ்சிய மாதங்களில், வெளி நிலவரங்கள் தொடர்ந்து நலிவடையும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் அது எச்சரித்தது.


நம் பாரதி கனவு கண்ட "சுதேசிமித்திரன்" பத்திரிக்கையை போல, வியாபார நோக்கம் மட்டுமே குறியாக இல்லாமல், சிறந்த மக்கள் சேவை செய்துவரும் சிங்கை "தமிழ் முரசு" என்னும் அந்த பத்திரிகைக்கு மேலும் வளர மற்றும் தன் மக்கள் சேவையை தொடர "என் மனமார்ந்த வாழ்த்துக்கள்".

சரி, இனி நம் பதிவை பார்ப்போம்.

இந்த தகவல்களை படிக்கும் போது நமக்கு என்ன தோன்றுகிறது? எவ்வளவு நம்பிக்கையான தகவல்கள், எவ்வளவு கடைமை உணர்வு மற்றும் நாட்டின் வளர்ச்சியின் அக்கறை கொண்டுள்ள உண்மையான தலைவர்கள்.

இதை போல வழிகளை, நாம் ஏன் கடை பிடிக்க கூடாது! என்ற எண்ணம் வருகிறது இல்லையா?

அதெல்லாம் சரி, இதற்கு தனிப்பட்ட நாம் அல்லது பதிவராகிய நாம் என்ன செய்ய முடியும்?

இதை நடிகைக்கு "வரும் காதல் எஸ்.எம்.எஸ்-சையும்", "குடும்ப விவாகரத்து மற்றும் விபச்சார பிரச்னைகளையும்" கலர் படத்துடன் முதல் பக்கத்தில் போடும் சில பல "பத்திரிக்கைகள்" அல்லவா இதை செய்ய வேண்டும் என்று நினைக்க கூடும்.

நிச்சியம் இல்லை நண்பர்களே, "இணையம்" இன்று இதுதான் உலகின் முன்னணி மற்றும் வேகமான "லாப" நோக்கம் மட்டும் குறியாக இல்லாத பத்திரிக்கை.

எந்த பத்திரிக்கை பிரதிகளும் செல்லாத இடம், நாடு, எல்லாம் நம் மக்களை வீட்டில் சென்று நேரில் சந்திப்பது உங்கள் தமிழ் பதிவுகள் இல்லையா?

அது மட்டுமில்லாமல், அனேகமாக நம் எல்லா பத்திரிக்கைகளும் இன்று பதிவுலக பதிவில் இருந்து, நல்ல தகவல்களை எடுத்து மக்களுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளன இல்லையா?

அப்படி இருக்கும் போது, நாம் ஏன் நம்மால் ஆனா முயற்சியை செய்ய கூடாது?

சரி, அப்படி என்னதான் செய்ய முடியும்?

இன்று பதிவு உலகில் கணினி துறை மட்டுமில்லாமல் எல்லா துறைகளையும் சார்ந்தவர்கள் இருப்பதால், உங்கள் பதிவுகளில் உங்கள் துறை சார்ந்த நல்ல தகவல்களை, பொதுவான வளர்ச்சி விகிதத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பொருளியலைப் பொறுத்தவரை நிலைமை இன்னும் முழு சீராகாவிட்டாலும், கீழ் நோக்கி சென்ற "மந்தநிலை மாறிவிட்டது" என்பதே உண்மை இதை அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைய செய்யலாமே?



உங்கள் துறை, அலுவலகத்தின் சென்ற காலாண்டு வளர்ச்சியோடு ஒப்பிட்ட இந்த மற்றும் வரும் காலாண்டு வளர்ச்சியை பற்றி பொதுவாக கொடுக்கக்கூடிய புள்ளிவிபரத்தை கொடுங்கள்.

உங்கள் துறை, அலுவலகத்தின் வேலை வாய்ப்பை மற்றும் வேலைக்கு எடுக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள், வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் உங்களுக்கு தெரிந்த புதிய வேலை வாய்ப்பு முறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் பதிவின் மூலம், எந்த தரப்பு மக்களுக்கும் நியாயமான ஊதியம் கிடைக்கும், எந்த தரப்பு வேலையையும் செய்யமுன் வரும் ஒரு விளிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள்.

உங்கள் பதிவுகளை போல் பத்திரிகைகளும், ஊடகங்களும் சரியான, உண்மையான நிலையை மற்றும் "இன்று மக்களுக்கு உண்மையில் தேவையான தகவல்களை" கொடுக்க முன் வரும்.

அப்படி இல்லாமல் நாட்டு வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் இல்லாத செய்திகளுக்கு முன்னுரிமை, அங்கிகாரம் தருவதை தவிர்த்து பாருங்கள்.

இத்தகைய நம் போக்கு, இது வரை வேலை இழந்தவர்களுக்கும், இனி புதிதாக வேலைக்கு வர இருப்பவர்களுக்கும், எதிர்காலம் பற்றிய மனஉளைச்சலை முதலில் நீக்கி தன்னபிக்கை கொடுக்கும்.

இதனால் நம் மூத்த தலைமுறை மக்கள் மற்றும் நம் நாடு, நம்மை ஒரு நல்ல பாதையை நோக்கி அழைத்து செல்கிறது என்ற நம்பிக்கையில் மக்கள் மனம் சீராகி, தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் தேவையான எந்த வேலையானாலும் கடின உழைப்போடு செய்ய மகிழ்ச்சியாக தயார் ஆவார்கள்.

தம் "திறமையையும், கடின உழைப்பையையும்" மட்டும் மக்கள் நம்பும் நிலை வெகுவிரைவில் வர, இந்த பொருளியல் மந்த நிலையை சாதகமாக்கி கொண்டு, "ஒழுக்கமான வாழ்கைக்காக ஒரு வேலை என்ற நிலையை மாற்றி, வேலை மட்டுமே வாழ்கை என்று மனஉளைச்சலை" தரும் சூழ்ச்சகங்கள் பலன் தராமல் போகிவிடும்.

இதன்பின் மனித நேயம் இல்லாத வெறும் "லாப" நோக்கம் மறைந்து, மீண்டும் தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலையுடன் அதற்கு தகுந்த ஊதியத்துடன் வாய்ப்புகள் மக்களை தேடி வர ஆரம்பித்து விடும்.

பிகு:- இந்த பதிவின் கருத்து நம் மக்களுக்கு பயன்படும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் நண்பர்களுடன் இந்த பக்கத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே.

Wednesday, November 4, 2009

நான் ஆத்திகனா! நாத்திகனா! - இறுதி பாகம்.

அருமையான ஒரு சிங்கப்பூர் பயணம், நண்பர் கிரியைத்தான் சந்திக்க முடியவில்லை, மன்னிக்கவும் கிரி.

ஆனால், என் நண்பர் முரளியையும் அவர் நண்பர் விக்னேஷ்சையும் சந்திக்க முடிந்தது, அவர்களுடன் நான்கு நாட்கள் நேரம் போனதே தெரியவில்லை.

சரி, இப்போது போன பதிவில் விட்டதை தொடர்வோம்.


யார், என்ன சொன்னால் நமக்கென்ன, நம் மனதை கேட்டு பார்ப்போம், உண்மைல நீ யாரூடா செல்லம்? என்று எனக்குள் நானே குழம்பியபோது...

ஒரு வேளை நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு நாத்திகனோ?

ஈ.வெ.ராவின் கொள்கையைத்தான் விரும்புகிறோமோ? என்று அதில் உள்ளே போக, என்ன ஒரு ஆச்சரியம்!

மனிதனை மதி என்று சொன்ன அந்த பகுத்தறிவு-வாத நாத்திகரின், ஒரே ஒரு கொள்கைதான் கடவுள் இல்லை என்பது.

அது தவிர, சமூக சீர்திருதத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் அந்த பகுத்தறிவு தலைவர், இன்னும் எத்தனையோ முத்து முத்தான உயர்ந்த கொள்கைகளுடன் போராடியிருகிறார்.

இதை பற்றி அவரே "குடி அரசு பத்திரிகை மே 1 1927 ம் ஆண்டு "குடிஅரசின் இரண்டு ஆண்டு பணி" என்ற தலைப்பில் எழுதியதில் " என்னென்னவற்றையோ, யார் யாரயோ கண்டித்திருக்கிறேன், எதை கண்டித்திருக்கிறேன், யாரை வையவில்லை என்று எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை" என்று எழுதியும் இருக்கிறார்.



அந்த ஒரே ஒரு நாத்திக கொள்கையை தவிர, அவரின் மற்ற அனைத்தும் எனக்கும் பிடித்து இருக்கிறதே.

ஒரு வேளை அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த வாழ்கை முறை நாகரீகத்தின் படி, கடவுள் நம்பிக்கைதான் மற்ற சமுதாய இன்னல்களுக்கு அடிப்படை, என்று அவர் நினைத்து இருக்கலாம் இல்லையா?

ஆனால், இன்று தலைமுறைகள் மாறிய பின்னும், ஏன்? அவரின் அந்த ஒரே ஒரு நாத்திக கொள்கை மட்டும் முன்னிருத்த படுகிறது என்றேன்?

அப்போது தானே, கடவுளை நம்பும் இந்த முட்டாள்களின் ஓட்டை பெற்று ஆட்சியை பிடிக்க முடியும் என்றது பதில்.

என்னடா இது? அவர் கொள்கையும் திரித்து விட படுகிறதா?

கடவுளை நம்புவர்களை முட்டாள் என்று மட்டும் தான் சொன்னார், ஆனால் இதை பயன் படுத்தி பலன் அடைபவனை மகா மகா அயோக்கியன் என்று சொன்னாரே?

மேலும் நல்ல சமூக சீர்திருத்த பகுத்தறிவு இயக்க தலைவன் என்பவன், எந்த கட்சி, அரசியல் பதவிக்கும் ஆசை பட கூடாது என்று சொல்லிதானே தனக்கு கிடைத்த மற்றும் தன்னை தேடி வந்த பதவிகளை வேண்டாம் என்று மறுத்தார்?

சமூகத்தில் இறங்கி வேலைசெய்து சுத்தப்படுத்த நினைக்கும் பகுத்தறிவு லட்சியவாதியான நாம், ஏன் கட்சி பதவி ஆட்சியை பற்றி கவலைப்பட வேண்டும், போட்டியிட வேண்டும்? மாற்று கொள்கை உள்ள வேறுகட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும்?

(இந்த கொள்கை பிடிக்கவில்லை என்று, இங்கிருந்து பிரிந்து போனவர்கள்தானே அனைவரும்)

அப்புறம் நமக்கும் மற்ற அரசியல் வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

அப்படி என்றால் ஈ.வெ.ரா என்ற சமூக சீர்திருத்தவாதியின் நல்ல சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் இங்கு நம்மாலேயே சிதைக்கப் படுகிறதே? அவரின் உண்மையான அடிப்படை கொள்கை இங்கு அடிபடுகிறதே? என்றேன்?

இந்த முறை அவர்கள் கையை காட்டும் முன் நானே..

இவற்றால் பலனை அடைகிறவன் மகா மகா அயோக்கியன் என்று அந்த தலைவனின் வார்த்தையை திரும்ப ஒரு முறை சொல்லிவிட்டு வர...

என்னப்பா இது ரஜினி மாதிரி சாமி இருக்குன்ன, அப்புறம் கமல் மாதிரி எல்லாமே எல்லோருமே சாமின்ன, இப்ப சத்தியராஜ் மாதிரி மாத்தி மாத்தி பேசுற, ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாத்தான, அதுக்கு பொருத்தமான ஒரு பொண்ண பாக்க முடியும்? என்றார்கள் பெற்ற கடைமை தவறாமல்.

ஓ, நம்ம கலாச்சார வாழ்க்கைபடி, பெண் கொடுக்க இது எல்லாம் முக்கிய தகுதியாச்சே! என்று.


போங்கடா...அணு குண்டே போட்டு சுடுகாடானாலும், உழைப்பை நம்பி உயர்ந்த ஜப்பானுக்கு போக போகிறேன் என்று சொல்லிவிட்டு, போய்விட்டேன்.

இடையில் உழைப்பை மட்டும் நம்பும் இவனுக்கு, நம்பி பெண்ணை கொடுக்கலாம்னு, என்னையும் நம்பி ஒரு நல்லவர் என் தங்கமணியை கொடுத்து விட்டார்.

அங்க போனா, செஞ்சது இயந்திரம் என்றாலும், அவர்களும் குனிந்து குனிந்து கும்பிட்டார்கள்! சிறந்த தலைவர் என்றார்கள்! என்னடா இது ஜப்பனுமா? யார் இது எல்லாம் என்றால்?

என்னை, ஏற இறங்க பார்த்து கேட்டார்கள், நீ உண்மையில் இந்தியனா? புத்தரை, சுபாஸ்சந்திரபோசை எல்லாம் யார் என்று கேட்கிறாய்? என்றார்கள்.

ஓ, நம் நாட்டில் உள்ள உள்குத்து பிரச்சனைகளில், நம் நாட்டில் பிறந்த நல்லவர்களை நாம் மறந்தாலும், உலகம் அவர்களை கொண்டாடுகிறது என்று பெருமை பட்டு கொண்டேன்.

சரி, ஜப்பானே கடைபிடிக்கும் போது, நாமும் அம்பேத்காரை போல புத்த கொள்கைகளுக்கு போய்விடுவோம் என்று பார்த்த போது, இலங்கை, ஜப்பான், சீனா, வியட்னாம், தென்கொரியா நாடுகள் என்னை வரவேற்றது.

அன்பே கடவுள் என்று சொல்லும் புத்தரையும், இயற்கை வளமான தகுதியையும் வைத்து இருப்பதால் சிங்கப்பூரை போல, ஆசியாவில் மிகசிறந்த இடமாக வந்து விடும் என்ற பயந்த நாடுகளின் சதியில் சிக்கி, அன்பின் அடையாளமே இல்லாத போர்களமாக மாறி விட்டதால் அப்போது, இலங்கை செல்ல என் மனம் விரும்பவில்லை.

இந்தியாவில் பிறந்த புத்தரின் கொள்கைகளை ஜப்பானில் ஆரமித்து வியட்னாமில் தொடந்து தென்கொரியாவில் வாழ்ந்து பார்க்க, முடிவில் கிடைத்து ஒரு சிறிய கதை.



அதாவது அரண்மனை, நாட்டை விட்டு காட்டுக்கு சென்று, போதி மரத்தடியில் முக்தி பெற்று, புத்தர் பல வருடங்கள் கழித்து தன் சொந்த நாட்டுக்கு வருவதாய் தகவல் வர, நாடே

அந்த மகானை வரவேற்க திருவிழா கோலம் கொண்டது, புத்தரும் வந்தார்.

அவரை வரவேற்ற அவரின் மனைவி, கடவுளை தேடி சென்றீர்களே! கண்டுவிட்டீர்களா அந்த கடவுளை என்று கேட்டார்?

புத்தரும் "ஆம்" என்றார்.

அப்படியா மிக்க மகிழ்ச்சி, யார் அந்த கடவுள்! எங்கே அவர்! என்றார்?
புத்தரும் "அன்பே கடவுள்" என்றார்.

அவர் மனைவி மீண்டும் சொன்னார், இதை தேடவா எங்களை எல்லாம் தனியாக தவிக்க விட்டுவிட்டு போனீர்கள்?

நானும், உங்கள் பெற்றோரும், இந்த நாட்டு மக்களும், உங்கள் மீது வைத்துதிருக்கும்
உண்மையான அன்பில் அந்த கடவுள் உங்களுக்கு தெரியவில்லையா என்று?

(கடவுளே ஆனாலும், பொண்டாட்டி கேள்விக்கு பதில் சொல்ல முடியாதுன்னு இங்கதான் புரிஞ்சுகிட்டேன்.)

அட்ரா சக்கை, சோக்கா கேட்டாங்க பாரு கேள்வி? ஆமா உண்மை தான? இதை தேடவா அவரு போதி மரம் தேடி போனாரு என்று நானும் கேட்க?

"குங்பு" தெரிந்து இருந்தாலும், புத்தமத துறவி என்பதால் அடிக்க கூடாது என்று நினைக்கிறேன், என்பது போல அவர் பார்க்க, நானே வீட்டிற்கு ஓடி வந்து விட்டேன்.

ஓடி வந்து, முகம் கழுவி துடைக்கும் போது கண்ணாடியில் பார்த்தால்...பாதி வாழ்கை முப்பது ஆண்டுகள் முடிந்து போய் இருந்தது.

பாதி வாழ்க்கையே முடிந்து விட்டது, இது வரை என்ன கிழித்து விட்டோம் என்று நினைத்து கொண்டு, தின தேதியையாவது கிழிப்போம் என்று கிழித்தபோது கண்ணில் பட்டது, வீரத்துறவி விவேகானந்தரின் படமும் வாக்கும்.

சரி ஆனாது ஆச்சு, இவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கும் முடிவில், படித்தால் அவர் சொல்கிறார்.

"நீ என்னவாக ஆக நினைக்கிராயோ, அதுவாகவே ஆகிறாய்."

"ஒருவர் சொல்வதை நம்பாதே, ஏன் என்றால் அது இன்னொருவர் சொன்னது,

படித்ததை நம்பாதே, ஏன் என்றால் அது இன்னொருவர் எழுதியது,

உண்மையை நீயாக உணரவேண்டும், அந்த அனுபவமே உண்மை, அப்போது உனக்கே புரியும், நீ யார் என்று."

அட இது நல்லா இருக்கே, நம் அனுபவத்தை நாமே ஏன் உணர்ந்து பார்க்க கூடாது? என்று அத்தனையையும் எழுதி பார்த்தால், நம்ப மறுக்கலாம் ஆனால் அதுவே நிஜம்.

சொல்வது வெவ்வேறு மொழியானாலும், நானறிந்த தமிழில் மொழிபெயர்த்த போது அத்தனைக்கும் அர்த்தம் என்னவோ ஒரே அர்த்தம்தான் வருகிறது.

அதாவது எல்லா சந்தர்ப்ப சூழ்நிலையையும், மாறுபட்ட மனித குணாதிசையங்களையும் தொகுத்து கொடுத்து, ஒரு தனிப்பட்ட மனித வாழ்கையில், எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ கூடாது, என்பதை மட்டும்தான் அத்தனை வேதமும் சொல்கிறது.

இதில் அடிப்படையாக இருப்பது "நம்பிக்கை", கடவுள் உண்டு, கடவுள் இல்லை, எல்லோரும் கடவுள், இவர் மட்டுமே கடவுள், அன்பே கடவுள் இப்படி கொள்கை எதுவானாலும், அந்த கொள்கைவாதி அதன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டுமே இங்கு பொதுவானது.

சரி, இப்படி உணர்ந்து பார்த்தால், நீ யார் என்று உனக்கே தெரியும் என்றாரே? அப்படி பார்க்கும் போது நான் யார் என்று பார்த்தால்.

முதலில், கஷ்டத்தில் மட்டும் காப்பாற்ற சொல்லி கடவுளை வேண்டும் ஆத்திகனாக, ஒரு பிச்சைகாரனை போல இருந்தேன்.

பின், என் சந்தோசங்களில் மற்றும் நிரந்தரமில்லாத சிற்றின்பம் தான் வாழ்கை என்று, கடவுளை நினைக்காத ஒரு நாத்திகனாக இருப்பதாக நினைத்து, என்னை மறந்த மமதையில் ஒரு மிருகத்தை போல இருந்தேன்.

அதெல்லாம் சரி, இதெல்லாம் உணர்ந்து இப்போது நான் என்னவாக இருக்கிறேன் என்று பார்த்தால்.....

சுகமோ துக்கமோ, காலை எழுத்தவுடன், படுக்கும் முன் மற்றும் ஒவ்வொரு வேலையை துவங்கும் போதும், முடிக்கும் போதும் என் கடமையை நான் ஒழுங்காக செய்து விட்டேன் என்று கடவுளுக்கு நன்றி சொல்லி, மற்ற எல்லா நேரமும் பொய், துரோகம், அரசியல் இல்லாத நேர்மையான வாழ்க்கையை மற்றும் என் உழைப்பே கடவுள் என்று ஜாதி மத பேதம் இல்லாத மனிதனாக இருக்கிறேன்.


இதைத்தான், அவர் எல்லா உயிரினங்களிலும் உயர்ந்தது மனிதன், என்று சொல்லி இருக்கிறார் என்பதும் புரிந்தது.

இப்போது நிமிர்த்து பார்த்தால், நான் என் மதத்தில், இனத்தில் (மனிதஇனம்), நம்பிக்கையில், கொள்கையில் இன்னும் கடை பிடித்து நடக்க எவ்வளவோ நல்ல சிந்தனைகள், செய்கைகள் உள்ளது.

அதை முழுதாக தெரிந்து கொண்டு உண்மையாக கடைபிடிக்கும் முயற்சியில் இறங்கிய போது, மற்ற எந்த மதமும், கொள்கையும் தவறென்று குறை, குற்றம் கண்டுபிடிக்க எனக்கு உண்மையில் நேரம் இல்லை.

ஹலோ, இப்ப எதுக்கு தேவைஇல்லாம, இது எல்லாம் பேசுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கும்...

என்ன பேசுவதென்று புரியாமல்தான் இதெல்லாம் பேசுகிறான் என்று புரிந்தவர்களுக்கும்...

சொல்ல நினைத்தது என்னான...

தனிப்பட்ட நாம் ஒவ்வொருவரும் விரும்பும் கொள்கை, நம்பிக்கையில், நாம் எல்லாம் தெரிந்து கொண்டோம் என்று நடிக்காமல், உண்மையில் அதை முழுதாக புரிந்து அறவழி நடக்க, அதில் எவ்வளவோ நல்ல பாதை மற்றும் கருத்துகள் இன்னும் நாம் அறியாமல் இருக்கிறது, முதலில் அதை சரியாக செய்கிறோமா என்று மட்டும் பார்ப்போம்.

உங்கள் கொள்கை, நம்பிக்கை எதுவானாலும், அதன் கருத்துகளை முழுமையாக புரிந்து கொண்டு அது படி நடப்பதை தவிர்த்து, மற்றவர்களின் கொள்கை, நம்பிக்கையில் குறைகளை தேடி, விவாதிக்க முயற்சிப்பது,நான் ஒரு முட்டாள் என்று, நானே என் நெற்றியில் எழுதிகொள்வதற்கு சமமாகும்.

இதன் முடிவில் கிடைப்பது ஒன்றும் இல்லை, ஆனால் இழப்பது நிச்சியம் பொன்னான காலம், வாழ்கை என்பது உறுதி.

அப்படியும் மற்றவர் நம்பிக்கையில் குறையை தேடினால், நீங்கள் நம்பும் கொள்கை, மதத்தில் சொல்லி உள்ள எந்த ஒரு பாவத்தையும் செய்யாத (பாவத்தை செய்யாத மாதிரி நடிப்பவர் அல்ல) ஒருவர் வந்து மற்றவர் நம்பிக்கையின் மீது குறை என்னும் முதல் கல்லை எறியட்டும் என்று, அந்த இடத்தை காலியாகவிட்டு பாருங்கள், நிச்சியம் அது காலியாகவே இருக்கும்.

ரமலானுக்கு நோன்பு கஞ்சி வாங்கி குடித்தோமா, தீபாவளிக்கு லட்டு வாங்கி ருசிச்சோமா, கிரிஸ்மஸ்க்கு பிலம்கேக் வாங்கி அடிச்சோமா, என்று எல்லோரும் எல்லா நேரமும் மகிழ்ச்சியாக வாழ்கையை வாழ்வதை விட்டு விட்டு, மதவாதிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு ஆளாவதில் பயன் ஒன்றும் கிடைக்கபோவதில்லை.

ஆனா ஒன்னு, இப்ப எல்லாம், நான் ஆத்திகனா நாத்திகனா என்று நினைப்பதே இல்லை, அதனால் எனக்கே தெரிகிறது, புரிகிறது, என் வாழ்க்கை என் கையில் மட்டுமே.

பிறப்பில் வருவது யாதென இறைவனை கேட்டேன்?
பிறந்து பாரென்று இறைவன் சொன்னான்!

வாழ்வில் வருவது யாதென கேட்டேன்?
வாழ்ந்து பாரென்று சொன்னான்!

இறப்பில் வருவது யாதென கேட்டேன்?
இறந்து பாரென்று சொன்னான்!

இறைவனை பார்த்து சிரித்து கேட்டேன்...

அனுபவித்தே அத்தனையும் புரிந்து கொண்டால்? ஆண்டவனே நீ எதற்கு?

பலமாய் சிரித்து இறைவன் சொன்னான்...

அந்த அனுபவமே நான்தானடா.


என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி.
 

Blogger Widgets