Saturday, December 12, 2009

என் பார்வையில் ரஜினி

பதிவுலகத்தில் இந்தமாதம் முழுவதும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும், என் நண்பர்கள் பதிவுகளில் இருப்பதை விட அதிகமாக ரஜினியை பற்றி என்னால் இங்கு வேறு எதுவும் சொல்லிவிட முடியாது என்று நான் நினைக்கிறேன்.



ஆகவே, அதே கருத்தை வேறு வார்த்தைகளை கோர்த்து சொல்வதிற்கு பதிலாக நேரடியாக அவர்களின் பதிவுக்கு இணைப்புகளை இங்கு கொடுத்துள்ளேன்.

I- இந்த வாரம் ரஜினி வாரம்

II- கிரி

III- ஈ ரா


என்னதான் வசதி, பெயர், புகழ் இருந்தாலும் மனதில் பட்டதை நேரடியாக பேசி, இயல்பு வாழ்கையில் எளிமையாக இருப்பதில் ரஜினிக்கு நிகர் ரஜினி-யேதான்.

இல்லாத ஒரு இமேஜை தானாக உருவாக்கிக் கொள்ள துடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், தனக்கும் மட்டுமே உள்ள இமேஜை பற்றி கவலை படாமல், அவர் அவராகவே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது இல்லையா?



அவர் காலில் இருக்கும் செருப்பையும் கையில் இருக்கும் மொபைல் போனையும் பாருங்கள், இத்தனை எளிமையாக இன்று ஒரு நடிகரை பார்க்க முடியுமா?

போராட்டமான வாழ்கையை படிப்படியாக சந்தித்து வெற்றி வாகை சூடிய சூப்பர்ஸ்டாருக்கு, ஒரு நல்ல ரசிகன் என்ற பெருமையோடு இன்று போல் என்றும் வாழ என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அவரது பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களாகிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

என்னதான் நமக்கு இடையில் சிலமைல் கடல்களும், சிலமைல் நிலங்களும் இருந்தாலும், உள்ளத்தால் ரஜினி ரசிகர்களாகிய நாம் என்றும் ஒன்று பட்டு இருக்கிறோம் என்ற முறையில் உங்களுடன் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.


இனி என் பதிவில், என் மனதில் பட்ட சில கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மகிழ்ச்சி என்பதே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்தானே இருக்கிறது, ஆகவே இதை தனிப்பட்ட ரஜினி ரசிகர்களுக்கான பதிவாக மட்டுமிலாமல், பொதுவாக சில விசையங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனவே, ஒரு ரஜினி ரசிகனாக இல்லமால் சில பொதுவான கருத்துகளை இங்கு பார்ப்போம்.

ஏன்? என்றால் ரஜினி ரசிகன் என்ற முத்திரையோடு, மற்ற யாரையும் குற்றம் சொல்வதோ காயப்படுத்துவதோ இங்கு என் நோக்கம் அல்ல.



யார் ரஜினி: நான் கடவுளில் "எம்.ஜி.ஆர்" வேடத்தில் ஒருவர், இன்று பார்த்தால் நண்டு சுண்டு நடிகர்கள் எல்லாம் பண்ணும் அலப்பறை இருக்கே, "ஐயோ அம்மா தாங்க முடியவில்லை" என்பார்.

இதை ஏன் இங்கு குறிபிடுகிறேன் என்றால், எதோ ஒரு படத்தில் கவுண்டமணி சொல்லுவார் "உன் மூஞ்சிக்கு கஜோல் மாதிரி துணி தைக்கணுமா, போய் கஜோல் கிட்டயே எதாவது பழசு பட்டையை வாங்கி போட்டுக்கோ" என்று.

அது போல் ரஜினி நடித்த பழைய வேடத்தில் இருந்து அவர் போடும் துணி முதல் வசனம் வரை அப்படியே அவரை தன் படத்தில் காப்பி அடிப்பது, அதுவும் அப்பா சம்பாதித்த பணத்தில் தானே படம் எடுத்து தனக்குதானே வெற்றி விழா போஸ்டர் அடித்துக்கொள்ளும் அரைகுறை நடிகர்களை எப்படி ரஜினியோடு ஒப்பிட முடியும்?

(இப்படி செய்வதால் இவர்களும் நளினிகாத், சின்னிஜெயந், விவேக் மற்றும் தாமு என்று நகைச்சுவை நடிகர் வரிசையில் வந்து விடமாட்டார்களா?).

ஒரு நடிகனாக ரஜினியை பார்த்தோம் என்றால், அவர் தன் தோற்றத்திற்கும் நடிப்பு திறமைக்கும் சரியாக பொருந்தும் வேடங்களை மட்டுமே அன்றும் இன்றும் செய்கிறார்.

இப்படி சொல்வதால் நான் மற்ற யார் படங்களையும் எனக்கு பிடிக்க வில்லை என்று கண்மூடித்தனமாய் சொல்வதாய் நினைக்க வேண்டாம். நான் சொல்ல வருவது, தங்களுக்கான வழியில் தனக்கு பொருந்தும் வேடத்தில் ஒருவர் நடிக்கும் எந்த படத்தையும் எனக்கும் பிடிக்கும்.

உதாரணமாக, சிம்புவின் - கோவில், தொட்டி ஜெயா, விஜையின் - பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை மற்றும் தனுஸின்- காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இப்படி அவர்களுக்குரிய வேடத்தில் நடிப்பதை விட்டு விட்டு, அண்ணாமலை-யையும், பாஷா-வையும் திரும்ப திரும்ப எடுத்து விட்டு, நான்தான் சூப்பர் ஸ்டார் என்று தம்பட்டம் அடிக்கும் காமிடி கதாநாயகன்களை எப்படி ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்க முடியும் சொல்லுங்கள்!.



வெறும் அண்ணாமலை-யும், பாஷா-வும் அல்ல ரஜினி, அபூர்வராகங்கள் முதல் சிவாஜி தி பாஸ் வரை எத்தனயோ முத்திரைகளை பதித்து இந்த இடத்தை அடைந்து இருக்கிறார், அவர் செய்த அதையே திரும்ப செய்து இனியாராலும் அந்த இடத்தை அடைய முடியாது என்பது தான் உண்மை.



சூப்பர்ஸ்டார் நாற்காலி: சினிமா என்பது ஒரு தொழில் இதில் யாரும் நஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

ஆகவே, யார் படம் மக்களுக்கு பிடித்து அதிக வசூலை தருகிறதோ, அவர்தான் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் உட்கார தகுதியானவர், என்று நடிகர் விக்ரமை ஒரு பாராட்டு விழாவில் ரஜினி சொன்னதுதான் உண்மையில் இப்போது வரும் "அந்த பட வசூலை மிஞ்சி" விட்டது "இந்த பட வசூலை தாண்டி" விட்டது என்ற "வெற்றி விழா" போஸ்டர்களின் ஆரம்பம்.

ரஜினியே இப்படி சொல்லி விட்டார் என்று, தன் சொந்த பணத்தில் போஸ்டர் அடித்து "மூன்று நாள் முழுதாக ஓடாத படத்தை கூட நூறாவது நாள் விழா எடுத்து" என் படம் ஓடி விட்டது, இனி நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று படம் காட்டும் நடிகர்களை நினைக்கும் போது என் கவலைகளை மறந்து சிரிக்க முடிகிறது.

இதை சற்று கவனித்து பார்த்தால், சூப்பர் ஸ்டார் நாற்காலி என்பது விக்ரமாதித்தன் சிம்மாசனம் போல், அவருக்கு பின் யார் வேண்டுமானாலும் அந்த சிம்மாசனத்தில் அமரக் கூடும், ஆனால் விக்ரமாதித்தன் சிம்மாசனத்தில் அமர்ந்தவர் எல்லாம் விக்ரமாதித்தன் கிடையாது என்பதுதான் உண்மை.



அதே போல், நல்ல லாபத்தை கொடுக்க கூடிய படங்களும் நடிகர்களும் இனி வரலாம், ஏன் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் கூட அவர்கள் அமரலாம், ஆனால், இனி வரும் யாருமே சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்வதால் சூப்பர் ஸ்டார் ஆகிவிடப்போவதில்லை என்பதுதான் உண்மை.

அன்றும் இன்றும் என்றும் புரட்சி தலைவர், நடிகர் திலகம், நடிகவேல் எப்படி ஒரே ஒருவரோ, அது போல் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தானே?

தனிப்பட்ட வாழ்கையை விமர்சிப்பது நாகரீகமா?: நடிகை, நடிகர்களில் பல பெண்களிடம் தொடர்பு வைத்திருந்தவர், பல திருமணம் செய்து கொண்டவர், குடித்தே அழிந்தவர், சொத்து முழுவதும் அழித்தவர்கள் என்று நீண்ட பட்டியல் உண்டு என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் இல்லையா?

அப்படி இருக்க இதில் ரஜினி என்ன புதிதாக செய்து விட்டார் என்று அவரை மட்டும் குறை சொல்ல வேண்டும்?

உண்மையோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால், மனதை ஒருமுக படுத்தி தொடர்ந்து தியானத்தில் கவனம் செல்ல சில சித்தர்கள் கூட கஞ்சா புகைத்ததாக சில குறிப்புகள் உண்டு.



இப்படி இருக்க, பொதுத்துறையில் இருக்கும் பிரபலம் என்பதற்காக, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பொதுவாக்கி விமர்ச்சிப்பது என்பது எவ்வகையில் நாகரீகமாகும்?

நம்மில் யார்தான் குடிக்கவில்லை, தம் அடிக்க வில்லை? மற்றவர்களுக்கு தொல்லை அல்லது துன்பம் தராத விசையங்களை பற்றி விமர்சிப்பது என்பது காட்டுமிராண்டி தனமில்லையா?

இது மட்டுமில்லாமல் கர்நாடகாவில் சொத்து வைத்திருக்கிறார்?

இமயமலையில் சென்றுதான் தியானம் பண்ண வேண்டுமா? ஏன் கடவுள் இங்கு இல்லையா?

என்று அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்ச்சிப்பது வேடிக்கைதான்.

தமிழக அரசியல் தலைவர்களுக்கு கர்நாடகாவில் சொத்து இல்லை என்று நினைத்தால்! அது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

மேலும் நமக்கு தேவை என்ற போது மட்டும், இந்தியா பொதுவானது என்று நமக்கும் பொதுவான தண்ணீரை தராவிட்டால், இந்தியன் என்ற உரிமையை கூறி திட்டும் நாம், தனிப்பட்ட உழைப்பில் ஒருவர், தன் சொத்துக்களை இந்தியாவில் எந்த இடத்திலும வாங்க உரிமை உண்டு என்பதை ஏன் மறந்து விடுகிறோம்?



அதே போல், இந்தியனாகிய ஒருவருக்கு இந்தியாவின் எந்த இடத்துக்கும் செல்ல இருக்கும் உரிமையை, அவர் விசையத்தில் மட்டும் மறுப்பது ஏன்?

அவர் இமயமலை போகிறாரே தவிர யாரையும் போக சொல்லவில்லையே!, மற்றும் மாற்று மத இன நம்பிக்கைகளை குறை சொல்ல வில்லையே? இதை ஏன் நாம் உணர மறுக்கிறோம்?

அரசியல் ஆக்காதீர்கள்: ரஜினி அரசியலுக்கு வரட்டும் அல்லது வராமல் போகட்டும், ஆனால் ரஜினிக்கு அரசியல் தொழில் அல்ல. அதே நேரத்தில் அவருக்கு ஒரு அரசியல் தலைவரை விட அதிக செல்வாக்கும் மதிப்பும் ரசிகர்கள் எண்ணிகையில் இருக்கிறது என்பதுதான் உண்மை.

இதனால், எங்கே நம் பிழைப்புக்கு பங்கம் வந்து விடுமோ? என்று நினைத்து, அரசியல்வாதிகள் அவர் மீது களங்கம் சுமத்துவது அனைவரின் உள்மனதுக்கும் தெரியும், இது இப்படி இருக்க!

மற்ற எந்த ஒரு விசையத்துக்கும் பெரிய ஒரு விளம்பரம் அதன் மூலம் வியாபாரம் தேவை, அதற்கு ரஜினி கண்டிப்பாக தேவை, அங்கு அவர் என்ன பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி, அதனால் பலருக்கும் பணம், லாபம்.
தொலைக்காட்சி, பத்திரிக்கை என்று பல வியாபாரம் அடுத்த சில நாட்கள் சூடு பிடிக்கும்.



இப்படி அவர் எச்சிலை பணமாக்கி வளருபவர்கள் வளருட்டும், ஒருவருக்கு ரஜினியால் வயிறு நிறைகிறது என்றால் அதை பற்றி அதிகம் விவாத்திக்க வேண்டாம் விட்டு விடுவோம்.

ஆனால், இந்த தொழில் ரகசிய அரசியலை புரியாமல் அவரின் எல்லா செய்கைகளையும் அரசியல் ஆக்குவது எப்படி நியாயம் ஆகும் என்று சிந்தித்து பார்க்க வேண்டாமா?

இனி ஒரு ரசிகனாக ரசிகர்களுடன் சில வார்த்தைகள்: வாழ்த்துக்கள் ரஜினி ரசிகர்களே, அவரின் ரசிகர் என்று சொல்லுவதில் பெருமை படும் நாம், அவர் என்னவோ நம் கையை பிடித்து கூட்டிக் கொண்டு சென்று "கண்ணா இதுதான் கெட்டுபோகும் வழியின் கதவு என்று திறந்து விட்டது போல்", சிலர் அவரை பற்றி பேசும் அளவு நாமே வழிவகுத்து விட்டோம் என்பதில் நாம் பெருமைகொள்ளத்தான் வேண்டும் இல்லையா?

இதுவா நாம் அவரிடம் கற்றுக்கொண்டது? அல்லது இதுவா அவருக்கு பெருமை?

சற்று சிந்திக்க வேண்டும் தோழர்களே, அவர் வீட்டை சுற்றி அல்லது வேலை இடங்களுக்கு சென்று தொல்லை கொடுப்பது என்று இன்னும் ஒரு சமமான மன நிலைக்கு நாமே வராமல் "பொருத்தது போதும் பொங்கி வா தலைவா" என்று போஸ்டர் அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?.

அவரை பார்ப்பதும், கை குலுக்கி ஒரு புகை படம் எடுத்துகொண்டு அதை படம் போட்டு காட்டுவதில் மட்டும் தான் நம் எண்ணம் முழுவதும் இருக்கும் பட்சத்தில், அவர் நடிகராகவே இருந்து விடுவது தான் நாம் அவருக்கு செய்யும் பெரிய உதவி.

என்ன இப்படி சொல்கிறீர்கள் என்று வருந்த வேண்டாம். பின் வேறு என்ன சொல்வது சற்று சிந்தித்து பாருங்கள்!.



ஒரு நாட்டை தலைமை தாங்கி நடத்துவது என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு, அந்த பாரத்தை அவர் தலையில் வைக்கும் முன், அதற்கு பக்க பலமாக நம்மை நாமே தயார் படுத்த வேண்டாமா?

முதலில் உங்கள் தொழில், படிப்பு என்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றும் உங்கள் குடும்ப வாழ்கையில் நிலையான இடத்தில்தான் நாமும் இருக்கிறோம் என்றும், மற்ற யாருக்கும் குறைந்து விடவில்லை என்றும் சமுதாயத்துக்கு காட்டுங்கள்.

பின் உங்கள் பகுதியில் இருந்து வாழ்க்கை முறை, வேலை, குடும்ப சூழ்நிலை என்று பிரிந்து கிடக்கும் ரசிகர்களை ஒன்று திரட்டுங்கள், அதன் மூலம் அடிமட்டத்தில் இருந்து தலைமை வரை ஒரு முறையான தொடர்பு முறையை மேம்படுத்துவோம்.

மார்க்கெட்டில் கத்திரிக்காயை விட மலிவாக இன்று தொலை தொடர்பு வசதிகள் இருக்கிறது, உங்கள் மன்றத்தை சார்ந்த உலகமெங்கும் இருக்கும் ரசிகர்களை வரிசைபடுத்தி ஒரு இணைய வட்டத்திற்குள் கொண்டு வருவோம்.

அந்தந்த மன்றத்தை சேர்ந்த மக்களின் வயது, படிப்பு, வேலை, தொழில், தொலைபேசி, மின்னஞ்சல் தொடர்பு, ஓட்டுரிமை பகுதி என்று வரிசைபடுத்தி அட்டவணையை ஒழுங்கு படுத்துவோம்.

பணம் கொடுத்து கூட்டம் கூட்ட, நாம் ஒன்றும் அரசியல்வாதிகள் இல்லையே!, அதனால் அந்தந்த தொழில் சார்ந்த ரசிக மக்களின் உதவியுடன் அந்தந்த பகுதியில், சட்டத்துக்கு உட்பட்டு நம் பகுதி மக்களுக்கு தேவையானதை அகிம்சை வழியில் பெற்றுதந்து, மக்களுக்கு ரஜினி ரசிகர்களால் ஆக்கத்துக்கும் பாடுபட முடியும் என்று புரிய வைத்து, அவர்கள் ஆதரவும் நம்மோடு சேரும் படி செய்ய வேண்டும்.

முக்கியமாக இவை அனைத்தும் நம் தொழில் குடும்ப வாழ்க்கை பதிக்காமல், பதிவு எழுதுவது போல் தனியாக கொண்டு செல்வோம்.

இதனால் மக்களும் பணத்துக்கு ஓட்டை விற்பது தவறு என்று தலைவர் பாணியில் வேஷ்டி சட்டை வேண்டாம் வேலை வெட்டி கொடுங்கள்! என்று கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்கள்.



இதுபோல் அரசியலில் இல்லாமல் அத்தனை தொகுதிகளிலும் நம் செல்வாக்கை நம்மை நாமே சோதித்து, அதன் விடையை தலைவருக்கு மக்கள் கொடுக்கும் படி செய்வதுதான் உண்மையில் இப்போது நமக்கு தேவை.

இப்படி இது வெறும் கொடி கட்டி விசிலடிக்கும் கூட்டம் மட்டும் அல்ல என்று மக்களும் மற்ற அரசியல் தலைமைகளும் முழுதாக புரிந்து கொள்ளும்படி முதலில் செய்து விட்டு, அதன் பின் வாங்க தலைவா என்று கூப்பிடுவதில் தான் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பது என் கருத்து

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்வதோடு, இவை அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துக்கள் என்பதால், எதிர் கருத்தாயினும் அதை இங்கு மனம்விட்டு நீங்கள் சொல்வதன் மூலம் உங்கள் எதிர்பார்ப்பை அல்லது மனநிலையை படிக்க உதவும்.

நன்றி!.

Monday, December 7, 2009

வெளிநாட்டு வேலையும்! உலக சந்தையும்!

முன்பு பாரின் கால் என்ற தலைப்பில் எழுதிய பதிவில் பிரியமுடன் வசந்தின் பின்னூட்டதிற்கு, பின்பு ஒரு பதிவில் இதை பற்றி பார்ப்போம் என்று சொன்னதின் தொடர்ச்சியாக கூட இந்த பதிவை எடுத்துக்கொள்ளலாம்.

உலகசந்தை பொதுமயமாகிவிட்டது என்றால் "என்னது ஒபாமா அமெரிக்க அதிபராகிவிட்டாரா!" என்பது போலத்தான் என்று நான் அறிவேன், அதுவல்ல இப்பதிவின் நோக்கம்.

கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த வெளிநாட்டு வாழ்க்கை முறை மாற்றத்தை பற்றி முழுதாக புரிந்து கொள்ளாமல், நம் நாட்டில் இன்னும் வெளிநாட்டு வேலை மோகத்தில் இருப்பது வருந்ததக்கது.

வெளிநாட்டு வேலை மூலம், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கூட இதற்க்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

முதலில் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும், உலகின் இயற்கை தத்துவத்தின் படி ஒரு விதையை இழந்தால்தான் ஒரு விருச்சத்தை பெற முடியும், இதை யாராலும் மாற்ற முடியாது.

ஆனால், இதில் கவனிக்க வேண்டியது இழப்பது ஒரு விதையானாலும் அந்த விருச்சதின் மூலம் கிடைப்பது பல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

வரலாற்றை திரும்பி பார்த்தால் ரப்பர் தோட்டத்திலும், அடிமட்ட கூலி வேலைக்கும், நம் மக்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள்.

பின்னாளில் காலம் மாற கல்வி கூட, தகுந்த வசதிகளுடன் கூடிய நாட்டுக்கு வேலைக்கு சென்றார்கள் (இது கூட ஒருவகை ரிமிக்ஸ் கூலி வேலை என்பதுதான் உண்மை).

ஆரம்பத்தில் ஒவ்வொரு நாட்டின் பண வீக்கத்தை பொருத்து, வேலைக்கு சென்ற நாட்டில் அடிப்படை வாழ்க்கையை சிக்கனமாக வாழ்ந்து அதில் மிச்ச படுத்திய பணத்தை நம் நாட்டில் கொண்டு வந்து மாற்றும் போது அது அவர்களுக்கு பெரிய பலனை தந்தது, அது அந்த காலம்.

அப்போது உலகசந்தையும் பொதுமயமாக இல்லை, எனவே ஒரு நாட்டில் தயாரிக்க படும் பிரபல பொருட்கள் அந்தந்த நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்ய பட்டு, நம் நாட்டில் இறக்குமதி விற்பனையுடன் சேர்த்து சந்தைக்கு வரும் போது அதன் விலை அதிகமாக இருந்தது, இதனால் அப்பொருட்களை அந்தந்த நாட்டில் குறைந்த விலையில் வாங்க முடிந்தது.

அது மட்டுமிலாமல், அப்போது நம் நாட்டில் வெளிநாட்டு பொருள்கள் கிடைப்பது மிக அரிதாக இருந்தது, ஆனால் இன்று மொபைல் போன் முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் வரை தயாரிக்க படுவதே நம் நாட்டில் என்பது தான் உண்மை .

காரணம் குறைந்த விலையில் தயாரிப்பு பொருட்கள், குறைந்த ஊதியம் மட்டுமிலாமல் குறைந்த சலுகைகள் கொடுத்தாலே கிடைக்கும் தொழிலாளர்கள், இட வசதி, சுற்று புற சூழல் கேடு என அனைத்தும் வேறு நாடுகளை சேர்வதால், இன்று உலக நாடுகளின் பெரும்பாலான தயாரிப்புகள், இந்தியா மற்றும் சீனாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

இதன் காரணமாக, முன்பு போல் இல்லாமல் அனைத்து தரப்பு வேலைகளும் இப்போது நம் நாட்டில் கிடைக்கிறது, ஊதியமும் கிட்டதட்ட வெளிநாட்டுக்கு நிகராக இப்போது நம் நாட்டிலேயே பெற முடிகிறது.

ஆனால், இப்போதைய தேவை "இளைய தலைமுறைகள்", இவர்கள் வெளிநாட்டில் மட்டும் வேலை செய்ய நினைக்காமல் நம் நாட்டிற்கு தங்கள் உழைப்பை கொடுக்க முன் வர வேண்டும்.



வருடம் ஒருமுறை விடுமுறைக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வைத்து வெளிநாட்டு வாழ்கையை எடை போடாதீர்கள் நண்பர்களே!.

தெளிவாக பார்த்தால் அன்றும் இன்றும் நம்மை வெளிநாட்டு நிறுவங்கள் அதிகமாக அங்கிகரிக்கும் முறை இரண்டே இரண்டுதான்.

I - அடிமட்ட கூலி தொழிலாளர்கள்

II - நடுத்தர தகுதி அடிப்படை தொழிலாளர்கள்

இவை இல்லாமல் மேல் தரத்தில் ஆராய்ச்சி போன்ற துறைகளில் செல்பவர்கள் விரல் விட்டு விட்டு எண்ணும் அளவில் தான் இருக்க கூடும், அப்படியே சென்றாலும் அவர்கள் தலைமை அதிகாரியாக இருப்பது அதிசையம் தான்.

அடிமட்ட தொழிலாளர்கள்

முதல் வரியில் சொன்னது போல், இன்றும் நம் மக்கள் இந்த வரிசையில் முன்னிலையில் இருப்பது வேதனைக்குரியது, இவர்களை வெளிநாட்டு ஒப்பந்த வேலைக்கு கவர்வது மிக எளிது. இங்கு இந்தியாவில் மாதம் ஆறாயிரம் கிடைக்கும் வேலைக்கு, அங்கு அறுபதாயிரம் என்ற ஒரு வரி விளம்பரம் போதும்.

இதில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பில் வருபவர்கள் தேவலம். ஆனால், இடை தரகர்கள் பேச்சை நம்பி இரண்டு முதல் மூன்று லட்சங்கள் செலவு செய்து, அதுவும் கடன் வாங்கி, இந்த வேலைக்கு வருபவர்கள் நிலை சொல்ல முடியாத வலியை கொடுக்கும்.

இவர்களை பொறுத்த வரை தங்கும் இடம் இலவசம், போக மாதம் அறுபதாயிரம் ஊதியம், இதில் மாதம் ஐம்பதாயிரம் மிச்ச படுத்தினால் கூட, வருடம் ஆறு லட்சங்கள் சேர்த்து விடலாம், என்பதுதான் இவர்களின் ஆரம்ப கனவாக இருக்கும்.

ஆனால், இவர்களில் முதல் முறை வரும் பலருக்கும் இங்கு அறுபதாயிரம் என்பது நம் ஊரில் ஆறாயிரம் கிடைப்பதை விட குறைவு என்ற பொருளியல் விபரம் தெரிவதில்லை.

மேலும் இங்குள்ள வேலைமுறை பெரும்பாலும் அவர்களுக்கு சரியான முறையில் எடுத்து சொல்லப்படுவதில்லை, அதிலும் தவறான இடை தரகர்கள் கையில் மாட்டுபவர்களின் நிலை மிக பரிதாபம், குறிப்பாக பெண்கள்.

குறைந்தது பனிரெண்டு மணிநேரம் முதல் பதினெட்டு மணி நேரம் வரை ஓய்வில்லாத கடும் வேலை, மாதத்தில் ஒரு நாள் மட்டும் தங்கி இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வர அனுமதி, என்று மூன்று வருட இறுதியில் வாங்கிய கடன் வட்டியுடன் கட்டியது போக, மிஞ்சுவது என்னவோ ஒரு ஐம்பது ஆயீரம்தான் என்று சொன்னார்கள்.

இப்படி பார்த்தால், இங்கு இழப்பது ஒரு விதையல்ல, ஒரு இளைஞனின் மூன்று வருட வாழ்க்கை.

(நூறு இளைஞர்களை கொடு, இந்த நாட்டின் தலைஎழுத்தையே மாற்றி காட்டுகிறேன்!, என்று விவேகானந்தர் சொன்னதை இங்கு சற்று நாம் நினைத்து பார்க்க வேண்டும்).

கர்பமாக இருக்கும் மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு சென்று, பின் தன் சொந்த குழந்தையை மற்றும் குடும்பத்தை மூன்று வருடம் கழித்து நேரில் பார்த்தவர்களின் கதை எல்லாம் இதில் உண்டு.

இதை பற்றி நான் கேட்டறிந்ததை எழுத முடியுமே தவிர, அதன் உண்மை வலியை, என் வார்த்தைகளால் உணர்த்த முடியாது.

ஆனால், இதை அனுபவித்தவர்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து, இனி வரும் நம் தலைமுறைக்கு எடுத்து சொல்லி, அவர்களின் வெளிநாட்டு வேலை மோகத்தை அறவே நீக்க முடியும் இல்லையா?.

அப்படியும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இது போல செல்ல இருப்பவர்களை, தகுந்த தரகர், நல்ல நிறுவனம், மேலும் சரியான வேலை முறையை தேர்ந்து எடுக்க வேண்டும்.

மேலும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையப்பம் இடும்முன், அருகில் உள்ள அரசாங்க வெளிநாட்டு வேலை ஆலோசனை மையத்தை தொடர்புகொண்டு, இவை அனைத்தும் சரியான தகவல்களா? மற்றும் தான் செல்ல விருக்கும் விசாமுறை சரியானதா? என்று ஆலோசனை பெற்று, அதன் பிறகு செல்ல வழிகாட்ட வேண்டும்.

நடுத்தர தகுதி அடிப்படை தொழிலாளர்கள்

அடுத்தது படித்த, தொழில் தகுதி அடிப்படையில் வரும் நம் கணினி துறை உட்பட நடுத்தர பணியாளர்கள்.

படித்து முடித்ததும் முடியாததும், தனக்கு மட்டுமே திறமை இருப்பதாகவும் அதை நம் நாடு மதிக்கவில்லை என்று குறை சொல்பவர்களும் இதில் உண்டு.

ஆக, இவர்கள் படித்தவர்கள், நடுதரத்தில் இருந்து மேல் மட்டம் செல்ல துடிப்பவர்கள்.

எதோ ஒரு பதிவில் படித்த படி, "இந்த குடும்பத்தின் எதிர் காலமே உன் கையில் தான் இருக்கிறது என்று தலையில் திருநீறு போட்டு விமான சீட்டை கையில் கொடுத்து அனுப்பிய தமிழ்நாடும், ஆந்திராவும்தான் இதில் அதிகம்".

அடிமட்ட வசதி (அப்பா அம்மா சம்பாதித்தது) இருப்பதால் மேல் சொன்ன முறையில் இவர்களை வெறும் ஊதியத்தை சொல்லி, ஒரு வரி விளம்பரத்தில் கவர முடியாது.

ஆனால், இவர்களை கவர்வது அதை விட எளிது, ஏன் என்றால்! இவர்களின் அடுத்த தேவை, நாகரீக வாழ்க்கை முறை, நவீன வீடு மற்றும் குறிப்பாக "கார்".

எனவே, அதையே சற்று பெரிதாக, சொந்த வீடு, கார், மருத்துவ காப்பீடு மற்றும் வெளி நாட்டு குடியுரிமைக்கு நிறுவ பரிந்துரை என்று அதுவும் ஆங்கிலத்தில் சொன்னால் போதும்.

இதையே வேறு வேறு ஆங்கில வார்த்தைகளை கொண்டு சொல்லி, முடிந்த வரை இவர்கள் ஊதியத்தை குறைக்க அங்கும் ஒரு பச்சை தமிழன் அல்லது பக்கா இந்தியன், மனித வளத்துறை என்ற பெயரில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் தேனை தடவி பேசி பேசியே விமானத்தில் ஏற்றி விட்டு விடுவார்கள்.



ஒரு வழியாக வண்ண வண்ண கனவுகளுடன் வெளி நாட்டில் வந்து இறங்கியவுடன், அங்கு ஒரு மனிதவளத்துறை குரல் சொல்லும்...

"சார்" (மருவாதி மருவாதியாம்), உங்களுக்கு ஒரு கார், அப்புறம் உங்களுக்கு ஒரு வீடு, நீங்க எந்த மாடல் வேணும்னாலும் தேர்வு செய்யலாம், அதற்கான வங்கி லோன் பணமாற்று, நம் நிறுவன பரிந்துரை மற்றும் உங்கள் ஊதிய சான்று காகிதங்கள் இதில் இருக்கு.

நீங்க வெறும் கையப்பம் மட்டும் போட்டா போதும்னு, படிக்க முடியாத அளவு சின்னதா எழுதி இருக்க ஒரு நூறு காகிதமாவது அதில் "நச்சத்திரம்" போட்ட ஒரு ஆயீரம் ஒப்பத்ததுடன் நம்ம முன்னாடி இருக்கும்.

(இது நாடு, நம்ம நாடும் இருக்கே!, எவனாவது மதிச்சானா? அப்படின்னு மனசுக்கு கீழ பிளாஷ் நியூஸ் ஓடும்).

என்னாடா இது! குடியுரிமை விண்ணப்பம் எதுவுமே இல்லன்னு கேட்டா?

இது எல்லாம் முடிஞ்சு, நீங்க ஒரு மூணு வருஷம் வருமான வரி கட்டியவுடன் வாங்கி விடலாம், அது ஒன்றும் பெரிய விசையம் இல்லை என்று சொல்லி, அப்போதைக்கு சமாளித்து விடுவார்கள்.

நம்மளும் நம்ம கலாச்சார படி "சரி வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டன்னு நம்பி"... மனசுக்குள்ள "வெற்றி நிச்சியம் இது வேத சத்தியம்" இல்லனா,"வெற்றி கொடி கட்டு"-ன்னு பாட்டு ஓட, சிரிச்ச முகமா (அதுதான் கடைசி சிரிப்பா பலருக்கு இருக்கும்) கையப்பம் போட்டு தள்ளுவோம்.

எல்லாம் முடிஞ்சு, நமக்கு கண்ணு தெளிவா தெரியும் போதுதான், "பிதா மகன் சூர்யா சூதாட வந்த லைலாவிடம் சொல்வது போல் " போல் விசையம் வரும்.

இப்ப பாருங்க (சார் மிஸ்ஸிங்)...கம்பெனி மொதல்லயே சொன்னா மாதிரி...

உங்களோட மாத ஊதியம் இரண்டு லட்சம், இதுல காருக்கான லோனுக்காக மாதம் ஒரு சிறிய தொகையா முப்பது ஆயீரம், இது வெறும் பத்து வருட பிடித்தம்தான்.

அப்புறம் பாருங்க உங்க வீட்டு லோனுக்காக ஒரு சிறிய தொகையா ஒரு தொண்ணூத்தி இரண்டாயீரம் பிடித்தம், இதுவும் ஒரு முப்பது வருடம் தான்.

(இப்படி சொந்த வீடு வாங்காதவர்கள், அதே தொகையை வாடகை வீட்டுக்கு கொடுத்து விட்டு, ரியல் எஸ்டேட் விலையை ராக்கெட் மாதிரி ஏற்றிவிட்ட பெருமையுடன், நம்ம ஊரில் ஒரு மூன்று படுக்கை அறை வீட்டை வாங்கி விட்டு தவணையுடன் வருட பராமரிப்புக்கு ஒரு ஒருலட்சம் வரை கட்டிக்கொண்டு இருப்பார்கள்.)

அத்தோட, உங்கள் மருத்துவ காப்பீடு இதர சகிதங்களுக்காக மாதம் ஒரு ஐய்யாயிரம் பிடித்தம் போக, மீதி தொகை மாதா மாதம் உங்கள் வங்கி கணக்கில் வந்து விடும், மேலும் உங்கள் தேவைக்கு கடன் அட்டைகள் வந்து விடும் என்று சொல்ல, நமக்கு கடைசியாக "செருப்பை வைத்து சூதாடும் லைலா முகம்" போல் ஆகிவிடும்.

வேறு வழி, "உள்ளதை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனிடம் வேலைக்கு சேரும் கார்த்திக் போல" சேரும்படி ஆகிவிடும்.

ஏன் என்றால்? மீதம் வரும் எழுபதாயீரம் என்பது அடிப்படை மாத செலவுகளுக்கு ஆகும் தொகையை விட சற்று குறைவு (அதற்கு தான் அந்த கடன் அட்டைகள் என்பது இப்போது தான் புரியும்).

ஆக, ஒட்டு மொத்தம் முப்பது வருட இளமையுடன் வாழ்கையை அடகு வைத்தாகி விட்டது.

இனி வரும் வாழ்க்கை சூத்திரம் மிக மிக எளிது.

அந்த கடனை எப்படி கட்டுவது!, இந்த கடனை எப்படி கட்டுவது?, கடனை கட்டும் வரை வேலை போகாமல் எப்படி பாதுகாப்பது!, வேலை போய் விட்டால் மாத தவணையை எப்படி கட்டுவது?, மாத தவணையை கட்ட அடுத்த வேலையை எப்படி பிடிப்பது!?

ஆக மொத்தத்தில் "கடன்+கவலை+மனஉளைச்சல்=வெளிநாட்டு வாழ்க்கை" என்று மாறி விடுவதுதான் அதிகம்.

இதில் இன்னும் கொடுமை, நடுவில் பொருளியல் மந்தம், சுனாமி, குண்டு வெடிப்பு, என்று எது நடந்தாலும் வாங்கிய வீட்டின் விலை குறைந்து விடும்.

ஆனால், வங்கிக்கு வாங்கிய தொகை குறையாது, அதனால் வீட்டை விற்றும் கட்ட முடியாது, இப்படி வாழ்கையில் வெளிநாட்டு பெண் வந்தாலும் சரி அல்லது பெண் பெயரில் புயல் வந்தாலும் சரி, வயிற்றை கலக்குவது இவர்களுக்குத்தான்.



அதெல்லாம் சரி!, அப்படியும் ஏன்? அங்கு இருக்க வேண்டும் என்பது, இங்கு ஒரு கேள்வியாக கூடும்?

மேல் சொன்ன படி இளமை துடிப்பில் விளையாட்டாக ஆரமித்து விட்டதை, முடிக்காமல் அல்லது திரும்ப வந்து அங்கு புதிய வேலை தேடி, அதில் கிடைக்கும் வருமானத்தில் இங்கு இருப்பதை கட்டி முடிக்க முடியுமா? என்று குழம்பித்தான், இன்று அதிக சதவீதம்
இருக்கிறார்கள், என்று சொன்னால் அது தவறாகாது என்று நினைக்கிறேன்.

மேலும் இடைப்பட்ட இந்த காலத்தில், இதை சமாளிக்க அதில் எடுக்க, அதை சமாளிக்க இதில் எடுக்க என்று வயது மட்டும் போய் ஆரமித்த இடத்திலேயே இருப்பவர்களும் உண்டு, கூடவே மன அழுத்தம், ரத்த கொதிப்பு, நீரழிவு போன்று அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற பரிசும் உடலில் சேர்ந்து விடும்.

அவ்வளவு ஏன்! வருடம் ஒரு முறை விடுமுறையில் வந்து விட்டு போனால் கூட, அதை சமாளித்து நடை முறை வாழ்க்கைக்கு திரும்ப குறைந்தது நான்கு மாதமாவது ஆகும், என்று சொல்பவர்களும் உண்டு.

இதற்காக இழந்ததுதான் எத்தனை எத்தனை, வாழ்க்கை, வயது, சுற்றம், சொந்தம், நட்பு, இத்யாதி...இத்யாதி...

இது உண்மையா! இல்லையா? என்று சந்தேகம் வந்தால், பத்து வருடங்களுக்கு மேல் வெளிநாட்டில் இருக்கும் யாரையும் கேளுங்கள் (சிங்கப்பூர், மலேசியா போன்று அருகில் இருக்கும் நாட்டை தவிர).

சக நிகழ்வாக, அவர்கள் வந்திருக்கும் நேரத்தில் நடந்ததை தவிர, இந்த இடைப்பட்ட வருடங்களில் எத்தனை திருவிழாக்ளில், திருமணங்களில் அல்லது துக்கத்தில் கலந்து கொண்டீர்கள் என்று?.

இப்படி, தன்னை தானே தனிமை படுத்தி, இங்கு இருபதாயிரம் வாங்கும் ஒருவர் வாழும் அதே வாழ்கையை அங்கு இரண்டு லட்சம் என்ற பெயரில் வாழ்வதுதான் இன்றைய வெளிநாட்டு வாழ்கை.

இதில் நம் கலாச்சாரத்தின் வாடையே இல்லாமால், இயந்திரத்தோடு இயந்திரமாய் வளரும் குழந்தைகளின் நிலை சொல்லவா வேண்டும்.

கொஞ்சி மடியில் விளையாட வேண்டிய உறவுகளை, மாமா, தாத்தா, பாட்டி என்று தனக்கு தானே தனியாக தொலைபேசியில் நலம் விசாரித்து விளையாடுவது வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று.

உலகிலேயே நாம்தான் மென் பொருள் தயாரிப்பில் சிறந்த அறிவாளிகள், ஆனால் நம் நாட்டை விட வெளிநாடுதான் நம்மை மதிக்கிறது என்று சொன்ன அனைவரிடமும் நான் கேட்டது ஒன்றே ஒன்றுதான்.

உலகிலேயே மென் பொருள் தயாரிப்பில் நாம்தான் சிறந்த அறிவாளிகள் என்பது உண்மையானால், நம்மை விட மென்பொருள் தயாரிப்பு அறிவில் குறைந்தவர்கள், எப்படி நம் தயாரிப்பை சோதித்து உலக தரமானது என்று ISO, BS சான்றிதழ் கொடுக்க முடியும்?

அதை வாங்க நாம் அல்லது நம் நிறுவனங்கள், ஏன் போட்டா போட்டி போட வேண்டும்?

ஆக, நமக்கு அன்றும் இன்றும் சிறந்த தொழிலாளியாக இருக்க மட்டுமே தெரியும், அவர்களுக்கு சிறந்த முதலாளியாக இருக்க தெரியும் என்பதுதான் உண்மை.

இதை வரும் தலைமுறைகளுக்கு எடுத்து சொல்லி, அதே உழைப்பை நாம், நம் சொந்த நாட்டுக்கு செய்வதன் மூலம், அடுத்து வரும் நம் தலைமுறை நம்மை போல சிறந்த தொழிலாளியாக மட்டும் இல்லாமல், உலக தரம் வாய்ந்த முதலாளியாக இருக்க முடியும் இல்லையா?

அதன் பின் நாம் ICIS (Indian Certified International Standard) என்று மற்றவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க முடியும் இல்லையா?

இனி வரும் நம் தேசத்தின் வருங்கால தூண்கள், இதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம், நோக்கம்.

பதிவை முடிக்கும் முன் கடைசியாக, ஒரு முறை விமானத்தில் சந்தித்த சீக்கியர் ஒருவர் சொன்ன வார்த்தை, என் மனதை விட்டு இன்றுவரை நீங்கவே இல்லை.

நம் தென்இந்தியாவில் காலில் செருப்பு கூட இல்லாமல் வெறும் வேட்டி துண்டுடன் வரும் ஒரு விவசாயியை பார்த்தால், அவரிடம் அத்தனை நில சொத்துக்களும் கையிருப்பு பணமும் தானியமும் இருக்கும்.

ஆனால், என்னதான் நாம் காரில் வெளிநாட்டு முத்திரையோடு சுற்றி வந்தாலும், நம் தபால் பெட்டியில் கடிதத்தை விட கடன் தவனை ரசீதுதான் அதிகம் இருக்கும்.

என்றுதான் மாறுமோ இந்த வெளிநாட்டு மோகம்?.
 

Blogger Widgets