Tuesday, September 21, 2010

கதவை திறந்தால்தானே காற்று வரும்!

இதன் முன் பகுதியை நீங்கள் படிக்கவில்லை என்றால், கதவை திறந்தால் கண்டிப்பாக காற்று வரும்! ஒரு முறை படித்துவிட்டு இதை தொடரலாமே?

முந்தைய பதிவை தொடர்வது,

நமக்கு என்ன தேவை?

ஆரம்ப நிலையில் நம்முடைய தியானம் என்பது என்ன?

குடும்ப வாழ்க்கை சூழலில் இருக்கும் நம்முடைய தேவை என்பது, நம்முடைய மனஉளைச்சலை தவிர்க்க, பிரச்சனைகளை எளிதாக சந்தித்து குழப்பமில்லாத முடிவெடுக்க தேவையான தெளிவான மன, உடல் நிலை மட்டுமே.

இதற்கான சிந்தனையையும் உடல்நிலையையும் தியானம் செய்வதன் மூலம் எளிதாக பெறமுடியும் என்று நம்புகிறேன்.

தியானம் என்றவுடன், ஒரு யோகியை போல உச்ச கட்ட நிலையை பற்றி சிந்திக்காமல், நமக்கு தேவையான ஆரம்ப நிலையை பற்றி மட்டும் தற்போதைக்கு சிந்திப்பதுதான் இங்கு என் நோக்கம்.

சிந்தனைகளும், நினைவுகளும் நிறைந்ததே நம் மூளை, அதை நாம் கட்டுபடுத்த பழக வேண்டும், இதுவே நம் ஆரம்ப நிலை தியானம்.

இதற்காக நமக்கு தேவை ஒரு அமைதியான இடம் மட்டுமே, அது நம் வீட்டின் அல்லது நமக்கு பிடித்த எந்த ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.



மூளையின் கட்டுபாட்டில் நாம் செல்லாமல் எடுத்தவுடன் நம் சிந்தனை அனைத்தையும் கட்டுபடுத்துவது என்பது சிறிது கடினமாயினும், தொடர்ந்து பயிற்சி செய்யும் போது அது சாத்தியப்படும்.

இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன், தியானத்திற்கும் ஜாதி மதத்திற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது, அது நடுவில் வந்த வியாபாரயுக்தி மட்டுமே.

அதனால் இதை பற்றி குழப்பிக்கொள்ளாமல், உங்களுக்கு பிடித்த இடத்தில் வசதியான ஒரு முறையில் அமரவும், காரணம் நீங்கள் அமரும் முறை அல்லது அணிதிருக்கும் உடை உங்களை தொந்தரவு செய்யக்கூடாது.

எனவே உங்களுக்கு ஏதுவான, எளிதான ஒரு முறையில் அமர்ந்து கண்களை மூடி நிதானமாக சுவாசிக்கவும்.

நாம் பார்க்கும் எந்த ஒரு விசையத்தையும் பொருத்து நம் சிந்தனைகள் வளரக்கூடும் என்ற காரணத்தால்தான் கண்களை மூடுவது.

அப்படியே அமைதியாக சுவாசத்தை இழுத்து விடுங்கள், ஆனால் சுவாசிக்கும் முறையை பற்றி சிந்திக்க வேண்டாம்.

இப்படி உங்கள் உடல் ஒரு நிலையை அடைந்ததும், உங்கள் சிந்தனைகள் பலவாறு ஓட தொடங்கும், அந்த சிந்தனைகளை பின்தொடராதீர்கள்.

சிந்தனைகள் நம் கட்டுபாட்டில் இருக்க வேண்டுமே தவிர, சிந்தனைகளின் கட்டுபாட்டில் நாம் ஒரு போதும் இருக்ககூடாது.

We are what our thoughts have made us; So take care about what you think. Words are secondary. Thoughts live; They travel far. - Swami Vivekananda

நிதானமாக சுவாசத்தை தொடருங்கள், உங்கள் சிந்தனைகள் நீங்கள் சுவாசிக்கும் அளவையும் ஆழத்தையும் பின் தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள், சுருக்கமாக எந்த ஒரு சிந்தனையும் செயலும் இல்லாத அமைதியான நிலையில் இருக்கவும்.

ஆரம்ப கட்டத்தில் இது சற்று கடினமாக தெரிந்தாலும், நாளடைவில் மிக எளிதாகிவிடும், அப்படி மாற மாற தியானிக்கும் போது உங்கள் சிந்தனைகளின் அளவு குறைய ஆரமிக்கும்.

இப்படி உள்ளும் வெளியும் எந்த ஒரு சிந்தனையும் ,செயலும் இல்லாமல் உங்கள் சிந்தனைகள் குறைய குறைய, உடலின் சக்கரங்களில் சுழலும் உங்கள் சுவாசத்தின் அளவும் தானாக குறையும்.



இதை தொடர்ந்து செய்து வர நாளடைவில் முழு சிந்தனை இல்லாத நிலையை அடையும் போது, நம் சுவாசத்தின் அழுத்தமும் குறைந்து குறைந்து நம்மை தியான நிலைக்கு எடுத்து செல்லும்.

இந்த நிலையை ஒருவர் அடையும் போது அவர் முழு தியான நிலையை அடைகிறார், நாசியில் சுவாசம் இருப்பது போலவே உணரமுடியாது, மனதில் எந்த சிந்தனையும் இருக்காது.

இதுவே முழு தியான நிலை.

இப்படி ஒரு தியான நிலையில் இருக்கும் போது நம் உடல் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை (Cosmic Energy) பெறுகிறது, அந்த சக்தி நரம்புகளில் பரவி உடலின் உள்ள எல்லா பகுதிகளுக்கு செல்கிறது.

எவ்வளவு அதிகமாக தியானம் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம் உடல் சக்தியை பெறுகிறது, அந்த சக்தி மனஉளைச்சல் மற்றும் உடலில் உள்ள தீமைகளை, நோய்களை அகற்றுகிறது (Cosmic Energy Healing for Health) என்று தியான நூல்களில் சொல்லப்படுகிறது.

சாதாரணமாக ஒரு குடும்ப வாழ்கையில் இருக்கும் யாருக்கும் இதுவே தேவை.

மேலும் இந்த நிலையில் தொடந்து தியானம் செய்து வர, மன நிலையும் உடல் நிலையும் ஒழுங்கு படும், நல்ல சிந்தனைகள் வளரும்.

நம்மை நாமே யாரென்று அறிய இதுவே சிறந்த வழி.

இதை தாண்டிய நிலைதான், மூன்றாவது கண்ணை திறப்பது, ஆன்மீக குருக்களை தியானத்தில் சந்திப்பது, தெரிந்த, தெரியாத புதிர்களுக்கு அவர்களிடம் விடை கேட்பது என்ற யோகியின் நிலை.

அதையும் தாண்டிய நிலைதான் ஆன்மாவை பயணிப்பது, கடந்த, எதிர் காலத்தை பார்ப்பது என்று சித்தர் நிலையை (சமாதி நிலையை) அடைவது.

ஆனால் இவை சாதாரண மனிதர்களுக்கு அத்தனை எளிதில் சாத்தியப்படாதவை.

இதில் மிக தெளிவாக உணரவேண்டியது, இத்தகைய தியானமும், சித்தியும் ஒரு போதும் வியாபாரமாக்க முடியாது.

அதாவது நீங்கள் பணம் கொடுத்து இதில் எந்த ஒரு நிலையையும் கண்டிப்பாக அடைய முடியாது.



அதனால் தான் எல்லா மத வேத நூல்களும் உடல் மற்றும் மன ஒழுக்கத்தை முன்னிறுத்தி தன் கருத்துக்களை சொல்கிறது.

கலிகாலத்தில் அரை குறை வேதாந்திகள் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பார்கள் என்று வேத நூல்கள் சொல்கின்றன, அதுதான் இன்று உண்மையில் நடக்கிறது.

அதனால் எடுத்த எடுப்பில் குருவை தேடுகிறேன், பணம் கொடுத்து முக்தி அடைகிறேன் என்று உங்கள் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்காமல், மனதை ஒரு நிலை படுத்தி சரியான பாதையில் முறையாக தியானிக்கும் போது, உங்களுக்கு மிக சிறந்த தியானம் சாத்தியப்படும்.

இதில் இன்னொரு விசையம் இருக்கிறது, யோகாசனம் என்பது வேறு தியானம் என்பது வேறு.

(இந்த முறை இந்தியாவில் இருந்த போது சில குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் கூட, ஒரு நிறுவனத்தின் பெயரை சொல்லி நாங்கள் அங்கு தியானமும் யோகாசனமும் படிக்கிறோம் என்று ஒரு வலுவான தொகையை கட்டணமாக சொன்னார்கள்.)

தியானத்தை பற்றி மேலே பார்த்துவிட்டோம். சுவாசத்தை கட்டுபடுத்தி சிந்தனையற்ற நிலைக்கு சென்று பிரபஞ்ச சக்தியை பெற தியானம் உதவும்.

யோகாசனம் என்பது உடற்பயிற்சி, காடுகளில் தியானம் (தவம்) செய்யும் முனிவர்களும் சித்தர்களும். எந்த உபகரணமும் இல்லாமல், உடலையே உபகரணமாக்கி உடற்பயிற்சி செய்து தங்கள் உடல் உறுப்புகளை தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவர பயன் படுத்தியதுதான் யோகாசனம்.

யோகாசனத்தின் ஒரு பகுதியாக தியானத்தையும் எடுத்துக்கொள்ளலாம், காரணம் மனம் ஒரு நிலையில் இல்லாத போது உடலை கட்டுபடுத்துவது சாத்தியமாகாது, எனவே எந்த ஒரு கலைக்கும் தியானம் மிக அவசியம்.

ஆனால், உடற்பயிற்சி என்று வரும் போது அதை முறையாக தெரியாமல் தானாக முயற்சி செய்வது சரியல்ல.

அதே நேரம் கற்றுக்கொள்ள சரியான (வியாபார நோக்கம் மட்டுமே குறியாக இல்லாத) ஆசிரியரை தேடி தேர்வு செய்வது மிக மிக அவசியம்.

ஆக, இவை அனைத்துக்கும் நம் மனமும் உடலும் முயற்சியும் பயிற்சியும் தான் அடிப்படையே தவிர, மதமும் ஜாதியும் குறிப்பாக பணமும் அல்லது வியாபார குருக்களும் ஒரு போதும் தேவை இல்லை என்பதை உறுதியாக நம்புங்கள்.

இப்படி நமக்கு தேவையானதை உணர்ந்து, நம் மனம் என்னும் கதவை திறந்தால், அமைதி, முக்தி, ஞனம் என்னும் காற்று அளவில்லாமல் வந்து உங்கள் வாழ்கை உங்களுக்கு வசப்படும்.

நன்றி!.

Thursday, September 16, 2010

இன்னுமா வெளிநாட்டு மோகம்!

வணக்கம் நண்பர்களே,

எத்தனை முறை எழுதினாலும், நம் மக்களுக்கு மீண்டும் மீண்டும் சீட்டு கட்டி திவால் ஆவதை போல, வெளிநாடு வந்து ஏமாராவிட்டால் அவர்களுக்கு ஒரு திருப்தி இருக்காது என்று நினைக்கிறேன்.

அவரவர் இருக்கும் நாட்டை, பகுதியை பற்றி பதிவிடுவது என்பது வெறும் பொழுது போக்குக்காக நகைக்க மட்டுமல்ல, நாமோ அல்லது நமக்கு தெரிந்தவர்களோ அந்த பகுதிக்கு செல்ல நேர்ந்தால், அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும்தான்.

வேலை, வீடு என்று ஒப்பந்தம், ஒப்பந்த முறை என்பது ஒவ்வொரு நாட்டிலும் வேறு பட்டு இருக்கும் என்பது அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டிய அடிப்படை தகவல்.

நான் கூட கொரியாவில் ஒரு வாடகை வீடு இடுகையில் இதை பற்றி தெளிவாக முன்பு சொல்லி இருந்தேன்.

இப்போது அதே போல மீண்டும் ஒரு உண்மை சம்பவம், அதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், மீண்டும் யாரும் இந்த தவறை செய்யாதிருக்க இது பயன்படட்டும்.

என் அலுவலகம் இருக்கும் அதே கட்டிடத்தில் இயங்கும் ஒரு மெக்கானிக்கல் தொழில் சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து வந்திருப்பதாக, மதிய உணவு நேரத்தில் இருவரை சந்தித்தேன், சற்று நேரம் பேசிவிட்டு பிரிந்து விட்டோம்.

தங்கமணி ஊரில் இல்லாததால் இரவு வழக்கம் போல இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன், ஒரு பத்து மணியளவில் யாரோ அழைப்பு மணியை அழுத்த, சென்று பார்த்தல், அந்த இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.

உள்ளே அழைத்து பரஸ்பரம் ஜூஸ் கொடுத்து பேச்சை ஆரமிக்க, அவர்கள் நிறுவனம் நான் தங்கி இருக்கும் அதே கட்டிடத்தில் வீடு பிடித்து கொடுத்திருப்பதாகவும், கீழே காவலர்கள் நாங்கள் ஒரு இந்திய குடும்பம் இருப்பதாகவும் சொன்னதால், சில தகவல்கள் கேட்க வந்ததாக சொன்னார்கள்.

இருவரில் ஒருவர் ஐ.ஐ.டி யில் இப்போதுதான் முதுநிலை (M.Tech) புதிதாக முடித்து ஆறு மாதமாகிறது இன்னும் திருமணமாகவில்லை.



இன்னொருவர் ஐ.ஐ.டி யில் முதுநிலை, டாக்டர் ஆறாய்ச்சி பட்டம் (M.Tech, PhD)பெற்று எட்டு வருடம் அனுபவம் இருப்பதாகவும், இந்தியாவில் 75000 ரூபாய் மாத ஊதிய அரசாங்க ஆராய்ச்சி வேலையை ராஜினாமா செய்து விட்டு, திருமணமாகி ஒரு வருடமான மனைவியை விட்டு விட்டு வந்திருப்பதாகவும், இந்த வேலைக்கு 120000 ரூபாய் ஊதியத்தில் வந்திருப்பதாகவும் சொல்ல, எனக்கு சரியான கடுப்பாகி விட்டது.

அவராவது தேவலை இப்போதுதான் படிப்பை முடித்து அனுபவம் தேடி வந்ததாக சொல்லலாம், ஆனால் நீங்கள் அப்படி இந்தியாவை விட்டு வர காரணம் என்ன? அப்புறம் எப்படி நம் நாடு உருப்படும் என்று கேட்க நினைத்தாலும், புதிய அறிமுகம் என்பதால் நான் எதுவும் சொல்லவில்லை.

சரி, உங்களுக்கு இப்போது நான் என்ன செய்ய முடியும் என்று கேட்க?

இங்கு யாருக்கும் ஆங்கிலமே தெரியவில்லை, நாங்கள் வந்த தகவலை எங்கள் குடுபத்திற்கு மின்னஞ்சலோ அல்லது தொலைபேசியிலோ சொல்ல வேண்டும், உங்கள் கணினி அல்லது தொலைபேசியை சிறிது பயன் படுத்திகொள்ளலாமா என்று கேட்க? நானும் என் தொலைபேசியை கொடுத்தேன்.

அவர்கள் பேசி முடித்ததும், தன் மனைவியை அழைத்து வர இருப்பதாகவும், இங்கு பாதுகாப்பு மற்றும் குடும்ப வாழ்க்கை முறை பற்றி கேட்க, நானும் எனக்கு தெரிந்ததை சொல்லி தாராளமாக இங்கு இருக்கலாம்.

நாங்கள் தனியாக இருந்து பிரசவமே பார்த்து இருக்கிறோம், தற்போது என் மனைவி மற்றும் குழந்தைகள் விடுமுறைக்காக இந்தியாவில் இருப்பதாக சொல்லி, அன்று எங்கள் பேச்சை முடித்து கொண்டோம்.

அவர்கள் புதிய வீட்டில் இணையம் கேபிள் என்று எந்த இணைப்பும் இன்னும் வராததால், மறுநாள் என் அறைக்கு இருவரும் வந்தார்கள்.

பேசிக்கொண்டு இருக்கும் போது, தன் மனைவியை அழைத்து வர போவதில்லை என்றும் தானும் இங்கு இருக்க விருப்பமில்லை என்றும் அதனால் திரும்ப இந்தியா போக போவதாக சொன்னார்.

மற்றொருவர் தனக்கு எந்த பிரச்னையும் இல்லாததால், இங்கேயே வேலை செய்து ஒரு வருட அனுபவம் தேட போவதாக சொன்னார்.



நானும் என்னால் முடிந்த வரை ஒரு நாட்டை பற்றி வெறும் இரண்டு நாளில் முடிவெடுப்பது என்பது முறையல்ல, உங்கள் பிரச்சனைதான் என்ன என்று கேட்க, அவருக்கு இங்கு உணவு, மொழி, கலாச்சாசரம் என்று எதுவுமே ஒத்துவராது என்று சொன்னார்.

அவர் முடிவில் அவர் ஆழமாக இருக்க, நாம் என்ன செய்ய முடியும் என்று நானும் அமைதியாய் இருக்க, நாளையே தன் முடிவை அலுவலகத்தில் சொல்லபோவதாக சொன்னார்.

நானும் அது உங்கள் சொந்த விருப்பம் என்று முடித்துக்கொண்டேன்.

மறுநாள் வெள்ளிகிழமை (ரமலான் தினம்) தன் அலுவலக எண்ணில் இருந்து எனக்கு தொலைபேசியில் அழைத்தார், தன் முடிவை சொல்லி விட்டதாகவும் அதற்கு நிறுவனமும் ஒப்புக்கொண்டதாகவும் சொன்னார்.

மேலும் வந்து இரண்டு நாள்தான் ஆனதால் எனக்கு செய்த விசா கட்டணம் மற்றும் விமானசீட்டு கட்டணத்தை நான் திரும்ப தரவேண்டும் என்று சொன்னார்கள், நானும் அதை ஒப்புக்கொண்டேன் அது எவ்வளவு தொகை என்று கணக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

சரி, பிரச்னை முடிந்ததில் மகிழ்ச்சி என்று சொல்லி வைத்துவிட்டேன்.

வேலை முடிந்து வீட்டிற்கு போகும் வழியில் அவர் மழையில் நனைந்து கொண்டே ஓடிவர, நான் அவரை அழைத்து என் குடைக்குள் சேர்ந்து நடந்தோம்.

இன்னும் தொகை எவ்வளவு என்று சொல்லவில்லை என்றும், தனக்கு நாளையே (சனிக்கிழமை) இந்தியா பேகவேண்டும் என்பதால், சில அலுவலக பேப்பர்கள் மற்றும் பாஸ்போர்ட் எடுத்து செல்ல வந்தேன் என்றார்.

சரி போகும் போது நனைந்து கொண்டு போக வேண்டாம் என்று ஒரு குடையை கொடுத்து அனுப்பினேன், வேலை முடிந்ததும் இரவு சாப்பாடு மூவரும் சேர்ந்து போகலாம் என்பது முடிவு.

சிறிது நேரத்தில் பதற்றமாக என் தொலைபேசியில் அழைத்தவர், மொத்தம் கிட்டதட்ட ஒரு லட்சம் பணம் கேட்பதாவும், தன் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்து கொண்டதாகவும் அழுகாத குறையாக சொன்னார்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், கையிருப்பு மற்றும் இந்திய வங்கி கணக்கில் ஒரு 13000 இருக்கிறது, எனக்கு இங்கு வேறு யாரையும் தெரியாது, அதனால் நீங்கள்தான் எப்படியாவது உதவேண்டும், உங்கள் அறைக்கு வருகிறேன் என்று சொல்லி சிறிது நேரத்தில் வந்தார்.

பணம் புரட்டுவது ஒன்றும் பிரச்சனையில்லை என்று அவருக்கு தைரியம் சொல்லி, ஆனால் அவர்கள் பாஸ்போர்ட்டை வாங்கி வைப்பது சட்டப்படி குற்றம், நான் வேண்டுமானால் பேசி பார்கிறேன் என்று சொல்லி என்னுடன் அழைத்து சென்றேன்.

அவர்கள் அலுவலகத்தில் சென்று முறையாக பேசினேன், அவர்களும் இவர் ஒரு வருடம் வேலை செய்ய வந்து விட்டு, இரண்டு நாட்களில் போக வேண்டும் என்கிறார்.

அதனால் தான் நாங்கள் கொடுத்த விமான கட்டணம், விசா கட்டணம், இதர நஷ்டங்களை இவரே கொடுக்கும் பட்சத்தில் இவர் திரும்ப போவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.

ஒரு வழி விமான கட்டணமும் விசா கட்டணமும் எப்படி ஒருலட்சம் வரும் என்று நான் கேட்க?

அவர், உங்களுக்கு வேண்டுமானால் நான் கட்டண ரசீதை தருகிறேன் என்று சொல்லி இரு மடங்கு தொகையில் வாங்கியது போல டம்மி ரசீது ஒன்றையும் காட்டினார்.

மற்றும் இவருக்காக ஏற்பாடு செய்த வீட்டின் கட்டணத்தை யார் தருவார்கள்? உங்களுக்கு கொரியா வீட்டு ஒப்பந்த முறைதான் தெரியுமே என்றார்.

உண்மையில் அவர்கள் ஒரே ஒரு வீடுதான் பேசி இருக்கிறார்கள், அதில் தான் இருவரும் இப்போது இருக்கிறார்கள். ஆனால், இவர் மனைவியோடு தங்க இன்னொரு வீடு பேசி இருப்பதை போல கட்டி கொண்டார்கள்.

சரி, இனி இதை இவர்களிடம் பேசுவதில் பலன் எதுவும் இருக்காது என்பதால், நான் சற்று குரலை மாற்றி, எப்படி நீங்கள் பாஸ்போட்டை வங்கி வைக்க முடியும்!, அது குற்றம் முதலில் பாஸ்போர்ட்டை திரும்ப கொடுங்கள் என்றேன்.

என் கோவத்தை புரிந்து கொண்டு என்னை சற்று ஆழமாக பார்த்த அவர், சற்று பொறுங்கள் என்று உள்ளே சென்று ஒரு ஒப்பந்த காதிங்களை எடுத்து வந்து என் முன் போட்டார்.

இவருக்கு வேலை துவங்கிய நாள் (அதாவது இன்று ஒப்பந்தத்தின் மூன்றாவது நாள்) முதல் ஒரு வருடம் வேலை ஒப்பந்தம், இதில் நடுவில் இவர் இந்த ஒப்பந்தை உடைக்க நினைத்தால் அன்று முதல் மீதமிருக்கும் மாதத்தின் ஊதிய அளவை இவர் எங்கள் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தம்.

உங்களை போல நானும் சட்டம் பேச நினைத்தால், இவர் மூன்றாவது நாளே ஒப்பந்தத்தை உடைப்பதால், மீதமுள்ள பதினோரு மாதம் இருப்பதி ஏழு நாட்களின் ஊதிய பணத்தை இவர் கட்ட வேண்டும் பாருங்கள் என்றார்.

எடுத்து பார்த்தல், ஒப்பு கொண்டதாக இரண்டு பக்கமும் கையப்பம் ஆகி இருக்கிறது.

மேலும் அவர் சொன்னது, இவர் என்னிடம் பாஸ்போர்டை கொடுத்த ஆதாரம் ஏதாவது இருகிறதா? நாங்கள் வாங்கவே இல்லை என்று சொன்னால் என்ன செய்யமுடியும் யோசியுங்கள் என்றார்.

அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் சாதகத்தையும் கருத்தில் கொண்டு சரி, நீங்கள் கேட்ட பணத்தை நாளை இரவுக்குள் கொடுத்து விடுகிறோம் என்று சொல்ல, அவரும் நாளை சனிக்கிழமை அதனால் பணம் தயாரானதும் நீங்கள் அலுவலகம் வரும் நேரத்தை எனக்கு சொல்லுங்கள் நானும் அலுவலகம் வருகிறேன் என்றார்.

திரும்ப மூவரும் என் அறைக்கு சென்று விட்டோம், இப்படி ஒரு ஒப்பந்தத்தில் எப்படியப்பா கையப்பம் இட்டீர்கள் என்றால், ஏதேதோ அழுகாத குறையாக புலம்பினார்.

சரி, இனி புலம்பி புண்ணியம் இல்லை என்று சொல்லி, அவர்களிடம் இருக்கும் பண இருப்பை கேட்டேன், அவர் கையிருப்பு மற்றும் இந்திய வங்கியில் கொஞ்சம் சேமிப்பு மற்றும் ஒரு கடன் அட்டை இதுதான் இருந்தது.



சரி, முதலில் இந்திய வங்கி பணத்தை எடுப்போம் என்று அதற்கான வங்கி ஏ.டி.எம் மை அந்த மழையில் தேடிக்கொண்டு சென்றோம். தென் கொரியாவில் எல்லா வங்கி ஏ.டி.எம்-மிலும் வெளி நட்டு வங்கி சேமிப்பு அல்லது கடன் அட்டையை கொண்டு பணம் எடுக்க முடியாது என்பது இங்கு குறிப்பிடதக்கது.

ஒரு வழியாக வங்கி சேமிப்பில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து விட்டு, கடன் அட்டையை போட்டால் அதில் பணம் எடுக்க முடியவில்லை, அங்கிருந்தே இந்திய வங்கி கடன் அட்டை சேவையை அழைத்தபோது, அவர்கள் இந்த கடன் அட்டையை கொண்டு பொருட்கள் மட்டுமே வாங்க முடியும், பணம் எடுக்க முடியாது, அந்த சேவை வேண்டுமென்றால் பகலில் வங்கிக்கு சென்று எழுதி கொடுக்கவும் என்றார்கள்.

சரி, என்று திரும்ப அறைக்கு வந்ததும், அவர் காலில் விழாத குறையாக புலம்ப ஆரமித்து விட்டார்.

நானும் நாளை காலை வாருங்கள் இன்னொரு வழி இருக்கிறது, அதுவும் முடியவில்லை என்றால் நான் பணம் தருகிறேன், நீங்கள் இந்தியா சென்றதும் திரும்ப அனுப்பினால் போதும் என்று சொன்னவுடன்தான் சென்றார்.

மறுநாள் நான் எழும் முன் அவர்கள் இருவரும் வந்து விட்டார்கள், இருவரிடமும் கொஞ்சம் அமெரிக்க டாலர் இருப்பதாகவும், அதையும் மாற்றிய பின், அவர் கடன் அட்டயை பயன் படுத்த முடியாவிட்டால் மீதமுள்ள பணத்தை நான் கொடுக்குமாறு வேண்டினார்.

ஊருக்கு சென்ற மறுநாளே, உங்கள் இருவருக்கும் பணத்தை அனுப்பி விடுகிறேன், வேண்டுமானால் என் படிப்பு சான்றிதல் அனைத்தையும் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

நான் சொன்னது , முதலில் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நாம் செல்ல வேண்டிய இடம் நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, நமக்கு இன்று முழுவதும் இருக்கிறது அதற்குள் முடித்து விடலாம் என்று சொல்லி தயாராகி அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.

அங்கு இருவரிடமும் இருந்த அமெரிக்க டாலர் மாற்றிய பின், இவருக்கு திரும்ப செல்ல விமானசீட்டு எடுக்க என் நண்பர் கடையை தேடி சென்று கடன் அட்டையை கொடுத்து சீட்டு வாங்கியபின், அவரை தனியே அழைத்து நிலைமையை எடுத்து சொல்லி கடன் அட்டையை செலுத்தி பணம் கொடுக்குமாறு கேட்டேன்.

அவரும் சற்று யோசித்து விட்டு, கடன் அட்டையை தேய்க்கும் போது வரும் வரியையும் நீங்களே கொடுத்து விட வேண்டும். மேலும் நாளை இவர் நான் எந்த பொருளும் வாங்கவில்லை என்று ஏதாவது எனக்கு பிரச்சனை வந்தால் நீங்கள்தான் பொறுப்பு, காரணம் நான் உங்களை நம்பித்தான் பணம் கொடுக்கிறேன் என்று சொல்ல, நான் பொறுப்பேற்று கொண்டேன்.

இப்படி பணம் கிடைத்ததும் கிட்டதட்ட தேவையான தொகையை நெருங்கி விட்டோம், இன்னும் மிக சிறிய தொகை மற்றும் நாளை மறுநாள் பயணத்தின் போது அவர் கைசெலவுக்கு சிறிது பணம், இதுதான் இப்போதைய தேவை. அதை நான் தருவதாக சொல்ல அப்போதுதான் அவர் முகம் பீதியில் இருந்து வெளியேவந்தது.

ஒரு டாக்ஸ்யை பிடித்து மீண்டும் அவருடைய அலுவலகம் வந்து எல்லா தொகையையும் கட்டிவிட்டு, எல்லா ஒப்பந்த பேப்பர்களையும் சரியாக முடித்து விட்டதாக எழுதி வாங்கிகொண்டு பாஸ்போர்ட்டுடன் திரும்ப வந்து விட்டேம்.

அடுத்த நாள் சிறிது சாக்லேட்களை அவர் வீட்டிற்கு வங்கி கொடுத்து விட்டு, எங்களுடன் தங்க வைத்து ஊருக்கு அனுப்பும் வரை, இந்த அனுபவத்தையும் முன் பின் தெரியாத எனக்கு நீங்கள் செய்த உதவியையும் என் வாழ்நாளில் என்றும் மறக்கவே மாட்டேன் என்பதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தார்.

இவ்வளவு படித்திருந்தும் வெளிநாட்டு மோகத்தால் என்ன நிலை என்று பார்த்தீர்களா, என்று மட்டும்தான் நான் அவருக்கு பதில் சொன்னேன்.

இனி வருவது அவருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் தேவையான சில அடிப்படை தகவல்கள் கண்டிப்பாக பயன்படும்.

எந்த ஒரு நாட்டுக்கு செல்வதானாலும், ஒரு ஒப்பந்தத்தில் கையப்பம் இடும் முன் தெளிவாக படித்து புரிந்த பின் கையப்பம் இடுங்கள்.

கையப்பம் இடும் இரண்டு தரப்புக்கும் பொது மொழியில் ஒப்பந்தம் இல்லாவிட்டால், அதன் ஆங்கில பதிப்பை கட்டாயம் கேட்டு வாங்குங்கள்.

கையப்பம் இடும் எந்த ஒரு ஒப்பந்த நகலையும் உங்களுடன் ஒப்பந்தம் முடியும் வரை கட்டாயம் வைத்து இருங்கள்.

சில அடிப்படை தொழிலாளர் வேலை முறை தவிர, வேறு எந்த உயர் பதவிக்கும், உங்கள் பாஸ்போட்டை வாங்கிவிட முடியாது. அப்படி வாங்கும் பட்சத்தில் நீங்கள் பாஸ்போட்டை கொடுத்த சான்று ஏதாவது உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.

எந்த ஒரு ஒப்பந்தம் அல்லது பாஸ்போர்டையும் யாரிடமும் கொடுக்கும் முன் எல்லா பக்கத்தையும் நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

வெளிநாடு செல்லும் போது அங்குள்ள நண்பர்கள் முகவரி, யாருமில்லாத பட்சத்தில் அங்கிருந்து நீங்கள் திரும்ப வர , அதுவரை தேவையான உங்கள் கையிருப்பு பணத்தை வைத்திருங்கள்.

கடன் அட்டையை நம்பி செல்லும் பட்சத்தில், இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் முன் சம்மந்த பட்ட வங்கியை தொடர்பு கொண்டு உங்கள் கடன் அளவு, நேரடியாக பணம் எடுக்கும் அளவு மற்றும் நீங்கள் செல்லும் நாட்டில் இந்த கடன் அட்டை வேலை செய்யுமா என்று உறுதி படுத்தி கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் விட என் சொந்த அனுபாவத்தில் சொல்கிறேன்.

வெளிநாட்டு வேலை என்பது, குடும்ப சூழ்நிலை, வேலையின்மை மற்றும் வேறு வழியில்லாமல் வருபவர்களுக்குதானே தவிர, இப்படி அரசாங்க உயர் பதவிகளை உதறி விட்டு வருவதற்கு அல்ல, என்பதை எப்போதும் மனதில் வைத்திருங்கள், உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் எடுத்து சொல்லுங்கள்.

நன்றி!.

Friday, September 10, 2010

பதிவரசியல்!

என்னாங்க நடக்குது இங்க?

ஆனா, ஒன்று மட்டும் உறுதி பிரச்சனயை நோக்கி எறியப்படும் கற்களும், அதற்கு பதிலடி கொடுக்க எறியப்படும் கற்களும், இரண்டுமே பதிவுலகம் என்ற கண்ணாடி வீட்டிற்குள் இருந்துதான் எறியப்படுகிறது என்பதுதான் வேதனை.

நினைவுகள் என்பது நம் மகிழ்ச்சியை பதிந்து வைக்கத்தானே தவிர, நம் தவறுகளை, வருத்தங்களை செதுக்கி வைக்க அல்ல.

தவறுகளை, துக்கத்தை மறப்பதே எப்போதும் நல்லது. எங்காவது கல்யாண நிகழ்ச்சி புகைப்பட ஆல்பம் போல, இது எங்கள் வீட்டு இழவு நிகழ்ச்சி ஆல்பம் என்று பார்க்க முடியுமா?

ஆனால், பதிவுலகில் அடுத்த தலைமுறை பதிவர்கள் அத்தகைய ஆல்ப பதிவுகளை கண்டிப்பாக பார்க்க முடியும்.

(கவனிக்க; தவறுகள் எல்லை மீறும் போது அதை கண்டிக்க, தண்டிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை)

பதிவர்கள் ஒன்று பட வேண்டும் அல்லது குழு வேண்டும் என்பதின் அடிப்படை நோக்கம் என்ன? நாளை பதிவர்கள் ஒரு பெரிய சக்தியாக, சமுதாய வழிகாட்டியாக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தானே?



பதிவுலகிலும் அது உண்மை எனில், நாளை ஒரு அங்கீகாரத்திற்காக அரசாங்கத்தையோ சம்மந்த பட்ட அதிகார குழுவையோ அணுகும் போது, இதுதானே நீங்கள் சொல்லும் பதிவுலகம் என்று, இன்று எழுதப்படும் பதிவரசியல் இடுகைகளும் மோசமான வார்த்தைகளும் உங்கள் முன் போடப்படுமா இல்லையா? சற்று சிந்தித்து பாருங்கள்.

மேலும் இங்கு என்ன நடக்கிறது!.

"ஆதரிக்கும் குழு, எதிர்க்கும் குழு" என்று எல்லா பிரச்னைகளிலும் குழு சேர்க்கும் முயற்சி மட்டுமே நடக்கிறது, அதில் அடிப்படை உண்மை பிரச்சனை அடிபட்டு போய் விடுகிறது, வழக்கம் போல இதற்கு பகடை காயாக இப்போதும் சில பதிவர்கள் சிக்கி விட்டார்கள்.

இதில் நான் எந்த குழுவையும் சாராதவன் என்ற உடன் சந்தர்ப்பவாதியாகி நடுநிலைமையாக காட்டிக்கொள்ள பார்க்கிறாய் என்று சொல்ல வேண்டாம், அதுவல்ல சரியான காரணம்.

இங்கு பிரச்சனை சித்தரிக்கப்படும் (திசை திருப்ப படும்) அடிப்படை முறையே சரியாக இல்லை என்பதால்தான். ஒரு பிரச்சனையை எழுதும் போது கருத்தின் ஆழம் தேவையே தவிர அதில் அடுக்கு மொழியோ கவிதையோ தேவை இல்லை.

இங்கு இரண்டு பதிவர்களுக்கு நடுவில் மனஸ்தாபம், ஒருவருக்கு ஒரு பதிவர் செய்வது சரி என்று படுவது போல மற்றொருவருக்கு இன்னொரு பதிவர் செய்வது சரி என்று படலாம், அதை அவர் ஆதரிக்கலாம், இதில் எந்த தவறும் இல்லை.



ஆனால் நான் இதில் நான் கவனித்தது என்னவென்றால், பிரச்சனை இரண்டு பதிவர்களுக்கு, இரண்டுமே மனிதர்கள்தான், இருவருமே பதிவர்கள்தான் இதில் பாலினம் எங்கிருந்து வருகிறது?

அது ஆண் பெண் பேதமாகி, பெண்ணடிமை ஆணாதிக்கம் என்று ஏன் திசை திருப்பி விடப்படுகிறது?

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே, ஒரு ஆணை விட, ஒரு பெண்ணுக்கும் தன்னையும் தன் மானத்தையும் காக்கும் சக்தி அதிகமாகவே இறைவனால் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உடல் அமைப்பில் நம் இனத்தை பெருக்க இருவரும் மாறுபட்டு இருப்பதை தவிர, இருபாலுக்கும் மனித இனம் என்பதுதான் சரியான அடையாளம், பிரச்சனைகளை சந்திக்கும், சமாளிக்கும் திறன் இருவருக்குமே சமமாகத்தான் இருக்கிறது, நல்லவர்கள் கெட்டவர்கள் இரண்டிலும் கலந்துதான் இருக்கிறார்கள்.

அதனால் ஆணாதிக்கம் பெண்ணடிமை என்று பதிவுலகத்திலும் இல்லாத ஒன்றை உருவாக்க தேவை இல்லை, காரணம் யாரும் யாருக்கும் அடிமையும் கிடையாது, அடிமை படுத்தவும் முடியாது.

அன்பை தவிர வேறு எதுவும் யாரையும் அடக்க உதவாது என்பதுதான் உண்மை.

கட்டிய சொந்த மனைவியாக இருந்தாலும், நீ எனக்கு பெண்ணடிமையாக இரு என்றால், நடுவிரலை முகத்துக்கு நேரே காட்டி விட்டு போய் விடும் காலம் இது.

இப்படி இருக்கும் நிலையில் உலகம் மறந்து மாறி போன பெண்ணடிமை, ஆணாதிக்கம் போன்ற போர்வைகளை எடுத்து விடுவோமே!.

மனிதன் நட்பாக பழகி, பின் சேர்ந்து வாழ்ந்து சந்ததிகள் பெருகி, பின் உறவுகள் வந்து, இப்படித்தானே சமயம், மதம், ஜாதி அனைத்தும் வந்திருக்கும், இப்படி அனைத்திற்கும் அடிப்படியாக இருக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்போம், ஆண் பெண் பேதம் வேண்டாம்.

அதில் பதிவர்கள் என்ற வகையில் நமக்கு ஒத்து போகும் கருத்துக்களுடன் சேர்ந்து நடப்போம், அதே நேரத்தில் மற்றவருக்கும் கருத்துரிமை இருக்கிறது என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.

ஆண்மை என்பது தன் துணையை தவிர உதவி, நட்பு நாடி வரும் பெண்ணை தன் குடும்ப பெண்கள் போல சகோதரத்துடன் பார்ப்பதில் தான் இருக்கிறது.

பெண்மை என்பது தன் துணையுடன் உடல் ரீதியாகவும் மற்ற அனைத்து மக்களிடமும் உயிரினதிடமும் மனரீதியாக தாய்மை உணர்வுடன் அன்பாக இருப்பதில்தான் முழுமையடைகிறது.


நல்லது கெட்டது இரண்டு பக்கமும் கலந்துதான் இருக்கிறது, தேவையை பொறுத்து அதன் சதவீதம் மாறுபடுகிறது, இதில் இன்னும் ஏன் இந்த ஆண் பெண் பேதம்?.



பிடித்த பதிவர்களை விரும்பி பின் தொடர்வதை போல, ஒருவரின் நடவடிக்கை மற்றும் கருத்து பிடிக்கவில்லை என்றால் விலகி இருப்பதே நல்லது, அதை விட்டுவிட்டு, அவரையோ அவர் பதிவுகளையோ கொச்சை படுத்தி எழுதுவது என்பது அசிங்கம்.

இதில் யார் வரம்பு மீறினாலும் கண்டிக்க தேவை பட்டால் சட்டரீதியாக தண்டிக்க பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த கருத்து வேறு பாடும் இருக்காது என்று நம்புகிறேன்.

இதை விட்டுவிட்டு பதிவர் குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்க நினைப்பது, பதிவர் என்ற முறையில், நம் மீது நாமே சேற்றை பூசிக்கொள்வதற்கு சமம்.

கடைசியாக என் மனதில் பட்டது, மன்னிப்பு கேட்பது எப்படி ஒரு நல்ல மனித தன்மையோ, அதே போல் மன்னிப்பது இறை குணம், ஆகவே காயங்களை வடுவாக்கி காலம் முழுவதும் எடுத்து செல்லாமல், மனித நேயத்தோடு கழுவி துடைத்து விட்டு, புதிய பாதையை நிமிர்ந்து பாருங்கள், பதிவுலகில் நீங்களும் பதிவுலகமும் சாதிக்க எவ்வளவோ நல்ல விசையங்கள் இருக்கிறது.

உங்கள் இடுகையால் மற்றவர் மனம் காயப்படும் என்று உங்கள் மனசாட்சி சொன்னால், வேண்டாம் அந்த இடுகை அழித்து விடுங்கள், அது ஒன்றும் கோழைத்தனம் கிடையாது.

இந்த நல்ல நாளில், மன வருத்தம், ஆதங்கத்தில் இருக்கும் பதிவர்களுக்கு பகையை மறந்து மனதில் நல்ல முடிவை தோன்ற செய்து, தவறு செய்தது யாராக இருப்பினும் அதை உணர்ந்து மற்றவரிடம் சமாதானமாக போக அருள் செய்யுமாறு அந்த திருவண்ணாமலை இறைவனை வேண்டுவதோடு!,

பசியின் கொடுமையை உணர்ந்து, இறை அருள் பெற விரதமிருந்து, ஏழை வரியை கொடுத்த பின் தொழுகை முடித்து பெருநாள் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும், அல்லா உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என்றும் தன் புன்னைகையை செலுத்த என் மனமார்ந்த பெருநாள் வாழ்த்துக்களை சொல்லி!,

இன்று படித்த "வேத வரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து" என்ற செய்தி இந்த இடுகைக்கு சரியாக ஒத்து போவதால் அதை உங்களுடன் பகிர்ந்து இந்த இடுகையை முடித்துக்கொள்கிறேன்.

நீதியில் இருந்து பிறழாதீர்!

ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா?' என ஒருவர் நபிகள் நாயகம் அவர்களிடம் வினவினார்.

அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் இல்லை!, மாறாக மனிதன் தன் சமுதாயத்தார் (பிற மனிதன் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறியாகும் என்றார்கள்.

எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவனைப் போன்றவனாவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான்.

நீதி செலுத்துங்கள்! அது உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது.

இன, மத, மொழி வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அதற்காகப் போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

நன்றி!. மீண்டும் சந்திப்போம்!.

டிஸ்கி: இந்த இடுகை முழுக்க முழுக்க என் மனதில் பட்ட எண்ணமே தவிர, யாரையும் காயப்படுத்துவதவோ அல்லது எந்த பிரச்சனையையும் கிண்டுவதோ இங்கு என் நோக்கமல்ல.

Monday, September 6, 2010

கதவை திறந்தால் கண்டிப்பாக காற்று வரும்!

வணக்கம் நண்பர்களே,

சூட்டோடு சூடாக செய்திகள் பரபரப்பாக இருக்கும் போது, பத்தோடு பதினொன்றாக எழுத விரும்பாத காரணத்தால், பரபரப்பு அடங்கும் வரை காத்திருந்தேன்.

காரணம் இன்றைய பரபரப்பான வாழ்கை சூழலில், காலை காபியுடன் படிக்கும் செய்திதாளிலோ அலுவலகம் போகும் வழியில் காரில் கேட்கும் வானொலி செய்திகளிலோ மக்கள் தங்கள் தூக்கத்தில் இருந்து வெளியே வர மட்டுமே பரபரப்பு செய்திகள் பயன் படுகிறதே தவிர, விசாரணை கமிசன் போல், எந்த ஒரு பரபரப்பான செய்திக்கும் முடிவே இருந்திருக்காது என்பது தான் உண்மை.

ஊடகங்களில் செய்திகள் பழையதானதும் பரபரப்பு குறைகிறது, தூக்கம் கலைய மாறுகிறது, அதனால் விற்பனை குறைகிறது, ஆகவே அடுத்த புது செய்தி பரபரப்புக்காக தேவை படுகிறதை தவிர, இதில் சமூக அக்கறை ஏதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

நேற்று வரை காசை கொடுத்தவர்கள் கடவுள் என்று போற்றினார்கள்.

ஏமாற்ற பட்டது தெரிந்ததும் பணம், மானம் போன கோவத்தில் மிருகம் என்று தூற்றினார்கள்.

பரபரப்பு குறைந்ததும், இதோ இயல்பு வாழ்கை திரும்பி விட்டது,

மீண்டும் இன்று காசை வாங்குபவர்கள் கடவுள் என்று போற்றுகிறார்கள்.

அமைதி படை படத்தில் வரும் வசனம் போல், கட்டம் கட்டி போட்டு தள்ளு "உஸ்ஸ்சு"...! மன்னிப்பு கடிதம் கொடுத்து பதவி விலகினால் "புஸ்ஸ்சு"...!

ஆக, மொத்தத்தில் "உஸ்ஸ்சு" "புஸ்ஸ்சு", இவ்வளவுதாம்பா நம்ம நாட்டு அரசியல் என்பதுதான் உண்மை. அதற்கு பிறகு யாரும் அதை பற்றி நினைக்க கூட நேரம் இருப்பதில்லை.

(வரலாறு முக்கியம் மங்குனி பாண்டியரே, இறநூறு வருடம் கழித்து வரப்போகும் முட்டாள்களுக்கு, நாம் இன்று எப்படி இருந்தோம், என்ன செய்தோம் என்று தெரியவா போகிறது!)



சரி, இதற்கு காரணம் அவரா, இவரா என்ற அர்த்தமில்லாத ஆராய்ச்சி நமக்கு இப்போது தேவை இல்லை.

ஆனால், நாம் ஏன் இப்படி படித்தும் பதராய் ஆகிவிட்டோம்? என்று நம்மை நாமே உணர்ந்து மாறுவதுதான் இப்போதைய தேவை.

எனக்கு புரிந்த காரணம் என்னவோ மிக எளிது, அவசர உலகத்தில் எல்லாம் அவசரமாக்க பட்டு அனைத்தையுமே வெறும் பணத்தால் விரைவாக அடைய முடியும் என்ற தவறான கண்ணோட்டம்தான்.

நாம் என்ன செய்கிறோம்!, நமக்கு என்ன தேவை! என்ற அடிப்படை எண்ணம் கூட தெளிவாக இல்லாத நிலையில், நாம் மற்றயாரையும் குறை கூறுவதில் அர்த்தமில்லை.

ஒரு உதாரணத்துக்கு, முன்பு பார்த்தல், ஒரு கடைக்கு பத்து கடை பார்த்து, ஒரு துணியை வாங்குவோம், நமக்கு நன்கு அறிமுகமான தையல்காரரிடம் அதை தைக்க கொடுத்து பத்து நாட்கள் பொறுத்திருந்து வாங்கியபின் தான் நம் புது சட்டை தயாராகிறது.

ஆனால் இன்று, இந்த மொத்த பணத்தை விட சற்று அதிகமாக பணம் கொடுத்தால், ரெடிமேட் சட்டை உடனடியாக கிடைக்கிறது.

இப்படியே உணவு, உடை, தகவல் தொடர்பு வரிசையில் இறுதியாக ஆன்மீகம் என்று எல்லாவற்றிலும் நாம் ஒரு "ரெடிமேட்" கலாச்சாரத்துக்கு பழகிவிட்டேம்.

முன்பெல்லாம் ஒரு புத்தகம் எழுதுவது என்பது மிக பெரிய ஆராய்ச்சி மற்றும் அறிவு சார்ந்த ஒரு விசையம்.

ஆனால், இன்று அது சார்ந்த பத்து புத்தகங்களை புரட்டி, அதில் எடுத்த குறிப்புகளை வெவ்வேறு வார்த்தைகளை கொண்டு தனியாக தொகுத்தால் ஒரு புது புத்தகம் தயாராகி விடுகிறது.

(அப்படியே நமக்கு நாமே கம்பனுக்கு அடுத்து, பாரதி போல, சுஜாதாவுக்கு அப்புறம் என்று சுய விளம்பர பில்டப் கொடுத்துக்கலாம்)

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு இனி வரும் வார்த்தைகளில் புரியும்.

பண்ட மாற்று முறையில், அளவு முறையும் சேமிப்பு முறையும் மாறுபடுகிறதே என்று அதை சமபடுத்த, மனிதனாய் பார்த்து முறையான வாழ்கைக்கு வடிவமைக்க பட்ட பணம்தான், இன்று மனிதனை முறையற்ற வாழ்கைக்கு உள்ள அத்தனை வழியையும் திறந்து விடுகிறது.

பணம் கொடுத்தால் எல்லாம் கிடைத்து விடும், அதுவும் உடனே கிடைத்து விடும் என்ற முட்டாள் தனமான நம்பிகையே இதன் அடிப்படை. இதனால் பெரும்பாலும் நம் எண்ணம் இப்படித்தான் போகிறது.

குடும்ப வாழ்கை வேண்டும், தொழில் வேண்டும், மொத்தத்தில் விடுமுறைக்கு செல்வதை போல பணம் எடுத்துக்கொண்டு ஆசிரமத்தை தேடி போய் பணம் கொடுத்தால் மட்டும் போதும்.

வெளியே வரும் போது நாம் ஒரு விவேகானந்தராய், புத்தராய், நபியாய், கிறிஸ்துவாய் மாறிவிடலாம் (என்ற நினைப்புதான் இன்று பெரும்பாலான மக்களின் பிழைப்பை கெடுக்கிறது).

அதிலும் வேடிக்கை அப்படி ஆனபின், விடுமுறை முடித்ததை போல திரும்பவும் நாம் குடும்ப வாழ்கைக்கு திரும்பி, நம் தொழிலை பார்க்க போய்விடலாம்.

இப்படி பட்ட எண்ணம் மக்கள் மனதில் இருக்கும் வரை, மற்ற யாரையும் நாம் குறை சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க போகிறது, சிந்தித்து பாருங்கள்!.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எனக்கு தெரிந்த நான்கு ஆன்மீக புத்தகங்கள் உள்ளன, அவற்றில் இல்லாத எந்த ஒரு கருத்தையும், கடந்த சில நூறாண்டில் வந்த எந்த ஒரு புத்தகத்திலும் நீங்கள் காட்ட முடியாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும், அந்த புத்தகங்கள் உலகின் அத்தனை மொழியிலும் கிடைகிறது.

இராமாயணம், பகவத்கீதை, திருகுரான், பைபிள் தான் அந்த புத்தகங்கள், இவற்றில் இல்லாத எந்த ஒரு புது விசையத்தையும் எனக்கு தெரிந்த எந்த ஒரு கார்பரேட் துறவியோ, சாமியாரோ சொன்னதோ எழுதியதோ கிடையாது.

அப்படி என்றால், ஆன்மீகத்தில் ஈடு பாடு கூடாதா? அப்படி ஆன்மீகத்தில் ஈடுபடும் பட்சத்தில், ஒரு குரு இல்லாமல் நாம் எப்படி மனம் அமைதியடைய முடியும்? யார் நமக்கு வழிகாட்டுவார்கள்?

என்று பலதர பட்ட எதிர்வாத கேள்விகள், இங்கு வரக்கூடும்.

நான் சொல்வதின் அர்த்தம் அப்படி இல்லை என்பதை விளக்கி சொல்ல வேண்டியது இங்கு என் பொறுப்பாகிறது.

எனக்கு தெரிந்த ஆன்மீகத்தின் முதல் அடிப்படை மற்றும் உச்சகட்ட கடைசி நிலை, இந்த இரண்டு பாடமுமே "நம்மை நாமே உணர வேண்டும்" என்பதுதான்.

இதன் அடிபடையில் நாம் யார், இப்போது நமக்கு என்ன தேவை என்பதை நாம் முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் மிக முக்கியமானது, எந்த ஒரு கால கட்டத்திலும் விளம்பரம் மற்றும் விற்பனை செய்யப்படுவது ஆன்மீகம் ஆகாது.

எடுத்த எடுப்பில் குருவை தேடும் அளவு நாம் முழுநேர மற்றும் பொதுநோக்கு ஆன்மீகவாதி(துறவி) இல்லை.

அப்படியே ஒரு சித்தரை போலவோ விவேகானந்தரை போலவோ ஒரு புனித ஆத்மாவாக யாரேனும் இருப்பின், அந்த ஆத்மா தக்க சமயத்தில் தானே தன் குருவை அடையாளம் கண்டு அவரை வந்து அடையுமே தவிர, பணம் கொடுத்து குருவை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.



குடும்ப வாழ்வின் பிரச்சனை சக்கரத்தில் சுற்றி சுற்றி, மூளையின் இடைவிடாத வெவ்வேறு சிந்தனைகளால், நரம்புகளும், நாடி வேர்களும் பாதிக்கப்பட்டு உடல் இயக்கம் சீராக இல்லாமல் மனம் அமைதி பாதிக்க பட்டிருக்கும் பொதுவான மக்களின் ஆன்மீக நாட்டம், தேடல் என்பது மன உளைச்சலை குறைக்க அல்லது தவிர்க்க மட்டுமே என்பதை தெளிவாக நாம் உணர வேண்டும்.

பொதுவாக நமக்கு நாமே கேட்டு பார்த்தல், கஷ்டம் வரும் போது கடவுளை நினைக்கும் அல்லது நாடும் எத்தனை பேர், சந்தோசம் வரும் போது கடவுளை நினைக்கவோ அல்லது நன்றி சொல்லவோ செய்கிறோம்?

ஆக, சுக துக்கத்தை ஒன்றாக பாவித்து பொது நல ஆன்மீக வாழ்கை பயணம் என்பது வேறு, அவை ஒரு போதும் கார்பரேட் நிறுவனங்கள் போல பணத்தின் அடிப்படையில் அல்லது விற்பனை முறையில் நடைபெறாது.

தன் கஷ்டங்களுக்கு மனஅமைதி, வடிகால் தேடும் ஆன்மீக நாட்டம் என்பது வேறு, இதற்காக ஒரு போதும் நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியாது.

இந்த நிலையில் நாம் செய்யக்கூடியது தான் என்ன?

பரபரப்பு வாழ்கையின் இடைவிடாத ஓட்டத்தால் தளர்ச்சியடையும் மனதிற்கும் உடலுக்கும் ஒரு அமைதி மற்றும் சக்தி தேவை, அதற்காக சரியான வழி தியானம் மட்டுமே.

ஆனால், அது சரியான முறையா? தியானம் என்ற மிக பெரிய விசையத்தில் உள்ள சூத்திரங்கள் எதுவுமே நமக்கு தெரியாதே என்ற பயமும் குழப்பமுமே நாம்மை தவறான முடிவெடுக்க வைத்து, தவறான மனிதர்களை நாட வைக்கிறது.

இதில் சில அடிப்படை விசையங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

மூளை என்பது வேறு எதுவும் அல்ல, சிந்தனைகளும், நினைவுகளும் நிறைந்ததே நம் மூளை, குடும்ப வாழ்கை சக்கரத்தின் இன்ப துன்பங்களின் இடைவிடாத தொடர் இயக்கத்தால், நம் உடலின் சத்தி குறைகிறது, நாட்கள் இப்படியே பரபரப்பாக நகர நகர, அந்த பாதிப்பு உடலின் நரம்புகள் மூலம் மற்ற பகுதிக்கு சென்று அவையும் தளர்ச்சி அடைகிறது.

ஒரு குழந்தை எப்போதும் உடல் சக்தியுடன் ஓடியாடி சுறுசுறுப்பாக இருக்கிறதே! என்று எப்போதாவது கவனித்து பார்த்ததுண்டா? காரணம் குழந்தையின் மூளையில் நினைவுகள் தங்குவதில்லை.

இளம் கன்று பயமறியாது என்ற சொல் படி, வாழ்கையை பற்றி, அடுத்த நாளை பற்றி குழந்தை ஒரு போதும் சிந்திப்பது கிடையாது, அதனால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை (Cosmic Energy Healing for Health) காற்றில் மூலம் அந்த குழந்தை அதிகமாக பெறுகிறது. அதே போல் எந்த சிந்தனையும் இல்லாமல் படுத்த உடன் தூங்கி (தியான நிலைக்கு போய்) விடுகிறது அப்போது இன்னும் அதிக சக்தியை அந்த உடல் பெறுகிறது.

நாம் கூட தூங்கி எழுந்தவுடன் களைப்பு நீங்கி சுருசுப்பாகி விடுகிறோம் இல்லையா? காரணம் தூக்கமும் ஒரு வகை தியானம் தான், தூக்கம் எப்படி ஒரு நினைவற்ற (Unconcious Mind) தியானமோ, அதே போல தியானம் என்பது ஒரு வகையான நினைவுள்ள தூக்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

தூக்கத்தில் நமக்கு கிடைக்கும் அளவான சக்தியை போல தியானத்தின் மூலம் அளவில்லா உடல் சக்தியை பெற முடியும்.

இப்படி தியானத்தின் மூலம் நம் மன அமைதியை நாமே பெற முடியும்.

இதன் அடுத்த நிலையை அடைந்து நாம் யார் என்று நமக்கு புரியும் போது, நம் குருவை நாமே சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியும், அதற்காக நாம்மிடம் குருவும் எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்க மாட்டார்.

அதெப்படி நானே தியானிக்க முடியும்? குருவில்லாத ஒரு கலை எப்படி முழுமையடைய முடியும் என்று எடுத்த எடுப்பில் முடிவை தேடாமல், முதல் அடியாக நம் முயற்சியை அடிமேல் அடி தொடர்ந்து எடுத்து வைத்தாலே போதும்.

தியானம் பற்றி எனக்கு புரிந்ததை விரைவில் சுருக்கி சொல்ல முயற்சிக்கிறேன்.

நான் மேலே சொன்னபடி இவை அனைத்தும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக எல்லா ஆன்மீக குறிப்புகளிலும் எழுதி வைக்கப்பட்டது.

அதனால் இதில் நானே சொந்தமாக சொல்ல எதுவும் இல்லை, நான் படித்ததை அதில் எனக்கு புரிந்ததை, சுருக்கமாக ஒரு இடுகைக்குள் வருமாறு உங்களுடன் பகிர்வது மட்டுமே என் நோக்கம்.

நன்றி!, மீண்டும் சந்திப்போம்.
 

Blogger Widgets